வீணை பவானி 1 இரவு ஒன்பது மணியிருக்கும். வானத்தில் கருமேகங்கள் சூழ்ந்திருந்தன. சிறு தூற்றல் போட்டுக் கொண்டிருந்தது. மூடி போட்ட வீதி விளக்குகளின் மங்கலான வெளிச்சத்தைப் பார்க்கும்போது வானம் ஏதோ சொல்ல முடியாத துயரத்துடன் கண்ணீர் விடுவது போல் தோன்றியது. இந்தக் காட்சியைப் பார்க்கச் சகியாமல் வீட்டுக்குள்ளே வந்தேன். என் உள்ளமும் சோர்வினால் பீடிக்கப்பட்டிருந்தது. இருட்டடிப்பு உபத்திரவத்தை முன்னிட்டு ஜன்னல் கதவுகளையெல்லாம் சாத்தி விட்டுப் பிரகாசமாக விளக்கைப் போட்டுக் கொண்டேன். மனத்திலுள்ள சோர்வை மாற்றுவதற்காகக் கதைப் புத்தகம் படிக்கலாமென்று ஒரு புத்தகத்தை எடுத்து வைத்துக் கொண்டேன்.
அது கடலூருக்கும், சிதம்பரத்துக்கும் இடையில் நேர்ந்த ரயில் விபத்தைப் பற்றிய செய்திதான். நேற்று ராத்திரி எழும்பூரிலிருந்து கிளம்பிய போட்மெயில் அங்கே பெரும் விபத்துக்கு உள்ளாயிற்று. காரணம் நன்றாகத் தெரியவில்லை. நகரில் பலவித வதந்திகள் உலவின. திடீரென்று பெருகிய மழை வெள்ளத்தினால் தண்டவாளம் பெயர்ந்து விட்டதாக உத்தியோக முறையில் செய்தி. அந்த ரயிலில் பெரிய உத்தியோகஸ்தர் யாரோ போவதாகத் தெரிந்து தண்டவாளத்தை யாரோ வேண்டுமென்று பிடுங்கிப் போட்டதாக ஒரு வதந்தி. விபத்தில் செத்துப் போனவர்களின் கணக்கைப் பற்றி உலவிய வதந்திகளுக்கு அளவே இல்லை. "நூறு பேர் செத்துப் போனார்கள். இருநூறு பேர் செத்துப் போனார்கள்" என்றெல்லாம் கேள்விப்பட்டபோது கூட என்மனம் அவ்வளவு கலங்கிவிடவில்லை. ஆனால், பத்திரிகையில் இறந்து போனவர்களின் பெயர்களை வரிசை வரிசையாகப் படித்து வந்த போது அதிலும் ஒரு குறிப்பிட்ட பெயர் வந்ததும் - ரயில் வண்டி கவிழ்ந்து என் மேலேயே விழுந்தது போலிருந்தது. வாசகர்களில் பலருக்கு ஐயம்பேட்டை கந்தப்பன் பெயர் ஞாபகமிருக்கலாம். "திருவழுந்தூர் சிவக்கொழுந்து" கதையை எனக்குச் சொன்ன தவுல் வித்வான் கந்தப்பன் தான். ரயில் விபத்தில் இறந்து போனவர்களின் ஜாபிதாவில் கந்தப்பப் பிள்ளையின் பெயரைப் பார்த்தவுடனேதான் எனக்கு அவ்வளவு மன வேதனை உண்டாயிற்று. அதென்னமோ பகவான் நம்மை அவ்விதம் படைத்து விட்டிருக்கிறார். அமெரிக்காவில் எரிமலை விபத்தில் இருபதினாயிரம் பேர் செத்துப் போனார்கள் என்று அறிந்தால், நமக்கு ஒரு உணர்ச்சியும் உண்டாவதில்லை. நமக்குத் தெரிந்த மனிதர்களில் ஒருவர் மரணமடைந்தார் என்ற செய்தி கேட்டால் நம்மை என்னமோ செய்கிறது. "ஆஹா! ஐயம்பேட்டை கந்தப்பனுக்கு இந்த முடிவா ஏற்படவேண்டும்? எப்பேர்ப்பட்ட மனுஷன்? என்ன தேசபக்தி? எத்தகைய நல்லொழுக்கம்? பழகியவர்களிடத்தில் தான் எவ்வளவு அபிமானம்? என்ன ரஸிகத்தனம்?" என்று எண்ணமிட்டுக் கொண்டிருக்கும்போது, வாசலில் குதிரை வண்டி வந்து நிற்கும் சத்தம் கேட்டது. "இந்த நேரத்தில் யார் வருகிறது?" என்று சிறிது வெறுப்புடன் எண்ணினேன். என் உள்ளம் அப்போதிருந்த நிலைமையில், யாரையாவது பார்ப்பதற்கோ, பேசுவதற்கோ பிடிக்கவில்லை. ஒரு நிமிஷத்துக்கெல்லாம் வாசற் கதவு திறந்தது. அடால்ப் ஹிட்லரோ, ஜெனரல் டோஜோவோ வாசற்படியில் வந்து நின்றிருந்தால் கூட, எனக்கு அவ்வளவு திகைப்பு ஏற்பட்டிருக்காது. அங்கு நின்றவர் வேறு யாருமில்லை; ஐயம்பேட்டை கந்தப்பன் தான். "பயப்பட வேண்டாம்! நான் தான் வந்திருக்கிறேன். என்னுடைய ஆவி இல்லை" என்று கந்தப்பனுடைய குரலைக் கேட்டதும், என்னுடைய திகைப்பு மாறி அளவிறந்த சந்தோஷம் உண்டாயிற்று. "வாருங்கள்! வாருங்கள்!" என்று அவருடைய கையைப் பிடித்து உள்ளே அழைத்து கொண்டு போய் உட்கார வைத்தேன். "என்ன சேதி? என்ன சமாசாரம்? ரயில் விபத்திலிருந்து எப்படிப் பிழைத்து வந்தீர்கள்? இப்போதுதான் பத்திரிகையில் உங்கள் பெயரைப் படித்து விட்டுக் கதிதலங்கிப் போனேன். அதெப்படி தப்புச் செய்தி அனுப்பினார்கள்? வெட்கக் கேடாக அல்லவா இருக்கிறது?" என்று கேள்விகளை அடுக்கிக் கொண்டே போனேன். "நல்லவேளை, நான் போகவே இல்லை; நேற்று