![]() எமது இந்த சென்னை நூலகம் (www.chennailibrary.com) இணைய தளம், அரசு தளமோ அல்லது அரசு உதவி பெறும் தளமோ அல்ல. இத்தளம் எமது சொந்த முயற்சியினால் உருவானதாகும். ஆகவே வாசகர்கள் தங்களால் இயன்ற நன்கொடையினை அளித்து உதவிட வேண்டுகிறேன். இங்குள்ள QR கோடினை ஸ்கேன் செய்து நேரடியாக நன்கொடை அளிக்கலாம் அல்லது எமது வங்கிக் கணக்கிற்கு அனுப்பலாம். வெளிநாட்டில் வசிப்பவர், எமது வங்கிக் கணக்கிற்கு நேரடியாக நன்கொடை அனுப்பலாம் எமது கூகுள் பே / யூபிஐ ஐடி : gowthamweb@indianbank எமது வங்கிக் கணக்கு: A/c Name : Gowtham Web Services | Bank: Indian Bank, Nolambur Branch, Chennai | Current A/C No.: 50480630168 | IFS Code: IDIB000N152 | SWIFT Code : IDIBINBBPAD (நன்கொடையாளர்கள் பட்டியல் மற்றும் பிற விவரங்களுக்கு இங்கே கிளிக் செய்யவும்) |
சென்னை நூலகம் (www.chennailibrary.com) - தற்போதைய வெளியீடு : மருதியின் காதல் - 25. படைகள் புறப்பாடு |
சங்கமருவிய எட்டுத்தொகை நூல்களுள் மூன்றாவதாகிய ஐங்குறு நூறு தெளிவுரை : புலியூர்க் கேசிகன் ... தொடர்ச்சி - 18 ... 7. சிறுவெண் காக்கைப் பத்து இப்பகுதியின் செய்யுட்கள் பத்தினும், சிறு வெண் காக்கை பற்றிய செய்திகளே கூறப்படுதலான், இப்பகுதியைச் 'சிறு வேண் காக்கைப் பத்து' என்று தொகைப் படுத்தினர். இது, நீர்ப்பாங்கிலே பெரிதும் காணப்பெறும் பறவையினத்துள் ஒன்று. கூட்டம் கூட்டமாகச் செர்ந்து வாழும் இயல்பினது. காக்கையிற் சிறிதும், வலிகுறைந்ததும் ஆகும். மீனே இதன் உணவு; சில சமயங்களில் தவளை போன்ற வற்றையும் தின்னும். நீருள் மூழ்கி மீன்பிடிக்கும் இதனை நீர்க்கோழி போலும் என்றும் மயங்குவர் பலர். 'வெண் காக்கை' என்று கூறினும், இதன் நிறம் வெளிறிய கருநிறமே. நிலமும் பொழுதும் கருப்பொருள்களும் மனித உணர்வுகளையும் வாழ்வுப் போக்கையும் எவ்வாறு உருவாக்குகின்றன. உருவாக்கும் ஆற்றலின என்னும் உண்மையை அறிஞர்கள் மிகவும் வலியுறுத்தியிருக்கும் சால்பையும் இச் செய்யுள்கள் காட்டும். 'பெருங் கடற் பரப்பில் இரும்புறம் தோயச் சிறுவெண் காக்கை பலவுடனாடும்' துறை (நற். 231) எனவும், 'சிறுவெண் காக்கைச் செவ்வாய்ப் பெருந்தோடு எறிதிரைத் திவலை ஈர்ம்புறம் நனைப்ப' (குறுந். 334) எனவும், பிறசான்றோரும் இதனைக் கூறுவர். 161. நெஞ்சம் நோய்ப்பாலது! துறை: ஒருவழித் தணந்துழி ஆற்றுவிக்கும் தோழிக்குத் தலைமகள் ஆற்றாளாய்ச் சொல்லியது. (து.வி.: தலைவியை வரைந்து மணந்து கொள்ளாது, தலைவன் தன் மனையிடத்தேயே தங்கிவிட்டபோது, தலைவியின் உள்ளமும் உடலும் நலனழிந்து சிதைகின்றன. 'அவன் சொல் மறவான்; விரைவிலே வந்து நின்னையும் மணப்பான்' என்று தேறுதல் கூறும் தோழிக்கு, அவள் தன்னுடைய நிலையைக் காட்டிக் கூறுவதாக அமைந்த செய்யுள் இது.)
