http://www.chennailibrary.com


எதிர்பாராத முத்தம்

... தொடர்ச்சி ...

இனமலர் அழகு கண்டே
'இச்' சென்று முத்தம் ஈவார்.

மணிப்புனல் பொய்கை தன்னில்
மங்கைமார் கண்ணும், வாயும்

அணிமூக்கும், கையும் ஆன
அழகிய மலரின் காடும்,

மணமலர்க் காடும் கூடி
மகிச்சியை விளைத்தல் கண்டோம்!

அணங்குகள் மலர்கள் என்ற
பேதத்தை அங்கே காணோம்!

பொய்கையில் மூழ்கிச் செப்பில்
புதுப்புனல் ஏந்திக் காந்த

மெய்யினில் ஈர ஆடை
விரித்துப்பொன் மணி இழைகள்

வெய்யிலை எதிர்க்கப் பெண்கள்
இருவர் மூவர்கள் வீதம்

கைவீசி மீள லுற்றார்
கனிவீசும் சாலை மார்க்கம்!

3. பூங்கோதை - பொன்முடி

பூங்கோதை வருகின்றாள் புனிதையோடு!
பொன்முடியோ எதிர்பாரா விதமாய், முத்து
வாங்கப் போகின்றான் அவ்வழியாய்! வஞ்சி,
வருவோனைத் தூரத்தில் பார்த்தாள்; அன்னோன்
பூங்கோதையா என்று சந்தேகித்தான்!
போன வருஷம் வரைக்கும் இரண்டு பேரும்
வங்காத பண்டமில்லை; உண்ணும் போதும்
மனம் வேறு பட்டதில்லை. என்ன ஆட்டம்!

"அத்தான்" என்றழைக்காத நேரமுண்டா!
அத்தை மகளைப்பிரிவானா அப்பிள்ளை!
இத்தனையும் இரு குடும்பம் பகையில் மூழ்கி
இருந்ததனை அவன் நினைத்தான்! அவள் நினைத்தாள்!

தொத்துகின்ற கிளிக்கெதிரில் அன்னோன் இன்பத்
தோளான மணிக்கிளையும் நெருங்க-மேலும்
அத்தாணி மண்டபத்து மார்பன் அண்டை
அழகிய பட்டத்தரசி நெருங்கலானாள்!

"என்விழிகள் அவர்விழியைச் சந்திக்குங்கால்
என்ன விதம் நடப்ப" தென யோசிப்பாள் பெண்;
ஒன்றுமே தோன்றவில்லை; நிமிர்ந்தே அன்னோன்
ஒளிமுகத்தைப் பார்த்திடுவாள்; குனிந்து கொள்வாள்!

சின்னவிழி ஒளிபெருகும்! இதழ்சிரிக்கும்!
திருத்தமுள்ள ஆடைதனைத் திருத்திக் கொள்வாள்!
"இன்னவர் தாம் என் அத்தான்" என்றே அந்த
எழிற் புனிதையிடம் விரல் சுட்டாது சொன்னாள்!

பொன்முடியோ முகநிமிர்ந்து வானிலுள்ள
புதுமையெலாம் காண்பவன் போல் பூங்கோதைதன்
இன்பமுகம் தனைச் சுவைப்பான் கீழ்க்கண்ணாலே,
'இப்படியா' என்று பெரு மூச்செறிந்தே,

"என் பெற்றோர் இவள் பெற்றோர் உறவுநீங்கி
இருப்பதனால் இவளென்னை வெறுப்பாளோ? நான்
முன்னிருந்த உறவுதனைத் தொடங்கலாமோ
முடியாதோ" என்று பல எண்ணி நைவான்.

எதிர்ப்பட்டார்! அவன்பார்த்தான்; அவளும்பார்த்தாள்;

இரு முகமும் வரி வடிவு கலங்கிப் பின்னர்
முதல் இருந்த நிலைக்கு வர இதழ் சிலிர்க்க,
முல்லை தனைக் காட்டி உடன் மூடி மிக்க
அதிகரித்த ஒளி வந்து முகம் அளாவ
அடி மூச்சுக் குரலாலே ஒரே நேரத்தில்
அதிசயத்தைக் காதலொடு கலந்த பாங்கில்
"அத்தான்", "பூங்கோதை" என்றார்! நின்றார் அங்கே.



இணைய பக்க முகவரி: http://www.chennailibrary.com/bharathidasan/ethirpaaraathamuththam2.html

பதிப்புரிமை © 2006 சென்னைநூலகம்.காம்.
அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
இந்த வலைதள பக்கத்தில் உள்ள தகவல்களை பதிப்பிக்கவோ,
ஒலிபரப்பவோ, வெளியிடவோ அல்லது விநியோகிக்கவோ கூடாது.

 அச்சிட       விமர்சிக்க       விருப்ப தளமாக்க
       முகப்பு பக்கமாக்க



வருகைப் பதிவு (25-09-2006 முதல்)
ad
இலக்கிய தகவல்கள்
தரவிறக்கம்
பிற செய்திகள்
ஆன்மீகம்




தமிழ் யுனிகோடில் அமைந்த இணைய தளம். பதிப்புரிமை © 2006 சென்னைநூலகம்.காம். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.