முதல் அத்தியாயம் - திறந்த வீடு அன்று சாயங்காலம், சூரியன் வழக்கம் போலத்தான் மேற்கு மலைத் தொடருக்குப் பின்னால் அஸ்தமித்தான். ஆனால், அப்போது சூழ்ந்து வந்த இருள், வழக்கமான இருளாகத் தோன்றவில்லை. காவியங்களில் கவிகள் வர்ணிக்கும் இருளைப் போல், கோயமுத்தூர் நகரவாசிகளின் மனத்தில் பீதியையும் கவலையையும் அதிகமாக்கிக் கொண்டு, அந்த இருள், நகரின் வீதிகளிலும் சந்து பொந்துகளிலும் புகுந்து பரவி வந்தது. வழக்கம்போல் அன்று தெரு வீதிகளில் முனிசிபாலிடி விளக்குகள் சரியான காலத்தில் ஏற்றப்படாதபடியால் சாதாரண அந்தி இருட்டானது, நள்ளிரவின் கானாந்தகாரத்தை விடப் பயங்கரமாகத் தோன்றியது. கோயமுத்தூர் நகரம் அன்று அந்தி வேளையில் அளித்த சோககரமான காட்சியைப் போல் அதற்கு முன்னால் அளித்தது கிடையாது; பின்னாலும் அளித்தது கிடையாது. நகரின் பிரதான வீதிகளில் விளக்கேற்றும் நேரத்தில் சாதாரணமாய்க் காணப்படும் 'ஜே ஜே' என்ற ஜனக்கூட்டமும், வண்டிகளின் போக்குவரத்தும் கலகலப்பும் அன்று காணப்படவில்லை. கடைத் தெருக்கள் பாழடைந்து காணப்பட்டன. வீதிகளில் வீடுகளெல்லாம் சாத்திக் கிடந்தன. ஜன்னல் கதவுகளும் மூடப்பட்டிருந்தன. மேல் மாடிகளிலிருந்து எட்டிப் பார்ப்பவர் கூட இல்லை. பெரிய வீதிகளில் ஜன நடமாட்டமே கிடையாது. சின்னத் தெருக்களிலும் சந்துகளிலும் அங்கே இங்கே அபூர்வமாக இரண்டொருவர் நடமாடிக் கொண்டிருந்தார்கள். அவர்களும், முன்னாலும் பின்னாலும் பீதியுடன் பார்த்துக் கொண்டு நடந்தார்கள். அவர்களுடைய முகங்களைப் பார்த்தால், பேயடித்தவர்களின் முகங்களாகக் காணப்பட்டன. தெருக்களில் நிற்க மனமில்லாதவர்களைப் போல் அவர்கள் அவசர அவசரமாகப் போய்க் கொண்டிருந்தார்கள். கோயமுத்தூருக்கு என்ன நேர்ந்தது? நேற்றுவரை அவ்வளவு கலகலப்பாகவும், திருமகள் விலாசத்துடனும் விளங்கிய நகரம் இன்று பாழடைந்து கிடப்பானேன்? திருமகள் தமக்கையின் ஆதிக்கம் இன்று அந்நகரில் எவ்விதம் ஏற்பட்டது? இதன் காரணத்தை அறிய வேண்டுமானால், நமது கதை ஆரம்பமாகும் காலத்தை - வருஷம் மாதம் தேதியைக் கூட கொஞ்சம் தெரிந்து கொள்ள வேண்டியது அவசியம். வருஷம், 1931; மாதம், ஜனவரி; தேதி, 6; வாசகர்களுக்கு ஏதாவது ஞாபகம் வருகிறதா? 1930 டிசம்பர் கடைசியில் மகாத்மா காந்தி லண்டனில் நடந்த இரண்டாவது வட்ட மேஜை மகாநாட்டிலிருந்து வெறுங்கையுடன் திரும்பிப் பம்பாய்க்கு வந்து சேர்ந்தார். அவரை வரவேற்பதற்கு அப்போது இந்தியாவிலிருந்து வில்லிங்டன் சர்க்கார் தக்க ஏற்பாடு செய்திருந்தார்கள்! அவர் பம்பாய் வந்து இறங்குவதற்கு நாலு நாளைக்கு முன்பு காந்தி-இர்வின் ஒப்பந்தம் காற்றில் விடப்பட்டது. பண்டித ஜவஹர்லால் நேரு கைது செய்யப்பட்டார். மகாத்மா பம்பாய் வந்திறங்கியதும், வைஸ்ராய் வில்லிங்டனுக்குத் தந்தி அடித்தார். பதில் திருப்திகரமாயில்லை. எனவே, காங்கிரஸ் காரியக் கமிட்டி கூடி, மறுபடியும் சத்தியாக்கிரக இயக்கத்தைத் தொடங்குவதென்று, தீர்மானித்தது. உடனே மகாத்மாவும் காரியக் கமிட்டி அங்கத்தினரும் கைது செய்யப்பட்டார்கள். அதன்மேல், நாடெங்கும் இரண்டாவது சத்தியாக்கிரக இயக்கம் ஆரம்பமானது போலவே, கோயமுத்தூர் நகரிலும் ஆரம்பித்தது. ஆனால், 1929-ல் இயக்கத்தை வளரவிட்டதுபோல் இந்தத் தடவை வளரவிடக்கூடாதென்றும், முளையிலேயே கிள்ளி எறிந்துவிட வேண்டும் என்றும், வில்லிங்டன் சர்க்காரின் தாக்கீது நாடெங்குமுள்ள அதிகார வர்க்கத்தாருக்கு வந்திருந்தது. ஆகவே, ஒவ்வொரு ஜில்லாவிலும், இயக்கத்தை முளையிலேயே கிள்ளி எறிந்துவிடும் பொருட்டு, ஜில்லா அதிகாரிகள் வேண்டிய குண்டாந்தடி முதலிய ஆயுதங்களுடன் தயாராயிருந்தார்கள். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை. இந்த வலைதள பக்கத்தில் உள்ள தகவல்களை பதிப்பிக்கவோ, ஒலிபரப்பவோ, வெளியிடவோ அல்லது விநியோகிக்கவோ கூடாது. |
| இலக்கிய தகவல்கள் |
| தரவிறக்கம் |
பிற செய்திகள் |
ஆன்மீகம் |