சங்கமருவிய எட்டுத்தொகை நூல்களுள் மூன்றாவதாகிய

ஐங்குறு நூறு

தெளிவுரை : புலியூர்க் கேசிகன்

... தொடர்ச்சி - 12 ...

அம்மூவனார் செய்தருளிய

நெய்தல்

     தொல் தமிழ்ப் பழங்குடியினரின் வாழ்வமைதிகள், பெருப்பாலுன் அவரவர்தம் வாழ்விடத்தின் நிலப்பாங்கையும், அந்நிலப்பாங்கிலே வாழ்வியல் நடாத்திய உயிரினங்களையும், செழித்தோங்கிய மரஞ்செடி கொடிகளையும், மற்றும் அமைந்த பலவான வளங்களையும் தழுவிச் செல்வனாவாகவே அமைந்திருந்தன.

     அறிவொளி எழுந்து வளர்ந்து, மக்கள் தம்முள்ளே ஒன்றுகூடி, ஊரும் சேரியுமாகச் சேருந்து இருந்து வாழத் தொடங்கிச், சமுதாய நெறிமுறைகளும் வகுக்கப்பெற்று, வாழ்வியல் செம்மை பெற்றுச் செழுத்தபோதும், மேற்கூறிய நிலந்தழுவிய, சுற்றுச் சூழல்களைத் தழுவிய வாழ்வுப்போக்கே, அனைத்துக்கும் உள்ளீடாக நிற்கும் உணர்வாக அமையலாயின.

     இந்நிலையிலே, 'நெய்தல்' என்பது, கடலும் கடல் சார்ந்த இடமும் தனக்குரிய நிலமாக அமைய, அங்கு வாழ்வியல் கண்டாரான மீன்பிடிப்பாரும், உப்பு விளைப்பாருமாகிய மக்களின் வாழ்வியலைத் தழுவிச் செல்லும், வாழ்வியல் ஒழுக்கமாக அமைந்ததாகும்.

     காலப்போக்கில், ஒவ்வொரு நிலத்துவாழ் மக்களிடமும், பிறபிற நிலத்துப் பொருள்களிலே செல்லுகின்ற ஆர்வமும் தோன்றி, அதுவே தேவையாகவும் மலர்ந்து வளர்ந்தபோது, ஒருவருக்கொருவர் கொண்டும் கொடுத்தும் வாழத் தொடங்கினர். அப்படி வாழ்ந்துவந்த மக்களிடையே, கருத்துப் பரிமாற்றங்களும் வழக்கம் பரிமாறல்களும் ஏற்படலாயின. இவ்வாறு கொள்வதும் கொடுப்பதுமாகிய தொழிலையே சிலர் வாழ்வியல் தொழிலாக மேற்கொண்டு, அதனால் பெரும் பயனையும் கண்டபோது, இதற்கெனவே வாணிக மக்களும் உருவாயினர். தாமே தனித்தும், தமக்கு உதவப் பலரையும் துணை அமைத்தும், இவர்கள் பெருவளமையோடு தம் தொழிலாற்றி வாழலாயினர்.

     இந்தப் பண்டமாற்றமும், இதன் பயனாகக் குவிந்த பெருவளனும், மக்களிடையே தத்தம் விளைவுகளை 'விலைப்படுத்தி' அதற்கீடாகத் தத்தம் தேவைப் பொருள்களைப் பெற்றுக் கொள்ள விரும்பும் பண்டமாற்றல் மனப்பாங்கை உருவாக்கின. ஆகவே, மிகு பொருள் குவிக்கக் கருதிய மனவன்மையாளர்களும் தோன்றினர். தம் உரிமைகளை வலியுறுத்திப், பிறர் நலத்தைத் தமதாகக் கவரலாயினர். இதுவே சமுதாய நெறி மரபாக, அவர்தம் வலிமைக்கு எதிர் நிற்கவியலாத பிற மக்களாலும் ஏற்றுக் கொள்ளப் பெற்ற போது, சமுதாய மக்கள் மேற்குடியினரும் கீழ்க்குடியினருமாக இருவகையாற் பிளவுற்றனர். பிறர் பணிகொண்டு தாம் இனிது மனம்போல் வாழும் உயர் குடியினரும், அவர்க்குப் பணிசெய்தே தம் வாழ்வியலை நடத்தும் ஏவல் உழைப்பாளருமாகத் தமிழினமும் இருவேறு ந்நிலையினதாகிப் பிளவு பட்டது. உயர்குடியினரும் வளமாகவும், வசதிகளோடும், பலர் உவந்து பணிசெய்யத் தம் மனம் விரும்பியவாறு களிப்போடே வாழ்ந்தனர். பொதுநெறிகள் அவர்களைச் சாராதே அன்றும் ஒதுங்கி நின்றனர். ஒன்றி வாழும் உரிமையினராக வாழ்ந்த மகளிருட் சிலர் அவர்களாற் காமப் பொருளாகவும் மதிக்கப்பட்டு நிலை தாழ்த்தனர்.

     இத்தகைய நிலையிலே, நாகரிகமென்னும் பெயரோடு தமிழ்ச் சமுதாயம் நிலவிய நாளில், இலக்கியம் படைத்த தமிழ்ச்சான்றோரும், அத்தகைய சமுதாய ஒழுக்க நிலைகளின் வழிநின்றே, தம்முடைய சொல்லோவியங்களை உருவப்படுத்திச் சென்றனர்.

     அம்முறையிலே, 'பெருமணல் உலகம்' என்னும் நெய்தல் நில மக்களின் அகவொழுக்கச் செல்வங்களைக் காட்டிச் செல்லும், நூறு குறுஞ்செய்யுட்களைக் கொண்ட நுட்பமான பகுதி இதுவாகும்.

     இரங்கலும், இரங்கல் நிமித்தமும் உணர்வெழுப்பும் உணர்வுகளாக, நெய்தல் மகளிரும் மாந்தரும், தாம்தாம் கொண்ட நினைவுகளின் போக்கை, பேசிய பேச்சுக்களின் பாங்கை இலக்கிய நயம்படச் சொல்லும் சொல்லாற்றல் நளினத்தை இச் செய்யுட்களிலே சொல்தோறும் மிளிரக் காணலாம்.

     உணர்வுடையோருக்கு, எல்லாப் பொருளமே உயிர்ப்புடன் உளத்தோடே கலந்து உறவாடுகின்றன. உயிருள்ளனவும் உயிரற்றனவும் என்ற பேதம் இல்லாமல், எல்லாமே அவர்தம் சிந்தனைக்கு வித்தாகின்றன. கழிழயும் கானலும், கடலும் கலனும், மீனும் உப்பும், நாரையும் குருகும், புன்னையும் தாழையும், நெய்தலும் அடும்பும், அன்றிலும் அலவனும், இவைபோலும் பிறவும், இலக்கிய நிலையிலே சான்றோரால் எடுத்துக் காட்டப் பெறும்போது, தத்தம் இயற்கையினும் பலவாகச் சிறப்புற்று விளங்கும் உயர்வினையும், நாம் இச்செயுட்களாற் காணலாம்; உணர்ந்து மகிழ்ந்து உவகையுறலாம்.

