சங்கமருவிய எட்டுத்தொகை நூல்களுள் மூன்றாவதாகிய

ஐங்குறு நூறு

தெளிவுரை : புலியூர்க் கேசிகன்

... தொடர்ச்சி - 20 ...

9. நெய்தற் பத்து

     நெய்தற்கு உரியவான கருப்பொருள்கள் செய்யுள்தோறும் அமைந்து வருவதால், இதனை நெய்தற் பத்து என்றே குறித்தனர்.

     'நெய்தல், கொடியும் இலையும் கொண்ட ஒரு நீர்ப் பூ வகை. இதன் பூக்கள் நீலநிறம் பெற்றவை. 'மணிக்கலத்தன்ன மாயிதழ் நெய்தல்' (பதிற். 30) எனவும் உரைப்பர். மகளிர்தம் கண்ணுக்கு உவமையாக இரைக்கப்படும் 'இது, வைகறைப் பேதிலே மலர்கின்ற தன்மையுடையது மாலையிலே கூம்புவது. 'நீலம்' என்பது வேறுவகைப் பூ; இது அதனின் வேறுவகை. இதனைக் கொய்து கொண்டு அலங்கரித்து இன்புறுவது நெய்தல் நிலச் சிறுமியரின் வழக்கம். கடற்கரைக் கழிகளில் இதனை இன்றும் காணலாம்.

181. உறைவு இனிது இவ்வூர்!

     துறை: 'களவொழுக்கம் நெடிது செல்லின், இவ்வூர்க் கண் அலர் பிறக்கும்' என்று அஞ்சியிருதந்த தலைவி, 'தலைமகன் வரைந்து கெள்ளத் துணிந்தான்' என்ற தோழிக்குச் சொல்லியது.

     (து.வி.: 'களவொழுக்கம் அலராகிப் பழியெழும் நிலைக்கு வந்துவிடக் கூடாதே' என்று மிகவும் அஞ்சுகிறாள் தலைவி. அவன் வரைவுக்குத் துணிந்தனன் என்று தோழி வந்து மகிழ்வோடு சொல்லவும், அவள் அது கேட்டுச் சொல்லியதாக அமைந்த செய்யுள் இது.)

     நெய்தல் உண்கண் நேரிறைப் பணைத்தோள்
     பொய்தல் ஆடிய பொய்யா மகளிர்
     குப்பை வெண்மணற் குரவை நிறூஉம்
     துறைகெழு கொண்கன் நல்கின்
     உறைவினி தம்ம இவ் அழுங்கல் ஊரே!

     தெளிவுரை: நெய்தலே போல விளங்கும் மையுண்ட கண்களையும், நேரிய முன்னங்கையோடு விளங்கும் பணைத்த தோள்களையும் உடையவரான, பொய்த்தலையே அறியாதாரான சிறு மகளிர்கள், தாம் பொய்தல் விளையாட்டயர்ந்த வெண்மணல் மேட்டினிடத்தே, கடல் தெய்வத்தை வேண்டிக் குரவையாடு தலையும் மேற்கொள்ளுகின்ற, துறைபொருந்தியவன் தலைவன். அவன், நீ சொன்னவாறே அருள்வானாயின், அலராகிய ஆரவாரமுடைய இவ்வூரும், நாம் தங்குவதற்கு இனிதாயிருக்குமே!

     கருத்து: 'இன்றேல், இவ்வூரும் வருத்தம் செய்வதாகும்' என்றதாம்.

     சொற்பொருள்: இறை முன்னங்கை பொய்தல் - சிறு மகளிர் கூடியாடும் ஆடல் வகை. குரவை - தெய்வம் வேண்டி எழுவர் மகளிர் கைகோத்து ஆடும் ஒருவகை ஆடல் வகை; குன்றக் குரவை, ஆய்ச்சியர் குரவை போல்வநு; குரவையிட்டு மகளிர் வாழ்த்துதலை இன்றும் திருமணம் போன்ற விழாக்களில் காணலாம்.

     விளக்கம்: களவு உறவே பொய்த்தற்குத் தூண்டும் என்பது உண்மையாதலால், இவரை அதனைக் கொள்ளாத நிலையும் பருவமும் உடையவரெனச் சுட்டவே 'பொய்யா மகளிர்' என்றனர். ஒளித்துப் பிடித்து விளையாடும் சிறுமியர் விளையாட்டெனவும், கண்ணைக் கட்டிக் கொண்டு குறித்தாரைப் பற்றி யாடும் ஆட்டமெனவும் இதனைக் கருதலாம். பொய்கைக்கண் மூழ்கிப் பிடித்து விளையாடும் நீர் விளையாட்டும் ஆகலாம். 'பொய்தல் மகளிர் விழவணிக் கூட்டும்' என்பது அகம் (26); ஆடவராகிய சிறுவரும் ஆடுதலைப் 'பொலந்தொடிப் புதல்வனும் பொய்தல் கற்றனன்' என்று நற்றிணை காட்டும் (166). இவரை, 'மறையெனில் அறியா மாயமில் ஆயம்' என்றும் இதே கருத்தில் அகம் காட்டும் (2) இச் சிறுமகளிர் குரவை யயர்வது தமக்கு நல்ல வாழ்வைத் தந்தருள நீர்த் தெய்வத்தை வேண்டி யென்க.

     'அழுங்கலூர்' என்றது, தான் பிறந்து வளர்ந்த ஊரையே, தன் களவுக் கற்பை அலர் கூறித் தூற்றுதலால் வெறுத்துக் கூறியதாம். 'கொண்கன் நல்கின்' அலர் அடங்கி ஊரவர் உவந்து வாழ்தல் மிகுதலின், 'உறைவு இனிது' என்கின்றனள்.

     உள்ளுறை: 'பொய்தலாகிய பொய்யா மகளிர் குப்பை வெண்மணற் குரலை நிறூஉம்துறை' என்றது, அவர் பலரும் அறிதலாம், அலர் எழு நேருமாதலின், இனிக் களவுறவு வாய்த்தற்கில்லை என்றதாம்.

