உதயண குமார காவியம் ... தொடர்ச்சி ... உதயண குமார காவியம் ஐஞ்சிறு காப்பியங்களுள் ஒன்றாகும். (பிற நூல்கள் சூளாமணி, யசோதரகாவியம், நாக குமார காவியம், நீலகேசி). இந்நூலில் ஆறு காண்டங்கள் உள்ளன-உஞ்சைக் காண்டம், இலாவணக் காண்டம், மகத காண்டம், வத்தவ காண்டம், நரவாகன காண்டம் மற்றும் துறவுக் காண்டம். இக்காப்பியத்தின் முதற்பகுதி உதயணன் வரலாற்றையும், பிற்பகுதி அவனது மகனாகிய நரவாகனனது வரலாற்றையும் கூறுகிறது. இக் காவியத்தில் மொத்தம் 367 பாடல்கள் உள்ளன. இதில் நூல் முகப்பில் 'வணக்கம்' என்ற தலைப்பில் உள்ள இரு பாடல்களும், அவையடக்கப் பாடல் ஒன்றும், பயன் என்றதலைப்பில் உள்ள ஒரு பாடலும் அடங்கும். இதுவல்லாது காண்டங்களின் செய்யுள் தொகை என்ற தலைப்பில் இரண்டு விருத்தங்களும் இக் காவியத்தின் கடைசியில் அமைந்துள்ளன. ஆகவே மொத்த பாடல்களின் எண்ணிக்கை 369 ஆகும். இந் நூலின் ஆசிரியர் பெயர் தெரியவில்லை. 1. உஞ்சைக் காண்டம்
கடவுள் வாழ்த்து
மணியுடன் கனக முத்த மலிந்த முக்குடை இலங்க அணிமலர்ப் பிண்டியின் கீழ அமர்ந்த நேமிநாதர் பாதம் பணிபுபின் வாணிபாதம் பண்ணவர் தாள்களுக்கு எம் இணைகரம் சிரத்தில் கூப்பி இயல்புறத்தொழுதும் அன்றே. 1 பொன்னெயில் நடுவண் ஓங்கும் பூநிறை அசோக நீழல் இன்னியல் ஆலயத்துள் ஏந்தரி ஆசனத்தின் மன்னிய வாமன் பாதம் வந்தனை செய்து வாழ்த்தி உன்னத மகிமை மிக்கான் உதயணன் கதை விரிப்பாம். 2 அவையடக்கம்
மணிபொதி கிழியும் மிக்க மணியுடன் இருந்த போழ்தில் மணிபொதி கிழிய தன்னை மணியுடன் நன்கு வைப்பார் துணிவினில் புன்சொலேனும் தூய நற்பொருள் பொதிந்தால் அணியெனக் கொள்வார் நாமும் அகத்தினுள் இரங்கல் செல்லாம். 3 பயன்
ஊறுந் தீவினை வாய் தன்னையுற்றுடன் செறியப் பண்ணும் கூறுநல் விதி புணர்ந்து குறைவின்றிச் செல்வம் ஆமுன் மாநுறு கருமம் தன்னை வரிசையின் உதிர்ப்பை யாக்கும் வீறுறு முறுப்பின் தன்மை விளம்புதற் பால தாமோ. 4 நூல்
நாட்டுச் சிறப்பு
இஞ்சி மூன்றுடைய கோமான் எழில் வீரநாதன் இந்தப் புஞ்சிய நிலத்தோர்க் கெல்லாம் பொற்பு நல்லற நன்மாரி விஞ்சவே சொரியுங் காலம் வெண்மதிக் குடைக்கீழ் வாழும் எஞ்சலில் காட்சி மன்னனிருக்கை நாடு உரைத்தும் அன்றே. 5 நாவந்தீவு
பூவும் நற்றளிரும் செற்றிப் பொழில் மிகச் சூழ்ந்து இலங்கும் நாவலர் மரத்தினாலே நாமமாய்த் துலங்கி நின்று தீவுநற்கடல் கடாமும் ஒன்றிற்கொன்று இரட்டி சூழ்ந்த நாவலந்தீவு நந்தினன் மணி போன்ற தன்றே. 6 வத்தவநாடு
வேதிகை சிலைவளைத்து வேதண்ட நாணேறிட்டுப் போதவும் வீக்கினாற்போல் பொற்புடைப் பரதந் தன்னில் ஓதியதரும கண்டத்து ஓங்கிய காவு நின்று வாதத்தால் சுகந்தம் வீசுன் வத்தவநாடதாமே. 7 கோ நகரம்
இஞ்சிமிக் கெழுந்தே யோங்கி யிலக்கிய அமர லோகம் எஞ்சலில் எல்லை காணா எழில்பெற நிற்றனோக்கி அஞ்சல் இல்வருக என்றே அணிபெற விலங்கி நீண்ட குஞ்சி நன் கொடிகரத்தால் கூவியிட்டு அழைக்குமன்றே. 8 முகில்தவழ் மாடமீதின் முத்தணி மாலை நான்றே இகலுறும் அமளியின்மேல் எழின் மங்கை மைந்தர் தாமும் பகலிரவு இன்றிப் போகம் பண்பினால் துய்த்திருப்பார் நகரி கௌசாம்பி என்னும் நாம மார்ந்து இலங்குமன்றே. 9 அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை. இந்த வலைதள பக்கத்தில் உள்ள தகவல்களை பதிப்பிக்கவோ, ஒலிபரப்பவோ, வெளியிடவோ அல்லது விநியோகிக்கவோ கூடாது. |
| இலக்கிய தகவல்கள் |
| தரவிறக்கம் |
பிற செய்திகள் |
ஆன்மீகம் |