பெருங்கடற் கரையது சிறுவெண் காக்கை கருங்கோட்டுப் புன்னைத் தங்கும் துறைவற்குப் பயந்து நுதலழியச் சாஅய் நயந்த நெஞ்சம் நோய்ப்பா லஃதே! தெளிவுரை: பெரிதான கடற்கரை யிடத்ததாகிய சிறுவெண் காக்கையானது, கருமையான கொம்புகளையுடைய புன்னை மரத்திலே தங்கும் துறையினையுடையவன் தலைவன். அவன் பொருட்டாகப் பசலையுற்று, நெற்றியும் அழகழிந்து போக மெலிவுறுதலினாலே, அவனையே விரும்பியதான என் நெஞ்சமும், இப்போது நோய் கொண்ட தாயிற்றே! கருத்து: 'நெஞ்சமும் நம்பிக்கையிழந்து வருத்தமுற்றதே' என்றதாம். சொற்பொருள்: பயந்து - பசந்து. க ருங்கோட்டுப் புன்னை - கூரிய கொம்புகளையுடைய புன்னை. அழிய - ஒளி குன்றிப் போக. சாஅய் - மெலிவுற்று. நயந்த - அவனே துணையாக விரும்பிக் கொண்ட நோய் - தளர்வம் கவல்வும். விளக்கம்: 'நயந்த நெஞ்சமே நோய்ப்பட்டது; ஒளி நெற்றியும் பசலையால் அழகழிந்தது; அவனோ வந்திலன்; யான் வாடி நலன்ழியாதே என் செய்வேன்?' என்கின்றனள். 'அவனையே நாடிநாடி நலியும் நெஞ்சின் துயரத்தை எழாதவாறு தடுப்பதற்கு என்னால் இயலவில்லையே?' என்றதாம். உள்ளுறை: 'சிறுவெண் காக்கையானது தன் முயற்சியிலே மனங்கொள்ளாததாய்ப் புன்னையின் கருங்கோட்டிடத்தே தங்கும் துறைவன்' என்றது, 'அவனும் தான் செய்தற்குரிய வரைதன் முயற்சியற்றானாய்த் தன் மனைக்கண்ணேயே தங்கி வாளாயிருப்பானாயின்னான்' என்றதாம். 162. சொல் பிறவாயினவே! துறை: இதுவும் மேற்பாட்டின் துறையே.
பெருங்கடற் கரையது சிறுவெண் காக்கை நீத்து நீர் இருங்கழி இரைதேர்ந் துண்டு பூக்கமழ் பொதும்பர்ச் சேக்கும் துறைவன் சொல்லா பிறவா யினவே. தெளிவுரை: பெரிதான கடற்கரை இடத்ததாகிய சிறுவெண் காக்கையானது நீந்துமளவுக்கு நீர்ப் பெருக்கையுடைய கரிய கழியிடத்தே இரையினைத் தேடி உண்டு விட்டுப், பூக்கள் மணங்கமழும் கானற்சோலையிடத்தே சென்று தங்குகின்ற துறைவனுடைய சொற்களோ, சொன்னபடியே யல்லாமல் வேறாகிப் போயினவே! கருத்து: 'சொன்ன சொல்லையும் அவன் மறந்தானே' என்றதாம். சொற்பொருள்: நீத்து நீர்-நீந்தும் அளவுக்குப் பெருகிய நீர்; இது சிறிதளவுக்கு ஆழமான நீர்நிலைகளிலுள்ள சிறுமீன்களையே பற்றி உண்ணும் தன்மையது என்றதாம். பொதும்பர் - சோலை. சொல் பிறவாயினது, சொன்னபடி நிகழாமல் பிழைபட்டுப் போயினது. விளக்கம்: சிறு வெண்காக்கை கழிமீனைத் தேர்ந்து பற்றி உண்டதன் பின்னே, பூக்களின் நறுமணங்கமழும் பொதும்பரிற் சென்று, அந்தப் புலால் நாற்றத்தோடு கூடியதாகவே தங்கியிருக்கும் என்றார். 