ஆசிரியர் அம்மூவனார்

     ஐங்குறு நூற்றின், நெய்தல் சார்ந்த இந்த ஒரு நூறு குறுஞ் ஞெய்யுட்களையும், செய்தருளிய சான்றோர் அம்மூவனார் என்பார் ஆவார். இவர், தாம் கடற்கரைப் பாங்கிலேயே தோன்றி வளர்ந்தவராதலால், இவர் செய்யுட்கள் உயிரோவியங்களாக, உயிர்ப்பாற்றலுடன் விளங்குகின்றன. மேலும், பாடுபொருளும் 'இரங்கலாகிய' நினைந்துநினைந்து சோரும் உளவேதனையாதலால், கற்பாரின் உள்ளங்களிலும் கசிவை விளைவித்து, நிலைத்து நிழலாடி நிற்கும் பாங்கினையும் பெறுகின்றது.

     இவறை, 'மூவன்' என்னும் இயற்பெயருடையார் எனவும், 'அம்' என்னும் சிறப்புப் பெயர் உடன்சேர 'அம்மூவன்' என்று அழைக்கப் பெற்றவர் எனவும் கருதுவர். தொன்மை சுட்டும் 'மூ' என்னும் சொல்லிலிருந்து தோன்றிய பழந்தமிழ்ப் பெயர்களுள் இஃதும் ஒன்றாகும். மூவன், மூதில், மூதூர், மூதுரை, மூப்பு, மூப்பன், மூத்தாள், மூத்தான், மூவேந்தர் என்றெல்லாம் வழங்கும் மூ முதற்பெயர்களும் தொன்மையையே சுட்டுவதைக் காணலாம். இனி, இவரை, 'அம்மூ' என்னும் அன்னைப் பழந்தெய்வத்தின் பெயரோடு, ஆண்பால் விகுதி பெற்றமைந்த 'அம்மூவன்' என்னும் பெயரினர் என்றும் சொல்லுவர் சிலர். இதுவும் பொருந்துவதே!

     இந்நெய்தலுக்குரிய சிறுபொழுது எப்பாடு ஆகுத். அதனை ஓர் அழகோவியமாகவே வடித்துக் காட்டுவர், உரையாசிரியர் நச்சினார்க்கியனார். அவர் உரைப்பதனை அப்படியே அறிந்து இன்புறல் நன்று. அவ்வளவு நயமலிந்த சொற்சித்திரங்கள் அவை.

     ''செஞ்சுடர் வெப்பம் தீரத், தண் நறுஞ்சோலை தாழ்ந்து நீழல் செய்யவும்.''

     ''தண்பதம் பட்ட தெண்கழி மேய்ந்து, பல்வேறு வகைப்பட்ட புள்ளெல்லாம், குடம்பை நோக்கி உடங்கு பெயரவும்.''

     ''புன்னை முதலிய பூவின் நாற்றம் முன்னின்று கஞற்றவும்''

     ''நெடுந்திரை அழுவத்து நிலாக்கதிர் பரப்பவும்''

     ''காதன் மிக்குக், கடற்கானும் கானத்தானும் நிறை கடந்து, வேட்கை புலப்பட உரைத்தலின்''

     ''ஆண்டுக் காமக் குறிப்பு வெளிப்பட்டு இரங்கற் பொருள் சிறத்தலின்''

     ''ஏற்பாடு நெய்தற்கு வந்தது'' என்பன அவர்தம் சொற்கள்.

     உணர்வெழுச்சிகளுக்குக் காலவமைதியும், நிலவமைதியும், பிறபிற வமைதிகளும் எவ்வளவு காரணமாகின்றன என்னும் மனவியல் நுட்பத்தை, நாமும் எதனைக் கொண்டு உளம் நிறுத்துவோமாகி, இச்செயுட்களைக் கருத்துடன் கற்போமாக.

1. தாய்க்கு உரைத்த பத்து

     இதன்கண் அமைந்தனவாம் பத்துச் செய்யுட்களும், 'தாய்க்கு உரைத்த'லாகிய ஒன்றே பொருளாக அமைந்துள்ளன. ஆதலின், இப்பெயர் தந்துள்ளனர். செவிலியும் தாய்போலவே ஆன்பும், உரிமையும், பொறுப்புணர்வும் மிக்கவள்; பழந்தமிழ் உயர்குடியினரின் குடும்பங்களில், குடும்பத் தலைவிக்கு உயிர்த் தோழியாகவும், அவர்களுக்கு அடுத்த நிலையிலே அனைவராலும் மதிக்கப் பெற்றவளாகவும் விளங்கினவள். அவளிடத்தே சொல்பவளும், அவள் மகளும், தலைவியின் உயிர்த் தோழியும் ஆகியவளே! செவிலியிம் தோழியுமான இவ்விருவரும் தலைவியின் நலத்திலே எத்துணை மனங்கலந்த ஈடுபாட்டினர் என்பதையும் உணர்தல் வேண்டும். தன்னலம் அறவே விட்டுத், தான் அன்பு செய்யும் தலைவியின் நலனே கருதும் இந்தத் தொழியும், தலைவியும், தமிழ் அகவிலக்கியங்களில் காணும் அருமையான தியாக நிகரங்களாகும். தலைவியின் களவுக் காதலைக் குறிப்பாகத் தன் தாய்க்கு உணர்த்தி, அத்தலைவனையே அவளுக்கு எப்படியும் மணம் புணர்க்க வேண்டும் என்னும் தோழியின் பேச்சாக அமைந்த இச்செயுட்களிலும், தன்னலமற்ற அந்த அன்புக் கசிவின் அருமையைக் காணலாம்; அகங்கலந்த நட்பின் உயர்வை உணரலாம்.

101. வந்தன்று தேரே!

     துறை: அறத்தொடு நின்ற பின்னர், வரை பொருட்குப் பிரிந்த தலைமகன், வரைவொடு புகுந்தவழி, தோழி, செவிலிக்குக் காட்டிச் சொல்லியது.

     (து.வி: களவிலே தலைவியோடு கூடிக் கலந்து ஒன்று பட்ட தலைவன், அவளை வரைந்து முறையாக மணத்தாற் கொள்வதற்குத், தமர்க்குத் தரவேண்டிய பொருளிடைத் தேடி வரும் பொருட்டாகப் பிரிந்து, பிற புலம் சென்றான். அவன் பிரிவினாலே உளத்திற்படர்ந்த நோயும், பெற்றோர் வேற்று மணம் நாடுதலாலே பற்றிய துயரமும் பெரிதும் வருத்தத், தலைவி மிகச் சோர்ந்து மெலிகின்றாள். இந்நிலையிலே. அவன் தேர் வருதலைக் கண்டாள் தோழி. வரைவொடு அவன் வருதலாலே, இனித் தலைவியின் துயரமெல்லாம் அகலும் என்னும் களிப்போடே, அவனுக்கே அவளை மணமுடிக்கத் தன் தாயான செவிலியின் துணையையும் நாடியவளாக, அத் தேர் வரவைக் காட்டி, தலைவியுன் தளவுறைவையும், அவனையே அவள் மணத்தற்கு உரியவள் என்னும் கற்பறத்தையும் சொல்லி வலியுறுத்திகின்றாள்.)

