http://www.chennailibrary.com


அமிர்தசாகரர்

இயற்றிய

யாப்பருங்கலக் காரிகை

     யாப்பருங்கலக் காரிகை செய்யுளுக்கு இலக்கணம் கூறுகின்றது. இந்நூல் உறுப்பியல், செய்யுளியல், ஒழிபியல் எனும் மூன்று பகுதிகளைக் கொண்டது. பாவின் அடிப்படை உறுப்புகாளாகிய, எழுத்து, அசை, சீர், தளை முதலியனவற்றை முதல் பகுதியாகிய உறுப்பியல் விளக்குகின்றது. செய்யுளியலில் பாவிற்குரிய அடியளவுகள், பாக்கள், பாவினங்களின் வகைகளும் அவற்றின் இலக்கணங்களும், ஓசையும் வரையறுக்கப் படுகின்றன. உறுப்பியலிலும் செய்யுளியலிலும் கூறப்படாதனவற்றுக்கு ஒழிபியல் இலக்கணங் கூறுகின்றது. இந்நூலாசிரியர் அமிர்தசாகரர் என்பவராவார். இவர் காலம் பதினோறாம் நூற்றாண்டின் தொடக்கமென வரலாற்றாசிரியர்களால் வரையறுக்கப் படுகின்றது. இவர் சமண சமயத்தவராக அறுதியிடப்படுகின்றார். இவரது ஊர் தொண்டை நாட்டிலிருந்த காரிகைக் குளத்தூர் எனும் சிற்றூராகும். இவரது ஆசிரியர் பெயர் குணசாகரர் (குணக்கடற்பெயரோன்) என உணரப்படுகின்றது. இந்நூல் கட்டளைக் கலித்துறை எனும் பாவகையால் ஆக்கப்பட்டது. எனினும் கட்டளைப் பாக்களுக்கு இதில் இலக்கணங் கூறப்படவில்லை. எழுத்தெண்ணிப் பாடப்படும் இப்பா பிற்காலத்தே பயின்று வழங்கத் தொடங்கியது. சூத்திரமாக உரைக்கப்பட்ட இந்நூலுக்கு கட்டளைக் கலித்துறையின் இலக்கணம் பெரிதும் உதவுகின்றது. மகடூஉ (பெண்பால்) முன்னிலையாகப் பாடபெற்றது இந்நூல். இது மாணவரை முன்னிறுத்தி அறிவுறுத்தும் தன்மையை இந்நூலுக்களிக்கிறது. இம்மகடூஉ முன்னிலை அக்காலத்தில் பெண்கள் இலக்கணப் பயிற்சி பெற்றதைக் காட்டுகின்றது. யாப்பாகிய கடலைக் கடக்கக் கலமாகச் செய்யப்பட்டது யாப்பருங்கலம். இதற்கு உரைகூறும் வகையில் அமைந்தமையால் இந்நூலுக்கு யாப்பருங்கலக் காரிகை எனப் பெயர் உண்டானது என்பர். காரிகை யொருவளை முன்னிறுத்திப் பாடியமையான் இதற்கு இப்பெயர் உண்டாயிற்று. இது தவிர கட்டளைக் கலித்துறைக்குக் காரிகை எனும் பெயரும் உண்டு.

தற்சிறப்புப் பாயிரம்

கந்தம் மடிவில் கடிமலர்ப் பிண்டிக்கண் ணார்நிழற்கீழ்
எந்தம் அடிகள் இணையடி ஏத்தி எழுத்து, அசை, சீர்
பந்தம், அடி, தொடை, பா, இனம் கூறுவன் பல்லவத்தின்
சந்த மடிய அடியான் மருட்டிய தாழ்குழலே! 1

அவையடக்கம்

தேனார் கமழ்தொங்கல் மீனவன் கேட்பத்தெண் ணீரருவிக்
கானார் மலயத் தருந்தவன் சொன்னகன் னித்தமிழ்நூல்
யானா நடாத்துகின் றேனென் றெனக்கே நகைதருமால்
ஆனா அறிவின் அவர்கட்கென் னாங்கொலென் ஆதரவே. 2

சுருக்கமில் கேள்வித் துகள்தீர் புலவர்முன் யான்மொழிந்த
பருப்பொருள் தானும் விழுப்பொரு ளாம், பனி மாலிமயப்
பொருப்பகஞ் சேர்ந்தபொல் லாக்கருங் காக்கையும் பொன்னிறமாய்
இருக்குமென் றிவ்வா றுரைக்குமன் றோவிவ் விருநிலமே. 3

உறுப்பியல்

எழுத்து

குறில்நெடில் ஆவி குறுகிய மூவுயிர் ஆய்தமெய்யே
மறுவறு மூவினம் மைதீர் உயிர்மெய் மதிமருட்டும்
சிறுநுதற் பேரமர்க் கட்செய்ய வாயைஇய நுண்ணிடையாய்
அறிஞர் உரைத்த அளபும் அசைக்குறுப் பாவனவே. 4

அசை

குறிலே நெடிலே குறிலிணை ஏனைக் குறில்நெடிலே
நெறியே வரினும் நிரைந்தொற் றடுப்பினும் நேர்நிரையென்று
அறிவேய் புரையுமென் தோளி உதாரணம்ஆழிவெள்வேல்
வெறியே சுறாநிறம் விண்தோய் விளாமென்று வேண்டுவரே. 5

சீர்

ஈரசை நாற்சீ ரகவற் குரியவெண் பாவினவாம்
நேரசை யாலிற்ற மூவசைச் சீர்நிரை யாலிறுப
வாரசை மென்முலை மாதே வகுத்தவஞ் சிக்குரிச்சீர்
ஓரசை யேநின்றுஞ் சீராம் பொதுவொரு நாலசையே. 6



இணைய பக்க முகவரி: http://www.chennailibrary.com/grammar/yapparunkalakkarigai.html

பதிப்புரிமை © 2006 சென்னைநூலகம்.காம்.
அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
இந்த வலைதள பக்கத்தில் உள்ள தகவல்களை பதிப்பிக்கவோ,
ஒலிபரப்பவோ, வெளியிடவோ அல்லது விநியோகிக்கவோ கூடாது.

 அச்சிட       விமர்சிக்க       விருப்ப தளமாக்க
       முகப்பு பக்கமாக்க



வருகைப் பதிவு (25-09-2006 முதல்)
ad
இலக்கிய தகவல்கள்
தரவிறக்கம்
பிற செய்திகள்
ஆன்மீகம்




தமிழ் யுனிகோடில் அமைந்த இணைய தளம். பதிப்புரிமை © 2006 சென்னைநூலகம்.காம். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.