சங்கமருவிய எட்டுத்தொகை நூல்களுள் மூன்றாவதாகிய

ஐங்குறு நூறு

தெளிவுரை : புலியூர்க் கேசிகன்

... தொடர்ச்சி - 4 ...

3. களவன் பத்து

     'களவன்' என்பது கண்டு, இது ஒரு மருத நிலக் கருப்பொருள்; இப்பத்துப் பாடல்களினும், 'களவன்' பற்றிய செய்தி பயின்று வருவதால், இது 'களவன் பத்து' எனப் பெற்றது. 'களவன்' 'கள்வன்' எனவும், 'அலவன்' எனவும் வழங்கும். தமிழ்த் தொகை நூல்களில் நண்டினைப் பலரும் நயமுடன் எடுத்துக்காட்டி உவமித்துள்ளனர். அச்சமுடைய தாயினும், இறுகப்பற்றினால், பற்றிய பற்றை எதனாலும் சேரவிடாத வன்மையும் இதற்கு உண்டு என்பர்.

21. கண் பசப்பது ஏனோ?

     துறை: 'புறத்து ஒழுக்கம் எனக்கு இனியில்லை' என்று தலைமகன் தெளிப்பவும், 'அஃது உளது' என்று வேறுபடும் தலைமகட்குத், தோழி சொல்லியது.

     (து.வி.: தான் பரத்தமையைக் கைவிட்டு விட்டதாக உறுதி கூறித், தலைவியைத் தெளிவிக்கின்றான் தலைவன். அவளோ, அவன் கூறிய உறுதிமொழியை நம்பாதவளாக, 'அஃது அவன்பால் உளது' என்றே சொல்லி, அவனோடும் மீண்டும் புலந்து வேறுபடுகின்றாள். அவட்குத் தோழி சொல்வதாக அமைந்த செய்யுள் இது.)

     முள்ளி நீடிய முதுநீர் அடைகரைப்
     புள்ளிக் களவன் ஆம்பல் அறுக்கும்
     தண்துறை யூரன் தெளிப்பவும்
     உண்கண் பசப்பது எவன்கொல்? அன்னாய்!

     தெளிவுரை: ''அன்னையே! முள்ளிச் செடிகள் உயரமாகப் படர்ந்துள்ளதும், பழைய நீரினைக் கொண்டதுமான அடைக்கரைக் கண்ணே, புள்ளிகளையுடைய நண்டானது ஆம்பலின் தண்டினை ஊடுபுகுந்து அறுக்கின்ற, குளிர்ந்த நீர்த் துறையமைந்த ஊருக்குரியவன் தலைவன். அவன் உறுதி கூறித் தெளிவிக்கவும் தெளியாதே, நின் மையுண்ட கண்கள் இவ்வாறாகப் பசந்து வேறுபடுவதுதான் எதனாலோ?''

     கருத்து: 'அவன் தெளிவித்த பின்பும், தெளியாதே கலங்குவது ஏன்?'

     சொற்பொருள்:முள்ளி - நீர்முள்ளி. புள்ளிக் களவன் - புள்ளிகளையுடைய நண்டு. தெளிப்பவும் - நின் கவலைக்குக் காரணமாய் பரத்தைமையைத் தான் அறவே கைவிட்டதாக உறுதி கூறுவதன் மூலம், நின் மனத்துயரைப் போக்கித் தெளிவு கொள்ளச் செய்யவும். பசத்தல் - பொன்னிறங் கொள்ளல். முதுநீர் - என்றும் வற்றாதேயிருக்கும் பழைய நீர்; 'கட்டுக்கிடைநீர்' எனலும் ஆம்.

     விளக்கம்: முள்ளியும் ஆம்பலும் நண்டும் நீரிடத்தே யுள்ளன. எனினும், நண்டானது தன் குறும்பினாலே ஆம்பல் தண்டினை அறுத்தெறிந்து விளையாடிக் களிப்படையும் இயல்பு சொல்லப்பட்டது. அத்தகைய ஊருக்கு உரியவன் தலைவன் என்றனர். அவன்பாலும் அவ்வியல்பு உளதென்று உணர்த்தற்கு.

     உள்ளுறை: களவன் ஆம்பலை அறுக்கும் 'தண்துறையூரன்' என்றது, அவ்வாறே, தலைவனும் தன்னுடைய கரை க டந்த காமத்தினாற் கொண்ட மடமையினாலே, இல்லறத்தின் இனிமையான மனைவாழ்வைச் சிதைத்தனன் என்பதாம். எனவே, தலைவி, அவன் தெளிப்பவும் தெளியா மருட்கையாளாகித் தான் மெலிந்தனள் என்பதுமாம்.