     அன்னை வாழி! வேண்டு அன்னை! உதுக்காண் -
     ஏர்கொடிப் பாசடும்பு பரியவூர் பிழிபு
     நெய்தல் மயக்கி வந்தன்று, நின்மகள்
     பூப்போல் உண்கண் மரீஇய
     நோய்க்குமருந் தாகிய கொண்கன் தேரே!

     தெளிவுரை: வாழ்க அன்னையே! யான் நின்பாற் சொல்லும் இதனையும் விருப்போடே கேட்பாயாக. அதோபாராய்! அழகிய கொடிகளையுடைய பசுமையான அடும்புகள் வருந்துமாறு ஏறியும் இறங்கியும், நெய்தலைச் சிதைத்தும், விரைவோடே வருகின்றது. இவளுக்குரியவனான தலைவனின் தேர்! நின் மகளின், நீலப்பூம்போலும் மையுண்ட கண்களிலே பொருந்தியிருந்த ஏக்கமென்னும் நோய்க்கு மருந்தாகித் திகழக்கூடியவன், அவனேதான்!

     கருத்து: 'அவனை இல்லத்தார் விரும்பி வரைவுக்கு உடன்படுமாறும் செய்வாயாக' என்றதாம்.

     சொற்பொருள்: உதுக்காண் - அங்கே அதோ பாராய். ஏர்கொடி பாசடும்பு - அழகிய கொடியோடே பசுமையாக விளங்கும் அடும்பு; இதனைக் குதிரைக் குளம்புக் கொடி என, இதன் இலையமைதி நோக்கி, இந்நாளிற் பலரும் கூறுவர். ஊர்பு இழிவு - ஏறியநும் இறங்கியும்; தேர்ச் சக்கரம் ஏறியிறங்கக் கொடிகள் உறுதுபட்டு சிதைபட்டுப் போகும் என்பதாம்; மயக்கி - சிதைத்து; இது கழியைக் கடக்கும்போது நெய்தற்கு நிகழ்வது. கொண்கன் - நெய்தல் நிலத் தலைமகன். 'கொண்கன் தேர்' என்றது, அவனது செல்வப் பெருமிதம் தோன்றக் கூறியதாம்.

     விளக்கம்: 'நோய்க்கு மருந்தாகிய 'கொண்கன்' என்றது, அவன் நினைவே தலைவிக்கு நோய் தந்தது' என்னும் அவர்கள் களவுக் காதலையும் சுட்டி, 'அது தீர மருந்தும் அவனே' எனக் கற்பினையும் காட்டி வலியுறுத்தி, அறத்தொடு நின்றதாம். 'பூப்போல உண்கண் மரீஇய நோய்' என்றது, அவன் வரவு நோக்கி நோக்கிப் பலநாளும் ஏங்கித் துயருற்று, ஒளியிழந்து நோய்ப்பட்ட கண்கள் என்றதாம். 'நின் மகள்' எனத் தலைவியைக் குறித்தது, அன்புரிமை மிகுதி பற்றியாம்.

     உள்ளுறை: 'அடும்பு பரியவும் நெய்தல் மயங்கவும் தேர் விரைய வந்தது' என்றது, அலருரைத்துக் களித்தாரின் வாயடங்கவும், உரியவர் தம் அறியமையினை எண்ணி வருந்தவும், தலைவன் வரைவொடு, ஊரறிய, வெளிப்படையாகத் தன் பெருமிதம் தோன்ற வந்தனன் என்றதாம்.

     மேற்கோள்: 'திணை மயக்குறுதலுள், நெய்தற்கண் குறிஞ்சி மயங்கி வந்தது' என்று நச்சினர்க்கினியர், இச் செய்யுளைக் காட்டுவர் - (தொல். அகத், 12 உரை).

     குறிப்பு: தோழி செவிலிக்கு அறத்தொடு நிற்றலான குறிஞ்சித்திணை ஒழுக்கம், இங்கே நெய்தற்கு ஆகிவந்தது. 'உதுக்காண்' என்னும் சொல்லிலே தோன்றும் களிப் புணர்வும் எண்ணி மகிழ்க.

102. தேர் மணிக் குரல்!

     துறை: மேற்சொய்யுளின் துறையே இதுவும்.

     அன்னை வாழி! வேண்டு அன்னை! நம்மூர்
     நீனிறப் பெருங்கடற் புள்ளின் ஆனாது,
     துன்புறு துயரம் நீங்க,
     இன்புற இசைக்கு மவர் தேர்மணிக் குரலே!

     தெளிவுரை: வாழ்க அன்னையே! இதனையும் விரும்பிக் கேட்பாயாக. நம் ஊரிலுள்ள நீலநிறப் பெருங்கடலிடத்துப் புள்ளினைப் போல, நின் மகள் இடைவிடாதே வருத்தித் துன்புறும் அந்தத் துயரமானது நீங்கவும், நாம் அனைவரும் இன்புறவும், அவர் தேர்மணியின் குரல் அதோ இசைப்பதனை நீயும் நன்கு கேட்பாயாக!

     கருத்து: ''அவனோடு இவளை மணப்படுத்தற்கு அவன செய்க'' என்றதாம்.

     சொற்பொருள்: புள் - கடற்புள்; நாரையும் கடற் காகமும் குருகும் போல்வன. ஆனூது - இடைவிடாது; ஒழிவில்லாமல்.

     விளக்கம்: தான் விரும்பும் மீனைப் பற்றுவதற்கு, இடையறாது முயன்று, உயரவும் தாழவுமாகப் பறந்து வருந்தும் கடற் பறவைகள் போலத், தலைவியும் தலைவனின் வரவை எதிர் பார்த்துக் கானற் சோலைக்குப் பலநாள் சென்றும், அவனைக் காணமாட்டாதே துன்புற்று வருந்துவாளாயினள் என்கின்றாள். அது நீங்க, 'அவன் தேர் வந்தது' என்றும், அவள் உள்ளமும், அவளுக்காக வருந்தும் தன்னுள்ளமும், அவள் நலனே நாடும் பிறர் உள்ளமும் இன்புறத் தேர்மணிக்குரல் கேட்பதாயிற்று எனவும், தோழி சொல்லுகின்றாள்.