     இனி, 'மகளிர் தம் காதலரோடு கலந்தாடும் துறைகெழு கொண்கன்' எனக் கொண்டு, 'அவன் நம்மை வரைந்து கொண்டு தானும் அவ்வாறு ஆடிக் களித்தலை நினையாதவனாக உள்ளனனே' என மனம் நொந்து கூறியதுமாம். 'பொய்தல் மகளிர்' காமக் குறிப்பு அறியாராயினும், அவரைக் காணும் தலைவன்பால் அஃது எழுதல் கூடும் என்றும்,அ வன் தலைவியை நாடிவரல் வேண்டும் என்றும் கருதிக் கூறியதும் கொள்க.

182. அருந்திறற் கடவுள் அல்லன்!

     துறை: தலைமகள் மெலிவு கண்டு, தெய்வத்தால் ஆயிற்று எனத் தமர் நினைந்துழித் தோழி அறத்தொடு நின்றது.

     (து.வி.: களவுக் கூட்டம் இடையீடுபடுதலால் தலைவி மேனி மெலிவுற்றனள். தாயாரும் பிறரும் அம்மெலிவு தெய்வத்தால் ஆயிற்றெனக் கருதி, அது தீர்தற்காவன செய்தற்குத் திட்டமிடுகின்றனர். அஃதுணரும் தோழி, குறிப்பாகத் தலைவியின் களவுக் காதலைச் செலவிலிக்கு உணர்த்தி, அவனுக்கே அவளை மணமுடிக்க வேண்டுகின்றதாக அமைந்த செய்யுள் இது.)

     நெய்தல் நறுமலர் செருந்தியொடு விரைஇக்
     கைபுனை நறுந்தார் கமழும் மார்பன்
     அருந்திறற் கடவுள் அல்லன்
     பெருந்துறைக் கண்டுடிவள் அணங்கி யோனே.

     தெளிவுரை: பொருந்துறையிடத்தே இவளைக் கண்டு வருத்தமுறச் செய்தவன், தடுத்தற்கு அரிதான பெரிய வளமையினைக் கொண்ட கடவுள் அல்லன். நெய்தலின் நறியமலரைச் செருந்தி மலரோடும் கலந்து, கைவண்ணத்தாற் புனையப் பெற்ற நறுந்தாரின் மணம் கமழ்ந்தபடியே இருக்கும், மார்பினை யுடையனகிய ஒரு தலைவன் காண்!

     கருத்து: 'அவனோடு மணம் சேர்த்தாலன்றி இவள் மெலிவு தீராது' என்றதாம்.

     விளக்கம்: அழகுணர்வும் மணவிருப்பும் உடையவனாதலின் தலைவன் நெய்தலின் நிலப்பூவினையும், செருந்தியின் பொன்னிறப் பூவினையும் கலந்து கட்டிய கதம்ப மாலையை மார்பில் விரும்பி அணிவான் என்க. 'அருந்திறற் கடவுள்' என்றது, நெய்தல் நிலத் தெய்வமான வருணனையே குறிப்பதாகலாம்.

     உள்ளுறை: 'நெய்தலும் செருந்தியும் விரவிக் கட்டிய மாலை கமழும் மார்பன்' என்றது, தலைவனின் செல்வச் செழுமையினையும், அழகு வேட்கையையும், மணவிருப்பையும் காட்டி, அவன் இவளை விரும்பி மணப்பவனுமாவான் என்று உறுதிபடக் கூறியதுமாம். அவன் இவளுக்கு ஏற்ற பெருங்குடியினன் என்றதுமாம்.

     குறிப்பு: 'மார்பன்' என்று சுட்டிக் கூறியது, அதனைத் தழுவித் தலைவி இன்புற்ற களவுறவை நுட்பமாக உணர்த்தற்காம்.

     மேற்கோள்: 'குறி பார்த்தவழி வேலவனை முன்னிலையாகக் கூறியது' என இளம்பூரணரும் - (தொல். களவு, 24). அறத்தொடு நிற்றலில் வேலற்குக் கூறியது என நச்சினார்க்கினியரும் - (தொல். களவு, 23) உரைப்பர். இவர்கள் கருத்துப்படி, வெறியாடல் முயற்சி நிகழும் போது, தோழி தாய்க்கு உண்மை உணர்த்தியதாகவும் கொள்ளலாம். நெய்தன் மாந்தரும் முருகனை வேட்டு வழிபட்டதும் இதனால் அறியலாம். திருச்செந்திலே அலைவாய்ப் பெருங்கோயில்தானே!

183. காலை வரினும் களையார்!

     துறை: வரைவிடை வைத்துப் பிரிந்துழி, ஆற்றாளாகிய தலைமகள் மாலைக்குச் சொல்லியது.

     (து.வி.: தலைவன் வரைந்து வருவதாகச் சொல்லி, அதற்கான ஏற்பாடுகளை முடித்தற் பொருட்டாகத் தலைமகளைப் பிரிந்து இருக்கின்ற காலம். அவனைக் காணாத துயரால் தலைவி மனம் நொந்து மாலைக்குச் சொல்வதாக அமைந்த செய்யுள் இது.)

     கணங்கொள் அருவிக் கான்கெழு நாடன்
     குறும்பொறை நாடன் நல்வய லூரன்
     தண்கடற் சேர்ப்பன் பிரிந்தெனப் பண்டையிற்
     கடும்பகல் வருதி கையறு மாலை
     கொடுங்கழி நெய்தலும் கூம்பக்
     காலை வரினும் களைஞரோ இலரே!

