சமகால இலக்கியம் |
பழந்தமிழ் இலக்கியம் |
அழகின் சிரிப்பு 1. அழகு
சோலையிலே, மலர்களிலே, தளிர்கள் தம்மில், தொட்ட இடம் எலாம் கண்ணில் தட்டுப் பட்டாள்! மாலையிலே மேற்றிசையில் இலகு கின்ற மாணிக்கச் சுடரிலவள் இருந்தாள் ஆலஞ் சாலையிலே கிளைதோறும் கிளியின் கூட்டந் தனில் அந்த 'அழகெ'ன்பாள் கவிதை தந்தாள்.1 சிறு குழந்தை விழியினிலே ஒளியாய் நின்றாள்; திருவிளக்கில் சிரிக்கின்றாள், நாரெடுத்து நறுமலரைத் தொடுப்பாளின் விரல்வளைவில் நாடகத்தைச் செய்கின்றாள்; அடடே செந்தோள் புறத்தினிலே கலப்பையுடன் உழவன் செல்லும் புதுநடையில் பூரித்தாள்; விளைந்த நன்செய் நிறத்தினிலே என் விழியை நிறுத்தினாள்; என் நெஞ்சத்தில் குடியேறி மகிழ்ச்சி செய்தாள். 2 திசைகண்டேன், வான்கண்டேன், உட்புறத்துச் செறிந்தனவாம் பலப்பலவும் கண்டேன். யாண்டும் அசைவனவும் நின்றனவும் கண்டேன். மற்றும் அழகுதனைக் கண்டேன் நல்லின்பங் கண்டேன். பசையுள்ள பொருளிலெலாம் பசையவள் காண்! பழமையினால் சாகாத இளையவள் காண்! நசையோடு நோக்கடா எங்கும் உள்ளாள்! நல்லழகு வசப்பட்டால் துன்ப மில்லை. 3 2. கடல்
மணல், அலைகள்
கீரியின் உடல் வண்ணம் போல் மணல் மெத்தை; அம்மெத் தைமேல் நேரிடும் அலையோ கல்வி நிலையத்தின் இளைஞர் போலப் பூரிப்பால் ஏறும் வீழும்; புரண்டிடும்; பாராய் தம்பி. 4 மணற்கரையில் நண்டுகள்
துள்ளியே அலைகள் மேன்மேல் கரையினிற் சுழன்று வீழும்! வெள்ளலை, கரையைத் தொட்டு மீண்டபின் சிறுகால் நண்டுப் பிள்ளைகள் ஓடி ஆடிப் பெரியதோர் வியப்பைச் செய்யும். 5 புரட்சிக்கப்பால் அமைதி
கரையினில் அலைகள் மோதிக் கலகங்கள் விளைக்கும்; ஆனால் அருகுள்ள அலைகட் கப்பால் கடலிடை அமைதி அன்றோ! பெருநீரை வான்மு கக்கும்; வான்நிறம் பெருநீர் வாங்கும்! 6 கடலின் கண்கொள்ளாக் காட்சி
ஒருங்காக வடக்கும் தெற்கும் ஓடு நீர்ப் பரப்பும் காண இருவிழிச் சிறகால் நெஞ்சம் எழுந்திடும்; முழுதும் காண ஒருகோடிச் சிறகு வேண்டும் ஓகோகோ எனப்பின் வாங்கும்! 7 கடலும் இளங் கதிரும்
விழுந்தது தங்கத் தூற்றல்! வெளியெலாம் ஒளியின் வீச்சு! முழங்கிய நீர்ப்ப ரப்பின் முழுதும்பொன் னொளி பறக்கும், பழங்கால இயற்கை செய்யும் புதுக்காட்சி பருகு தம்பி! 8 கடலும் வானும்
திக்கெலாம் தெரியக் காட்டும் இளங்கதிர்ச் செம்ப ழத்தைக் கைக்கொள்ள அம்மு கில்கள் போராடும்! கருவா னத்தை மொய்த்துமே செவ்வா னாக்கி முடித்திடும்! பாராய் தம்பி! 9 எழுந்த கதிர்
களித்தன கடலின் புட்கள்; எழுந்தன கைகள் கொட்டி! ஒளிந்தது காரி ருள்போய்! உள்ளத்தில் உவகை பூக்க இளங்கதிர், பொன்னி றத்தை எங்கணும் இறைக்க லானான். 10 அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை. இந்த வலைதள பக்கத்தில் உள்ள தகவல்களை பதிப்பிக்கவோ, ஒலிபரப்பவோ, வெளியிடவோ அல்லது விநியோகிக்கவோ கூடாது.
|
| இலக்கிய தகவல்கள் |
| தரவிறக்கம் |
|
|
|
|
தமிழ் யுனிகோடில் அமைந்த இணைய தளம். பதிப்புரிமை © 2006 சென்னைநூலகம்.காம். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
|