இரவு வண்டியில் எனக்கு ஸீட் ரிசர்வ் செய்திருந்தேன். தவுல் முதலிய சாமான்களையும் முன்னால் கொண்டு போய் ஏற்றியாகி விட்டது. நான் ஸ்டேஷனுக்கு வருவதில் தான் இரண்டு நிமிஷம் தாமதமாயிற்று. நல்ல காலந்தான்." "ரயிலில் உங்கள் பெயர் கட்டித் தொங்கியதாக்கும். அதையும் தவுலையும் பார்த்துவிட்டுப் பத்திரிகை நிருபர்கள் உங்களையும் சேர்த்து வைகுண்டத்துக்கு அனுப்பிவிட்டார்கள் போலிருக்கிறது." "அப்படித்தான் இருக்க வேண்டும்." "உங்கள் வீட்டில் எல்லோரும் கவலைப்பட மாட்டார்களா? இன்றைக்கு ஏன் ஊருக்குப் போகவில்லை" என்று கேட்டேன். "ஊருக்குத் தந்தி கொடுத்து விட்டேன். உங்களைக் கொஞ்சம் பயமுறுத்தி விட்டுப் போகலாம் என்று வந்தேன்." "என்னையா பயமுறுத்தப் பார்த்தீர்கள்?" "ஆமாம்; மகுடபதி கதையில் வெறுமனேயாவது பெரியண்ணனுடைய ஆவி வந்து நின்றதாகச் சொல்லி எங்களையெல்லாம் பயமுறுத்தினீர்களல்லவா? அதற்குப் பழிக்குப் பழியாக..." "அதெல்லாம் கதையிலே நடக்கும். நிஜத்தில் நடக்குமா?" என்றேன். "நீங்கள் சொல்வது சுத்தத் தப்பு" என்றார் ஐயம்பேட்டை கந்தப்பன். "என்ன? அவ்வளவு கண்டிப்பாகச் சாப்புக் கொடுக்கிறீர்களே?" "ஆமாம்; வாழ்க்கையில் அந்த மாதிரி நடந்திருக்கிறது." "எந்த மாதிரி?" "செத்துப் போனதாக நினைத்திருந்த மனுஷர் திடீரென்று தோன்றியதனால் ஆபத்து நேர்ந்திருக்கிறது." "என்ன ஆபத்து?" "உயிருக்கே ஆபத்து!" ஏதோ ஒரு ரஸமான சம்பவத்தைச் சொல்லத்தான் ஐயம்பேட்டை கந்தப்பன் வந்திருக்கிறார் என்று அப்போது தெரிந்து கொண்டேன். "சொல்லுங்கள், கேட்கிறேன்; என் மனது இன்றைக்கெல்லாம் சரியாகவேயில்லை. ரொம்பவும் உற்சாகக் குறைவாயிருக்கிறது. உங்களுடைய கதையைக் கேட்டாலாவது." "என்னுடைய கதை உற்சாகந் தருவதல்ல; ரொம்பவும் சோகமானது. இன்னொரு நாளைக்கு வேண்டுமானால்..." "கூடவே கூடாது. மனத்தில் உற்சாகமில்லாத போது தான் சோகக் கதை கேட்க வேணும். சொல்லுங்கள்" என்றேன். 2
ஐயம்பேட்டை கந்தப்பப் பிள்ளை எப்போதும் ஒரு கேள்வியுடனே தான் கதையை ஆரம்பிப்பது வழக்கம். அவ்விதமே இப்போதும், தொண்டையைக் கனைத்துச் சரிப்படுத்திக்கொண்டு, "பூந்தோட்டம் பவானி என்று கேள்விப்பட்டதாக ஞாபகம் இருக்கிறதா?" என்றார். அந்த மாதிரி ஒரு பெயர் ஏதோ பூர்வ ஜன்மத்தில் கேள்விப்பட்டது மாதிரி எனக்கு இலேசாக ஞாபகம் வந்தது. கிராமபோன் பிளேட் கூட ஒன்றிரண்டு கேட்டிருக்கும் நினைவு வந்தது. ஆனால் நான் ஞாபகப்படுத்திக் கொண்டு பதில் சொல்லும் வரையில் கந்தப்பப் பிள்ளை காத்திருக்கவில்லை. மேலும் சொல்லத் தொடங்கினார். *****
இப்படிப்பட்ட திருவிழாக் கூட்டத்தில் திருக்கல்யாண மண்டபத்தில் சங்கீதக் கச்சேரிகள் நடக்கும். ஒவ்வொரு கச்சேரிக்கும் அபரிதமான கூட்டம் சேரும். அதிலும் பூந்தோட்டம் பவானியின் கச்சேரி என்றால் கேட்க வேண்டியதில்லை. அந்தக் காலத்தில் பெரிய கூட்டத்துக்கு உதாரணம் சொல்ல வேண்டுமானால் 'பூந்தோட்டம் பவானியின் கச்சேரிக்குக் கூடுகிறார் போல் கூடியிருக்கிறதே!' என்பார்கள். அப்படி ஜனக் கூட்டம் கூடியிருக்கும் இடத்தில் கசகசவென்று எவ்வளவு சந்தடியிருக்கும்? ஆனால் பவானியின் விரல்கள் வீணையின் தந்திகளைத் தொட வேண்டியதுதான்; முகத்தைச் சிறிது நிமிர்த்திக் கொண்டு அவளுடைய இனிய குரலைக் காட்டிச் சுருதி கூட்ட வேண்டியது தான்; அவ்வளவு இரைச்சலும் ஒரு நொடியில் 'கப்' என்று அடங்கிவிடும்! இரைச்சல் ஓடுவதும், பவானியின் இனிய குரல் ஒலியும் வீணைத் தந்தியின் நாதமும் சேர்ந்து கிளம்புவதும், ஒரு இந்திரஜாலம் போல் தோன்றும். பவானியின் கச்சேரி கேட்பதற்குச் சந்தர்ப்பம் கிடைத்தால், நான் அதை விடுவதில்லை. அத்தகைய சந்தர்ப்பங்கள் எனக்கு அடிக்கடி கிடைப்பதும் உண்டு. கல்யாணங்களிலோ, கோவில் உற்சவங்களிலோ, பவானியின் கச்சேரிகள் நடக்குமிடங்களில், நானும் என்னுடைய தொழிலுக்காகப் போய்ச் சேரும்படி அடிக்கடி நேரும். பவானியின் கச்சேரி