     மேற்கோள்: 'இறுதியடி இடையடி போன்று நிற்கும் அகப்பாட்டு வண்ண'த்துக்குப் பேராசியிரிரும் 9 தொல். செய், 224); ''ஆய் என்று இற்ற ஆசிரியம்'' என யாப்பருங்கல விருத்தி உரைகாரரும் எடுத்துக் காட்டுவர். (யா.வி.செய் - 16).

22. நீயேன் என்றது ஏனோ?

     துறை: களவினிற் புணர்ந்து, பின்பு வரைந்து கொண்டு ஒழுகாநின்ற தலைமகற்குப் புறத்தொழுக்கம் உளதாயிற்றாக, ஆற்றாளாகிய தலைமகள், தோழிக்குச் சொல்லியது.

     (து.வி.: தலைவனின் பேச்சினை எடுத்துச் சொல்லி, அப்படி சொன்னது வேறு க உறிப்பினாற்றானே? எனத் தன் தோழியிடம் கவலையோடு உசாவுகின்றாள் தலைவி.)

     அள்ளல் ஆடிய புள்ளிக் களவன்
     முள்ளி வேரளைச் செல்லும் ஊரன்
     நல்ல சொல்லி மணந்து, இனி
     'நீயேன்' என்றது எவன்கொல்? அன்னாய்!

     தெளிவுரை: ''அன்னையே! சேற்றிலே அளைந்தாடிய புள்ளிகளையுடைய நண்டானது, முள்ளிச் செடியின் வேர்ப் புறத்தான தன் வளையினிடத்தே சென்று தங்கும் ஊருக்குரியவனான தலைவன், நன்மையான சொற்களை நாம் தெளியுமாறு சொல்லி, நம்மையும் முன்னர் மணந்து கொண்டனன்; இப்போதும், 'நின்னைப் பிரியேன்' என்று அவன் சொன்னதுதான் எதனாலோ?''

     கருத்து: 'அவன் சொன்னது, அவன் பிரியும் - குறிப்புக் கொண்ட மனத்தினன் என்பதைக் காட்டுகின்றதேயாம்.'

     சொற்பொருள்: அள்ளல் - சேறு. அளை - வளை. நீயேன் - நீத்துச் செல்லேன். அன்னாய்: தோழியைக் குறித்தது. முன்னர்த் தோழி தலைவியை அன்னாய் என்றனள். இவ்வாறு பெண்களை 'அம்மா' என்று அழைப்பது தமிழர் மரபாகும்.

     உள்ளுறை: களவன் அள்ளாடிச் சேறுபட்டதை நினையாதே, முள்ளி வேரளைக் கண்ணுள்ள தன் உளையிற் புகுந்தாற்போலத், தலைவனும் பரத்தையோடு இன்புற்றதன் அடையாளத்தோடேயே, தன் மனைக்கண்ணும் வந்து புகுவானாயினன்; அதுகண்டு ஐயுற்றாளை, 'நீயேன்' எனத் தேற்றுவானாயினன் என்பதாம்.

     'யோறாடிய களவன் முள்ளி வேரளைச் செல்லும்' என்றது, பிறர் கூறிய அலர் கேட்டும் அஞ்ஞாது, தலைவன், பரத்தையர் மனைக்கண் தொடர்ந்து செல்வானாவான் என்றதாம்.

23. தாக்கணங்கு ஆவது ஏனோ?

     துறை: இதுவும் அதே துறை.

     முள்ளி வேரளைக் களவன் ஆட்டிப்
     பூக்குற்று, எய்திய புனல் அணி யூரன்
     தேற்றம் செய்து, நப் புணர்ந்து, இனித்
     தாக்கணங் காவது எவன்கொல்? அன்னாய்!

     தெளிவுரை: முள்ளிச் செடியின் வேர்ப்பக்கத்துள்ள தான அளையிடத்தேயுள்ள அலவனை ஆட்டி அலைத்து விளையாடியும், பூக்களைப் பறித்தும், எய்திய புனலானது அழகுடன் விளங்கும் ஊருக்கு உரியவனாகியவன் தலைவன். அவன் நாம் தெளியத் தகுவன செய்து முன்னர் நம்மைக் கூடினான். இப்போது, நம்மைத் தாக்கி வருத்தும் அணங்கினைப் போல வருத்திக் காட்டுவதுதான் எதனாலோ?

     கருத்து: 'அவன் நடத்தையிலே மாற்றம் புலப்படுவது, அவன் மேற்கொண்டு ஒழுஙுகின்ற ஒழுக்கத் தவறினாலேதான்.'

     சொற்பொருள்: களவன் ஆட்டு - அலவனாட்டு. பூக்குற்று - பூப்பறித்து. இவை மகளிர் விளையாட்டுகள். 'நம்'; தனித்தன்மைப் பன்மை. தாக்கணங்கு - தீண்டி வருத்தும் தெய்வம்; நம்மை உறவோடு க ஊடிக் கலந்தவன், இப்போது வெறுத்து வருத்தும் கொடுமையாளன் ஆயினனே என்பதாம்.