     'புள்ளின் ஆனது இசைக்கும் குரல்' என்று கொண்டால், பொருள் சிறவாது. அவ்வாறாயின் அவன் இரவுப் போதிலே வருவதாகவும், அவன் தேர் வரவாற் கானற்சோலையிலே அடங்கியிருந்த புள்ளினம் அஞ்சிக் குரலெழுப்பும் எனவும் பொருள் கொள்ள வேண்டும். முன்னர்க் களவுக் காலத்தே இரவுக் குறியிடத்திலே அவன் வந்து போயினபோது நிகழ்ந்ததனைக் கண்ட தலைவி, பின்னரும் இரவுப் பொழுதெல்லாம் கண்ணுறங்காளாய்ப், புட்குரல் கேட்கும் போதெல்லாம், தலைவன் வந்தனன் எனவே மயங்கி எதிர்பார்த்து, வராமையாலே வருந்தித் துன்புற்றுத் துயரடைவாளாயினள் என்றும் கொள்ளல் வேண்டும். 'வரைதற்கு வருபவன் பலரும் அறியப் பகற்போதிலேயே வருவன்' என்பதால், இது பொருந்தாது, என்க.

     'அவன் தேர்வராவால் அஞ்சியெழுந்து ஒலிக்கும் புட்களின் அந்தத் துயரம் நீங்குமாறு' என்னின், முன்னர் அலரஞ்சி மணிநா தகைத்துவிடுதலாற் பறவையினம் துயருற்றன; இனி மணிக்குரல் கேட்கவே அவை துயரற்றன எனவும் கொள்ளலும் பொருந்தும்.

     உள்ளுறை: 'கடற்புள்ளின் துயரம் நீங்க, அவன் தேரின் மணிக்குரல் இசைத்தது' என்பதற்கு, இடையறாதே அலருரை கூறிக்கூறித் திரிந்த அலவற் பெண்டிர்களின் வாயடங்க, அவன் வரைவொடு, ஊரறியத், தன் பெருமிதம் தோன்ற வந்தனன் என்பதும் உள்ளுறை பொருளாகக் கொள்க.

103. தானே அமைந்த கவின்!

     துறை: அறத்தொடு நின்ற தோழி, வதுவை நிகழா நின்றுழி, தாய்க்குக் காட்டி, உவந்து சொல்லியது.

     (து.வி: தோழி அறத்தோடு நின்றனள். உண்மையுணர்ந்த செவியும், பிறரை அறிவுறுத்தி வரைவுடம்படச் செய்தனள். திருமணமும் நிகழ்கின்றது. அப்போது, மகிழ்ச்சிப் பூரிப்புடன் தன் காதலனருகே அமர்ந்திருக்கும் தலைவியைத் தன் தாய்க்குக் காட்டித், தோழி, பொங்கும் உவகையோடு சொல்வதாக அமைந்த செய்யுள் இது.)

     அன்னை வாழி! வேண்டு அன்னை - புன்னையொடு
     ஞாழல் பூக்கும் தண்ணம் துறைவன்
     இவட்கமைந் தனனால் தானே
     தனக்கமைந் தன்றிவள் மாமைக் கவினே!

     தெளிவுரை: வாழ்க அன்னையே! இதனையும் விருப்போடே காண்பாயாக. புன்னையோடு ஞாழலும் பூத்து மலர்ந்திருக்கும் குளிர்ந்த அழகிய கடற்றுறைக்கு உரியவன் தலைவன். அவன் இவளுக்கே உரியவனாக, இப்போது இவ்வதுவையாலே பொருந்தி அமைந்துவிட்டனன். அதனாலே, இதுவரையும் இவளையகன்று மறைந்திருந்த இவளது மாமைக்கவினும், இப்போதில், தானாகவே வந்து இவள் மேனியிலே பொருந்தி அமைந்து விட்டதே!

     கருத்து: 'தலைவியின் களிப்பைக் காண்க' என்பதாம்.

     சொற்பொருள்: ஞாழல் - புலிநகக் கொன்றை. அமைந்தனன் - மணவாகனாகிப் பொருந்தினன். மாமைக்கவின் - மாந்தளிரன்ன மேனியழகு.

     விளக்கம்: 'புன்னையொடு ஞாழல் பூக்கும் தண்ணம் துறைவன்' என்றது, இவள் தன் இல்லறத்திலும் பலவகை நலனும் ஒருங்கே சேர்ந்து அமைந்து களிப்பூட்டும் என்றதாம். 'இவட்டு அமைந்தனனால் தானே' என்பதற்கு, 'இவளுக்கு எல்லாவகையானும் பொருத்தமான துணைவனாக அமைந்தனன் அல்லனோ?' எனக் கேட்பதாகவும் கருதுக.

     உள்ளுறை: 'புன்னையொடு ஞாழல் பூக்கும்' துறைவனுடன், மணத்தால், உவந்து பலரும் வாழ்த்துரைக்க ஒன்றுபட்டதனால், இனி இரண்டு குடும்பத்தின் பெருமையும் உயர்ந்து ஓங்கி, உலகிற் புகழ்பறும் என்பதாம்.

     மேற்கோள்: ''இது வதுவை நிகழா நின்றுழி, தாய்க்குக் காட்டித் தோழி கூறியது'' என்று நச்சினார்க்கினியரும் எடுத்துக் காட்டுவர் - (தொல். களவு, 24).

104. கொண்கன் செல்வன் ஊர்!

     துறை: புதல்வன் பெற்றுழித் தலைமகன் மனைக்கண் சென்று செவிலிக்கு, முன்பு அறத்தொடு நின்று வதுவை கூட்டிய தோழி, அவன் நன்மை காட்டிச் சொல்லியது.

     (து.வி: தலைவியின் இல்லறவாழ்விலே, அவள் புதல்வனைப் பெற்றிருக்கும் மங்கலநாளில், அவளைக் காணச் சென்றனள் செவிலி. அவளுக்கு, அவன் ஊரைக் காட்டித், தோழி போற்றிச் சொல்வதாக அமைந்த செய்யுள் இது.)

     அன்னை வாழி! வேண்டு அன்னை! - நம்மூர்ப்
     பலர்மடி பொழுதின் நலமிகச் சாஅய்
     நள்ளென வந்த இயல்தேர்ச்
     செல்வக் கொண்கன் செல்வனஃ தூரே!

     தெளிவுரை: வாழ்வாயாக அன்னையே! இதனையும் விருப்போட நீ காண்பாயாக. நம் ஊரிடத்தே, பலரும் அயர்ந்து உறங்கும் நள்ளிரவுப் பொழுதிலேயும், தன் சிறப்பெல்லாம் மிகவும் குன்றியவனைப் போல, நள்ளென்னும் ஒலியோடே, யாருமறியாத வகையிலே தேரூர்ந்து வந்தானாகிய, செல்வப் பெருக்குடைய தலைவனின் புதல்வனது ஊர் இதுவே! இதன் செவ்வியை உவப்போடு காண்பாயாக!

     கருத்து: 'இவள் மனையறமாற்றும் ஊர்ச் சிறப்பைக் காண்பாயாக' என்றதாம்.