கேட்டுக் கொண்டிருக்கும் போது, எனக்கு அடிக்கடி கண்ணில் ஜலம் வந்து விடும். பக்கத்திலுள்ளவர்கள் பார்த்து பரிகசிக்கப் போகிறார்களே என்று ஏதோ தலை வலிக்கிற பாவனையாகத் தரையை நோக்கிக் குனிந்து கொள்வேன். கண்ணீருக்குக் காரணம் என்ன என்றா கேட்கிறீர்கள்? அது தான் எனக்குத் தெரியாது. ஆனந்தக் கண்ணீர் தானா அல்லது இவ்வளவு அற்புதமான சங்கீதம் நீடித்து நிற்க வேண்டுமே என்ற அநுதாபத்தில் பெருகிய கண்ணீரா? ஜனங்கள் பேசிக் கொண்டு போவார்கள். "இது எங்கேடா நிலைத்து நிற்கப் போகிறது? இப்படிப் பாடினால் உலகம் தாங்குமா!" என்று கவலைப்படுவார்கள். கச்சேரி முடிந்த பிறகு நான் பவானியைப் போய்ப் பார்ப்பேன். "தங்கச்சி! அம்மாவை திருஷ்டி சுற்றிப் போடச் சொல்லு!" என்பேன். பவானியின் தாயாரும் பெண்ணை எத்தனையோ கண்ணும் கருத்துமாய்த்தான் காப்பாற்றி வந்தாள். ஆனாலும், கடைசியில் திருஷ்டி பட்டே விட்டது. பவானியின் தாயாருக்குப் பூந்தோட்டம் பிரஹதாம்பாள் என்று பெயர். அவள் பரம்பரையான பணக்காரி. அதோடு அவளுடைய குணத்திலும் பிரசித்தி பெற்றவள். ஒரு பெரிய மனிதரோடு மட்டும் சிநேகம் வைத்துக் கொண்டுடிருந்து, அவருக்கு உண்மையான தர்மபத்தினியாக நடந்து கொண்டிருந்தாள். அவன் காலஞ்சென்ற பிறகு அவள் பகவானுடைய பக்தியில் சிந்தையைச் செலுத்தி வந்தாள். தாயாருடைய சுபாவம் பெண்ணிடமும் இருந்தது. நெற்றியில் திவ்வியமாக விபூதியைப் பூசிக் கொண்டு தான் கச்சேரிக்கு வந்து உட்காருவாள். பக்திரஸமுள்ள பாட்டுக்களைத்தான் பாடுவாள். வீட்டிலே தினம் ஸ்நானம், பூஜை எல்லாம் பிரமாதமாக நடக்கும். இதனாலெல்லாம் பவானிக்கு ஞானப் பைத்தியம் பிடித்திருப்பதாகப் பலர் பேசினார்கள். பிரஹதாம்பாளுக்குத் தன் பெண்ணை ஒரு யோக்கிமான நல்ல பிள்ளையாகப் பார்த்துக் கல்யாணம் பண்ணிக் கொடுக்க வேண்டுமென்று விருப்பம். ஆனால் பவானியோ தான் ஆண்டாளைப் போல் கன்னியாகவே இருந்து கடவுளின் பாதத்தை அடையப் போவதாகச் சொல்லிக் கொண்டிருந்தாள். இவர்கள் இரண்டு பேருடைய எண்ணமும் நிறைவேறவில்லை. எல்லாம் ஒரு மனுஷன் பராபரியாய் யாரிடமோ சொல்லிக் கொண்டு போன ஒரு வார்த்தையில் அடிபட்டுப் போய்விட்டது. ஒரு தடவை திருவாரூர்க் கோவிலில் கச்சேரி செய்து விட்டுப் பவானி வெளியே வந்து வண்டியில் ஏறிக் கொள்ளப் போகும் சமயத்தில், ஒரு மனுஷன் தன் சிநேகிதனுடன் பேசிக்கொண்டு போன ஒரு வார்த்தை அவள் காதில் தற்செயலாக விழுந்தது. "பாட்டு, பாட்டு என்கிறாயே, பிரமாதமாய் பாட்டு இருக்கட்டும், அப்பா! அவள் முகத்திலே சொட்டுகிற களையைச் சொல்லு!" என்றான், அந்த மனிதன. இதைக் கேட்டதும் பவானிக்குச் சிரிப்பு வந்தது. கலீரென்று சிரித்துவிட்டாள். யார் சிரிக்கிறதென்று அந்த மனுஷன் திரும்பிப் பார்க்கவே பக்கத்தில் பவானி நிற்பதைக் கண்டு வெட்கிப் போனான். பவானியும் சட்டென்று வண்டியில் ஏறிக் கொண்டாள். விதி என்று சொல்லுகிறார்களே! இது தான் விதி! அவ்வளவு கூட்டத்திற்கு நடுவிலே, இருட்டிலே அந்த மனுஷன் அந்த வார்த்தையைப் பவானி வண்டி ஏறுகிற இடத்திலே வந்து சொல்வானேன்? அது இவள் காதில் விழுவானேன்? பவானி வீட்டுக்குப் போனதும், அவள் தாயாரிடம் "அம்மா! நீ ஏன் இன்றைக்கு நான் கச்சேரிக்குப் போன போது கைக்குட்டை வைக்கவில்லை?" என்று கேட்டாளாம். அவள் தாயார் "இதென்ன கேள்வி?" என்று சும்மாயிருக்கவே, "மண்டபத்திலே இறுக்கம் அசாத்தியம், ஓயாமல் வியர்த்துக் கொட்டிக் கொண்டே இருந்தது" என்றாளாம். அதோடு விடவில்லை. "கேட்டுக்கோ, அம்மா! என் முகத்திலே வியர்வை கொட்டிக் கொண்டே இருந்ததா? அதைப் பார்த்து விட்டு ஒரு மனுஷர், 'களை சொட்டுகிறது' என்று சொல்லிக் கொண்டு போனார் அம்மா" என்று கூறி இடி இடி என்று சிரித்தாளாம். இதையெல்லாம் பவானியும், அவள் தாயாரும் எனக்கு அடிக்கடிச் சொல்வார்கள். இப்படி வேடிக்கையும் சிரிப்புமாக ஆரம்பித்த காரியம்தான் பிற்பாடு பெரிய வினையாக முடிந்தது. 3