     விளக்கம்: அலவனாட்டலும், பூப்பறித்தலும், இளமகளிரின் நீர் விளையாட்டுக்கள்; 'அலவனாட்டுவோள்' என்று பிறரும் கூறுவர் (நற். 363). 'சுனைப் பூக்குற்று' என்பதும் நற்றிணை (நற். 173).

     உள்ளுறை: 'மகளிர் அலவனை அலைத்துப் பூக்குற்று எய்திய புனல் அணி ஊரன்' என்றது, 'தலைவன் தன் மனைவியைத் துன்புறுத்திப் பரத்தையர் உறவிலே திளைத்து இன்பங் காண்பவன்' என்று குறிப்பினாற் சொன்னதாம்.

     'அலவனாட்டியும் பூப்பறித்தும் இளமகளிர் விளையாட்டயர்ந்த நீர் அழகு செய்யும் ஊரன்' எனவே, அந்நீர்தான் தெளிவிழந்ததாய்க் கலங்கித் தோன்றுமாறு போல, எம் இல்லறமும், அவன் எம்மைப் பிரிவினாலே நோயுறச் செய்து வருத்தியும் பரத்தையரோடு இன்புற்றுப் பழி விளைத்தும் வரும் கொடுமையால், அமைதியும், பெருமையும் தெளிவுமிழந்து கலங்கலுறுவதாயிற்று என்பதுமாம்.

24.நலங்கொண்டு துறப்பது ஏன்?

     துறை: பரத்தையருள்ளும் ஒருத்தியை விட்டு ஒருத்தியைப் பற்றி ஒழுகுகின்றான் என்பது கேட்ட தோழி, வாயிலாய் வந்தார் கேட்பத், தலைமகட்குச் சொல்லியது.

     (து.வி: பரத்தையொருத்தி மேற்கொண்ட காம மயக்கத்தினால் மட்டுமே அவன் நின்னைப் பிரிந்தான் அல்லன். அங்கும் ஒருத்தியை உறவாடித் துய்த்தபின் கழித்துவிட்டு, மற்றொருத்தியைப் புதிது புதியாகத் தேடிச் செல்லும் இயல்பினனே தலைவன் என்று, தோழி தலைவிக்குச் சொல்கிறாள். தலைமகனின் ஏவலர் கேட்பச் சொல்லியதால், வாயில் மறுத்ததும் ஆம்.)

     தாய்சாப் பிறக்கும் புள்ளிக் களவனொடு
     பிள்ளை தின்னும் முதலைத்து அவனூர்
     எய்தினன் ஆகின்று கொல்லோ? மகிழ்நன்,
     பொலந்தொடி தெளிர்ப்ப முயங்கியவர்
     நலம் கொண்டு துறப்பது எவன்கொல்? அன்னாய்!

     தெளிவுரை: 'அன்னாய்! தன் தாய்சாவத் தான் பிறக்கும் புள்ளிகளையுடைய நண்டினோடு, தன் பிள்ளையையே தான் தின்னும் முதலையையும் உடையது அவன் ஊர். அவ்வூரவனான நம் தலைவன் இவ்விடத்தே இன்னமும் வந்தனன் இல்லையோ? அவன், தம் பொற்றொடிகள் ஒலிக்கத் தன்னைத் தழுவிய பெண்களின் நலத்தினைக் கவர்ந்து கொண்டு, பின் அவரைப் பிரிவுத் துயராலே வருந்தி நலனிழியுமாறு கைவிடுவதுதான் எதனாலோ?'

     கருத்து: நினக்கு மட்டுமே கொடுமை செய்தான் அல்லன்; தன்னைத் தழுவிய பெண்களை எல்லாம் நுகர்ந்தபின் அவர் வருந்தக் கைவிடுவதே அவன் இயல்பாகும். இதுதான் எதனாலோ? என்பதாம்.

     பொருள்: 'தாய் சாப் பிறக்கும் களவன்' - தாய் சாவத் தான் பிறப்பெடுக்கும் நண்டு; 'கூற்றமாம் நெண்டிற்குத் தன்பார்ப்பு' என்பர் பிறரும் (சிறுபஞ். 11). 'பிள்ளை தின்னும் முதலை' - தன் பிள்ளையைத் தானே கொன்று தின்னும் முதலை; 'தன் பார்ப்புத் தின்னும் அன்பின் முதலை' எனப் பின்னும் கூறுவார் (ஐங். 41). மகிழ்ந்ன் - மருதநிலத் தலைவன். தெளிர்ப்ப - ஒலிசெய்ய. நலம் - பெண்மை நலம். முயங்கியவர் - தழுவிய பெண்டிர்; பரத்தையரைக் குறித்தது.

