முன்னுரை அந்த இங்கிலீஷ் சினிமா கொஞ்சங்கூட நன்றாயில்லை. "ஏண்டா அப்பா, இங்கே வந்தோம்? காசைக் கொடுத்துத் தேளைக் கொட்டிக் கொண்ட கதையாயிருக்கிறதே!" என்ற எண்ணம் உண்டாயிற்று. அந்த படத்தில் குதிரைகள் குடல் தெறிக்க ஓடிக் கொண்டிருந்தன. ஒரு மனிதனும் இன்னொரு மனிதனும் கத்திச் சண்டை போட்டார்கள். ஒரு யுவனும் ஒரு யுவதியும் காதல் புரிந்தார்கள். மறுபடியும் குதிரைகள் ஓடின. இரண்டு மனிதர்கள் துப்பாக்கியால் சுட்டுக் கொண்டார்கள். ஒரு யுவதியும் ஒரு யுவனும் காதல் புரிந்தார்கள். குதிரைகள் எவ்வளவு வேகமாய் ஓடினாலும் படம் மட்டும் மெள்ள நகர்ந்து கொண்டிருந்தது. கத்திச் சண்டை பொய், துப்பாக்கிக் குண்டு பொய், காதலும் பொய். இந்த அபத்தத்தை எத்தனை நேரம் சகித்துக் கொண்டிருப்பது? எழுந்து போய் விடலாமா என்று தோன்றியது. இந்த சமயத்தில் இடைவேளைக்காக விளக்குப் போட்டார்கள். சாதாரணமாக ஸினிமாக் கொட்டகைகளில் இடைவேளை வெளிச்சம் போட்டதும் பெரும்பாலான ரசிகர்கள் சுற்று முற்றும் திரும்பிப் பார்ப்பது வழக்கம். அதன் காரணம் என்னவென்பது அன்று எனக்கு விளங்கியது. ஸினிமாத் திரையில் உயிரற்ற பொம்மை முகங்களைப் பார்த்துப் பார்த்து அலுத்துப் போன கண்கள் உயிருள்ள உண்மை மனிதர்களின் முகங்களைப் பார்க்க விரும்புவது இயல்புதானே? தெரிந்த முகம் ஏதேனும் தென்படுகிறதா என்று நானும் அன்றைக்குத் திரும்பிப் பார்த்தேன். இந்த உபயோகமற்ற ஸினிமாவைப் பார்க்க வந்த அசட்டுத்தனத்தை இன்னும் யாரேனும் ஓர் அறிமுகமான மனிதருடன் பகிர்ந்து கொள்வதில் சற்று நிம்மதி உண்டாகலாம் அல்லவா? அவ்வாறு சுற்று முற்றும் பார்த்த போது தெரிந்த முகம் ஒன்று உண்மையிலேயே தெரிந்தது. யார் என்பது உடனே புலப்படவில்லை. அந்த மனிதரும் என்னைப் பார்த்து ஒரு புன்னகை புரிந்தார். நான் பட்ட அவதியை அவரும் பட்டுக் கொண்டிருக்க வேண்டும் என்று தோன்றியது. சமிக்ஞையினால் நாங்கள் முகமன் சொல்லிக் கொண்டிருந்த சமயத்தில், என் பக்கத்தில் உட்கார்ந்திருந்த ஒரு ரஸிகர், "சுத்தப் பாடாவதிப் படம்! ஒன்றே கால் ரூபாய் தண்டம்!" என்று இரைச்சல் போட்டுக் கொண்டு எழுந்து போனார். சற்றுத் தூரத்திலிருந்து புன்னகை புரிந்த மனிதர் அந்தச் சந்தர்ப்பத்தை நழுவ விடக் கூடாது என்று பரபரப்புடன் எழுந்துவந்து என் பக்கத்து நாற்காலியில் உட்கார்ந்தார். "என்ன சேதி?" "என்ன சமாசாரம்?" "வீட்டில் எல்லாரும் சௌக்கியமா?" "படம் சுத்த மோசமாயிருக்கிறதே!" என்று க்ஷேமலாபங்களை விசாரித்துக் கொண்டே, அந்த மனிதர் யாராயிருக்கும் என்று யோசித்துக் கொண்டிருந்தேன். பேச்சு வாக்கில், "இப்போது எங்கே ஜாகை?" என்று கேட்டேன். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை. இந்த வலைதள பக்கத்தில் உள்ள தகவல்களை பதிப்பிக்கவோ, ஒலிபரப்பவோ, வெளியிடவோ அல்லது விநியோகிக்கவோ கூடாது. |
| இலக்கிய தகவல்கள் |
| தரவிறக்கம் |
பிற செய்திகள் |
ஆன்மீகம் |