அந்த மனுஷரும் எனக்குத் தெரிந்தவர்தான். மன்னார்குடிக்குப் பக்கத்தில் தும்பை வனம் என்று ஒரு கிராமம் இருக்கிறது. அந்த ஊரில் அவர் மிராசுதார்; கோபாலசாமி என்று பெயர். இளம் வயது தான். அவருடைய கல்யாணத்துக்குக் கூட நான் தவுல் வாசித்திருக்கிறேன். கல்யாணம் நடந்து அப்போது ஐந்தாறு வருஷத்துக்கு மேல் இருக்கும். அவருக்குக் குழந்தைகளும் உண்டு. இந்த மனுஷருக்கும் பவானிக்குந்தான் விதி வசத்தினால் தொடர்பு ஏற்பட்டது. அவர்கள் மறுபடியும் எப்படிச் சந்தித்தார்கள், சிநேகம் எப்படி வளர்ந்தது என்பதெல்லாம் எனக்குத் தெரியாது. விதி இருக்கும் போது எப்படியாவது வழியும் ஏற்பட்டு விடுகிறது. பவானியின் ஞானப் பைத்தியம் நீங்கி விட்டது என்ற பிரஸ்தாபம் மட்டும் எங்கும் பரவியது. அதோடு தும்பைவனம் கோபாலசாமி முதலியாரின் பெயரும் தஞ்சாவூர் ஜில்லாவெங்கும் அடிபட்டது. இந்தச் செய்தியெல்லாம் எனக்கு அவ்வளவு நிம்மதி அளிக்கவில்லை. என்னுடைய அபிப்பிராயந்தான் உங்களுக்குத் தெரியுமே? இம்மாதிரி ஒரு ஜாதியும், இந்த மாதிரி ஒரு தொழிலும் கூடவே கூடாது என்பதுதான். 'கடைசியில் இப்படித்தானா ஆக வேண்டும்? யாரையாவது ஒழுங்காகக் கல்யாணம் செய்து கொண்டிருக்கக் கூடாதா?' என்று எண்ணினேன். கோபாலசாமி முதலியாரின் மனைவி, மக்களை நினைத்தும் வருத்தப்பட்டேன். இதையெல்லாவற்றையும் விட இந்த சிநேகத்தினால் பவானியின் தெய்வீக சங்கீதத்துக்குக் கேடு வராமலிருக்க வேண்டுமே என்ற கவலையும் உண்டாயிற்று. நல்ல வேளையாக அப்படி ஒன்றும் நேரவில்லை - கோபாலசாமி முதலியார் நல்ல சங்கீத ரஸிகர். அதோடு பவானியின் பாட்டைக் குறித்து அவருக்கு ரொம்பப் பெருமையும் இருந்தது. என்னிடம் ஒரு சமயம் அவர் சொன்னது நன்றாய் ஞாபகமிருக்கிறது. "பவானியை மற்ற மனிதர்களைப் படைத்தது போல் பிரம்மா படைக்கவில்லை; கல்யாணியையும், மோகனத்தையும் செஞ்சுருட்டியையும் சேர்த்துப் படைத்திருக்கிறார்! நீர் வேண்டுமானால், பாரும்! பவானி செத்துப் போகும் போது, அவளுடைய உடம்பு அப்படியே கரைந்து உருகி ராகங்களாகப் போய்விடும்!" என்று கோபாலசாமி முதலியார் சொன்னபோது, "இருக்கலாம்; ஆனால் அதை நீங்களும் நானும் பார்க்க மாட்டோ ம். நமக்குப் பிறகு பவானி ரொம்ப காலம் பாடிக் கொண்டிருக்கும்" என்றேன். ஆனால் வருங்காலத்தையறியும் சக்தியைப் பகவான் நமக்குக் கொடுக்கவில்லையே? கொடுத்திருந்தால் உலகத்திலே துன்பம் ஏது? இன்பந்தான் ஏது? முதலில், இதெல்லாம் எனக்கு விந்தையாயிருந்தது; விளங்காத மர்மமாயிருந்தது. அப்புறம் அப்புறம், ஒருவாறு விஷயம் புரிந்தது. அன்பு, காதல் என்று சொல்கிறார்களே, ஸ்வாமி, ரொம்ப அதிசயமான காரியம். காதலில் மனிதர்கள் அடைவது என்ன? துன்பமா? இன்பமா? சொல்ல முடியாத துயரமா? அளவிட முடியாத ஆனந்தமா? பவானியையும் தும்பை வனம் முதலியாரையும் பற்றி நான் கேள்விப்பட்ட விஷயங்கள் இம்மாதிரி சந்தேகங்களையெல்லாம் உண்டாக்கின. அவர்கள் சந்தோஷமாயிருந்த காலம் அதிகமா, சண்டை போட்டுக் கொண்டு வேதனையில் முழுகியிருந்த நாட்கள் அதிகமா என்று சொல்ல முடியாமலிருந்தது. 'இந்தப் பெண்ணுக்கு ஏதோ பிடித்திருக்கிறது தம்பி!' என்று அவள் தாயார் சொன்னாள். சில சமயம் பவானி எல்லார் மேலும் எரிந்து எரிந்து விழுவாளாம். சின்னச் சின்னக் காரியத்துக்கெல்லாம் ரகளை செய்வாளாம். கூச்சல் போடுவாளாம். முகத்தைக் கூட அலம்பிக் கொள்ளாமல் பிரமஹத்தி பிடித்தது போல் உட்கார்ந்திருப்பாளாம். இன்னும் சில சமயம் இதற்கு நேர்மாறாக இருக்குமாம். பிரமாதமாக அலங்காரம் செய்து கொள்வாளாம். ஒரே சிரிப்பும் குதூகலமுமாயிருப்பாளாம். இதையெல்லாம் அறிந்த போது, பவானியின் சங்கீதத்தில் தொனித்த மாறுதல்களின் காரணத்தை ஒருவாறு அறிந்தேன். 'யாராவது மந்திரவாதியை அழைத்து வந்து பார்க்கச் சொல்லலாமா' என்று பவானியின் தாயார் கேட்டதற்கு 'மந்திரமும் வேண்டாம் மாயமும் வேண்டாம், நாளடைவில் எல்லாம் தானே சரியாய்ப் போய்விடும்' என்று சொல்லிவிட்டு வந்தேன். 4