     தெளிவுரை: பிரிந்தோர் செயலறுதற்குக் காரணமாக அமைகின்ற மாலைப்பொழுதே! திரட்சிமிக்க அருவிகள் வீழ்கின்ற நீர்வளம் மிகுந்த கானம் பொருந்திய நாடனும் சிறிய குன்றுகளையுடைய நாடனும், நல்வளம் கொண்ட வயல்களையுடைய நாடனுமான, குளிர்கடல் நிலத்துக்குரியவனாகிய நர் சேர்ப்பனாவன் நம்மைப் பிரிந்துள்ளான் என்பதனாலே, முன்பினுங் காட்டில் கடுமையுடையையாய் உச்சிப் போதிலும் வெம்மை காட்டியபடி வருகின்றனையே! வளைந்த கழியிடத்தேயுள்ள நெய்தல் மலர்களும் மாலையிலே இதழ்குவிந்து ஒடுங்கி காலையிலே மலர்வது போலக் கவிடனுடனே நீயும் வரினும், எம் துயரத்தைக் களைவார்தார் என்னருகே இல்லையே!

     கருத்து: 'பொழுதெல்லாம் வருந்தி நலியும் எனக்கு எப்போது மாலையானால் என்ன?' என்றதாம்.

     சொற்பொருள்: கணங்கொள் அருவி - திரட்சி கொண்ட அருவி; திரட்சி வீழ்நீரின் பெருக்கம். கான்கெழு நாடன் - காடுபொருந்தி நாட்டிற்குரியோன்; முல்லைத் தலைவன் குறும்பொறை - உயரம் குறைந்த பொற்றைகள் என்னும் சிறு குன்றுகள்; குறும்பொறை நாடன் - குறிஞ்சித் தலைவன்; நல்வயலூரன் - மருதத் தலைவன்; தண்கடற் சேர்ப்பன் - நெய்தல் தலைவன். ஆகவே, தலைவியின் காதலன் நானிலத்துக்கும் தலைமை கொண்ட அரசகுமாரன் என்பது கூறியதாயிற்று. கடும்பகல் - கடுமையான வெப்பங்கொண்ட பகற்போதான உச்சிவேளை; மாலை கடும்பகலினும் வருதல், மாலையிலே மிகும் பிரிவுத்துயரம் உச்சிப் பகற்போதிலும் மிக்கெழுந்து தோன்றி வருத்துதல். கையறு மாலை - பிரிந்தோர் செயலறுதற்குக் காரணமாகிய மாலை நேரம். காலைவரினும் - காலைப் போதினும் துயர் மிகுந்து வருவதாயினும்.

     விளக்கம்: பகலும் இரவுமாகிய நாள் முழுதுமே பிரிவுத் துயரத்தாலே தலைவனை நினைந்து நினைந்து வருந்துகின்றாளான தலைவி, மாலைப் போதிலே மட்டுந் தான் துன்புறுவதாக எண்ணித் தன்னைத் தேற்றும் தோழியின் செயல்கண்டு மனம் வெதும்பிக் கூறியதாக இதனைக் கொள்க. நெய்தல் மலர் கூம்புதல் மாலைப்போதில் என்பதனை, 'நெய்தல் கூம்ப நிழல் குணக்கு ஒழுகக் கல்சேர் மண்டிலம்' என வரும் நற்றிணையால் - (நற். 187) அறிக. 'பண்டையில் வருதி' நீதான் பண்டு போலவே வருவாயாயினும், அவர் பிரிந்தமையின் யான் துயரத்தே ஆழ்தலையே செய்கின்றனை என்றதாம்.

     உள்ளுறை: 'பண்டு வரும் காலத்தேபோலத் தவறாதே கதிரவனும், அவனால் செயப்படும் பொழுது வரினும், தானின்றி யான் வாழமை தீரத் தெளிந்துளரெனினும், தலைவர் தாம் சொன்னாற்போலக் குறித்த காலத்தே வந்தனரிலரே' என்று, தலைவி ஏக்கமுற்றுக் கூறியதாகக் கொள்க. தன் வரவும் பிழைத்தான்; அதனால் தலைவி நலனும் கெட்டழியக் கேடிழைத்தான் என்க.

     மேற்கோள்: பருவ வரவின்கண், மாலைப் பொழுது கண்டு ஆற்றாளாய தலைவி தோழிக்குக் கூறியது; நெற்யதற்கண் மாலை வந்தது என்று காட்டுவர் நச்சினார்க்கினியர் - (தொல். அகத், 12). இருத்தல் என்னும் உரிப்பொருள் வந்த நெய்தற் பாட்டு என்பர் நம்பியகப் பொருள் உரைகாரர் - (நம்பி. ஒழிபு, 42).

     வேறு பாடம்: 'வருந்திக் கையறுமாறு, மாலை நெய்தலும் கூம்ப.'

     குறிப்பு: தலைவனுக்கு நானிலத்தின் தலைமை கூறிப் பாலை மட்டும் கூறாமை அதன் உரிப் பொருளான பிரிதலைத் தலைவன் மேற்கொண்டதன் கொடுமையை நினைந்தென்றுங் கொள்க. மாலையிற் கூம்பும் நெய்தல் காலையிலே கதிர் தோன்ற மலரும்; தானே அவரில்லாமை யால் வாடிக்கூம்புதலே எப்போதும் உளதாவது என்றனளாகவும் கொள்க. 'கலைஞரோ இலர்' என்றது, எவரும் அவனிருக்குமிடம் சென்று அவனைத் தன்பால் வரவுய்த்துத் தன் துயரம் களைந்திற்றிலர் என்னும் வேதனையாற் கூறியது; அன்றிக் களையும் ஆற்றல் படைத்த காதலரோ அருகில் இலர் என்றதுமாம்.

     நானிலத்தார்க்கும் நலஞ் செய்யும் பொறுப்புக் கொண்டவன், எளிமையாட்டியாகிய எனக்கு வந்து நலம் செய்திலனே என்று ஏகியதுமாம்.

184. கடலினும் பெரிய நட்பு!

     துறை: வாயில் வேண்டி வந்தார், தலைமகன் அன்புடைமை கூறியவழி, வாயில் மறுக்கும் தலைமகள் சொல்லியது.

