http://www.chennailibrary.com




குயில் பாட்டு

... தொடர்ச்சி ...

5.    பண்ணே, பண்ணே, பண்ணே;
     பண்ணிற் கேயோர் பழுதுண் டாயின்,
     மண்ணே, மண்ணே, மண்ணே. (காதல்)

6.    புகழே, புகழே, புகழே;
     புகழுக் கேயோர் புரையுண் டாயின்,
     இகழே, இகழே, இகழே. (காதல்)

7.    உறுதி, உறுதி, உறுதி;
     உறுதிக் கேயோர் உடைவுண் டாயின்,
     இறுதி, இறுதி, இறுதி. (காதல்)

8.    கூடல், கூடல், கூடல்;
     கூடிப் பின்னே குமரன் போயின்,
     வாடல், வாடல், வாடல். (காதல்)

9.    குழலே, குழலே, குழலே;
     குழலிற் கீறல் கூடுங்காலை,
     விழலே, விழலே, விழலே. (காதல்)

3. குயிலின் காதற் கதை

மோகனப் பாட்டு முடிவுபெறப் பாரெங்கும்
ஏக மவுன மியன்றதுகாண்; மற்றதிலோர்
இன்ப வெறியுந் துயரும் இணைந்தனவால்
பின்புநான் பார்க்கப் பெடைக்குயிலஃ தொன்றல்லால்
மற்றைப் பறவை மறைந்தெங்கோ போகவுமிவ் 5

ஒற்றைக் குயில் சோக முற்றுத தலைகுனிந்து
வாடுவது கண்டேன் மரத்தருகே போய் நின்று,
"பேடே! திரவியமே! பேரின்பப் பாட்டுடையாய்!
ஏழுலகம் இன்பத்தீ ஏற்றுந் திறனுடையாய்!
பீழையுனக் கெய்தியதென்? பேசாய்!" எனக்கேட்டேன். 10

மாயக் குயிலதுதான் மானுடவர் பேச்சினிலோர்
மாயச்சொல் கூற மனந் தீயுற நின்றேன்.
"காதலை வேண்டிக் கரைகின்றேன், இல்லை யெனில்
சாதலை வேண்டித் தவிக்கின்றேன்" என்றதுவால்.
"வானத்துப் புள்ளெல்லாம் மையலுறப் பாடுகிறாய், 15

ஞானத்திற் புட்களிலும் நன்கு சிறந்துள்ளாய்.
காதலர்நீ யெய்துகிலாக் காரணந்தான் யா" தென்றேன்.
வேதனையும் நாணும் மிகுந்த குரலினிலே
கானக் குயிலிக் கதைசொல்ல லாயிற்று:-
"மானக் குலையும் வருத்தமுநான் பார்க்காமல், 20

உண்மை முழுதும் உரைத்திடுவேன் மேற்குலத்தீர்!
பெண்மைக் கிரங்கிப் பிழைபொறுத்தல் கேட்கின்றேன்.
அறிவும் வடிவுங் குறுகி அவனியிலே
சிறியதொரு புள்ளாய்ச் சிறியேன் பிறந்திடினும்,
தேவர் கருணையிலோ தெய்வச் சினத்தாலோ 25

யாவர் மொழியும் எளிதுணரும் பேறு பெற்றேன்.
மானுடவர்நெஞ்ச வழக்கெல்லாந் தேர்ந்திட்டேன்;
கானப் பறவை கலகலெனும் ஓசையிலும்,
காற்று மரங்களிடைக் காட்டும் இசைகளிலும்,
ஆற்றுநீ ரோசை அருவி யொலியினிலும், 30

நீலப் பெருங்கடலெந் நேரமுமே தானிசைக்கும்
ஓலத் திடையே உதிக்கும் இசையினிலும்,
மானுடப் பெண்கள் வளருமொரு காதலினால்
ஊனுருகப் பாடுவதில் ஊறிடுந்தேன் வாரியிலும்,
ஏற்றநீர்ப் பாட்டின் இசையினிலும், நெல்லிடிக்குங் 35

கொற்றொடியார் குக்குவெனக் கொஞ்சும் ஒலியினிலும்
சுண்ண மிடிப்பார்தஞ் சுவைமிகுந்த பண்களிலும்
பண்ணை மடவார் பழகு பல பாட்டினிலும்
வட்டமிட்டுப் பெண்கள் வளைக்கரங்கள் தாமொலிக்கக்
கொட்டி யிசைத்திடுமோர் கூட்டமுதப் பாட்டினிலும், 40



இணைய பக்க முகவரி: http://www.chennailibrary.com/bharathiyar/kuyilpattu2.html

பதிப்புரிமை © 2006 சென்னைநூலகம்.காம்.
அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
இந்த வலைதள பக்கத்தில் உள்ள தகவல்களை பதிப்பிக்கவோ,
ஒலிபரப்பவோ, வெளியிடவோ அல்லது விநியோகிக்கவோ கூடாது.

 அச்சிட       விமர்சிக்க       விருப்ப தளமாக்க
       முகப்பு பக்கமாக்க




வருகைப் பதிவு (25-09-2006 முதல்)
ad
இலக்கிய தகவல்கள்
தரவிறக்கம்
பிற செய்திகள்
ஆன்மீகம்

தமிழ் யுனிகோடில் அமைந்த இணைய தளம். பதிப்புரிமை © 2006 சென்னைநூலகம்.காம். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.