ஐம்பெருங் காப்பியங்களுள் ஐந்தாவது நாதகுத்தனார் இயற்றிய குண்டலகேசி
... தொடர்ச்சி ... இந் நூலின் நாயகி குண்டலகேசி செல்வச் செழிப்புமிக்க வணிகர் குலத்தில் பிறந்தவள். அவள் பெற்றோர் இட்ட பெயர் பத்தா தீசா. அவள் பருவமடைந்து இனிது இருந்த சமயத்தில் அவ்வூரில் சத்துவான் என்பவன் வழிப்பறிக் கொள்ளை அடித்து, அரசனால் கொலைகளத்துக்கு அனுப்பப்பட்டான். அப்போது அவனைச் சாளரத்தின் வழியே கண்டு, அவள் அவன் மீது காதல் கொண்டாள். அது அறிந்த அவள் தந்தை அரசனுக்கு பொருள் தந்து அக்கள்வனை மீட்டு அவளுக்கு மணமுடித்து வைத்தார். இருவரும் சிலகாலம் இனிது வாழ்ந்த பின்னர், அவனுக்கு மனைவியின் நகைகளை கொள்ளை அடிக்கும் எண்ணம் வரவே, அவளைத் தனியே அருகில் இருந்த சேரர் மலை உச்சிக்கு அழைத்துச் சென்றான். அவன் நடத்தையில் சந்தேகம் கொண்ட பத்தா அது பற்றி கேட்க, அவன் நகைகளைப் பறித்துக் கொண்டு அவளை மலையுச்சியிலிருந்து தள்ளிவிட இருப்பதைக் கூறினான். அது கேட்ட அவள் சாவதற்கு முன் கடைசியாக அவனை ஒருமுறை சுற்றி வந்து வணங்கவிரும்புவதாகக் கூறி அவனை அம் மலை உச்சியிலிருந்து தள்ளி விட்டாள். பின்னர் அவள் சமண மதத்தை தழுவினாள். அவள் தலைக் கூந்தல் பனங்கருக்கு மட்டையால் மழிக்கப்பட்டது. பின்னர் வளர்ந்த அவள் முடி வளைந்து குண்டலம் போக் காட்சி யளித்ததால் குண்டலகேசி என வழங்கப்பட்டாள். அவள் பல இடங்களில் வாதம் புரிந்து, கடைசியில் புத்தரிடம் ஞானத் தெளிவு பெற்று பௌத்தத் துறவியானாள். இக் காப்பியத்தில் தற்சமயம் 19 பாடல்களே கிடைக்கப் பெற்றுள்ளன. இந் நூல் பௌத்த சமயத்தைச் சார்ந்தது. இந்நூலாசிரியர் நாதகுத்தனார் ஆவர். இந்நூலின் காலம் கி.பி. 7 ஆம் நூற்றாண்டு ஆகும். இந்நூலுக்கு குண்டலகேசி விருத்தம் என்கிற பெயரும் உண்டு. கடவுள் வாழ்த்து
முன் தான் பெருமைக்கண் நின்றான் முடிவு எய்துகாறும் நன்றே நினைந்தான் குணமே மொழிந் தான் தனக்கென்று ஒன்றானும் உள்ளான் பிறர்க்கே உறுதிக்கு உழந்தான் அன்றே இறைவன் அவன் தாள் சரண் நாங்களே. 1 அவையடக்கம்
நோய்க்கு உற்ற மாந்தர் மருந்தின் சுவை நோக்க கில்லார் தீக்குற்ற காதல் உடையார் புகைத் தீமை ஓரார் போய்க்குற்றம் மூன்றும் அறுத்தான் புகழ்கூறு வேற்கு என் வாய்க்கு உற்ற சொல்லின் வழுவும் வழுவல்ல அன்றே. 2 தூய மனம்
வாயுவினை நோக்கி உள மாண்டவய நாவாய் ஆயுவினை நோக்கி உள வாழ்க்கை அதுவேபோல் தீயவினை நோக்கும் இயல் சிந்தனையும் இல்லாத தூயவனை நோக்கிஉள துப்புரவும் எல்லாம். 3 போற்றல் உடை நீக்குதல் பொடித்துகள் மெய்பூசல் கூர்த்த பனி ஆற்றுதல் குளித்து அழலுள் நிற்றல் சார்த்தர் இடு பிச்சையர் சடைத் தலையர் ஆதல் வார்த்தை இவை செய்தவம் மடிந்து ஒழுகல் என்றான். 4 பற்றை பற்று கொண்டு நீக்கல் அரிது
வகை எழில் தோள்கள் என்றும் மணிநிறக் குஞ்சி என்றும் புகழ் எழ விகற்பிக் கின்ற பொருளில்கா மத்தை மற்றோர் தொகை எழும் காதல் தன்னால் துய்த்து யாம் துடைத்தும் என்பார் அகையழல் அழுவம் தன்னை நெய்யினால் அவிக்கல் ஆமோ! 5 அனல் என நினைப்பிற் பொத்தி அகந் தலைக் கொண்ட காமக் கனலினை உவர்ப்பு நீரால் கடையற அவித்தும் என்னார் நினைவிலாப் புணர்ச்சி தன்னால் நீக்குதும் என்று நிற்பார் புனலினைப் புனலினாலே யாவர்போகாமை வைப்பார். 6 யாக்கை நிலையாமை
போதர உயிர்த்த ஆவி புக உயிர்கின்ற தேனும் ஊதியம் என்று கொள்வர் உணர்வினான் மிக்க நீரார் ஆதலால் அழிதல் மாலைப் பொருள்களுக்கு அழிதல் வேண்டா காதலால் அழுதும் என்பார் கண் நனி களையல் உற்றார். 7 |
சென்னை நூலகம் தேடல் |
![]() Custom Search |
| இலக்கிய தகவல்கள் |