இரண்டு மூன்று வருஷங்கள் சென்றன. இந்தக் காலத்தில் தும்பை வனம் முதலியாருடைய சொந்தக் காரியங்கள் ரொம்பவும் சீர்கெட்டு வந்தன. அவருக்கு விரோதிகள் அதிகமாகி வந்தார்கள். பவானி விஷயத்தில் எத்தனையோ பணக்காரப் பிரபுக்களுக்கு அபிப்பிராயம் இருந்திருக்குமென்பது எதிர்பார்க்கக் கூடியதுதானே? அவர்களெல்லாம் கோபாலசாமி முதலியாரைத் தீர்த்துக் கட்டி விடுவதென்று கங்கணம் கட்டிக் கொண்டார்கள். முதலில் ஒரு கோவில் பஞ்சாயத்து சம்பந்தமாகக் கேஸ் ஏற்பட்டது. அந்தக் கோவில் தர்மகர்த்தாக்கள் மூன்று பேரில் கோபாலசாமி முதலியார் ஒருவர். மற்ற இரண்டு பேரும் இவரைத் தள்ளிவிட்டு காரியங்களை நடத்தியதுடன், கோவில் உற்சவத்தின் போது இவரை அவமரியாதையாக நடத்தி விட்டார்கள். கோபாலசாமிக்குக் கோபம் வந்து கேஸ் போட்டார். இதிலிருந்து சிவில் கேஸுகளும் கிரிமினல் கேஸுகளும் முளைத்துக் கொண்டே இருந்தன. அக்கம் பக்கத்து மிராசுதார்கள், பிரபுக்கள் எல்லாரும் கோபாலசாமியைத் தொலைத்துவிட்டு மறுகாரியம் பார்ப்பது என்று கங்கணம் கட்டிக் கொண்டு, பிடிவாதமாக வேலை செய்தார்கள். கோபாலசாமிக்கு நாளுக்கு நாள் கடன் முற்றிக் கொண்டு வந்தது. வருஷா வருஷம் நிலத்தை விற்றுக் கொண்டு வந்தார். ஒரு தடவை தும்பைவனம் கோவில் உற்சவத்துக்கு நான் போயிருந்த சமயத்தில், முதலியார் வீட்டுக்குப் போயிருந்தேன். அவர் சம்சாரம் ஐயம்பேட்டைக்குப் பக்கத்து ஊர்ப் பெண்தான். அந்த அம்மாளை எனக்கு நன்றாகத் தெரியும். பாவம்! அவள் ஒரே துக்கத்தில் ஆழ்ந்திருந்தாள். "கந்தப்பா! இவ்வளவும் அந்தப் பூந்தோட்டத்து மூதேவியால் தான் வந்தது!" என்று சொல்லி அழுதாள். எனக்கு மனது ரொம்பவும் கஷ்டப்பட்டது. இந்த மாதிரி ஒரு ஜாதியை நம் தேசத்தில் எதற்காக ஏற்படுத்தினார்கள் என்று எண்ணி மனம் நொந்தேன். அடுத்த தடவை திருவாரூருக்குப் போகும் போது என் கோபத்தை பவானியின் மேல் காட்டி விடுவதென்று தீர்மானித்துக் கொண்டேன். ஆனால், அங்கே போய்ப் பவானியின் நிலையைப் பார்த்தபோது, என் கோபமெல்லாம் பறந்து போய் விட்டது. சோகமே உருவெடுத்தவள் போலிருந்தாள். "என்னால் இப்படியெல்லாம் கஷ்டம் அவருக்கு வந்து விட்டதே!" என்று சொல்லிச் சொல்லி உருகினாள். அவளுக்கு சமாதானமாக நான், "நீ என்ன அம்மா செய்வாய்? உன் பேரில் என்ன தப்பு?" என்று திருப்பித் திருப்பிச் சொல்ல வேண்டியிருந்தது. "அண்ணே! அவரை அவ்விடத்து நிலம் வீடு வாசல் எல்லாவற்றுக்கும் தலை முழுகி விட்டு இங்கேயே வந்து விடும்படிச் சொல்லிக் கொண்டிருக்கிறேன். கேட்க மாட்டேனென்கிறார். நீயாவது சொல்லேன்; தினம் பொழுது விடிந்தால் கோர்ட்டுக்குப் போவதே வேலையாகி விட்டதே, என்னத்திற்காக இந்த மாதிரி வம்புக்கும் தும்புக்கும் போக வேண்டும்? நாலு குடும்பத்தைக் காப்பாற்றுவதற்கு வேண்டிய சொத்து இங்கே இருக்கிறதே? இதையெல்லாம் யார் கட்டிக் கொண்டு போகப் போகிறார்கள்?" என்றாள். "அது நடக்கிற காரியமா தங்கச்சி! அவர் ஆண் பிள்ளை இல்லையா? ரோஸம் இராதா? வீண் வம்புக்கு இழுக்கிறவர்களுக்குப் பயந்து கொண்டு ஊரை விட்டு வந்து விடுவாரா? அதுவும் இங்கே? அவர் சம்மதித்தாலும் சம்சாரம் குழந்தைகள் இருக்கிறார்களே?" என்றேன். பிறகு பவானி, அவருடைய சம்சாரத்தையும் குழந்தைகளையும் பற்றிக் கேட்டுக் கொண்டே இருந்தாள். பவானியின் தாயாரிடம் பேசினேன். "ஏன் அக்கா என்னத்துக்காக நமக்கு இந்தக் கெட்டப் பெயர். பவானியினாலே ஒரு பெரிய குடும்பம் அழிந்து போகிறது என்று இந்த ஜில்லா முழுவதும் பேசிக் கொள்கிறார்களே?" என்றேன். "யார் என்னத்தையாவது சொல்லட்டும் தம்பி; அவர்கள் இரண்டு பேரையும் பிரிப்பது மகாபாவம். பிரித்தால் என் மகள் உயிரை வைத்துக் கொண்டிருக்க மாட்டாள்" என்றாள். "இப்படி எத்தனையோ பேர் சொல்லியிருக்கிறார்கள் அக்கா! நாம் பார்த்ததில்லையா!" என்றேன் நான். "பவானியின் சமாச்சாரம் உனக்குத் தெரியாது தம்பி" என்றாள். பிறகு, "இப்பொழுது