     (து.வி.: வாயில் வேண்டி வந்தாரான தலைமகனின் ஏவலர்கள், தலைமகன் 'தலையிடத்தே கொண்டிருக்கும் மாறாத அன்புடைமை பற்றி எல்லாம் கூறி, அவனை அவள் உவந்து ஏற்றலே செய்த்தக்கது' என்று பணிந்து வேண்ட, அவன் புறத்தொழுக்கத்தாலே புண்பட்டிருந்தவள், அவரை மறுத்துக் கூறுவதாக அமைந்த செய்யுள் இது.)

     நெய்தல் இருங்கழி நெய்தல் நீக்கி
     மீனுண் குருகிளங் கானல் அல்கும்
     கடலணிந் தன்றவர் ஊரே
     கடலினும் பெரிதெமக் கவருடை நட்பே!

     தெளிவுரை: நெய்தலிடத்தேயான பெரிய கழிப்பாங்கிலேயுள்ள நெய்தற்பூக்களை நீக்கிவிட்டு, அவ்விடத்தேயுள்ள மீன்களைப் பற்றியே தான் விரும்பி உண்ணும் குருகானது, அயலதான இளங்கானலிடத்தேயும் சென்று தங்கும். அத்தகு கடலால் அழகு பெற்றது அவருடைய ஊராகும். எமக்கு அவருடைய நட்பானது, அந்தக் கடலினும் காட்டிற் பெரிதாகுமே!

     கருத்து: 'அந்நட்பை அவர்தாம் பேணுதல் மறந்தாரே' என்றதாம்.

     சொற்பொருள்: இளங்கானல் - கடற்கரை அணுக்கத்துக் கானற்சோலை; நீரற்ற கானல் போலது, வெண்மணற் பரப்பானது மிகுகடல் நீரின் அருகேயிருந்தும், கானலாகிக் கிடப்பது என்று அறிக. கடல் அணிந்தன்று - கடலாலே அழகடைந்திருப்பது.

     விளக்கம்: 'அவருடைய நட்பு எமக்குக் கடலினும் பெரிது' என்றது, தன்னளவிலே அதுவே உண்மையாயினும், தன்னை மறந்து பரத்தையின் பத்திலே ஈடுபட்டு வாழும் தலைவனளவிலே அது ஏதுமற்றதாய்ப் பொய்யாயிற்று; அவன் அன்பிலன், அறம் இலன், பண்பு இலன் என்றனளாம். 'குருகினம் கானல் அல்கும்' என்ற பாடம் கொண்டு, குருகினங்கள் கானலிடத்தே சென்று தங்கும் எனவும் பொருள் காணலாம். 'நெய்தல் இருங்கழி' - நெய்தற் பூக்களை மிகுதியாகக் கொண்ட இருங்கழி எனலும் ஆம்; இருங்கழி - கரும் கழி.

     'அவருடைய நட்பு எமக்குக் கடலினும் பெரிது' என்றது, அவருக்கு அஃது பெரிதாகப் படவில்லையே என்று நொந்த தாம். அவர் வெறுத்து ஒதுக்கினும், மனையறக் கடமையினுமாகிய யாம், அவரை ஒதுக்குதலைக் கருதாதே என்றும் ஏற்கும் கடமையுடையோம் என்று, தன் மேன்மை உரைத்ததும் ஆம். ''மீனுண் குருகும் கானலில் தன் துணையோடு தங்கும்; அதன் காதலன்புகூட நம் தலைவரிடம் காணற்கு இல்லை'' என்றதுமாம்.

     உள்ளுறை: கழியிடைச் செல்லும் குருகு, அவ்விடத்தே யான அழகிய நெய்தலை விருபாது, இழிந்த மீனையே விரும்பி உண்டுவிட்டு, இளங்கானலிலே சென்று தங்கும் என்றனள். இது தலைவனும் தலைவியின் பெருநலனைப் போற்றிக் கொள்ளாதே வெறுத்தானாய், இழிவான பரத்தையரையே விரும்பிச் சென்று நுகர்ந்து களித்தானாய், வேறெங்கோ சென்று தங்குவானுமாயினான் என்பதனை உள்ளுறுத்துக் கூறியதாம்.

185. நரம்பார்த்தன்ன தீங்கிளவியள்!

     துறை: 'ஆய மகளிருள் நின்னால் நயக்கப்பட்டாள் யாவாள்?' என வினவிய தோழிக்குத் தலைவன் சொல்லியது.

     (து.வி.: தலைவியைக் களவுறவிலே கூடி மகிழ்ந்தவன், அவளை நீங்காதே சூழ்ந்திருக்கும் ஆயமகளிர் காரணமாக, அவளைத் தனியே அதன்பின் சந்திக்கும் வாய்ப்புப் பெறவியலாத நிலையில், தலைவியின் உயிர்த்தோழியிடம், தனக்கு உதவியாக அமைய வேண்டித் தலைவன் இரந்து நின்கின்றான். அவள், 'நின் மனங்கவர்ந்தாள் எம் கூட்டத் துள்ளாருள் யாவளோ?' என்று கேட்க, அவன் அவளுக்குத் தன் காதலியைச் சுட்டிக்காட்டிக் கூறுவதாக அமைந்த செய்யுள் இது.)

     அலங்கிதழ் நெய்தற் கொற்கை முன்றுறை
     இலங்குமுத் துறைக்கும் எயிறுகெழு துவர்வாய்
     அரம்போழ் அவ்வளைக் குறுமகள்
     நரம்பார்த் தன்ன தீங்கிள வியளே.

     தெளிவுரை: அசையும் இதழ்களைக் கொண்ட நெய்தல்கள் பொருந்திய கொற்கை நகரிம் முன்றுறையிடத்தே காணப்படும். முத்தினைப் போன்ற பற்கள் பொருந்திய சிவந்த வாயினளும், அறத்தாலே பிளந்து இயற்றப்பெற்ற அழகான வளைகளை யணிந்துள்ள இளையோளும், யாழின் நரம்பிலே நின்றும் இசை எழுந்தாற்போன்ற இனிமையான பேச்சினை உடையவளுமான அவளே, என் காதற்கு உரியாள் ஆவாள்.

