சமகால இலக்கியம் |
பழந்தமிழ் இலக்கியம் |
கண்ணன் பாட்டு 1. கண்ணன்- என் தோழன்
புண்ணாகவராளி - திஸ்ரஜாதி ஏகதாளம் - வத்ஸலரஸம்
பொன்னவிர் மேனிச் சுபத்திரை மாதைப் புறங்கொண்டு போவதற்கே - இனி என்ன வழியென்று கேட்கில், உபாயம் இருகணத் தேயுரைப் பான்; - அந்தக் "கன்னன் வில்லாளர் தலைவனைக் கொன்றிடக் காணும் வழியொன் றில்லேன் - வந்திங்கு உன்னை யடைந்தனன்" என்னில் உபாயம் ஒருகணத் தேயுரைப் பான். 1 கானகத்தே சுற்று நாளிலும் நெஞ்சிற் கலக்க மிலாது செய்வான்; - பெருஞ் சேனைத் தலைநின்று போர்செய்யும் போதினில் தேர்நடத் திக்கொடுப் பான்; - என்றன் ஊனை வருத்திடு நோய்வரும் போதினில் உற்ற மருந்துசொல் வான்; - நெஞ்சம் ஈனக் கவலைக ளெய்திடும் போதில் இதஞ்சொல்லி மாற்றிடு வான்; 2 பிழைக்கும் வழிசொல்ல வேண்டுமென் றாலொரு பேச்சினி லேசொல்லு வான்; உழைக்கும் வழிவினை யாளும் வழிப்பயன் உண்ணும் வழியுரைப் பான்; அழைக்கும் பொழுதினிற் போக்குச் சொல்லாமல் அரைநொடிக் குள்வரு வான்; மழைக்குக் குடை, பசி நேரத் துணவென்றன் வாழ்வினுக் கெங்கள்கண்ணன்; 3 கேட்டபொழுதில் பொருள் கொடுப்பான்; சொல்லுங் கேலி பொறுத்திடுவான்; - எனை ஆட்டங்கள் காட்டியும் பாட்டுக்கள் பாடியும் ஆறுதல் செய்திடு வான்; - என்றன் நாட்டத்திற் கொண்ட குறிப்பினை இஃதென்று நான்சொல்லும் முன்னுணர் வான்; - அன்பர் கூட்டத்தி லேயிந்தக் கண்ணனைப் போலன்பு கொண்டவர் வேறுள ரோ? 4 உள்ளத்தி லேகரு வங்கொண்ட போதினில் ஓங்கி யடித் திடுவான்; - நெஞ்சில் கள்ளத்தைக் கொண்டொரு வார்த்தை சொன் னாலங்கு காறி யுமிழ்ந்திடு வான்; - சிறு பள்ளத்தி லேநெடு நாளழு குங்கெட்ட பாசியை யெற்றி விடும் - பெரு வெள்ளத்தைப் போலருள் வார்த்தைகள் சொல்லி மெலிவு தவிர்த்திடு வான். 5 சின்னக் குழந்தைகள் போல்விளை யாடிச் சிரித்துக் களித்திடு வான்; - நல்ல வன்ன மகளிர் வசப்பட வேபல மாயங்கள் சூழ்ந்திடு வான்; - அவன் சொன்ன படி நடவாவிடி லோமிகத் தொல்லை யிழைத்திடு வான்; - கண்ணன் தன்னை யிழந்து விடில், ஐயனே! பின் சகத்தினில் வாழ்வதி லேன். 6 கோபத்தி லேயொரு சொல்லிற் சிரித்துக் குலுங்கிடச் செய்திடு வான்; - மன? தாபத்திலே யொன்று செய்து மகிழ்ச்சி தழைத்திடச் செய்திடு வான்; - பெரும் ஆபத்தி னில்வந்து பக்கத்தி லேநின்று அதனை விலக்கிவிடு வான்; - சுடர்த் தீபத்தி லேவிழும் பூச்சிகள் போல்வருந் தீமைகள் கொன்றிடு வான். 7 உண்மை தவறி நடப்பவர் தம்மை உதைத்து நசுக்கிடுவான்; - அருள் வண்மையி னாலவன் மாத்திரம் பொய்கள் மலைமலை யாவுரைப் பான்; - நல்ல பெண்மைக் குணமுடையான்; - சில நேரத்தில் பித்தர் குணமுடை யான்; - மிகத் தண்மைக் குணமுடை யான்; - சில நேரம் தழலின் குணமுடை யான். 8 அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை. இந்த வலைதள பக்கத்தில் உள்ள தகவல்களை பதிப்பிக்கவோ, ஒலிபரப்பவோ, வெளியிடவோ அல்லது விநியோகிக்கவோ கூடாது.
|
| இலக்கிய தகவல்கள் |
| தரவிறக்கம் |
|
|
|
|
தமிழ் யுனிகோடில் அமைந்த இணைய தளம். பதிப்புரிமை © 2006 சென்னைநூலகம்.காம். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
|