     விளக்கம்: தலைவனின் ஊர் எப்படிப்பட்ட அன்புன்ச செறிவையுடையது தெரியுமா? தான் பிறக்கத் தன் தாயையே சாகடிக்கும் நண்டையும்; தான் பெற்ற பிள்ளையையே கொன்று தின்னும் கொடிய முதலையையும் உடையது. ஆகவே, அவ்வாரனான அவனிடத்தே அன்பும் பாசமும் நிரம்பியிருக்குமென எதிர்பார்த்தது நம் மடமையேயன்றி அவன் தவறன்று என்கிறாள் தோழி. 'மகிழ்நன், பொலந்தொடி தெளிர்ப்ப முயங்கி, அவர் நலம் கொண்டு, துறப்பது எவன்கொல்?' என, அவன் பிறர்மாட்டுச் செய்துவரும் கொடிய செயல்களையும் அவன் இயல்பாகவே இணைத்துக் கூறலும் பொருந்தும்.

     உள்ளுறை: தாய் சாவப் பிறக்கும் களவனையும், தன் பிள்ளை தின்னும் முதலையையும் உடைய கொடுமையான ஊரினனாதலால், அவன் விரும்பிய மகளிரை முயங்குதலும், நலன் உண்ணலும், பின் அன்பற்றுத் துறத்தலும் அவனுக்கும் உரிய அருளற்ற கொடுந்தன்மையேயாம் என்று கூறுவதாகக் கொள்க.

     மேற்கோள்: 'தலைவன் கொடுமை கூறினமையின் உள்ளுறை யுவமம் துனியுறு கிளவியாயிற்று. தவழ்பவற்றின் இளமைக்குப் 'பிள்ளை' என்னும் பெயர் உரியது' என்பார் பேராசிரியர் (தொல். உவம. 28, மரபு. 5) தோழி, காலத்திற்கும் இடத்திற்கும் பொருந்துமாற்றால் உள்ளுறை உவமம் கூறியது என்றும் அவர் கூறுவர். (தொலை. உவம. 31, பேர்).

25. இழை நெகிழ் செல்லல்!

     துறை: மேற்பாட்டின் துறையே.

     புயல் புறந்தந்த புனிற்றுவளர் பைங்காய்
     வயலைச் செங்கொடி களவன் அறுக்கும்
     கழனியூரன் மார்பு பலர்க்கு
     இழை நெகிழ் செல்லல் ஆக்கும் அன்னாய்!

     தெளிவுரை: ''அன்னாய்! புயலானது புறத்தேயாகத் தூக்கித் தள்ளிவிட்ட, முற்றாத இளம்பிஞ்சுக் காய்களையுடைய வயலையின் சிவந்த கொடியினைக், களவன் புகுந்து அறுத்துப் போடும் கழனியைக் கொண்ட ஊருக்கு உரியவன் தலைவன். அவன் மார்பானது, நின் ஒருத்திக்கே அல்லாமல், மகளிர் பலருக்கும் இழைநெகிழச் செய்யும் துன்பத்தைத் தருவதாகும்.''

     கருத்து: நின்னையன்றியும், அவனாலே துயரினைக் கண்டவர், மகளிர் பலராவர்!

     சொற்பொருள்: புறந்தந்த - பந்தரினின்றும் இழுத்துக் கீழே தரையில் தள்ளிய. புனிற்றுவளர் பைங்காய் - இளம்பிஞ்சாக இருக்கும் பசுங்காய். செங்கொடி - சிவந்த கொடி, பசலையுள் ஒருவகை இது. செல்லல் - துயரம். இழை - அணிகலன்கள்; வளையும் தாடியும் போல்வன. புயல் - புயற் காற்று; அயல எனவும் பாடம்.

     விளக்கம்: புயலிலே தன் பற்றுக் கோட்டினை விட்டுத் தரையிலே இழுத்தெறியப்பட்ட இளம் பிஞ்சுகளைக் கொண்ட வயலைக் கொடியினை, தானும் அருளின்றி அறுத்துக் களிக்கும் களவன் போலவே, தன்மேற் காதலால் தம் தாயாரின் தடையையும் மூறிவந்து கூடிய மகளிருக்கு ஊறுவிளைத்து, அவர் எவ்வகைப் பற்றுக்கோடும் இல்லாதவராகத் துடிப்பக் கண்டு களிக்கும் கொடிய மனத்தினன் ஊரன் என்பதாம். 'வயலைச் செங்கொடி' என்றது, அதன் மென்மைமிகுதியை உணர்த்தற்கு. ஈன்றணிமை கொண்ட மகளிரும் பசலைக் கொடி போல மென்மையுடையார் என்பது பற்றி அவரையும் பசலையுடம் புடையார் என்பதும் நினைக்க.

