http://www.chennailibrary.com



1. நள்ளிரவு ரயில் வண்டி

     கன்னங்கரிய இருள் சூழ்ந்த இரவு. திட்டுத் திட்டான கருமேகங்கள் வானத்தை மூடிக்கொண்டிருந்தன. அந்த மேகக் கூட்டங்களுக்கு இடை இடையே விண்மீன்கள் அங்கொன்றும் இங்கொன்றுமாக வெளியில் வரலாமோ கூடாதோ என்ற சந்தேகத்துடன் எட்டிப் பார்த்தன.

     கீழே பூமியில் அந்தக் காரிருளைக் காட்டிலும் கரியதான ஒரு மொட்டைப் பாறை பயங்கரமான கரும் பூதத்தைப்போல் எழுந்து நின்றது.

     பாறையின் ஓரமாக இரண்டு கரிய கோடுகளைப் போல் ரயில் பாதையின் தண்டவாளங்கள் ஊர்ந்து செல்வதை, ஓரளவு இருளுக்குக் கண்கள் பழக்கப்பட்ட பிறகு உற்றுப் பார்த்துத் தெரிந்து கொள்ளலாம்.

     ரயில் பாதையின் ஒரு பக்கத்தில் மனிதர்கள் அடிக்கடி நடந்து சென்றதனால் ஏற்பட்ட ஒற்றையடிப் பாதையில் ஒரு மனிதன் அந்த நள்ளிரவு வேளையில் நடந்து கொண்டிருந்தான். பாதையைக் கண்ணால் பார்த்துக் கொண்டு அவன் நடக்கவில்லை. காலின் உணர்ச்சியைக் கொண்டே நடந்தான். ரயில் தண்டவாளத்தின் ஓரமாகக் குவிந்திருந்த கருங்கள் சல்லிகளில் அவனுடைய கால்கள் சில சமயம் தடுக்கின. ஒற்றையடிப் பாதையின் மற்றொரு பக்கத்தில் வேலியைப் போல் வளர்ந்திருந்த கற்றாழைச் செடிகளின் முட்கள் சில சமயம் அவனுடைய கால்களில் குத்தின. அவற்றையெல்லாம் அந்த மனிதன் சற்றும் பொருட்படுத்தவில்லை. அவனுடைய நடை சிறிதேனும் தளரவில்லை. தடுக்கல்களையும் தடங்கல்களையும் பொருட்படுத்தாமல் விரைவாக நடந்தான்.

     ரயில் பாதை ஓரிடத்தில் மொட்டைப் பாறையை வளைத்துக் கொண்டு சென்றது. வளைவு திரும்பியவுடனே இரத்தச் சிவப்பு நிறமான பெரிய நட்சத்திரம் ஒன்று தோன்றி அந்த நள்ளிரவுப் பிரயாணியின் கண்ணைப் பறித்தது. அங்கே சிறிது நின்று நிதானித்து பார்த்து, 'அது நட்சத்திரமில்லை' கைகாட்டி மரத்தின் உச்சியில் வைத்துள்ள சிவப்பு விளக்கு என்றும், ஏதோ ஒரு ரயில்வே ஸ்டேஷனுக்கு அருகில் தான் வந்திருக்க வேண்டுமென்றும் தெரிந்து கொண்டான். மேலும் ரயில் பாதையைத் தொடர்ந்து போவதா? அல்லது ரயில் பாதையை அங்கே விட்டுவிட்டு வேறு வழியில் திரும்புவதா என்று அம்மனிதன் எண்ணமிட்டான். அந்த வேளையில் வேறு வழி கண்டுபிடித்துச் செல்லுவது என்பது சுலபமான காரியமில்லைதான். ரயில் பாதையின் ஒரு பக்கத்தில் கரிய பாறை செங்குத்தான சுவரைப் போல் நின்றது. மற்றொரு பக்கத்தை உற்றுப் பார்த்தான். கல்லும் முள்ளும் கள்ளியும் கருவேல மரமும் நிறைந்த காட்டுப் பிரதேசமுமாகக் காணப்பட்டது. ஆயினும் அந்தக் காட்டுப் பிரதேசத்தின் வழியாகச் சென்றுதான் வேறு நல்ல பாதை கண்டுபிடித்தான வேண்டும். ரயில்வே ஸ்டேஷனுக்குப் போவது ஆபத்தாக முடியலாம்.