அவர்களுக்குள் எப்படியிருக்கிறது? முன்னேயெல்லாம் போல் கோபதாபம் உண்டா?" என்று கேட்டேன். பவானியின் குணமே அடியோடு மாறிவிட்டதென்றும் அவள் சாந்தமே உருக் கொண்டவளாகி விட்டாள் என்றும் தெரிந்தது. இதற்கு நேர்மாறாகக் கோபாலசாமி முதலியாருக்குக் கோபதாபங்கள் அதிகமாகி வந்தனவாம். அதோடு, அடிக்கடி இல்லாத பொல்லாத சந்தேகங்கள் அவருக்குத் தோன்றி வந்தனவாம். "இது என்ன மனித சுபாவம்?" என்று எனக்கு ஆச்சரியமாயிருந்தது. பவானி எதற்காக அவரிடம் அன்பு வைக்க வேண்டும்? நிர்ப்பந்தம், கட்டாயம் ஏதாவது உண்டா? தன் மனமொப்பி அவரையே தெய்வம் என்று எண்ணி இருப்பவள் மேல் ஒரு மனிதன் சந்தேகப்படுவதென்றால்? எனக்கு ரொம்பக் கோபமாயும் வெறுப்பாயுமிருந்தது. நமக்கென்னவென்று பேசாமல் போய் விட்டேன். இதற்கப்புறம் ஏறக்குறைய ஒரு வருஷ காலம் ஏதேதோ அசௌகரியங்களினால் நான் திருவாரூர்ப் பக்கம் போகவில்லை. பவானியின் தாயார் இறந்து போனாள் என்று தெரிந்ததும், துக்கம் விசாரிப்பதற்குப் போயிருந்தேன். அதற்கப்புறம் அங்கே போவதையே நிறுத்தி விட்டேன். "நமக்கு என்னத்திற்கு வம்பு?" என்ற எண்ணந்தான் காரணம். தும்பைவனம் முதலியாரின் காரியங்கள் வரவரச் சீர்கெட்டு வருகின்றன என்று மட்டும் அடிக்கடி காதில் விழுந்து கொண்டிருந்தது. சென்னைப் பட்டிணத்தில் ஹைகோர்ட்டில் அவருக்கு ஒரு பெரிய கேஸ் நடந்து வந்தது. அதில் தோற்றுப் போனால், ஆள் திவால்தான் என்று சொன்னார்கள். இப்படியிருக்கும் போது தான் ஒருநாள் அந்தப் பயங்கரமான ரயில் விபத்தைப் பற்றி செய்தி வந்தது. விழுப்புரத்துக்கும், கூடலூருக்கும் நடுவில் ரயில் கவிழ்ந்துவிட்டது. மூன்று வண்டிகள் அடியோடு நாசமாயின. நாற்பது ஐம்பது பேருக்கு மேல் செத்துப் போனார்கள் என்று தெரிந்தது. அந்தக் காலத்திலிருந்தே எனக்குப் பத்திரிகை படிப்பதில் ஆசை உண்டு. அதுவும் இந்தப் பயங்கர ரயில் விபத்து நடந்த சமயத்தில் அதைப் பற்றிய விவரங்களைப் படிப்பதற்காக, வெகு ஆவலுடன் சுதேச மித்திரன் பத்திரிகையை எதிர்பார்த்துக் கொண்டிருந்தேன். விபத்து நடந்த மறுநாள், பத்திரிகையில் இறந்து போனவர்களின் பெயர் விவர ஜாபிதா வந்திருந்தது. அதில் தும்பைவனம் முதலியாரின் பெயரைப் பார்த்ததும், எனக்கு எப்படி இருந்திருக்கும் என்று நீங்களே கற்பனை செய்து கொள்ள வேண்டியதுதான். உடனே எனக்குப் பூந்தோட்டம் பவானியின் கதிதான் ஞாபகத்திற்கு வந்தது. ஐயோ, அந்தப் பெண் ஒரு வருஷத்திற்குள்ளே தாயாரையும் இழந்து, ஆசை நாயகனையும் இழந்து, அநாதையாய்ப் போய் விட்டாளே? இனிமேல், அவளுடைய வாழ்க்கை எப்படியாகுமோ? ஒரு வாரத்துக்கெல்லாம் மன்னார்குடிக்குப் போக வேண்டியிருந்தது. அங்கிருந்து அப்படியே தும்பை வனத்துக்குப் போனேன். முதலியாரின் மனைவி பட்டத் துக்கத்தையும் அழுத அழுகையையும் பார்க்கச் சகிக்கவில்லை. தகப்பனாரை இழந்த குழந்தைகளைப் பார்க்கவும் பரிதாபமாய்த்தானிருந்தது. நல்ல வேளையாக ஊரிலிருந்து அவர்களுடைய தாத்தாவும் பாட்டியும் வந்திருந்தார்கள்! குழந்தைகளை அவர்கள் பார்த்துக் கொண்டதுடன், பெண்ணுக்கும் தேறுதல் கூறினார்கள். "என்ன செய்வதடி, அம்மா? உன் தலையெழுத்து அப்படியிருந்தது. குழந்தைகளுக்காக நீ உயிரை வைத்துக் கொண்டிருக்க வேண்டுமோ, இல்லையோ?" என்று சொல்லித் தேற்றி, பட்டினி கிடக்காமல் அரை வயிறாவது சாப்பிடும்படியும் பலவந்தப்படுத்தினார்கள். நானும் எனக்குத் தெரிந்தவரையில் ஆறுதல் சொல்லிவிட்டுக் கிளம்பினேன். இவர்களைப் பார்த்த பிறகு பவானியையும் அவசியம் பார்க்க வேண்டுமென்று எனக்கு ஆவல் உண்டாயிற்று. நேரே திருவாரூருக்குப் போனேன். அவளுடைய வீட்டுக்குப் போகும்போது, என் மனம் ரொம்பவும் வேதனைப்பட்டது. ஒரே துக்கசாகரத்தில் மூழ்கியிருப்பாளே, எப்படி அவளைப் பார்த்துப் பேசுகிறது, எப்படி ஆறுதல் சொல்கிறது என்று என் மனம் தவித்தது. ஆனால் வீட்டுக்குள் போய் பவானியைப் பார்த்ததும், ஒருவாறு