'பெருங்கடற்கரையது சிறுவெண் காக்கை, நீத்து நீர் இருங்கழி இரை தேர்ந்துண்டு, புக்மழ் பொதும்பிற் சேக்கும் துறைவனொடு' எனக் குறுந்தொகையும் இந்த இயல்பை எடுத்துக் கூறும். அதன் இயல்பே, தலைவனிடமும் காணப்படுகின்றது என்றதும் இது. விரைய வரைந்து வந்து முறையாக நின்னை மணப்பேன் என்று கூறியதையும், அதுதான் பொய்த்ததையும் நினைந்து கலங்கி, இப்படிக் கூறுகின்றனள். உள்ளுறை: சிறுவெண் காக்கையானது சிறுமீனையுண்டு விட்டுத் தன் பசி தீர்ந்ததாலே, புக்கமழ் பொதும்பர்ச் சென்று இனிதே தங்கியிருத்தலேபோலத், தலைவனும் தன் ஆர்வந்தீர நம்மைக் களவின்கண்ணே முயங்கியபின்னே, தன் மனைக்கண் சென்று, நம்மை மறந்து மகிழ்வோடு இருப்பானாயினன் என்பதாம். துறைவன் சொல்லை வாய்மையெனக் கொண்டு, அவனை ஏற்றனமாகிய நாம், அதன்படி அவன் நடவாமையாலே நலனழிந்தும் உளம் கலங்கியும் வேறுபட்டு வருந்துவேமாயினேம் என்பதுமாம். அதனை மறந்து எப்படி ஆற்றியிருப்போம் என்பதும் உணர்த்தினள். தன் பசிக்கு உணவாகக் கருதுதலல்லது, மீனின் அழிவைப் பற்றி ஏதும் கருதாத காக்கை போலத், தலைவனும், நம்மை தன் காமப் பசிக்கு உணவாகக் கருதுதல்லது, நம்பால் ஏதும் அருளற்றவன் என்றதுமாம். 163. கை நீங்கிய வளை! துறை: மேற் செய்யுளின் துறையே.
பெருங்கடற் கரையது சிறுவெண் காக்கை இருங்கழித் துவலை ஒலியின் துஞ்சும் துறைவன் துறந்தெனத் துறந்தென் இறையேர் முன்கை நீங்கிய வளையே! தெளிவுரை: பெரிய கடற்கரைக்கண் உளதான சிறுவெண் காக்கையானது, கரிய கழியிட்டதே எழும் அலைகள், கரையிலே மோதிச் சிறுதுளிப்படும் ஒலியினைக் கேட்டவாறே, உறக்கம் கொள்ளும் துறையினையுடையவன் தலைவன். அவன், என்னைப் பிரிந்தானாதலினாலே, சந்து பொருந்திய என் முன்கைகளிலே விளங்கிய வளைகளும் என்னைக் கைவிட்ட வாய்த் தாமும் நீங்கிப் போயினவே! கருத்து: 'வளை கழன்று வீழும்படிக்கு வருந்தி மெலிவுற்றேன்' என்றதாம். சொற்பொருள்: துவலை - சிறு துளிகள். துவலை ஒலி - அலைமோதித் துவலைப்படும் போதிலே எழுகின்ற ஒலி. இறை - சந்து. விளக்கம்: அவன் துறந்தான் என்பதனாலே, என்னிலும் தாமே நெருக்கமானவை போலக் கைவளைகள் தாமும் கைவிட்டு நீங்கிப் போயினவே என்று புலம்புகின்றனள். இதனால் உடம்பு நனி சுருங்கலைக் கூறினாளாம். உள்ளுறை: சிறு வெண் காக்கையானது, இருங்கழித் துவலையின் ஒலியிலே இனிதாகத் தூங்குவது பற்றி கூறினாள். அவ்வாறே தலைவனும், தன்னை நினையாதே, ஊரிடத்தே எழும் அலருரைகளைக் கேட்டும் தமக்கு உதவும் அறிவுவரலின்றி, அதிலேயே மயங்கி உறங்குவானாயினான் என்றதாம். 164. அலர் பயந்தன்றே! துறை: தலைமகனுக்குப் புறத்தொழுக்கம் உளதாகிய வழித் தலைமகள் தோழிக்குச் சொல்லியது. (து.வி.: தலைமகன் சேரிப்புறத்தேயும் பரத்தையுறவிலே விருப்பமுற்றுச் செலெலுகின்றனன். அதனாலே வாடி நலன் அழிந்த தலைவி, தன் தோழிக்குச் சொல்வதாக அமைந்த செய்யுள் இது.)
