காமக் குரங்கு முதல்தரமான குதிரை! கால் சுத்தமாக இருக்கின்றது. சவுக்கு ஒடுக்கவே தேவையில்லை. "டிராக்" கம்பீரமாக இருக்கிறது. பக்கத்திலே வண்டி வரும் சத்தம் கேட்டால் கண்களிலே ஒரு மிரட்சி. கால்கள் துடிக்கின்றன. காற்று வேகமாகக் கிளம்புகிறது. முகத்திலே களையும் இருக்கிறது. குதிரை சிலாக்கியமானதுதான். ஆனால் வண்டி மட்டும் ஏற்றதல்ல. ரப்பர் டயர் இருக்கிறது. ஆனால் குதிரையின் போக்கைச் சமாளிக்கும் சக்தி இல்லை வண்டிக்கு. வேறே வண்டியாக மட்டும் இருந்தால், ஜோர்தான்! மிராசுதார் மீனாட்சிசுந்தரர் அலைந்து திரிந்து, பல சந்தைகளுக்கு ஆள்விட்டுப் பார்த்து, அதிக பொருட்செலவில் பெற்றார் அந்தக் குதிரையை! வண்டி, பரம்பரைச் சொத்து, விற்கவேண்டிய அவசியமில்லை. எனவே, புதிய புரவியைப் பழைய வண்டியிலே பூட்டினார். குதிரையின் விசேஷத்தைப் புகழ்ந்தவர்கள், வண்டியின் வளைவைக் கூறினர். மீனாட்சிசுந்தரரும் "ஆமாம்" என்றார். வேறு வண்டிக்கு ஆர்டர் கொடுத்தார். பட்டறையிலிருந்து புது வண்டி வருவதற்குள் பழைய வண்டியை உபயோகித்துக் கொண்டிருந்தார். வழக்கமாகவே குதூகலமாக வாழ்பவர். மிராசுதார், அவருக்கென்ன ஆனந்தத்துக்குக் குறைவா? அந்த ஊரே அவருடையது; ஆள் அம்பு ஏராளம், வருவாய் அமோகம். வாட்டம் ஏது? வருத்தம் ஏது? வாழ்க்கை அவருக்கோர் விருந்து. அதிலும், புதிய குதிரை கிடைத்த பிறகு ஆனந்தம் முன்பிருந்ததைவிட, மும்மடங்காயிற்று. மிராசுதாரருக்குச் சந்தோஷமூட்டிய குதிரைக்கு மேய்ப்புத் தேய்ப்புக்கு, புல், கொள் வகைக்குக் குறைவா? கோதுமைக் கஞ்சி, சில வேளைகளிலே வேறு வேறு விதமாக வலிவூட்டும் உணவுகள் அந்தக் குதிரைக்கு. அழகான அலங்காரங்கள். இரவிலே பனி படாதிருக்க, பட்டுப்போர்வை. குதிரையின் வாழ்வு குஷிதான்! பாதி இராத்திரி இரயிலுக்குள் பத்தணாவாவது சம்பாதித்துத் தீரவேண்டிய, பாட்டாளிக் குதிரையல்லவே அது. பாடுபட்டப் பலரிருக்கப் பானகம் போன்ற வாழ்வு ருசியைப் பருகிடும் மிராசுதாரரின் குதிரையன்றோ. முதுகிலே அடியோ, முட்டிகளிலே புண்ணோ, கண்ணிலே காயமோ, கடிவாளத்திலே முள்ளோ இல்லை. ஜாம் ஜாமென வாழ்ந்து வந்தது. மீனாட்சிசுந்தரரின் மகள் மதுரவல்லி, தந்தை அடைந்தது போன்ற சந்தோஷப்பட்டாள். குதிரை மாளிகையிலே குடிபுக வந்ததும், வேலையாட்கள் புடை சூழ அந்தச் சிற்றிடையாள் சென்று, குதிரையின் முதுகைத் தடவிக் கொடுப்பாள். முகத்தைத் தன் மிருதுவான