     உள்ளுறை: 'வயலையின் பசுங்காய் சிதைய, புயலாலே வீழ்த்தப் பெற்ற அதன் கொடியை, அலவன் தானும் அறுத்துக் களித்தாற் போன்று, மகப்பெற்று வாலாமை கழியாதே மனையிடத்திற்கும் நம் நலத்தினைச் சிதைத்து, நம் புதல்வனுக்கும் கேடிழைக்கின்றான். நம் தலைவன்' என்பதாம்.

     களவன் வயலைச் செங்கொடியை அறுத்தலால், விளைந்து முற்றிப் பயன்தர வேண்டிய, காய் பல காய்க்கும் செடிவாடி அழிந்தாற் போல, தலைவன் ஒருத்தியோடு ஒன்றி வாழ்தலான பண்பினை அறுத்துப் பரத்தமை பேணலால், அப் பெண்டிர் பலருக்கும் துயரம் செய்வான் ஆயினன் என்பதும், அம் மயக்கால் புதல்வனைக் காத்துப் பேணும் பொறுப்பையும் மறந்தனன் என்பதும் ஆம்.

26. இன்னன் ஆவது எவன்கொல்?

     துறை: தலைமகற்கு வாயிலாகப் புகுந்தார், 'நின் முனிவிற்கு அவன் பொருந்தா நின்றான்' என்ற வழி. 'அவன்பாடு அஃதில்லை' என்பதுபடத் தலைமகட்குத் தோழி சொல்லியது.

     (து.வி: தலைமகனுக்காகப் பரிந்துரை செய்யச் சென்றவர், 'நின் சினத்திற்கு அவன் பொருந்தவே நடந்து, நினக்குக் கொடுமையே செய்தான்' என்று, தலைவியின் புலவிக்கு இசைவது போலத் தலைவனைப் பழித்துச் சொல்லுகின்றனர். அவ்விடத்தே, 'அவன் இயல்பு அஃதில்லையே? எப்படி இவ்வாறு அவன் ஆயினான்? என்று தலைவி, தோழியிடத்தே அவனைப் போன்றிச் சொல்வதாக அமைந்தது. இச்செய்யுள்.)

     கரந்தையஞ் செறுவில் துணைதுறந்து, களவன்
     வள்ளை மென்கால் அறுக்கும் ஊரன்
     எம்மும், பிறரும், அறியான்;
     இன்னன் ஆவது எவன்கொல்? - அன்னாய்!

     தெளிவுரை: ''அன்னையே! கொட்டைக் கரந்தையையுடைய அழகிய வயலினிடத்தே, தன் துணையான பெட்டை நண்டைத் துறந்து களவன் செல்லும், அப்படிப் போகும் களவன், அயலேயுள்ள வளவளைக் கொடியினது. மெல்லிய தண்டினையும் அறுத்துப் போகின்ற ஊருக்கு உரியவன் தலைவன். அவன், எம் இயல்பையும், பரத்தையரின் இயல்பையும் அறியாத தெளிவற்ற நிலையினனாயினான். அவன் இங்ஙனம் தீச் செயலுடையனாவதற்குக் காரணந்தான் யாதோ?''

     கருத்து: 'அவன் இவ்வாறு புறத்தொழுக்கிலே செல்லுதற்கும், பலர்க்கும் தீச்செயலே செய்தற்கும், யாதுதான் காரணமோ?' என்பதாம். அது அவன் நட்பாகக் கூடினார் கெடுத்த கேடு என்பது கருத்து.

     விளக்கம்: பொதுவாக, வாயிலோர் தலைவனைப் போற்றிக் கூறுதலே அல்லாது, அவன் கொடுமை கூறிப் பழிப்பது என்பது கிடையாது. ஆனால், மனைவிக்கு உறுதி கூறுமிடத்து, இவ்வாறு தலைவனைக் குற்றம் கூறுதலும் உண்டு என்பர் (தொல். பொ. 166) இனி, பண்போடு நடக்கும் தலைவனுக்கேகூடத், தன்னிடத்தே உளம் அழிந்தாகொருத்தியை அடங்கக் காட்டுதலான செயலிடத்தே, புறத்தொழுக்கம் உளதாவதும் இயல்பு என்பதும் விதியென்பர் (தொல். பொ. 150). அவ்விதிப்படி நடந்தானோ என்று தலைவி ஐயுற்றதாகவும் நினைக்க.

     சொற்பொருள்: கரந்தை - ஒரு வகைக் குத்துச் செடி: கொட்டைக் கரந்தை எனவும், கொட்டாங்கரந்தை எனவும் கூறப்படும், வெள்ளைக் கரந்தை, சிவகரந்தை, தரையிற்படரும் சிறுகரந்தை போல்வன இதன் வேறுபல வகைகள். துணை - துணையாகிய பெட்டை. வள்ளை - வள்ளைக் கொடி. மென்கால் - மெல்லிய தண்டு. இன்னாவது - இத்தன்மையன் ஆவது; இன்னான் ஆவது என்பதும் பாடம்.