     கருத்து: 'அவளை அடைதற்கு எவ்வாறேனும் உதவுக' என்று, இரந்ததாம்.

     சொற்பொருள்: அலங்கல் - அசைதல் முன்றுறை - கடல் முகத்து நீர்த்துறை. இலங்கு முத்து - காணப்படும் முத்து; ஒளிவிளங்கும் முத்துமாம்; இது அலைகளாலே கொண்டு கரையிற் போடப்படுவது. துவர்வாய் - சிவந்த வாய்; பவள வாயும் ஆகும்; முத்துப் பற்களைக் கொண்ட பவழத்துண்டு போலும் சிவந்த வாய் என்க. குறுமகள் - இளையோள். நரம்பு - யாழ். நரம்பு கிளவி - பேச்சு.

     விளக்கம்: அவள் அழகு நலம் எல்லாம் வியந்து கூறியது. அவளைத்தான் களவிற் கலந்துள்ளமை கூறியதாகும். 'கொற்கை' பாண்டியரின் கடற்றுறைப்பட்டினம்; தாமிர பரணி கடலோடு கலக்குமிடத்தே முன்னாள் இருந்தது; மிகமிகப் பழங்காலத்திலேயே முத்தெடுத்தலுக்குப் புகழ் வாய்ந்தது; பாண்டி இளவரசர்கள் கோநகராக விளங்கியதைச் சிலம்பு 'கொற்கையிலிருந்த வெற்றிவேற் செழியன்' என்பதனால் அறியலாம். 'ஈண்டுநீர் முத்துப்படு பரப்பின் கொற்கை முன்றுறை' என்று நற்றிணையும் காட்டும் - (நற். 23). சொல்லினிமைக்கு யாழிசையினிமையை உவமித்தல் மரபு; இதனை ''வடிப்புறு நரம்பின் தீவிய மொழிந்தே'' என்னும் அக நானூற்றாலும் (142) அறியலாம்.

     அவள் தன்னை நயப்பதுணர்ந்த முறுவல் பெற்றமையும், இதழமுதுண்டமை காட்டத் துவர்வாய் வியந்தும், தழுவியது சொல்லக் கைவளை குறித்தும், பழகியமை தோன்றக் குறுமகள் எனச் சுட்டியும், உரையாடி இன்புற்றது புலப்பட நரம்பார்ந்தன்ன தீம்கிளவியள் என்றும், நயம்பொருந்தச் சுட்டியமை காண்க. இதனால், அவளும் தன்மேல் பெருவிருப்பினளே என்பதும் உணர்த்தியதாம்.

186. செல்லாதீர் என்றாள் தாய்!

     துறை: பகற்குறிக்கண் வந்து நீங்கும் தலைமகனைத் தோழி செறிப்பு அறிவுறீஇ வரைவு கடாயது.

     (து.வி.: தலைவனும் தலைவியும் பகற்போதிலே கானற்சோலையிடத்தே தனித்துச் சந்தித்துக் களவின்பம் பெற்று மகிழ்ந்து வருகின்றனர். அதனை நீடிக்க விடாதே, அலரெழு முன் மணவாழ்வாக மலரச் செய்வதற்குத் தோழி விரும்புகிறாள். ஒரு நாள் தலைவியை இல்லிடத்தே இருக்க வைத்து விட்டுத், தான் மட்டும், தலைவனைச் சந்திக்கும் வழக்கமான இடத்துக்கு வருகின்றாள். தலைவியைக் காணாதே சோர்ந்து நீங்கும் தலைவனைக் கண்டு, தலைவி இற்செறிப்புற்றாள் என்று கூறி, விரைய வரைதற்கு முயலுமாறு உணர்த்துகின்றாள். அவள் சொல்வதாக அமைந்த செய்யுள் இது.)

     நாரை நல்லினம் கடுப்ப, மகளிர்
     நீர்வார் கூந்தல் உளரும் துறைவ!
     'பொங்குகழி நெய்தல் உறைப்ப, இத்துறைப்
     பல்கால் வரூஉம் தேர்' எனச்
     'செல்லா தீமோ' என்றனள், யாயே!

     தெளிவுரை: நாரையினது நல்ல கூட்டத்தைப் போல, நீராடிய மகளிர்கள் தம் நீரொழுகும் கூந்தலை விரித்துப் போட்டுக் கோதியும் தட்டியும் உலர்த்தியபடி இருக்கின்ற துறைக்குரியோனே! நீர் மிகுந்துள்ள கழியிடத்தேயுள்ள நெய்தல்கள் துளிகளைச் சிதறுமாறு, இத்துறையிடத்தே பலகாலும் ஒரு தேர் வருவதாகின்றது. ஆதலின், நீவிர் துறைப்பக்கம் செல்லாதிருப்பீராக'' எனக் கூறிவிட்டனள் எம் தாய்.

     கருத்து: 'இனித் தலைவியை இவ்விடத்தே நீயும் காண்பதறிது' என்றதாம்.

     சொற்பொருள்: கடுப்ப - போல. நாரை நல்லினம் - நாரையின் நல்ல கூட்டம்; 'நல்ல' என்றது மாசகற்றித் தூய்மை பேணுதலால். உளரும் - விரித்துக் காயவைக்கும். உறைப்ப - துளிப்ப. பல்கால் - பல ந ஏரங்களில்.