     சொற்பொருள்: பலர் மடி பொழுது - பலரும் அயர்ந்துறங்கும் இரவின் நடுச்சாமப் பொழுது. சாஅய் - தளர்ந்து. நலம் - சிறப்பு. நள்ளென - நள்ளென - நள்ளெனும் ஒலியோடே. இயல் தேர் - இயலும்தேர். கொண்கன் - தலைவன். செல்வன் - மகன்; புத்திரப்பேறே மிகச் சிறந்த குடிச் செல்வமாதலின், மகனைச் 'செல்வன்' என்றல் பழந்தமிழ் மரபு; இப்படியே மகளைச் 'செல்வி' என்பதும் வழக்கு. இரு குடும்பத்தார்க்கும் அவர் உரியவர் என்பதும் நினைக்க.

     விளக்கம்: 'அன்று இவன் தோன்றிய தளர்ச்சி நோக்கி, இவன் வளமையை யாதும் அறியாதே, 'தலைவிக்குப் பொருந்துவனோ?' என நீயும் ஐயுற்றனையே? இதோ பார், அவன் மகனின் ஊர் வளமையை'' என்று தன் தாய்க்குக் காட்டுகின்றாள்' என்றதால், அவன் பிறந்ததும் கொண்கனூரை அவனுரிமையாக்கி நயமுடன் தோழி கூறினாள். இன்றும், தமிழகச் சிற்றூர்ப் புறங்களிலே மகவு பிறந்ததும், அதைக் குறித்தே, 'இன்னானின் தந்தை, இன்னானின் தாய், இன்னானின் வீடு' எனவெல்லாம் வாழங்கும் உரிமைச் சால்பும் நினைக்க. பலர்மடி கங்குற்போதிலும், தான் தலைவிமேற் கொண்ட அன்புக் காதன் மிகுதியாலே தளர்ந்து வந்து இரந்து நின்றான் தலைவன். யாமும் அவன் வரவை நோக்கித் தளர்ந்திருந்தேம் எனத் தலைவன் தலைவியரின் ஒன்றுபட்ட இசைவான காதன்ம்யையும் நினைவுபடுத்தினள்.

     இச்செய்யுள் பெரும்பாலும் மகப்பெறுதல் நிகழ்ச்சி, தலைப்பிள்ளை எனினும் கூட, கணவனின் இல்லத்தேயே நிகழ்வது தான் நம் பழைய தமிழ்மரபு என்பதைக் காட்டும். மகன் பிறக்கும் வீடு, அம்மகனுக்கே உரித்தான வீடாகவே இருத்தல் தானே, மிகவும் பொருத்தமும் ஆகும்.

     மேற்கோள்: புதல்வற் பெற்றுழித் தலைவன் மனைக் கண் சென்று செவிலிக்கு, அறத்தொடு நின்று வதுவை கூட்டிய தோழி, அவனூர் காட்டிக் கூறியது எனக் காட்டி விளக்குவர் நச்சினார்க்கினியர் - (தொல். கற்பு. 9)

     இந்நாளைக்கு ஏற்பக் கொள்வதானால், மகப்பேற்றுக்குப் பின் தாயையும் மகனையும் தலைவனின் ஊரிற் கொண்டு சேர்த்த போதிலே, உடன் சென்று செவிலித்தாய்க்கு, தோழி அவனூரின் சிறப்புக் காட்டிக் கூறியது என்று கொள்க.

105. நுதல் சிவந்தது!

     துறை: அறத்தொடு நின்றபின், வேண்டுவன தருதற்குப் பிரிந்த தலைமகன், வரைவொடு வந்துழி, தலைமகள் நுதற்கண் முன்புள்ள பசப்பு நீங்கும் வண்ணம் தோன்றிய கதிர்ப்புக் காட்டி, செவிலிக்குத் தோழி சொல்லியது.

     (து.வி: தலைவனுக்கு தலைவியைத் தருவதற்கு இசைந்த அவள் பெற்றோர், வரைபொருள் பற்றியும் வலியுறுத்தத், தலைவன் அது தேடிக்கொண்டு வருமாறு வெளியூர் நோக்கிப் போகின்றனன். அவன் சந்திப்பைப் பலநாள் இழந்த தலைவி சோர்ந்து தளர, அவள் நெற்றியும் பசலை படர்ந்தது. அவன் தமர் குறித்த வரைபொருளோடு, வந்து அதனைக் குவித்துப் பெருமிதமாக நின்றபோது, தலைவியின் பெற்றோரும் மகிழ்ந்து, வரைவுக்கும் உடன் பட்டுவிட்டனர். இஃதறிந்ததும், தலைவியின் உள்ளப் பூரிப்பால் அவள் நெற்றியின் பசலையும் மாறிப் பொன்னிற் சிறந்த ஒளியோடே அழகுற்று விளங்கிய தனை வியந்து, தோழி, செவிலித் தாய்க்குக் காட்டிச் சொல்வதாக அமைந்த செய்யுள் இது.)

     அன்னை வாழி! வேண்டு அன்னை - முழங்குகடல்
     திரைதரு முத்தம் வெண்மணல் இமைக்கும்
     தண்ணம் துறைவன் வந்தெனப்
     பொன்னினும் சிறந்தன்று; கண்டிசின் நுதலே!

     தெளிவுரை: வாழ்வாயாக அன்னையே! இதனையும் விரும்பிக் காண்பாயாக! முழக்கமிடும் கடலலைகள் கொண்டு தந்த முத்துக்கள், வெண்மணலிடையே எடுப்பாரற்றுக் கிடந்து ஒளி செய்யும், குளிர்ந்த அழகிய துறைக்கு உரியவன் வந்தனன். அவன் வந்தான் என்றதும், இவள் நுதலானது பொன்னினும் சிறந்தவோர் புதிய ஒளிபெற்றதனை நீயும் காண்பாயாக.

     கருத்து: ''அவள் களிப்பும் காதலும் அத்தகையது'' என்றதாம்.

     சொற்பொருள்: முழங்கு கடல் திரை - முழக்கோடே வரும் கடல் அலை. திரைதரு முத்தம் - அலைகள் தாமே கொண்டு போட்டுச் செல்லும் முத்தம். பொன் - செம்பொன். 'சின்'; முன்னிலை அசை.

     விளக்கம்: 'அவன் வரவே அவள் நுதலில் அழகுபடரச் செய்யின், அவர்களின் பிரிவற்றதாக உடனுறையும் இல்வாழ்வுதான் எத்துணை இன்பம் மிகுக்கும்' என்றதுமாம். திரைகள் முத்தைத் தாமே கொண்டு வெண்மல் சேர்ப்பதை, 'இவர்திரை தந்த ஈர்ங்கதிர் முத்தம்' (அகம் - 130) எனப் பிறரும் காட்டுவர். தமிழ்க் கடல் வளமை, அத்தகையது.