கவலை நீங்கிற்று. ஏனெனில், நான் பயத்துடன் எதிர்பார்த்தபடி அவள் கண்ணீருங் கம்பலையுமாய்ப் படுத்துக் கொண்டிருக்கவில்லை. என்னைக் கண்டதும் அலறி அழவில்லை. சாதாரணமாய்த்தான் இருந்தாள். "வாருங்க அண்ணே!" என்று ஆர்வத்துடன் என்னை அழைத்தாள். கவலை நீங்கிற்று என்றா சொன்னேன்? ஆமாம்; கவலை நீங்கிற்று என்பது தான் உண்மை. ஆனால் மனத்திற்குள் பெரும் ஏமாற்றமும் உண்டாயிற்று. கடைசியில் 'சாதிக்குணம்' என்று உலகம் சொல்வது சரியாய்ப் போய் விட்டதல்லவா? தாலி கட்டிய மனைவி அங்கே படுகிற துக்கத்துக்கும், இங்கே இவள் சாதாரணமாய் வந்தவர்களை 'வா' என்று அழைத்துக் கொண்டிருப்பதற்கும் எவ்வளவு வித்தியாசம்? அதையெல்லாம் நான் வெளியில் காட்டிக் கொள்ளவில்லை. என்னுடைய பொறுப்பைக் கழித்துக் கொள்வதற்காக, ஏதோ ஆறுதல் வார்த்தை கூறிவிட்டுக் கிளம்பினேன். கிளம்பும் போது பவானி "அண்ணே! நவராத்திரி வெள்ளிக்கிழமையன்று, அம்மன் சந்நிதியில் கச்சேரி செய்யப் போகிறேன், நீங்கள் கட்டாயம் வரவேணும்" என்றாள். எனக்குச் சுருக்கென்று தைத்தது. கச்சேரியா இதற்குள்ளேயா? "இந்த வருஷம் கச்சேரி செய்ய வேண்டியதுதானா, தங்கச்சி! அடுத்த வருஷம் பார்த்துக் கொள்ளக்கூடாதா?" என்றேன். "இல்லே அண்ணே! கச்சேரி செய்வதாக முன்னமே ஒப்புக் கொண்டு விட்டேன். உற்சவப் பத்திரிகையிலே கூடப் போட்டு விட்டார்கள். அதைமாற்ற இஷ்டமில்லை" என்றாள். எனக்கு அப்போது அவள் மீதும், கோவில் தர்மகர்த்தாக்கள் மீதும் கூடக் கோபம் வந்தது. "சௌகரியப்பட்டால் வருகிறேன், தங்கச்சி" என்றேன். "அப்படிச் சொல்லக் கூடாது அண்ணே! ஒரு வேளை இது தான் நான் செய்கிற கடைசிக் கச்சேரியாயிருக்கும். நீங்கள் கட்டாயம் வர வேண்டும்" என்றாள். இதைக் கேட்டதும் என் மனம் உருகிவிட்டது. "ஏனம்மா! அப்படிச் சொல்கிறாய்? எது எப்படியானாலும் உன் சங்கீதம் மட்டும் வளர வேண்டும்" என்றேன். பிறகு நவராத்திரி வெள்ளிக்கிழமைக்கு அவசியம் வருவதாகச் சொல்லிவிட்டு, விடைபெற்றுக் கொண்டு சென்றேன். 5
பவானிக்கு வாக்குக் கொடுத்தபடியே நவராத்திரி வெள்ளிக்கிழமை அன்று திருவாரூருக்குப் போனேன். அவள் வீட்டுக்கு நான் போனபோது கச்சேரிக்கு அவள் கிளம்புகிற சமயமாயிருந்தது. பவானியைப் பார்த்ததும் நான் பிரமித்துப் போய்விட்டேன். அவ்வளவு பிரமாதமாக ஆடை ஆபரண அலங்காரங்களைச் செய்து கொண்டிருந்தாள். கல்யாண மண்டபத்துக்குப் போகும் பெண் மாதிரி தோன்றினாள். இயற்கையிலேயே நல்ல ரூபவதி. இப்போது பார்த்தால், தேவலோகத்திலிருந்து ரம்பை, ஊர்வசி, மேனகை, திலோத்தமை ஆகியவர்களில் ஒருத்தி இறங்கிப் பூலோகத்துக்கு வந்து விட்ட மாதிரியே இருந்தது. மனதிற்குள் எனக்கு ஏற்பட்ட வேதனையைச் சொல்லி முடியாது. என்னைப் பார்த்ததும் பவானி புன்னகையுடன், "அண்ணே! வந்து விட்டீர்களா" என்றாள். எனக்கு எரிச்சல் பற்றிக் கொண்டு வந்தது. இருந்தாலும் "ஆமாம்; வந்துவிட்டேன் தங்கச்சி!" என்று சாவதானமாகப் பதில் சொன்னேன். "அண்ணே! இன்று காலையிலிருந்தே உங்களை நான் எதிர் பார்த்துக் கொண்டிருந்தேன். போனால் போகட்டும். கச்சேரி முடிந்ததும் நீங்கள் நேரே இங்கு வரவேணும், ரொம்ப முக்கியமான காரியம்; தவறக் கூடாது" என்றாள். "ஆகட்டும் தங்கச்சி!" என்றேன். "உங்கள் தலைமேல் ஆணை! கட்டாயம் வரவேணும்" என்று சொல்லிவிட்டுப் பவானி வண்டியில் போய் ஏறிக் கொண்டாள். பவானி இந்த மாதிரிப் பேசி நான் கேட்டதில்லை. 'என்னமோ விஷயம் இருக்கிறது. எல்லாம் இராத்திரி தெரிந்து போகிறது' என்று எண்ணிக் கொண்டு கோவிலுக்குப் போனேன். என் வாழ்நாளில் நானும் எத்தனையோ சங்கீதக் கச்சேரிகள் கேட்டிருக்கிறேன். பிரபல வித்துவான்கள், பாடகிகள் எல்லாருடைய பாட்டையும் கேட்டிருக்கிறேன். ஆனால், அந்த நவராத்திரி வெள்ளிக்கிழமையன்று பவானி செய்த கச்சேரியைப் போல் கேட்டதும் கிடையாது, கேள்விப்பட்டதும் இல்லை. பவானியின் குரல் அன்று தேனாக இருந்தது. விரல் வீணையின் தந்தியை மீட்டிய போது அமுதவாரி பெருகிற்று. இதையெல்லாம் விட அன்று அவளுடைய பாட்டில் இன்னும் ஏதோ ஒன்று இருந்தது! அது கேட்பவர்களின் இருதயத்தில் ஒரு அதிசயமான இன்ப வேதனையை உண்டு பண்ணிற்று. சபையில் அன்று ஒரே நிசப்தம். மூச்சு விடும் சப்தம் கூடக் கேட்கவில்லை. 