     விளக்கம்: 'இத்துறைப் பல்கால் தேர் வரூஉம்' எனக் கேட்ட தாய், நீவிர் செல்லாதீர் என எம்மைத் தகைத்தனள் என்றது, அவள் எம்மை இற்செறித்தனள்; இனிக் களவுறவு வாய்த்தல் அரிது; இனி மணந்துகோடற்கு விரைக என்று அறிவுறுத்தியது ஆகும்; நின் தேரெனவும், நீயும் தலைவியை நாடியே வருகின்றாயெனவும் தாய் குறிப்பாலே கண்டு ஐயுற்றனள் என்பதும் ஆம். களவுக்காலத்தும் இப்படிப் பலரறியத் தேரூர்ந்து வரலும் தலைவர்கள் இயல்பு என்பதும், அதனால் அவர் தொலைவிடத்துப் பெருங்குடியினராதல் அறிந்து, தாய், அவரோடு தம் மகள் கொள்ளும் உறவைத் தடுப்பதும் இயல்பு.

     உள்ளுறை: 'நீராடியதால் நனைந்த கூந்தலை, ஈரம் கெட விரித்துக் கைகளாலே அடித்துப் புலர்ந்தும் மகளிரையுடைய துறைவன்' என்றது. அப்படித் தம்மிடத்தேயுள்ள நீர்ப்பசையை நீக்கும் மகளிரே போல, நின்னாற் களவுறவிலே கொளப்பட்ட தலைவிக்கும் குற்றம் ஏதும் நேர்ந்துவிடா வண்ணம், வரைந்து வந்து, அவளை ஊரறிய மணந்து கொண்டு நின்னூர்க்கும் போவாயாக என்றதாம்.

     'நீராடிய மகளிர் கூந்தலை உலர்த்தியபடி வருகின்ற துறைவன்' என்றது. அவ்வாறே வரும் இவ்வூர் மகளிரும் பலர் உளராதலின், அவர்மூலம் நும் களவுறவும் வெளிப்பட்டு, ஊர் அலர் எழவும் கூடும் என்றதாம். 'நெய்தல் உறைப்பத் தேர் பல்கால் வரும்' என்றது, ஊர்ப் பெண்டிர் கவலையுறத் தலைவன் அடிக்கடி வருவான் என்றதுமாம்.

187. மகளிரும் பாவை புனையார்!

     துறை: தோழி கையுறை மறுத்தது.

     (து.வி.: தலைவன் தலைவிக்குத் தன் அன்பைப் புலப்படுத்தக் கருதி, ஆர்வமுடன் தழையுடை புனைந்து கொணர்ந்து தோழியிடம் தந்து, தலைவிக்குத் தரவும் வேண்டுகின்றான். அவள் அதனை ஏற்க மறுத்துச் சொல்வதாக அமைந்த செய்யுள் இது.)

     நொதும லாளர் கொள்ளா ரிவையே;
     எம்மொடு வந்து கடலாடு மகளிரும்
     நெய்தலம் பகைத்தழைப் பாவை புனையார்;
     உடலகம் கொள்வோர் இன்மையின்,
     தொடலைக் குற்ற சிலபூ வினரே!

     தெளிவுரை: பெருமானே! இவற்றை அயலாரான பிற மகளிரும் ஏற்றுக் கொள்ள மாட்டார்களே! எம்முடனே உடன் வந்து கடலாட்டயரும் மகளிரும், நெய்தலே மிகுதியாக இட்டுக்கட்டிய இப்பகைத் தழையினைத் தாம் அணியார் என்பது மட்டும் அல்ல, தாம் நிறுவி விளையாடும் மணற் பாவைக்குங்கூட இட்டுப் புனையமாட்டார்களே! உடற்கு அகமாக அணிவோர் யாரும் இங்கே இல்லாமையினாலே, தொடலை தொடுத்து விலைப்படுத்துவோரும், இதனிற் சிலபூக்களே கொண்டு தம் மாலைகளைத் தொடுப்பர். ஆகவே, இஃது எமக்கும் வேண்டாம். இனைப்பெறின், இல்லத்தாரும் பிறரும் ஐயுறற்கு இடனாகும்!

     கருத்து: 'இதனைக் கொள்வேன் அல்லேன்' என்றதாம்.

     சொற்பொருள்: நொதுமலாளர் - அயலார். 'இவை என்றது அவன் தந்த நெய்தல் தழையாலான கையுறைகளை. பகைத் தழை - ஒன்றினொன்று வண்ணத்தால் மாறுபட்டுத் தொடுத்த தழை. உடலகம் - உடலிடத்தே. தொடலை - மாலை: தொடுத்துக்கட்டுவது தொடலை ஆயிற்று; உடலைத் தொட்டுக் கிடப்பது எனவும் கொள்க.

     விளக்கம்: நெய்தலே மிகுதியாகத் தேடித் தொடுத்த தழைகளை, நெய்தன் மகளிர் விரும்பி அணியார் என்பதும் இதனால் அறியப்படும். நீலமணி போலும் நெய்தலை இடையிடைப் பிறவற்றுடன் வைத்துத் தொடுப்பதே அழகுடைத்தென்பதனை, 'நெய்தல் அம்பகை நெறித்தழை அணிபெறத் தைஇ' எனப் பிறரும் கூறுதலால் அறியலாம் - (நற். 96). 'அயலாரும் கொள்ளார்; எம்மவரோ தம் பாவைக்கும் புனையார்'; எனவே, இதனை வேற்றான் தரப் பெற்றதாக அலர் எழுதலே இயல்பு; ஆகவே இஃது வேண்டா' என்றனள். 'பாவை புனையார்' என்றது. அவர்தம் விளையாடற் பருவத்தை நினைப்பித்துக் கூறியதாம். 'அணிதல் இயல்பல்பாத ஒன்றை அணியும் அது ஐயுறவுக்கு இடனாகும்' என்று தழையுடை மறுத்தனள்; அவ்வாறே அவன் உறவும் பொருந்தாமை காட்டி மறுத்தனளாம்.

     மேற்கோள்: 'தோழி கையுறை மறுத்தது' என்பர் நச்சினார்க்கினியர் - (தொல். களவு, 23).

188. தகை பெரிய கண்!

     துறை: விருந்து வாயிலாகப் புகுந்த தலைமகன், தலைவி இல்வாழ்க்கைச் சிறப்புக் கண்டு மகிழ்ந்து சொல்லியது.