     உள்ளுறை: 'முழங்கு கடல் திரை தருகின்ற முத்தம், வெண்மணலிடையே கிடந்து இமைக்கும் துறைவன்' என்றது அவன் பெருமுயற்சியின்றியே, தலைவியின் பெற்றோர்கள் விரும்பிய பொருளைத் தேடிவந்து குவித்துத், தலைவியை மணத்தோடு அடைந்தனன் என்பதைக் கூறியதாம். அவன் உயர்வு வியந்ததும் இது.

     மேற்கோள்: 'தோழி கூற்று; நொதுமலர் வரவு பற்றி வந்து முன்னிலைக் கிளவி' என்று காட்டுவர், இளம்பூரணர். (தொல். களவு, 24). தலைவன் வரவறிந்தே ஒளிபெறும் இவள் நுதற்கவின், நொதுமலர் வரைவுநேரின் மீண்டும் கெட்டழியும் எனக் கூறித், தோழி அறத்தொடு நின்றதாக, இத்துறைக்கு ஏற்பப் பொருள் காணவேண்டும். அப்போது வரைவுக்குத் தமர் இசைதலை வலியுறுத்தியதாகவும் கருதுக.

106. அம் கலிழ் ஆகம்!

     துறை: அறத்தொடு நின்ற தோழி, அது வற்புறுப்பான் வேண்டிச், செவிலிக்குச் சொல்லியது.

     (து.வி: தலைவியின் களவுறவைக் குறிப்பாகப் புலப்படுத்தி, அத்தலைவனுக்கே அவளை எவ்வாறும் மணமுடிக்க வேண்டும் என அறத்தொடுநின்ற தோழி, மீண்டும் அதனை வலியுறுத்திக் கூறுவதாக அமைந்த செய்யுள் இது.)

     அன்னை, வாழி! வேண்டு, அன்னை! - அவர் நாட்டுத்
     துதிக்கால் அன்னம் துணைசெத்து மிதிக்கும்
     தண்டகல் வளையினும் இலங்குமிவள்
     அம்கலிழ் ஆகம் கண்டிசின் நினைந்தே!

     தெளிவுரை: வாழ்வாயாக அன்னையே! இதனையும் விரும்பிக் கேட்பாயாக; அவர் நாட்டிடத்தேயுள்ள தோலடிப் பாதங்களையுடைய அன்னமானது, தன் துணையாகக் கருதி மிதிக்கும் குளிர்ந்த கடற்சங்கினும் காட்டில், வெண்மை பெற்று விளங்கும் இவளின் அழகொழுகும் மேனியையும் கண்டனை. இதனை நினைவிற் கொண்டேனும், நீதான் அவன செய்வாயாக.

     கருத்து: 'அவனையன்றி இவள் நலமுறல் அரிது' என்பதாம்.

     சொற்பொருள்: துதி - தோல்உறை. துதிக்கால் - தோல் அடி. துணை செத்து - துணைபோலும் எனக் கருதி. வளை - வெண்சங்கு. ஆகம் - மேனி; மிதித்தல் - மேலேறி மிதித்தல்; இது புணர்ச்சிக் குறிப்பும் ஆகலாம் எனினும், அது அறியா மயக்கமெனக் கொள்க.

     விளக்கம்: 'மாமைக் கவின் பெற்ற இவள் மேனி, அவன் பிரிவாலே வளையினும் காட்டில் வெண்மை பெற்றதே! இனியும் இவளை அவனொடு மணம்புணர்ப்பதற்குத் தாழ்க்கின், இவள் இறந்தே படுதலும் கூடுமோ!'' என்கின்றனள் தோழி, இதனால் வேற்றுவரைவும் விலக்கினள்; அறத்தொடும் நின்றனள்.

     உள்ளுறை: 'அன்னம் வெண்சங்கைத் தன் துணையாகக் கருதிச் சென்று மிதிக்கும் நாட்டினன் தலைவன்' என்றது. ''அவன் இவள்பாற் பெருங்காதலுடையவன் எனினும், இவளை உடனே வரைந்து கொள்வதற்கு முயலாது, வேறுவேறு செயல்களிலே ஈடுபட்டு மயங்கி உழல்வான்'' என்றதாம்.

     குறிப்பு: வெண்மையொன்றே கருதி உன்னம் துணையென மயங்கினாற்போல, நீவிரும் இவள் மெலிவொன்றே நோக்கி, இஃது வேறு பிறவற்றால் (தெய்வம் அணங்கியதால்) ஆயிற்றெனக் கொண்டு மயங்குவீர் ஆயினீர்; அதனைக் கைவிடுக என்றதும்மாம். நறுநீர்ப் பறவையான அன்னத்தைக் கூறியது.

107. யானே நோவேன்!

     துறை: தோழி, செவிலிக்கு, அறத்தொடு நிலை குறித்துக் கூறியது.

     (து.வி: அறத்தொடு நின்று, 'தலைவியை, அவள் களவுக் காதலனாகிய தலைவனுடன் மணம்புணர்த்தலே மேற்கொள்ளத்தக்கது' என்று தோழி செவிலிக்குச் சொல்வதாக அமைந்த செய்யுள் இதுவும் ஆகும்.)

     அன்னை வாழி! வேண்டு அன்னை! - என் தோழி
     சுடர்நுதல் பசப்பச் சாஅய்ப், படர்மெலிந்து,
     தண்கடற் படுதிரை கேட்டொறும்
     துஞ்சாள் ஆகுதல், நோகோ யானே!

     தெளிவுரை: வாழ்க அன்னையே! இதனையும் விரும்பிக் கேட்பாயாக. என் தோழியான தலைவியானவள். தன் ஒளி சுடரும் நுதல் பசலை நோயடைந்தளர்வுற்றனள்; மென்மேற் படரும் காமநோயாலும் மெலிவடைந்தனள்; குளிர் கடலிலடத்தே மோதியெழும் அலைகளின் ஒலியை இரவிடையே கேட்கும்போதெல்லாம் கண் உறங்காதாளும் ஆயினள்! அது குறித்தே யானும் வருந்துவேன்!

     கருத்து: 'அவள் நலனை நினைத்தேனும் பொருந்துவன உடனே செய்க' என்றதாம்.

     சொற்பொருள்: சாஅய் - வருந்தித் தளர்ந்து. படர் - காமநோய். படுதிரை - மோதி ஒலிக்கும் அலை

     விளக்கம்: இரவெல்லாம் அவன் நினைவாலேயே வாடி வருந்துதலன்றி, கண் உறங்காதும் துயருற்று நலிகின்றனள் தலைவி; நுதல் பசப்பச் சாஅய்ப் படர்மெலிந்தும் போயினவள், உறக்கமும் பற்றாதே இருந்தால், இனி நெடுநாள் உயிர் வாழாள்; அது நினைந்தே யான் பெரிதும் நோவேன். அவள் சாவைத் தவிர்க்க வேனும், அவனோடு அவளை மணத்தால் விரைவிற் கூட்டுக என்றதாம். யான்தான் நோவேன்; நீயும் தமரும் அறியார்போல் வாளாவிருத்தல் முறையாமோ என்று நொந்ததுமாம்.