     உள்ளுறை: கரந்தைச் செறுவிலே துணைதுறந்து சென்ற களவன், மெல்லிய வள்ளைத் தண்டினை அறுத்து எறியும் என்றது, அவ்வாறே இல்லத்து மனையாளைத் துறந்து போயின தலைவன், பரந்தையர் மாட்டும் இன்புற்றுத் துறந்து அவரையும் வாடவிட்டு நலிவிக்கும் கொடுமையினைச் செய்வானாயினன் என்பதாம்.

     ஈன்றணிமை உடையாளைத் துறந்து வாழ்வதற்கு நேர்ந்த மனவெறுமையே, பரத்தையர் மாட்டுச் சென்றொழுகி, அவரை வருந்தச் செய்யும் கொடுமைக்குக் காரணமாயிற்றுப் போலும் என்பதும் ஆம். 'துணை துறந்து' போகாதிருப்பின், அக் கொடுமை நிகழாது போலும் என்பதும் கொள்க.

27. அல்லல் உழப்பது ஏனோ?

     துறை: தலைமகன் மனைக்கண் வருங்காலத்து வாராது தாழ்த்துழி, 'புறத்தொழுக்கம் உளதாயிற்று'எனக் கருதி வருந்தும் தலைமகட்குத், தோழி சொல்லியது.

     (து.வி: தலைவன் வரவேண்டிய காலத்தே முறையாக இல்லத்திற்கு வந்தான் அல்லன்; அதனால், 'அவன் புறத்தொழுக்கத்தே புகுந்தான்' என்று நினைந்து வருந்துகின்றாள் தலைவி. அவளுக்குத் தோழி சொல்வதாக அமைந்த செய்யுள் இது.)

     செந்நெலம் செறுவிற் கதிர் கொண்டு, களவன்
     தண்ணக மண்ணளைச் செல்லும் ஊரற்கு
     எல்வளை நெகிழச் சாஅய்,
     அல்லல் உழப்ப தெவன்கொல்? அன்னாய்!

     தெளிவுரை: 'அன்னையே! செந்நெல் விளையும் விளைவயலிடத்தே கதிரைக் கவர்ந்து கொண்டு செல்லும் நண்டானது, குளிர்ச்சியான உள்ளிடம் கொண்ட தன் மண்ணளையிடத்தே அதனோடு சென்று புகும் ஊருக்கு உரியவன் தலைவன். அவன் பொருட்டாக, நீதான், நின் ஒளிவளைகள் நெகிழ்ந்தோட, மெலிந்து துயரப்படுவதுதான் எதற்காகவோ?'

     கருத்து: 'அவனைக் குறித்துப் பிழைபட நினைத்து மனம் கவலை கொள்ளாதே! அவன் விரைந்து வந்து சேர்வான்!' என்பதாம்.

     சொற்பொருள்: செந்செல் - சிவப்பு நெல், 'செஞ்சம்பா' என்பதும், 'செஞ்சாலி' என்பதும் இது. செறு - வயல் தண்ணக - குளிர்ந்த உள்ளிடத்தையுடைய. எல்வளை - ஒளி செய்யும் வளை. சாஅய் - மெலிந்து.

     உள்ளுறை: அலவன் செந்நெற்கதிர் கொண்டு தன் மண்ணளை புகுமாறு போலத், தலைவனும், வினையாற்றுதலால் தேசிய பொருளைக் கொண்டானாய்த் தன் இல்லத்திற்கு விரைந்து மீள்வானாவன் என்பதாம். கற்புக் காலத்தே பொருள் வயிற் பிரிந்து சென்று, திரும்பி வரக் குறித்த காலம் தாழ்த்தஃதானைக் குறித்துச் சொல்லியது இதுவாகக் கொள்க.

     மேற்கோள்: ''புறத் தொழுக்கத்தை உடையவனாகிய தலைவன் மாட்டு மனம் வேறுபட்ட தலைவியைப், 'புறத்து ஒழுக்கமின்றி நின்மேல் அவர் அனைபுடையர்' என, அவ்வேறுபாடு நீங்கத் தோழி நெருங்கிக் கூறியது; இதன் உள்ளுறையாற் பொருள் உணர்க'' என்பார் நச்சினார்க்கினியர் (தொல். கற்பு. 9). 'கதிர்... செல்லும் ஊரன்' என்பதற்கு உள்ளுறைப் பொருளாவது, 'வேண்டிய பொருளைத் தொகுத்துக் கொண்டு இல்லிற்கு வருவான் என்பது' எனவும் அவர் கூறுவர்.

28. தோள் பசப்பது ஏனோ?