     (து.வி.: 'தன் புறத்தொழுக்கம் காரணமாகத் தலைவி தன்னை வெறுத்து ஒதுக்கியிருப்பாள்' என்று கருதினான் தலைமகன். பிற வாயில்கள் பலரும் வறிதே இசைவு பெறாது திரும்பவே, ஒரு விருந்தினரோடும் கூடியவனாக வீட்டிற்குள் செல்கின்றான். தலைவியும், தன் மனைமாட்சியாலே, தன் உள்ளச்சினத்தை எல்லாம் மறைத்துக் கொண்டு, விருந்தினரை விருப்போடும் புன்முறுவலோடும் உபசரிக்கின்றாள். அவளின் அந்தச் சிறப்பை வியந்து, தலைவன் மகிழ்வோடு சொல்வதாக அமைந்த செய்யுள் இது.)

     இருங்கழிச் சேயிறா இனப்புள் ளாரும்
     கொற்கைக் கோமான் கொற்கையம் பெருந்துறை
     வைகறை மலரும் நெய்தல் போலத்
     தகை பெரி துடைய காதலி கண்ணே.

     தெளிவுரை: கரிய கழியிடத்தேயுள்ளதான சிவந்த இறால் மீன்களைப் புள்ளினங்கள் பற்றியுண்ணும், கொற்கைக் கோமானது கொற்கை நகரத்தின் அழகிய பெரிய துறையிடத்தே, வைகறைப் போதிலே மலரும் நெய்தலைப் போல, எம் காதலியின் கண்கள், பெரிதான தகைமைகளைக் கொண்டன வாகுமே!

     கருத்து: ''அதனைக் கலங்கச் செய்தலை இனிச் செய்யேன்'' என்றதாம்.

     சொற்பொருள்: இனப்புள் - புள்ளினம்; புட்கள் இனம் இனமாக ஒருங்கே கூடியிருந்து மீன் பற்றி உண்ணும் இயல்பினவாதலின் இவ்வாறு கூறினன். வைகறை - விடியல். தகை - தகுதிப்பாடு.

     விளக்கம்: விருந்து வரக்கண்டதும் மகிழ்ந்த முகத்தோடு வரவேற்ற, தன்னைக் குறித்த இனத்தையும் வெறுப்பையும் உள்ளடக்கி இன்முகம் காட்டிய தலைவியின் கண்ணழகினை, கதிர்வர மலரும் நெய்தலோடு உவமித்துப் போற்றுகின்றான். தன்னை வெறுத்தாற் போன்ற குறிப்பு எதுவும் பார்வையிற் கூடக் காட்டாதே, தன்பால் அன்பும் கனிவுமே அவர்முன் காட்டிய அந்தச் செவ்வியை வியப்பான், 'தகைபெரிதுடைய' என்றான். தான் அவட்குத் துயரிழைத்தாலும், அவள் தன் காதன்மையும் கடமையுணர்வும் மாறாதாள் என்பான், 'காதலி' என்றான். அவள் தன்னையும் இனி ஒதுக்காது ஏற்றருள்வாள் என்ற மனநிறைவாலே மகிழ்ந்து கூறுவன இவையெல்லாம் என்க.

     கொற்கைக் கோமான் - பாண்டியன்; அவனுக்குரிய பேரூர் என்பான், 'கொற்கைக் கோமான் கொற்கை' என்றனன். அறம் குன்றாப் பாண்டியரின் ஆட்சிக்குட்பட்ட கொற்கையிலே, மகளிரும் தம் மனையறத்திலே குன்றாது விளங்கும் மாண்பு உடையவர் என்றதுமாம்.

     உள்ளுறை: 'இருங்கழிச் சேயிறா இனப்புள் ஆரும்' என்றது, தன் பரத்தையர் சேரியிலே பரத்தரோடும் பாணரோடும் கூடிச்சென்று, அழகியரான பரத்தையரைத் தேடித் தேடி நுகர்ந்த இழிசெயலை உள்ளுறுத்து, நாணத்தாற் கூறியதுமாம்; தலைவியின் இல்லறச் செவ்வியினை வியந்து போற்றித் தன் எளிமைக்கு நாணியதுமாம்.

189. நல்ல வாயின கண்ணே!

     துறை: வரைவிடை வைத்துப் பிரிந்த தலைமகன்; வரைவான் வந்துழிக் கண்டு, உவகையோடு வந்த தோழி, 'நின் கண் மலர்ச்சிக்குக் காரணம் ஏன்?' என்று வினாயின தலைவிக்குச் சொல்லியது.

     (து.வி.: தலைவன் வரைவிடை வைத்துப் பொருள் தேடி வரப்பிரிந்தான். வருவதாக உரைத்துச் சென்றகாலத்தும் அவன் வந்திலன். அதனால் வாடி நலிந்தள் தலைவி. அவள் வாட்டங்கண்டு கவலையுற்றுச் சோர்ந்தாள் தோழி. ஒரு நாள், அவன் வரைவொடும் வருகின்றான். தோழியின் கண்களிலே மகிழ்ச்சி எழுந்து கூத்தாடுகின்றது. தலைவியை நோக்கிப் போகின்றாள். தலைவி தோழியின் மகிழ்ச்சிக்குக் காரணம் யாதென்று வினவ, அவள் விடையளிப்பதாக அமைந்த செய்யுள் இது.)

     புன்னை நுண்டா துறைத்தரு நெய்தல்
     பொன்படு மணியின் பொற்பத் தோன்றும்
     மெல்லம் புலம்பன் வந்தென
     நல்ல வாயின தோழி என் கண்ணே!

     தெளிவுரை: தோழி! புன்னையின் நுண்மையான பூந்துகள் படிந்து கிடக்கும் நெய்தல் மலர்கள், பொன்னிடைப் படுத்த நீலமணிகள்போல அழகுடன் காணப்படுகின்ற, மெல்லிய கடற்றுறைக்குரியோனும், வரைவின் பொருட்டு நம்மில்லத்தே வந்தனனாக, என் கண்களும், அதனைக் கண்டதனாலே பெரிதும் நல்லழுகுற்றனவாயின!