பெருங்கடற் கரையது சிறுவெண் காக்கை இருங்கழி மருங்கின் அயிரை யாரும் தண்ணம் துறைவன் தகுதி நம்மோடு டமையா தலர்பயந் தன்றே! தெளிவுரை: பெருங் கடற்கரைக் கண்ணதான சிறுவெண் காக்கையானது, கரிய கழியிடத்தேயுள்ள அயிரை மீன்களைப் பற்றி உண்ணுகின்ற குளிர்ந்த நீர்த்துறைக்கு உரியவன் தலைவன். அவன் தகுதியானது, நம்மை நலிந்து வாடி நலனழியச் செய்தலோடும் நில்லாதே ஊரிடத்தும் அவர் பயப்பதாக ஆயிற்றே! கருத்து: 'அவன் செயலால் ஊர்ப் பழியும் வந்ததே' என்றதாம். சொற்பொருள்: அயிரை - 'அயிரை' எனப்படும் மிகச் சிறு மீன் வகை. ஆரும் - மிகுதியாகப் பற்றி உண்ணும், தகுதி - தகுதிப்பாடு; அவன் குடி உயர்வும் அறிவுச் சால்பும் பிறவும். விளக்கம்: நம்மை வாடிவருந்தி நலனழியச் செய்த்தோடும் நில்லாது, அவன் ஒழுக்கம் ஊரும் அறிந்ததாய், பழித்துப் பேசும் பேச்சினையும் தந்துவிட்டதே என்பதாம். தன் துயரைத் தாங்கியே போதும், பிறர் பழிப்பேச்சை நினைந்து வருந்தும் தலைவியின் மனவேதனை இதனாற் காணப்படும். உள்ளுறை: சிறுவெண் காக்கை பெரிய கடற்கரையது என்றபோது, கடலிடத்துப் பெருமீன்களைப் பற்றியுண்டு வாழாது, கருங்கழிப் பாங்கிலேயுள்ள சிறுமீன்களாகிய அயிரைகளைப் பற்றித் தின்னும் என்றது, அவ்வாறே தலைவனும் தகைமிகு தலைவியோடு முறையாகக் கூடி மகிழாது, புல்லிய பரத்தையரையே விரும்பித் திரிவானாயினான் என்றதாம். 'துறைவன் தகுதி' என்றது, அவன் பரத்தையர் மாட்டும் அன்புற்று, அவர்க்கு நல்லன செய்தலும், அவரை இன்புறுத்தலும் செய்யும் அருளுடையான் ஆயினான் என்று, அவன் அருள் மிகுதி போற்றுவது போல, அதனை இழித்துக் கூறியதாம். 165. வளை கொண்டு நின்ற சொல்! துறை: இதுவும் மேற்செய்யுளின் துறையே.
பெருங் கடற் கரையது சிறுவெண் காக்கை அறுகழிச் சிறுமீன் ஆர மாந்தும் துறைவன் சொல்லிய சொல்லென் இறையேர் எல்வளை கொண்டுநின் றதுவே! தெளிவுரை: பெரிய கடற்கரைக் கண்ணதாகிய சிறிய வெண் காக்கையானது, நீரற்று வரும் கழியிடத்தேயுள்ள சிறு மீன்களை நிரம்ப உண்ணும் துறைவன் தலைவன். அவன் முன்பு சொல்லிய 'நின்னைப் பிரியேன்' என்னும் உறுதிச் சொல், சந்து பொருந்திய அழகு விளங்கும் என் வளையைக் கவர்ந்து கொண்டு நிற்பதாயிற்றே! கருத்து: 'அவன் சொல்லை நம்பிய மடமையேன்' என்றதாம். சொற்பொருள்: அறுகழி - நீரற்றுப் போய்க்கொண்டு வரும் கழி. ஆர - நிரம்ப. மாந்தும் - உண்ணும். இறை - சந்து. விளக்கம்: 'அவன் கூறிய உறுதிச்சொல் என்னை நலிவித்து என் கைவளைகளைக் கவர்ந்து கொண்டுதான் நின்றது' என்று, அவளது சொல்லைப் பேணாத கொடுமையை எண்ணிக் கூறுகின்றாள். இது பழைய இன்ப நினைவாலே பிறந்த ஏக்க மிகுதியாகும். உள்ளுறை: நீர் அறாத பெருங் கடற் சிறு வெண் காக்கை, அக்கடலிடத்து மீனையுண்டு வாழாது, நீர் அறுகாச் சிறு மீன் ஆர மாந்தும் புன்மைபோலத், தலைவனும் பெருமனையாளனாக இருந்தும் நீர்மைமிக்க மனைவியை மணந்து வாழாது, அன்புச் செறிவற்ற புல்லிய பரத்தையரிடம் மயங்கிக் கிடப்பானாயினான் என்றனளாம். 166. நல்ல வாயின கண்! துறை: வரையாது வந்தொழுகும் தலைமகன் சிறைப்புறத்தானாகத், தலைமகள் பசப்பிற்கு வருந்திய தோழி, அவனை இயற்பழித்துக் கூறியது. (து.வி.: வரைதலை நாடாது, களவையே நாடி வந்து போகும் தலைவனின் போக்குகண்டு வருந்திய தோழி, அவன் சிறைப்புறத்தானாதல் நோக்கி, அவன் உள்ளம் தெளியுமாறு, அவனை இயற்பழித்துக் கூறியது இது.)