     துறை: இற்செறிவித்துத் தலைமகட்கு எய்திய வேறுபாடு கண்டு, 'இது தெய்வத்தினான் ஆயிற்று' என்று தமர் வெறி எடுப்புழி, அதனை விலக்கக் கருதிய தோழி, செவிலிக்கு அறத்தொடு நிற்றது.

     (து.வி: இது துறையமைதியால் 'குறிஞ்சி'த் திணையது எனினும், 'களவன் வரிக்கும்' எனவந்த கருப்பொருளால் 'மருதம்' ஆயிற்று. 'வெறிவிலக்கல்' என்னும் குறிக்கோளோடு, தோழி செவிலிக்கு அறத்தொடு நின்று, தலைவியின் களவுறவை உணர்த்தியதாகவும் கொள்க.)

     உண்துறை அணங்கிவள் உறைநோய் ஆயின்,
     தண்சேறு களவன் வரிக்கும் ஊரற்கு
     ஒண்தொடி நெகிழச் சாஅய்,
     மென்தோள் பசப்பது எவன்கொல்? - அன்னாய்!

     தெளிவுரை: ''அன்னையே! 'நீருண்டும் துறையிடத்தேயுள்ள அணங்குதான் இவளிடத்தே நீங்காது தங்கியிருக்கும் நோய்க்குக் காரணம் என்று நீயும் நினைப்பாய்' என்றால், ஒள்ளியதொடியானது நெகிழ்ந்துபோக மெலிவுற்று, இவளது மென்மையான தோள் பசந்து நிறம் வேறுபடுத்தும் எதனாலோ?''

     கருத்து: இது, உளத்தே கொண்ட காதல் நோயின் வெம்மைத் தாக்குதல் என்பதாம்.

     சொற்பொருள்: உண்துறை - நீருண்ணும் துறை; உஃணு நீர் எடுக்கும், நீர்த்துறை. நீர்த்துறையிடத்தே அணங்கு உளதாதலைப் பிறரும் கூறுவர். (முருகு, 224; அகம், 146, 240). உறைநோய் - செயலற்றவளாக நீங்காதே தங்கியிருக்கும் காமநோய்; 'உறுநோய்' என்பதும் பாடம். வரிக்கும் - கோலம் செய்யும். 'தொடி நெகிழத் தோள் சாய்' என்பதனை, 'தொடி நெகிழ்ந்தனவே, தோள் சாயினவே' (குறுந். 239) என்பதனாலும் அறிக. தோள் பசத்தலைப் பிறரும் கூறுவர்: 'தாம் பசந்தன என் தடமென் தோளே - (குறுந், 121.)'

     விளக்கம்: 'உண்டுறை யணங்கு இவளுறை நோயாயின்' என்றது, அன்னையும் பிறரும் கொண்ட முடிவைத் தான் எடுத்துச் சொல்லி மறுக்க முனைவதாகும். 'தோள் பசப்பது' நோக்கி, இவள் நோய் காமநோயாதலை உணர்க எனக்குறி, வெறிவிலக்கி, அறத்தொடு நின்றனள் தோழி என்க.

     உள்ளுறை: அலவன் வரித்தலாலே தன் சேறும் அழகுற்றுத் தோன்றுமாப்போலே, தலைவன் வரைந்து வந்து இவளை கோடலால் இவளும் இந் நலிவின் நீங்கிப் புதுப் பொலிவு அடைவாள் என்பதாம்.

29. நின் மகள் பசலை ஏனோ?

     துறை: வரைவெதிர் கொள்ளார் தமர், அவண் மறுப்புழி, தோழி செவிலிக்கு அறத்தொடு நின்றது.

     (து.வி.: தலைமகனுக்கு உரியார் வரைந்து வரவும், தலைவியின் தமராயினார் அதனை ஏற்காது மறுத்தனர். அப்போது தோழி, தலைவியின் களவு உறவைச் செவிலித் தாய்க்குப் புலப்பட உரைத்து, அறத்தொடு நிற்கின்றதாக அமைந்த செய்யுள் இது.)

     மாரி கடிகொளக், காவலர் கடுக,
     வித்திய வெண் முளை களவன் அறுக்கும்
     கழனி ஊரன் மார்புற மரீஇத்,
     திதலை அல்குல் நின்மகள்
     பசலை கொள்வது எவன்கொல்? அன்னாய்!

     தெளிவுரை: ''அன்னையே! மாரியும் மிகுதியான பெயலைச் செய்ய, காவல் செய்வோரும் விரைவாக வந்து பார்வையிட, விதைத்த வெள்ளிய முளைகளை அலவன் அறுத்துத் திரியும் கழனிகளையுடையவன் ஊரன்! அவன் மார்பினைப் பொருந்தத் தழுவி இன்புற்றதன் பின்னும், தேமற் புள்ளிகள் கொண்ட அல்குல் தடத்தை உடையவளான நின் மகள்தான், பசலை நோயினைத் தன்பாற் கொள்வதும் எதனாலோ?''

