கண்ணன் பாட்டு ... தொடர்ச்சி ... கொல்லுங் கொலைக்கஞ்சி டாத மறவர் குணமிகத் தானுடை யான்; - கண்ணன் சொல்லு மொழிகள் குழந்தைகள்; போலொரு சூதறி யாதுசொல் வான்; - என்றும் நல்லவ ருக்கொரு தீங்கு நண்ணாது. நயமுறக் காத்திடு வான்; - கண்ணன் அல்லவ ருக்கு விடத்தினில் நோயில் அழலினி லுங்கொடி யான். 9 காதல் விளைய மயக்கிடும் பாட்டினில் கண்மகிழ் சித்திரத் தில் - பகை மோதும் படைத்தொழில் யாவினு மேதிறம் முற்றிய பண்டிதன் காண்; - உயர் வேத முணர்ந்த முனிவ ருணர்வினில் மேவு பரம்பொருள் காண்; - நல்ல கீதை யுரைத்தெனை இன்புறச் செய்தவன் கீர்த்திகள் வாழ்த்திடு வேன். 10 2. கண்ணன்- என் தாய்
(நொண்டிச் சிந்து)
உண்ண உண்ணத் தெவிட்டாத - அம்மை உயிரெனும் முலையினில் உணர்வெனும் பால்; வண்ணமுற வைத்தெனக் கே - என்றன் வாயினிற்கொண் டூட்டுமோர் வண்மையுடையாள், கண்ணனெனும் பெயருடையாள், - என்னைக் கட்டிநிறை வான் எனுந்தன் கையி லணைத்து மண்ணெனுந்தன் மடியில் வைத்தே - பல மாயமுறுங் கதைசொல்லி மனங்களிப் பாள். 1 இன்பமெனச் சில கதைகள் - எனக் கேற்றமென்றும் வெற்றி யென்றும் சில கதைகள் துன்பமெனச் சில கதைகள் - கெட்ட தோல்வியென்றும் வீழ்ச்சியென்றும் சில கதைகள் என்பருவம் என்றன் விருப்பம் - எனும் இவற்றினுக் கிணங்கவென் னுளமறிந்தே அன்பொடவள் சொல்லிவரு வாள்; -அதில் அற்புதமுண் டாய்ப்பர வசமடை வேன். 2 விந்தைவிந்தை யாக எனக்கே - பல விதவிதத் தோற்றங்கள் காட்டுவிப் பாள்; சந்திரனென் றொரு பொம்மை - அதில் தண்ணமுதம் போல ஒளி பரந்தொழுகும். மந்தை மந்தையா மேகம் - பல வண்ணமுறும் பொம்மையது மழைபொழியும்; முந்தஒரு சூரியனுண்டு - அதன் முகத்தொளி கூறுதற்கொர் மொழியிலையே. 3 வானத்து மீன்க ளுண்டு - சிறு மணிகளைப் போல்மின்னி நிறைந்திருக்கும்; நானத்தைக் கணக்கிடவே - மனம் நாடிமிக முயல்கினும் கூடுவதில்லை; கானத்து மலைக ளுண்டு - எந்தக் காலமுமொ ரிடம்விட்டு நகர்வதில்லை; மோனத்தி லேயிருக்கும் - ஒரு மொழியுரை யாதுவிளை யாடவருங்காண். 4 நல்லநல்ல நதிகளுண்டு - அவை நாடெங்கும் ஓடிவிளை யாடி வருங்காண்; மெல்ல மெல்லப் போயவை தாம் - விழும் விரிகடற் பொம்மையது மிகப் பெரிதாம்; எல்லையதிற் காணுவ தில்லை; - அலை எற்றிநுரை கக்கியொரு பாட்டிசைக்கும்; ஒல்லெனுமப் பாட்டினிலே - அம்மை ஓமெனும் பெயரென்றும் ஒலித்திடுங் காண். 5 சோலைகள் காவினங் கள் - அங்கு சூழ்தரும் பலநிற மணிமலர் கள் சாலவும் இனியன வாய் - அங்கு தருக்களில் தூங்கிடும் கனிவகை கள் ஞாலமுற்றிலும் நிறைந் தே - மிக நயந்தரு பொம்மைகள் எனக்கென வே; கோலமுஞ் சுவையு முற - அவள் கோடிபல கோடிகள் குவித்துவைத் தாள். 6 அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை. இந்த வலைதள பக்கத்தில் உள்ள தகவல்களை பதிப்பிக்கவோ, ஒலிபரப்பவோ, வெளியிடவோ அல்லது விநியோகிக்கவோ கூடாது. |
| இலக்கிய தகவல்கள் |
| தரவிறக்கம் |
பிற செய்திகள் |
ஆன்மீகம் |