     கருத்து: 'தலைவன் வந்தனன் தளர்வு தீர்வாய்' என்றதாம்.

     சொற்பொருள்: உறைத்தரும் - உதிர்ந்து கிடக்கும். பொன்படு மணி - பொன்னிடைப் பொருத்திய நீலமணி. பொற்ப - அழகுபெற.

     விளக்கம்: புன்னை மலரும் காலம் நெய்தற் பாங்கினர் மண விழாக் கொள்ளும் நற்காலமாதலின், அதனைச் சுட்டிக் கூறினளாகவும் கொள்க. புலம்பன் வந்தெனக் கண் நல்ல வாயின என்றதால், அதுகாறும் வராமை நோக்கி, வழி நோக்கிச் சோர்ந்து அழகழிந்தன என்றதும் கொள்க.

     உள்ளுறை: 'புன்னை நுண்தாது உறைத்தரும் நெய்தல் பொன்படு மணியின் தோன்றும்' என்றது, நின் குடிப்பிறப்பு அவனோடு நிகழ்த்துகின்ற இல்லறமாண்பால், மேலும் சிறந்து புகழ்பெற்று விளங்கப் போகின்றது என்று உள்ளுறுத்து வாழ்த்தியதாம்.

     புலம்பன் வந்தது கண்டதாலே இனி என் கண்கள் நல்லவாயின; நீயும் நின் துயர்தீர்ந்து களிப்பாய் என்றதாம்.

190. உண்கண் பனி செய்தோள்!

     துறை: தோழி செவிலிக்கு அறத்தொடு நின்றது.

     (து.வி.: தலைவிக்கு வேற்றிடத்தில் மணம் புணர்ப்பது பற்றிப் பெற்றோர் பேச்சு நடத்துதல் அறிந்த தோழி, செவிலித் தாயிடம் தலைவியின் களவொழுக்கம் பற்றிக் கூறி, அவளை அவனுக்கே மணமுடிக்கக் கேட்பதாக அமைந்த செய்யுள் இது.)

     தண்ணறும் நெய்தல் தளையவிழ் வான்பூ
     வெண்ணெல் அரிநர் மாற்றினர் அறுக்கும்
     மெல்லம் புலம்பன் மன்ற - எம்
     பல்லிதழ் உண்கண் பனிசெய் தோனே!

     தெளிவுரை: பலவான இதழ்கள் கொண்ட பூப் போலும் மையுண்ட எம் கண்கள் வருந்தி நீர் துளிர்க்கச் செய்தவன் - வெள்ளை நெல்லை அரிகின்ற உழவர்கள், குளிர்ச்சியும் நறுமணமும் கொண்ட நெய்தலின் கட்டவிழும் பெரிய பூக்களைத், தம் வாள் முனைப்பட்டுச் சிதையாதபடி அயலே ஒதுக்கிவிட்டு, நெற்கதிரை மட்டுமே அறுக்கின்ற, மெல்லினத் தலைவனே ஆவான்.

     கருத்து: 'அவனே தலைவியை மணவாட்டியாக அடைதற்குரியவன்' என்றதாம்.

     சொற்பொருள்: தளை - பிணி; கட்டு; முகையாக விருக்கும்போது ஒன்றாகப் பிணிபட்டிருந்த இதழ்கள், மலரும்போது கட்டவிழ்ந்த தனித்தனியாக விரிந்து அலர்கின்றதைத் 'தளையவிழ்' என்பர். இவ்வாறே 'ஐம்புலக் கட்டாற் குவிந்து கிடக்கும் மனம் குருஞானத் தெளிவால் மலர்தலையும்' தலையவிழ்தல் என்றே சொல்வர். வான்பூ - பெரிய பூ மாற்றினர் - ஒதுக்கித் தள்ளினராக. பனி செய்தல் - நீர்வாரத் துயரிழைத்தல்.

     விளக்கம்: நெய்தல் கழியிடத்து மட்டுமன்றி, நெய்தல் நிலத்தின் விளைவயல்களிலும் செழித்துப் பூத்துக் கிடக்கும் என்பதும், நெல்லறிவார் அதனைத் தம் கருணையினாலே ஒதுக்கி ஒதுக்கி, நெல்லை மட்டுமே அறுப்பார் என்பதும் கூறினள். தலைவியின் உறுப்பைத் தனது போலக் கொண்டு கூறியது இது; இப்படித் கூறுதலும் உரிமை பற்று உளவாதலை, 'எம்மென வரூஉம் கிழமைத் தோற்றம் அல்லவாயினும் புல்லுவ உளவே' - (தொல். பொருள், 221) என்னும் தெய்வம் அணங்கிற்றெனத் தாயர் வெறியாடற்கு முனையும்போது, தோழி இவ்வாறு வெறிவிலக்கிக் கூறுதாகவும் கொள்ளலாம்.

     எம் கண் பனி செய்தோனாயினும், அவனே எமக்கு இனி நலன் செய்வோன் ஆவன் என்ற கற்புச் செவ்வியும் உணர்த்திக் கூறினளாகக் கொள்க.

     உள்ளுறை: நெல்லறிவோர் தமக்குப் பயனாகும் நெல்லை மட்டும் ஆராய்ந்து, அழகும் தண்மையுமுடைய நெய்தலை ஒதுக்கி விடுவதே போலத், தலைவனும் மனையறத்திற்கேற்ற பண்பு நலம் உடையாளாகத் தேர்ந்த தலைவியையே மணக்கும் உறுதி பூண்டவன், பிறபிற அழகு மகளிரை நாடாதே உதுக்கியவன் என்பதும் உள்ளுறையாற் பெறவைத்தனள். இதனால், அன்னையும் அவன் அன்புச் செறிவை மதித்து ஏற்பள் என்பதாம்.