பெருங்கடற் கரையது சிறுவெண் காக்கை வரிவெண் டாலி வலைசெத்து வெரூஉம் மெல்லம் புலம்பற் றேறி நல்ல வயின நல்லோள் கண்ணே! தெளிவுரை: பெரிய கடற்கரைக் கண்ணதான சிறு வெண் காக்கையானது, வரிகள் பொருந்திய வெள்ளிய பலகறைகளை வலையென்றே நினைத்து அஞ்சும், மென்மையான கடற்கரை நாட்டோன் தலைவன். அவன் சொற்களை வாய்மையாயினவாம் என்று தெளிதலாலே, இந்நல்லோளின் கண்களும், இதுகாலை பசலை படர்ந்து நல்லழகு பெற்றவை ஆயினவே! கருத்து: 'அவன் அறத்தொடு வாய்பை பேணாதான்' என்றதாம். சொற்பொருள்: வரி - கோடுகள். தாலி - பலகறை; வலைகள் நீரினுள் அமிழ்ந்து மீனை வளைத்துப் போடிக்க உதவுவது; தாலி என்றது அது தொங்குதலால். தேறி - தெளிந்து; சூளுரைகளை வாய்மையெனக் கொண்டு. விளக்கம்: 'நல்லவாயின' என்றது எதிர்மறைக் குறிப்பு அவன் பேச்சை அப்படியே நம்பி அவனொடும் காதன்மை கொண்டதன் பயனாலே, இவள் கண்கள் தம் பழைய அழகு நலம் கெட்டன என்பதாம். நல்லோள் - நல்ல அழகும் பண்பும் உடைய தலைவி. உள்ளுறை: 'வரிவெண் தாலியை வலையெனக் கொண்டு சிறுவெண் க ஆக்கை அஞ்சும்' என்றது, அவ்வாறே தலைவனும் தலைவியை வரைந்து கொள்வது தன் சுதந்திரத்தைக் கட்டுப்படுத்தும் என்று கருதினன் என்று உள்ளுறுத்துக் கூறியதாம். அவன் பொறுப்பற்ற தன்மை சுட்டிப் பழித்ததும் இது. 167. தொல் கேள் அன்னே! துறை: பரத்தையிற் பிரிந்த தலைமகன் விட, வரயிலாய் வந்தார்க்கு, அவன் கொடுமை கூறித் தோழி இயற்பழித்த வழித், தலைமகள் சொல்லியது. (து.வி.: பரத்தையை நாடிப் பிரிந்து போன தலைவன்' அங்கும் மனம்பற்றாதவனாக மனைவிபால் வரவிரும்புகின்றான். தன் வரவுரைத்துத் தலைவியின் இசைவறிந்துவரச் சில, ஏவல்களை விடுக்கிறான். அவர்களிடம் தோழி, அவனைப் பழித்துக் கூறி வாயில் மறுத்தபோது, தலைவி, தன் பெருமிதம் தோன்றக் கூறியதாக அமைந்த செய்யுள் இது.)
