http://www.chennailibrary.com



சமகால இலக்கியம்


Google

பழந்தமிழ் இலக்கியம்






கண்ணன் பாட்டு

1. கண்ணன்- என் தோழன்

புண்ணாகவராளி - திஸ்ரஜாதி ஏகதாளம் - வத்ஸலரஸம்

பொன்னவிர் மேனிச் சுபத்திரை மாதைப்
     புறங்கொண்டு போவதற்கே - இனி
என்ன வழியென்று கேட்கில், உபாயம்
     இருகணத் தேயுரைப் பான்; - அந்தக்
"கன்னன் வில்லாளர் தலைவனைக் கொன்றிடக்
     காணும் வழியொன் றில்லேன் - வந்திங்கு
உன்னை யடைந்தனன்" என்னில் உபாயம்
     ஒருகணத் தேயுரைப் பான். 1

கானகத்தே சுற்று நாளிலும் நெஞ்சிற்
     கலக்க மிலாது செய்வான்; - பெருஞ்
சேனைத் தலைநின்று போர்செய்யும் போதினில்
     தேர்நடத் திக்கொடுப் பான்; - என்றன்
ஊனை வருத்திடு நோய்வரும் போதினில்
     உற்ற மருந்துசொல் வான்; - நெஞ்சம்
ஈனக் கவலைக ளெய்திடும் போதில்
     இதஞ்சொல்லி மாற்றிடு வான்; 2

பிழைக்கும் வழிசொல்ல வேண்டுமென் றாலொரு
     பேச்சினி லேசொல்லு வான்;
உழைக்கும் வழிவினை யாளும் வழிப்பயன்
     உண்ணும் வழியுரைப் பான்;
அழைக்கும் பொழுதினிற் போக்குச் சொல்லாமல்
     அரைநொடிக் குள்வரு வான்;
மழைக்குக் குடை, பசி நேரத் துணவென்றன்
     வாழ்வினுக் கெங்கள்கண்ணன்; 3

கேட்டபொழுதில் பொருள் கொடுப்பான்; சொல்லுங்
     கேலி பொறுத்திடுவான்; - எனை
ஆட்டங்கள் காட்டியும் பாட்டுக்கள் பாடியும்
     ஆறுதல் செய்திடு வான்; - என்றன்
நாட்டத்திற் கொண்ட குறிப்பினை இஃதென்று
     நான்சொல்லும் முன்னுணர் வான்; - அன்பர்
கூட்டத்தி லேயிந்தக் கண்ணனைப் போலன்பு
     கொண்டவர் வேறுள ரோ? 4

உள்ளத்தி லேகரு வங்கொண்ட போதினில்
     ஓங்கி யடித் திடுவான்; - நெஞ்சில்
கள்ளத்தைக் கொண்டொரு வார்த்தை சொன் னாலங்கு
     காறி யுமிழ்ந்திடு வான்; - சிறு
பள்ளத்தி லேநெடு நாளழு குங்கெட்ட
     பாசியை யெற்றி விடும் - பெரு
வெள்ளத்தைப் போலருள் வார்த்தைகள் சொல்லி
     மெலிவு தவிர்த்திடு வான். 5

சின்னக் குழந்தைகள் போல்விளை யாடிச்
     சிரித்துக் களித்திடு வான்; - நல்ல
வன்ன மகளிர் வசப்பட வேபல
     மாயங்கள் சூழ்ந்திடு வான்; - அவன்
சொன்ன படி நடவாவிடி லோமிகத்
     தொல்லை யிழைத்திடு வான்; - கண்ணன்
தன்னை யிழந்து விடில், ஐயனே! பின்
     சகத்தினில் வாழ்வதி லேன். 6

கோபத்தி லேயொரு சொல்லிற் சிரித்துக்
     குலுங்கிடச் செய்திடு வான்; - மன?
தாபத்திலே யொன்று செய்து மகிழ்ச்சி
     தழைத்திடச் செய்திடு வான்; - பெரும்
ஆபத்தி னில்வந்து பக்கத்தி லேநின்று
     அதனை விலக்கிவிடு வான்; - சுடர்த்
தீபத்தி லேவிழும் பூச்சிகள் போல்வருந்
     தீமைகள் கொன்றிடு வான். 7

உண்மை தவறி நடப்பவர் தம்மை
     உதைத்து நசுக்கிடுவான்; - அருள்
வண்மையி னாலவன் மாத்திரம் பொய்கள்
     மலைமலை யாவுரைப் பான்; - நல்ல
பெண்மைக் குணமுடையான்; - சில நேரத்தில்
     பித்தர் குணமுடை யான்; - மிகத்
தண்மைக் குணமுடை யான்; - சில நேரம்
     தழலின் குணமுடை யான். 8



இணைய பக்க முகவரி: http://www.chennailibrary.com/bharathiyar/kannanpattu.html

பதிப்புரிமை © 2006 சென்னைநூலகம்.காம்.
அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
இந்த வலைதள பக்கத்தில் உள்ள தகவல்களை பதிப்பிக்கவோ,
ஒலிபரப்பவோ, வெளியிடவோ அல்லது விநியோகிக்கவோ கூடாது.

 அச்சிட       விமர்சிக்க       விருப்ப தளமாக்க
       முகப்பு பக்கமாக்க




பிற செய்திகள்




வருகைப் பதிவு (25-09-2006 முதல்)
ad
இலக்கிய தகவல்கள்

தரவிறக்கம்


தமிழ் யுனிகோடில் அமைந்த இணைய தளம். பதிப்புரிமை © 2006 சென்னைநூலகம்.காம். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.