     கருத்து: அவனையே அவளுக்கு மணமுடித்தல் அறத்தொடுபட்ட நெறியாகும்.

     சொற்பொருள்:மாரி - கால மழை. கடிகொளல் மிக்குப் பெய்தல். கடுக - விரைவாக வர; மழை நின்ற வேளையிலே காவலர் வித்திய வயல் நோக்கி விரைந்து வந்தது பெருமழையால் வித்திய வித்துச் சேதமாதலைத் தடுத்தற் பொருட்டாக என்க. வெண்முளை - வெள்ளிய முளை; வித்தை முளைகட்ட விட்டு விதைப்பதே இன்றும் சேற்று விதைப்பினர் மரபு. அறுக்கும் - கெடுக்கும். மார்பு உறமரீஇ - மார்பு பொருந்தத் தழுவி; 'மார்புற அறீஇ' என்றும் பாடம். சிதலை - மேற்புள்ளிகள்; துத்தி என்பர்; திதலை அல்குல்' என்பர் பிறரும் (குறந். 27, அகம். 54). பசலை - பசத்தலாகிய காமநோய்க் க ஊறு.

     விளக்கம்: இதுவும் கருப்பொருள் நோக்கி மருதமாகக் கொள்ளற்கு உரிய செய்யுளே. அறத்தொடு நிற்றலே இதன் துறையாவதும் அது குறிஞ்சிக்கு உரியதும் நினைக. இஃது 'உண்மை செப்பல் என்பர்'

     உள்ளுறை: 'வித்திய விதையிடத்தே தோன்றும் முளையினை, அவ்வயலிடத்தே வாழ்தலை உளதான களவன் அறுக்கும் ஊரன்' என்றது, அவ்வாறே தம் மகளிடத்தே எழுந்த இல்லறக் கடமையின் செவ்வியான கற்பு மேம்படுதலை வரைவெதிர் கொள்ளாதே வரைவுடன் படற்கு மறுத்தாராய்த் தமரே இதைக்கின்றனர் என்பதாம்.

30. பெருங்கவின் இழப்பது ஏன்?

     துறை; இதுவும் மேற்காட்டிய துறைச் செய்யுளே.

     வேம்புநனை அன்ன நெடுங்கண் களவன்
     தண்ணக மண் அளை நிறைய, நெல்லின்
     இரும்பூ உறைக்கும் ஊரற்கு இவள்
     பெருங்கவின் இழப்பது எவன்கொல்? - அன்னாய்!

     தெளிவுரை: ''அன்னையே! வேம்பின் பூவரும்பைப் போன்ற நெடுங்கண் களையுடைய அலவனின் குளிர்ந்த நிறையும்படியாக, நெற்பயிரின் மிகுதியான பூக்கள் உதிர்ந்துகிடக்கும் விளைவயல்களையுடைய ஊரன் தலைவன். அவன் பொருட்டாக, நின் மகள் தன் பேரழகினை இழப்பதுதான் எதனாலோ?''

     கருத்து: அவனே, இவளது கணவன் ஆதற்குரியன்; அதனால் வரைவுக்கு உட்படுதலைச் செய்வீராக.

     சொற்பொருள்: வேம்புநனை - வேம்பின் பூவரும்பு; இது நண்டின் கண்ணுக்கு நல்ல உவமை; 'வேம்பு நனை அன்ன இருங்கண் நீர் ஞெண்டு' என்று அகமும் இதனைக் கூறும் (அகம், 176) உறைக்கும் - உதிர்ந்து கிடக்கும். கவின் - பேரழகு; காண்பார் உணர்வு முற்றும் தன்பாலதாகவே கவியுறுமாறு மயக்கும் வசியப் பேரெழில்.

     விளக்கம்: அலவனின் கண்ணுக்கு வேம்பு நனையை உவமை கூறியது, வேம்பு பூக்கும் காலம் மணம் செய்தற்குரிய நற்காலமும் ஆகும் என்று புலப்படுத்துதற்காம்.

     மேற்கோள்: மருதத்துக் குறிஞ்சி நிகழ்ந்தது; தோழி அறத்தொடு நின்றது எனக் காட்டுவர் ஆசிரியர் நச்சினார்க்கினியர் (தொல். அகத். 12).

     உள்ளுறை: 'அலவனின் மண்ணளை நிறைய வயலிடத்தின் நெற்பூ உதிர்ந்து கிடத்தலைப் போலவே, தலைவனின் மனையகத்தே, தீதின்றி வந்த குடியுரிமையான பெருஞ்செல்வம் நிரம்பிக் கிடக்கும்' என அவன் செல்வப் பெருக்கத்தினைக் கூறி வரைவுடம்படக் கூறியதாகவும் கொள்க.