108. நயத்த தோள் எவன்கொல்?

     துறை: அறந்தொடுநிலை பிறந்த பின்னும், வரைவு நீடிற்றாக, 'மற்றொரு தலைமகளை வரையுங்கொல்?' என்று ஐயுற்ற செவிலி குறிப்பறிந்த தோழி, அவட்குச் சொல்லியது.

     (து.வி: தோழி அறத்தோடு நின்று செவிலியும், பிறரும் அவளை அவனுக்கே தருவதெனவும் மனம் இசைந்து விட்டனர். அதன் பின்னரும் அவன் அவளை வரைந்து வருதலிலே மனம் பற்றாதானாய்க் காலம் தாழ்க்கச், செவிலியின் உள்ளத்தே கவலை படர்கிறது. 'வேறொருத்தியை அவன் வரைவான் போலும்' என்ற ஐயமும் எழுகின்றது. அதனைக் குறிப்பாலறிந்த தோழி, அதனை மாற்றக் கருதிச் சொல்வதாக அமைந்த செய்யுள் இது.)

     அன்னை வாழி! வேண்டு, அன்னை - கழிய
     முண்டகம் மலரும் தண்கடற் சேர்ப்பன்
     எந்தோள் துறந்தனன் ஆயின்
     எவன்கொல் மற்றவன் நயந்த தோளே?

     தெளிவுரை: வாழ்க அன்னையே! இதனையும் விரும்பிக் கேட்பாயாக. கழியிடத்தேயுள்ள நீர்முள்ளிகள் மலர்ந்து மணம் பரப்பியபடியிருக்கும் குளிர்ந்த கடற்கரைக் குரியவன் சேர்ப்பன். அவன், எம் தோள் நலத்தையே துறந்து கைவிட்டனனாயின், அவனால் விரும்பப்பட்ட பிற மகளிர்களிர் தோள்கள் தாம், என்னாகுமோ?

     கருத்து: ''அவன் எம்மையன்றிப் பிறரை நாடான்'' என்றதாம்.

     சொற்பொருள்: முண்டகம் - நீர் முள்ளி. 'எம்தோள்' தலைவியின் தோள் நலத்தைச் சுட்டியது; 'ஒன்றித் தோன்றும் தோழி மேன' என்னும் விதியையொட்டி வந்தது. துறந்தனன் - கைவிட்டனன்.

     விளக்கம்: வரைவு நீடிக்கவே, செவிலி பலவாறாக எண்ணி ஐயங்கொள்கின்றாள்; அவள் ஐயம் அனைத்தும் பொருந்தாதெனத் தோழி மறுப்பவள், இவ்வாறு கூறுகின்றாள் என்று கொள்க. 'எம்மையே அவன் மறந்தான் என்றால், அவன் விரும்பிய பிறரின் கதிதான் யாதோ?' என்னும் கூற்றிலே, அவன் எம்மை மறக்கவே மாட்டான் என்ற உறுதிப்பாடே புலப்படக் காணலாம். 'உழுவலன்பாலே உன்றுபட்டார் இடையே வேற்றுவரைவுகள் நிகழா' என்பதும் நினைக்க.

     மேற்கோள்: 'இதனுள் கழிய முண்டக மலரும்' என முள்ளுடையதனைப் பூ மலருமென்று உள்ளுறுத்ததனால், இருவர் காமத்துறைக் கண்ணும் ஒருதலை இன்னா, ஒருதலை இனிது என்றாள் என்பது. 'என் தோள் துறந்தனன்' என்பது முள் உடைமையோடு ஒக்க, 'என்னாங்கொல் அவன் நயந்த தோள்' என்றவழி அவன் அன்பில் திரியாமை கூறினமையின், முண்டக மலர்ச்சியோடு ஒப்பிக்கப்படும் என்பர் பேராசிரியர் - (தொல். உவம, 59).

     'அறத்தொடு நின்றபின் வரைவுநீட மற்றொரு குலமகளை வரையுங்கொல்?' என்று ஐயுற்ற செவிலி குறிப்பறிந்த தொழி, அவட்குக் கூறியது என்று காட்டுவர் நச்சினார்க்கினியர். (தொல். களவு, 23).

109. பல நாளும் வரும்!

     துறை: அறத்தொடு நின்ற பின்பு, வரைவான் பிரிந்த தலைமகன், கடிதின் வாராதவழி ஐயுற்ற செவிலி, 'அவன் நும்மைத் துறந்தான் போலும்; நுங்கட்கு அவன் கூறிய திறம் யாது?' என்றாட்கு, தோழி சொல்லியது.

     (து.வி: வரைந்து வருவதாகத் தலைவன் குறித்த காலம் கடந்து, மேலும் பல நாட்களும் கழிந்தும், அவனை வரக்காணாத செவிலியின் உளத்திலே, கவலையலைகள் எழுந்து மோதுகின்றன. 'அவன் உங்களை உதுக்கிவிட்டான் போலும்? அவன் உங்களிடம் என்னதான் சொல்லிப் போனான்?' என்று தோழியை நோக்கிக் கேட்கிறாள். அவட்குத் தோழி உறுதியோடு சொல்வதாக அமைந்த செய்யுள் இது.)

     அன்னை வாழி! வேண்டு அன்னை! - நெய்தல்
     நீர்ப்படர் தூம்பின் பூக்கெழு துறைவன்
     எம்தோள் துறந்த காலை, எவன்கொல்
     பன்னாள் வரும் அவன் அளித்த பொழுதே?

     தெளிவுரை: வாழ்வாயாக அன்னையே! இதனையும் விருப்போடே கேட்பாயாக. நீரிடத்தே படரும் நெய்தலது உட்டுளை கொண்ட கொடிகளிலே, மிகுதியான பூக்கள் மலர்ந்திருக்கும் துறைவனாகிய தலைவன், எம் தோளைத் தழுவிப் பிரிந்த அந்தக் காலத்திலே, அவன் எமக்குத் தலையளி செய்து மகிழ்வித்த அந்தப் பொழுதின் நினைவே, மீளவும் பல நாட்களும் எம்மிடத்தே வந்தபடி யுள்ளனவே! இதுதான் எதனாலோ அன்னாய்?

     கருத்து: ''காலந்தாழ்ப்பினும், அவனே சொன்னபடி வந்து மணப்பான்'' என்பதாம்.

     சொற்பொருள்: நீர்ப்படர் - நீரிலே படரும். தூம்ப - உள்ளே துளையுடைய தன்மை. அத்தன்மையுடைய நெய்தற் கொடிக்கு ஆயிற்று. பூக்கெழு - பூக்கள் பொருந்தியுள்ள 'தும்பின் பூ' என்று கொண்டு, துளையமைந்த பூவென்று உரைப்பினும் பொருந்தும். அளித்த பொழுது - தலையளி செய்து இன்புறுத்திய பொழுது.