     இவ்விதம் அந்தப் பிரயாணி யோசித்துக் கொண்டிருந்த போது அவனுக்கெதிரே தெரிந்த கை காட்டியின் விளக்கில் ஒரு மாறுதல் ஏற்பட்டது. சிவப்பு வெளிச்சம் பளிச்சென்று பச்சை வெளிச்சமாக மாறியது.

     அந்த மாறுதல் ஏன் ஏற்பட்டதென்பதை அம் மனிதன் உடனே ஊகித்து உணர்ந்தான். தான் வந்த வழியே திரும்பிச் சில அடி தூரம் நடந்தான். வளைவு நன்றாய்த் திரும்பியதும் நின்று, தான் வந்த திசையை நோக்கிக் கவனமாக உற்றுப் பார்த்தான். வெகு தூரத்தில் மின் மினிப் பூச்சியைப் போன்ற ஓர் ஒளித் திவலை பெரிதாகிக் கொண்டு வந்தது. 'கிஜுகிஜு கிஜுகிஜு' என்ற சத்தமும் அந்தத் திசையிலிருந்து கேட்கத் தொடங்கியது. ரயில் ஒன்று நெருங்கி வருகிறது என்று தெரிந்து கொண்டான்.

     நம் கதாநாயகனுடைய உள்ளம் ஒரு கணம் துடித்தது. அவனுடைய கைகளும் துடித்தன. மறுகணம் அவன் மிக விந்தையான காரியம் ஒன்று செய்தான். தன்னுடைய அரைச் சட்டையின் பையிலிருந்து ஏதோ ஓர் ஆயுதத்தையும் ஒரு சிறு 'டார்ச் லைட்'டையும் எடுத்தான். டார்ச் லைட்டின் விசையை அமுக்கித் தண்ட வாளத்தின் மீது விழும்படிச் செய்தான். ஒரு விநாடி நேரந்தான் விளக்கு எரிந்தது. அந்த ஒரு விநாடியில் அவன் பார்க்க வேண்டியதைப் பார்த்துக் கொண்டான். ஒரே பாய்ச்சலில் தாவிச் சென்று தண்டவாளத்தில் ஓரிடத்தில் போய் உட்கார்ந்தான். ஆயுதத்தைக் கொண்டு ஏதோ செய்தான். திருகைச் சுழற்றுவது போன்ற சத்தம் கேட்டது. பின்னர் முழுவதையும் உபயோகித்துத் தண்டவாளத்தைப் பெயர்த்து நகர்த்தினான்.


சோலைமலை இளவரசி:  1  2  3  4  5  6  7  8  9  10
11  12  13  14  15  16  17  18  19  20


இணைய பக்க முகவரி: http://www.chennailibrary.com/kalki/mis/solaimalaiilavarasi.html

பதிப்புரிமை © 2006 சென்னைநூலகம்.காம்.
அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
இந்த வலைதள பக்கத்தில் உள்ள தகவல்களை பதிப்பிக்கவோ,
ஒலிபரப்பவோ, வெளியிடவோ அல்லது விநியோகிக்கவோ கூடாது.

 அச்சிட       விமர்சிக்க       விருப்ப தளமாக்க
       முகப்பு பக்கமாக்க



வருகைப் பதிவு (25-09-2006 முதல்)
ad
இலக்கிய தகவல்கள்
தரவிறக்கம்
பிற செய்திகள்
ஆன்மீகம்




தமிழ் யுனிகோடில் அமைந்த இணைய தளம். பதிப்புரிமை © 2006 சென்னைநூலகம்.காம். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.