கரங்களால், அணைத்துக் கொள்வாள். முத்தமிடுவாள். அதன் கண் தன்னையே நோக்குவதாகச் சொல்வாள். கழுத்துக்குத் தங்கமணி கட்டவேண்டுமென்று கூறுவாள். வண்டிதான் புராதனம், இதற்கு ஏற்றதல்ல என்றுரைப்பாள். ஊர் முழுவதுமே, இதேபோலத் தான் பேசிற்று. வண்டி பழையது குதிரை புதியது; குதிரைக்கு ஏற்ற வண்டியல்ல என்று. சவாரி மட்டும் நடந்துகொண்டுதான் இருந்தது. "என் அருமை பெருமைகளைக் கண்டு புகழ்கிறீர். வண்டி எனக்கேற்றதல்லவே என்றும் சொல்கிறீர். சொல்லியும் அதிலேயே என்னைப் பூட்டி ஓட்டுகிறீரே இது முறையா?" என்று எப்படிக் கூறும்! குதிரைக்குத்தான் கூறிடும் திறமையில்லை. குமரிகளுக்கு வாயிருந்தும் தமக்குக் கிடைக்கும் வாழ்க்கை வண்டிகளின் வக்கிரமத்தை எடுத்துக் கூறி, வேண்டாம் என்று கூற முடிகிறதா? குதிரையை இழுத்து வண்டியிலே பூட்டுவதைப் போலத்தான், குமரிகளையும் பிணைத்து விடுகிறார்கள். வாழ்க்கைச் சவாரியும் நடந்து கொண்டுதான் இருக்கிறது. விபத்துக்கள் நேரிடும்போது, இருக்கவே இருக்கிறது, "விதி" என்ற வெட்டிப் பேச்சு! மகாளிப்பட்டி மிட்டாதார், மீனாட்சிசுந்தரரின் தூரபந்து. பழைய பாத்தியதை விட்டுவிடாமல் இருக்கச் செய்வதுடன், நெருங்கிய நேசம் உண்டாகச் செய்யவே மதுரவல்லி உதித்தாள் என்று மாகாளிப்பட்டி மகிபாலர் மனதில் எண்ணினார். முதலிலே அவருக்குத் தன் கடனும், மீனாட்சிசுந்தரரின் அயன் நிலங்களும், இந்த நினைப்பைத் தந்தன. பிறகோர் நாள் மதுரவல்லியையும், கண்டார்; கண்டதும் நினைப்பு உறுதியாய்விட்டது. மதுரவல்லி யாரையும் மயக்க வேண்டுமென்று கருதுபவளல்ல. அப்படி யாரையாவது மயக்கித்தான் வாழ வேண்டுமென்று நிலையா அவளுக்கு! மிராசுதாரரின் ஏக புத்திரி! அவள் மேனியும் முகவெட்டும் அமைந்திருந்த விதம், பிறரை மயக்கும் விதமாக இருந்தது. அதோ கொடியிலே கூத்தாடும் மலரின் மணம், வண்டுகளை இழுக்கவில்லையா? கானாற்றின் ஒலி காட்டு மிருகங்களுக்கு கீதமாகவில்லையா? வானத்திலே ஒளி வீசும் நட்சத்திரங்கள், கண்களுக்கு விருந்தளிக்கவில்லையா? அதுபோலத்தான், மதுரவல்லி காண்போர் கண்களுக்கு விளங்கினாள். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை. இந்த வலைதள பக்கத்தில் உள்ள தகவல்களை பதிப்பிக்கவோ, ஒலிபரப்பவோ, வெளியிடவோ அல்லது விநியோகிக்கவோ கூடாது. |
| இலக்கிய தகவல்கள் |
| தரவிறக்கம் |
பிற செய்திகள் |
ஆன்மீகம் |