     விளக்கம்: அவன் குறித்த அந்த நாள் எல்லை கடந்தாலும் அவன் எம்மைத் தழுவிக்கூடியதான அந்தப் பொழுதின் நினைவு எம்மிடம் பல நாளும் மாறாதிருக்கின்றன; ஆதலின், அவன் வந்து எம்மை வரைந்து மணப்பான் என்னும் உறுதியுடையோம் என்கின்றனள். தலைவியின் காதன்மை மிகுதியும் ஆற்றியிருக்கும் திறனும் காட்டுவது இது. இதுவே பிரிந்தார் இயல்பாகும் என்பதைப் பிறரும் கூறக் காணலாம். (குறு. 326)

     உள்ளுறை: 'நெய்தல் நீர்ப்படர் தூம்பின் பூக்கெழு துறைவன்' என்றது, நீருள்ளேயே படர்ந்து வெளித் தோன்றாவாறு மறைந்து விளங்கினும், நெய்தற் கொடியானது பூக்கெழுமிய தன் தன்மையிற் குன்றாதாய்ப் புறத்தே பலர் கண்டு மகிழுமாறு போலத், தலவனும், தன் நிலைமை பற்றியாதும் நமக்கு உணர்த்தாதேயும், சொன்னபடி வாராதேயும் காலம் தாழ்த்தவனாக விளங்கினும், மணத்தோடு ஊரறிய வருதலில் ஒருபோதும் தவறமாட்டான் என்பதாம்.

     நெய்தல் நீர்ப்படர் தூம்பின் பூக்கெழு துறைவன் ஆதலின், நிருள்ளவரைக்குமே, அதுவும் செழித்துப் பூத்திருக்கும் என்பதும் உணர்வான். அவ்வாறே அவனோடு உடனுறையும் போதிலேதான் தலைவியும் மகிழ்ந்திருப்பாள் என்பதையும் அறிந்து, தன் சொற்பிழையானாய் விரைந்து வருவான், அவள்மேற் பெருங்காதலன் அவன் ஆதலின், என்பதுதாம்.

     'அவன் எம்தோள் துறந்து காலையில், அவன் அளித்த பொழுதே. பன்னாள் எவன்கொல் வரும்?' என்று கூட்டி, 'அவனே எம்மைக் கைவிட்ட பொய்ம்மையாளன் ஆயினால், அவன் அருளிச் செய்த மாலைப்பொழுதும், பொய்யாதே எதனால் வருமோ?' என, காலம் பொய்யாதே போல அவனும் பொய்யான் என்றதுமாம்.

     மேற்கோள்: இத்துறையை இவ்வாறே காட்டி, இச்செய்யுளை சந்நினார்க்கினியரும் களவியல் உரையுள் காட்டுவர் - (தொல். களவு, 23).

110. வாழிய பாலே!

     துறை: நொதுமலர் வரைவின்கண், தோழி செவிலிக்கு அறத்தொடு நின்றது.

     (து.வி: களவிலே கலந்து இன்புற்று, அவனையே தன் கணவனாகவும் வரித்து, அவன் வரைவொடு வந்து தன்னைத் தமரிசைவோடே மணத்தலையும் எதிர்பார்த்திருக்கின்றாள் தலைவி. அவ்வேளையிலே, அவளை மணம்பேச நொதுமலர் (அயலார்) வருகின்றனர். அது கண்டு, செவிலிக்கு அறத்தொடு நின்று உண்மையைச் சுட்டியுரைப்பாளான தோழி, சொல்வதாக அமைந்த செய்யுள் இது.)

     அன்னை வாழி! வேண்டு அன்னை! - புன்னை
     பொன்னிறம் விரியும் பூக்கெழு துறைவனை
     என்னை என்றும் யாமே - இவ்வூர்
     பிறிதொன் றாகக் கூறும்
     ஆங்கும் ஆக்குமோ? வாழியே பாலே!

     தெளிவுரை: வாழிய அன்னையே! யான் கூறும் இதனையும் நீ விரும்பிக் கேட்பாயாக. பொன்னின் நிறத்தைக் கொண்டவாக இதழ்விரிந்து மலர்ந்திருக்கும் புன்னைப் பூக்கள் மலிந்த துறைவனான தலைவனையே, யாம் 'எமக்குரியனாகிய தலைவன்' என்று கொள்வோம். ஆயின், இவ்வூரில் உள்ளவரோ, மற்றொன்றாகச் சுட்டிக் கூறாநிற்பர். ஊழ்தான் அவ்வண்ணமும் ஆகச் செய்யுமோ? செய்யாதாகலின், அதுதான் வாழ்க!

     கருத்து: 'ஊழே கூட்டிய உறவாதலின், அது எதனாலும் மாறுதல் அன்று' என்றதாம்.

     சொற்பொருள்: பொன்னிறம் விரியும் - பொன்னிறத்தோடே இதழ் விரியும். என்னை - என் ஐ; என் தலைவன். பால் - ஊழ். ஆங்கும் - அவ்வாறும். ஆக்குமோ - செய்யுமோ?

     விளக்கம்: ''ஊழ் கூட்டிய உறவே தலைவனோடு பெற்று களவுறவாதலால், அதுதான் கடினமணமாகி நிறைவுறவும் அவ்வூழே துணை நிற்கும்; அதனின் மாறுபடக் கூறுவார் கூற்றெல்லாம் பொய்ப்படும்'' என்றதாம். 'புன்னை பொன்னிறம் விரியும் பூக்கெழு துறைவன்' என்றது, அதனைக் காணும் அவன், தலைவியை வரைவொடு சென்று மணத்தலிலேயும் மனம் செலுத்துகிறவனாவான் என்பதாம்.

     உள்ளுறை: துறையும் புன்னையின் பொன்னிறம் விரிந்த பூக்களின் மிகுதியினாலே அழகும் மணமும் பெறுகின்ற தனைச் செய்யும் விதியே, அத்துறைவனையும் எம்மோடு மணத்தால் இணைத்து எமக்கு அழகும் மணமும் கூடிய நல்வாழ்வு வாய்க்கச் செய்யும் என்பதாம்.

     மேற்கோள்: வேற்று வரைவுவரின் அது மாற்றுதற்குத் தலைவி கூறல் இது என்பர் இளம்பூரணனார் - (தொல். களவு, 20). இறந்துபாடு பயக்குமாற்றால், தன் திறத்து அயலார் வரையக் கருதிய ஞான்று, அதனை மாற்றுதற்குத் தலைவி கூற்று நிகழும் எனக் காட்டுவர் நச்சினார்க்கினியர் - (தொல். களவு, 20). இவர்கள் கருத்து, இது தலைவி கூற்று என்பதாம். அவ்வாறு கொள்வதும் பொருந்தும்; அவளும் அறத்தொடும் நிற்றல் இயல்பாதலின்.