பெருங்கடற் கரையது சிறுவெண் காக்கை இருங்கழி இனக்கெடிறு ஆரும் துறைவன் நல்குவன் போலக் கூறி நல்கான் ஆயினும் தொல்கேள் அன்னே! தெளிவுரை: பெரிய கடற்கரைக் கண்ணதான சிறுவெண் காக்கையானது, கரிய கழியிடத்தேயுள்ள இனமாகிய கெடிற்று மீனை உண்ணும் துறைக்குரியவனாகியவன் தலைவன். அவன் நமக்கு தலையளி செய்வான் போலக் கூறிப் பின்னர் செய்யாதே ஒழிந்தானாயினும், அவன் நமக்குப் பண்டே உறவாகிய அத் தன்மையினும் ஆவானே! கருத்து: 'ஆகவே, அவனை வெறுத்தல் நமக்கு இயலாது' என்றதாம். விளக்கம்: பெருங்கடற்கரைக் காக்கையாயினும், இருங்கழியின் இனக்கெடிறு ஆரும் என்றது, அதன் இயல்பு அவ்வாறு சிறுமீன் நாடிப்போதலே என்பது உணர்த்தியதாம். 'நல்குவன் போலக் கூறி' என்றது, வரைந்துகொண்ட ஞான்று கூறியது; அது பொய்த்து, நல்கான் ஆயினான் என்பதாம். 'தொல் கேள்' என்றது, பிறவிதோறும் தொடரும் கேண்மை சுட்டியது; ஆகவே, அவனை வெறுத்தல் இயலாமையும் கூறினாள். உள்ளுறை: பெருங்கடற் காக்கையாயினும், இருங்கழிக்கண கெளிற்றினை நாடியே செல்லுமாறு போலத், தலைவனும் தன் தலைமைக்கேற்பத் தலைவியை மணந்துகூடி வாழாதவனாகப் பரத்தையர்பால் நாடிச்செல்லும் இழிதகைமையே கொள்வான் ஆயினான் என்கின்றனள். 168. பால் அரும்பே! துறை: நொதுமலர் வரைவு வேண்டி விடுத்தமை அறிந்த தலைமகள், ஆற்றாளாய்ப் பசியட நிற்புழி, இதற்குக் காரணம் என்னென்று செவிலி வினவத், தோழி அறத்தொடு நின்றது. (து.வி.: தலைவி களவுறவிலே ஒருவனை வரித்து அவனுடன் மனங்கலந்துவிட்டாள். அஃதறியாத சுற்றத்தார், அவளை வரைவு வேண்டிப் பெரியோரைத் தமர்பால் விடுக்கின்றனர். 'பெற்றோர் அவருக்கு இசைவர் போலும்' என்று ஆற்றாமை மீதூர்ந்தாளான தலைவி, உணவும் மறுத்து வாடி நிற்கின்றாள். 'அஃதேன்' என்று செவிலித்தாய் கேட்பத் தோழி சொல்லி அறத்தோடு நிற்பதாக அமைந்த செய்யுள் இது.)
பெருங்கடற் கரையது சிறுவெண் காக்கை துறைபடி யம்பி யகமணை ஈனும் தண்ணந் துறைவன் நல்கின் ஒண்ணுதல் அரிவை பாலா ரும்மே! தெளிவுரை: பெரிய கடற்கரையின் கண்ணதான சிறுவெண் காக்கையானது, துறையிடத்தே கிடக்கும் தோணியின் அகத்தே கூடுகட்டிக் கொண்டு முட்டையிடும். அத்தகைய குளிர்ந்த துறைக்கு உரியவனான தலைவன் வந்து நல்குவானாயின், ஒளிகொண்ட நெற்றியினளான இவளும் பாலுண்டு பசி தீர்வாள்! கருத்து: 'அவனுக்கே ஏங்குபவள் இவள்' என்றதாம். சொற்பொருள்: அகமணை - உட்கட்டைக்குள்; படகு வலிப்பார் அமர்தற்காகக் குறுக்குவாட்டமாக அமைக்கப்பெற்றிருக்கும் இருக்கைக் கட்டை; இதனடியிலே காக்கை கூடுகட்டி முட்டையிடும் என்பது கருத்து. நல்கின் - வந்து வரைந்து மணப்பின். பால் ஆரும் - பால் உண்ணும். நொது மலர் - அயலார். பசியட நிற்றல் - பசியானது வருத்தவும் உண்ணாதே வருந்தி நிற்றல். விளக்கம்: 'துறையடி யம்பி' என்பதனைப் புதுப்படகு கொண்டார் கழித்துப் போடக் கரையிடத்தேயே கிடக்கும் பழம் படகெனக் கொள்க. பசிவருத்தவும் உண்ணாதிருத்தல் புணர்ச்சி நிமித்தமான மெய்ப்பாடுகளுள் ஒன்று என்பது தொல்காப்பியம் - (மெய்ப் 22). உணவு மறுத்தாளைப் பாலாவது பருகென வற்புறுத்த செவிலியிடம், தோழி சொல்வதாகக் கொள்க! 'துறைவன் நல்கி பால் ஆரும்' என்றது, நீயும் நானும் நல்கின் அருந்தாள் என்றதுமாம். உள்ளுறை: 'துறைபடி அம்பி அகமணை, காக்கை ஈனும்' என்றது, அவ்விடத்தே தீங்கு ஏதும் நேராதென்பது சுட்டி, அவ்வளவு நலஞ்சிறந்த துறையெனவும், அவ்வாறே அதற்குரிய தலைவனும் தலைவியை மறவாதே வரைந்து வருவன் என்பதும், இவளும் அவனை மணந்துகூடி அவன் குடிவிளக்கம் புதல்வனைப் பெற்றளித்துப் பெருமையடைவள் என்பதும் உள்ளுறுத்துக் கூறுகின்றனள் தோழி. மேற்கோள்: ''நொதுமலர் வரைவுழி ஆற்றாது பசியட நின்றுழி, 'இதற்குக் காரணம் ஏன்?' என்ற செவிலிக்குத் தோழி கூறியது'' என்று காட்டுவர் நச்சினார்க்கினியர் - (தொல். கனவு, 23). 169. என் செய்யப் பசக்கும்! துறை: காதற் பரத்தையைவிட்டு மற்றொருத்தியுடன் ஒழுகா நின்ற தலைமகன், வாயில் வேண்டி விடுத்துழி, வாயில் நேர்தர் வேண்டி நின்கண் பசந்தன காண் என்று முகம்புகு தோழிக்குத் தலைமகள் சொல்லியது. (து.வி.: தலைவனின் வரவை வாயில்கள் வந்து சொல்லுகின்றனர். தலைவி சினந்து நோக்குகின்றாள். தோழியோ மீண்டும் அவள் வாழ்வு மலர்வதற்குத் தலைவனை ஏற்றலே நன்றெனக் கருதுகின்றாள்; அதையும் கூறுகின்றாள். அவளுக்குத் தலைவி சொல்வதாக அமைந்த செய்யுள் இது.)
பெருங்கடற் கரையது சிறுவெண் காக்கை பொன்னிணர் ஞாழல் முனையின், பொதியவிழ் புன்னையம் பூஞ்சினைச் சேக்கும் துறைவன் நெஞ்சத் துண்மை யறிந்தும் என்செயப் பசக்கும் தோழியென் கண்ணே! தெளிவுரை: பெருங் கடற்கரையிடத்ததான சிறுவெண் காக்கையானது, பொன்போலும் பூங்கொத்துக்களையுடைய ஞாழலை வெறுத்ததனால், அரும்பவிழும் புன்னையது அழகிய பூக்களையுடைய கிளையிடத்தே சென்று தங்கும் துறைவன் தலைவன். அவன் என் நெஞ்சத்து என்றும் உளனாதலை அறிந்து வைத்தும், தோழி, என் கண்கள் தாம் யாது செயலைக் கருதி இவ்வாறு பசலை கொள்வனவோ? கருத்து: 'அவனை என்றும் மறந்திலேன்; எனினும் கண்கள் அவனைக் காணாமையாற் கலங்கும்' என்றதாம். சொற்பொருள்: ஞாழல் - கொன்றை. முனையின் - வெறுப்பின். பூஞ்சினை - பூக்களையுடைய கிளை. உண்மை - உளனாகும் வாய்மை. பசக்கும் - பசலை கொள்ளும். விளக்கம்: கடற்கரைக்குரிய காக்கை கானற்சோலைப் புறம்போய்க் கொன்றை மரத்திலே தங்கும்; சிறிது போதிலே அதுவும் வெறுக்க, அங்கிருந்து அகன்று, புன்னைப் பூஞ்சினையில் சென்று தங்கும் என்று, ஓரிடம் பற்றியிருந்து மனநிறைவு கொள்ளாத அதன் சபலத்தன்மை கூறினாள். அத்துறைவனான தலைவனும் அத்தகைய மனப்போக்கினனே என்பதற்கு. 'கண் பசத்தல்' காணாமையாற் பசந்தது எனத் தன் துயரம் கண்மேலிட்டுச் சொல்லுகின்றாள். உள்ளுறை: 'கொன்றைக்கிளை வெறுப்பின் புன்னைக் கிளைக்குப் போய்த் தங்கும் சிறுவெண் காக்கைபோல, நம் மீதிலே வெற்றுப்புற்றவன், மற்றொருத்தியை நாடிப் போய்த் தங்குவானாயினான்' அவன் இயல்பு அஃதே என்பதறிந்தும், நம்மை மறந்தானை நம்மால் மறக்க வியலவில்லையே' என்பதாகும். 170. நல்லன் என்பாயோ! துறை: தலைமகற்குப் புறத்தொழுக்கம் உண்டாகிய வழி வேறுபட்ட தலைமகள், 'அவற்கு அவ்வாறு நிகழ்ச்சியில்லை; நம்மேல் அன்புடையவன்' என்ற தோழிக்குச் சொல்லியது. (து.வி.: தலைமகன் பரத்தையுறவு நாடினான் என்பதறிந்து வேறுபட்டாள் தலைமகள். அதனால் அவன் வீட்டிற்கு வரும்போதும், அவனை உவந்து ஏற்காமல் வெறுத்து ஒதுங்கிப் போகலானாள். இதனைத் தவிர்க்க நினைத்த தோழி, 'நீ நினைப்பது போல் அவன் பரத்தையொழுக்கத்தான் அல்லன்; ஏன் அவனைவிட்டு ஒதுங்குகின்றாய்?' என்று கூறித் தெளிவு படுத்த முயல்கின்றாள். அவட்குத் தலைவி சொல்வதாக அமைந்த செய்யுள் இது.)
பெருங்கடற் கரையது சிறுவெண் காக்கை இருங்கழி நெய்தல் சிதைக்கும் துறைவன் 'நல்லன்' என்றி யாயின் பல்லிதழ் உண்கண் பசத்தல்மற்று எவனோ? தெளிவுரை: பெருங்கடற் கரையிடத்துச் சிறு வெண்காக்கையானது. பெரிய கழியிடத்தேயான நெய்தலைச் சென்று சிதைக்கும் துறையினைச் சேர்ந்தோனான தலைவனை, நீதான் நல்லவன் என்கின்றனை! அஃது உண்மையேயாயின், பலவான இதழ்களையுடைய பூப்போலும் மையுண்ட எம் கண்கள்தாம் அவன் கொடுமையினாலே வாடிப் பசப்பதுதான் யாது காரணமாகவோ? கருத்து: 'அவன் பலநாள் பிரிந்து உறைதற்கு யாது காரணமோ?' என்றதாம். சொற்பொருள்: இருங்கழி - பெரியகழி. 'நெய்தல்' என்றது நெய்தல் மலர்களை. சிதைக்கும் - அழிக்கும். விளக்கம்: ''நமக்கு இன்னாதன செய்து பிரிந்து போயினவன், போயின பரத்தைக்கும் அதுவே செய்யும் வன்கண்மை உடையவனாயினான்; அவனை நல்லவன் என்கின்றாயே? எனினும், என்கண் அவனை காண விரும்புகின்றதே? என் செய்வேன்'' என்று தலைவி வருந்தியுரைக்கின்றனள். தலைவியின் சால்பும் இதனாலே அறியப்படும். உள்ளுறை: காக்கை இருங்கழி நெய்தல் சிதைப்பதே போல, இவனும் பரத்தையர் பருடைய நலன்களையும் வறியதே சிதைப்பானாயினான் என்பதாம். தனக்கு ஏதுமற்ற நெய்தலைக் காக்கை சிதைத்துப் பாழக்குதலே போலத், தலைவனும் தனக்கு நிலையான அன்புரியை அற்றவரான பரத்தையரை நலம் சிதைப்பான் என்றதும் ஆம். ஆகவே, அவரை வெறுத்ததாலேயே இங்கும் வர நினைக்கின்றான் என்கின்றனள். 'அவன் நல்லவனானால் கண் பசப்பதேன்? கண் பசத்தலால் அவன் நல்லவன் அல்லன் என்று அறிவாயாக' என்றதுமாம். |