'ஆஹா', 'பேஷ்', 'சபாஷ்' முதலிய குரல்களும் இல்லை. எல்லாரும் மந்திரத்தால் கண்டுண்டது போல், அந்தத் தெய்வீக சங்கீதத்தை அனுபவித்துக் கொண்டிருந்தார்கள். கடைசியில் பவானி 'பால் நினைந்தூட்டும் தாயினும் சாலப் பரிந்து' என்ற திருவாசகத்தைக் காம்போதி ராகத்தில் பாடியபோது நான் கர்ப்பக்கிரஹத்துக் குள்ளிருந்த அம்மன் விக்ரஹத்தை நோக்கினேன். இந்தப் பாட்டைக் கேட்டுவிட்டு, அந்தக் கல் விக்ரஹம் உருகிக் கரைந்து போகவில்லையே என்று எனக்கு ஆச்சரியமளித்தது. ஆனால் ஒரு தடவை விக்ரஹத்தின் கண்களில் நீர்த்துளிகள் நின்றது போல் தோன்றியது. இது என்ன பிரமை என்று என் கண்களைத் துடைத்துக் கொண்டு, சுற்றுமுற்றும் ஜனங்களைப் பார்த்தேன். சபை ஓரமாக நாலாபுரத்திலும் ஜனங்கள் சுவர் வைத்தாற் போல் நின்று கொண்டிருந்தார்கள். அந்தக் கும்பலின் பின் வரிசையில் ஒரு மூலையில் நின்ற ஒரு முகத்தின் மேல் தற்செயலாக என் பார்வை விழுந்தது. அந்த மனுஷர் தலையில் பாதி நெற்றியை மறைத்த பெரிய முண்டாசுக் கட்டிக் கொண்டிருந்தார். கண்வலி வந்தவர்கள் போட்டுக் கொள்வது போன்ற பெரிய பச்சைக் கண்ணாடி அவர் கண்களை மறைத்தது. எதனாலேயோ திரும்பத் திரும்ப அந்த முகத்தின் மீது என் பார்வையும் கவனமும் சென்றன. அதற்குப் பிறகு பாட்டில் கவனம் குன்றியது. "பார்த்த முகம் மாதிரியிருக்கிறதே, யாராயிருக்கும்?" என்று அடிக்கடி மனது யோசித்தது. சட்டென்று உண்மை தெரிந்தது. என் உடம்பெல்லாம் பதறியது. ஏதோ விபரீதம் நேரிடப் போகிறது என்று மனதிற்குள் ஏதோ சொல்லிற்று. நானும் கூட்டத்தின் ஓரத்தில் தான் இருந்தேனாதலால், மெதுவாக எழுந்திருந்து நின்று கொண்டிருந்த ஜனங்களின் பின்புறமாக சென்று, அந்தப் பச்சைக் கண்ணாடிக்காரரின் சமீபத்தில் போய் நின்றேன். கச்சேரி முடிந்தது! எல்லோருக்கும் முன்னால் அந்த மனுஷர் விரைவாக அவ்விடமிருந்து கிளம்பிச் சென்றார். நானும் பின்னோடு போனேன். கோவிலுக்கு வெளியில் கொஞ்சம் ஒதுக்குப் புறமான இடத்துக்கு வந்ததும், நான் அவருடைய கையைப் பிடித்துக் கொண்டு, "என்ன தம்பி! இது என்ன வேஷம்?" என்று கேட்டேன். கையை உதறிய கோபாலசாமி முதலியார் என்னைப் பார்த்ததும், "யார், கந்தப்பனா?" என்றார். பிறகு அவர் "ஆமாம் கந்தப்பா! ஆமாம் வேஷந்தான். இந்த உலகமே வேஷந்தான். பார்த்தாயல்லவா உன் தங்கச்சி போட்ட வேஷத்தை? முன்னே போட்டது ஒரு வேஷம்" என்று மனங் கசந்து பேசிக் கொண்டே போனார். "கந்தப்பா யாரிடம் காது குத்துகிறாய். என்னைப் பச்சைக் குழந்தை என்று நினைத்துக் கொண்டாயா? பாட்டாம் பாட்டு! கச்சேரியாம் கச்சேரி! மனது வந்ததே! கடவுள் என்னுடைய கண்ணைத் திறப்பதற்காகவே, இந்த ரயில் விபத்தை உண்டு பண்ணினார்!" பேச்சை மாற்றுவதற்காக, நான் "ஆமாம் தம்பி! கடவுள்தான் உங்களை பத்திரமாகக் கொண்டு வந்து சேர்த்தார். அந்த அதிசயத்தைப் பற்றிச் சொல்லுங்கள்? பத்திரிகையில் ஏன் அப்படித் தவறாகச் செய்தி வந்தது? நீங்கள் எப்படித் தப்பிப் பிழைத்தீர்கள்? இத்தனை நாள் எங்கே இருந்தீர்கள்!" என்று கேள்விகளை அடுக்கினேன். "அதையெல்லாம் அப்புறம் விவரமாகச் சொல்கிறேன் கந்தப்பா! பெரிய கதை எழுதலாம். ஏதோ செத்துப் போனவன் தான், கடவுள் அருளால் பிழைத்தேன். பத்து நாள் சுய நினைவு இல்லாமல் ஆஸ்பத்திரியில் கிடந்தேனாம். அப்புறம் பழைய பத்திரிகைகளைப் பார்த்துச் செத்துப் போனவர்களின் ஜாபிதாவில் என் பெயரும் இருந்ததைத் தெரிந்து கொண்டேன். யாருடைய நிலைமை எப்படியெப்படி, என்னோடு உடன் கட்டை ஏறுவேன் என்று சொன்னவர்கள் எல்லாம் இப்போது எப்படி இருக்கிறார்கள் என்று பார்க்க வேண்டுமென்று தோன்றிற்று. அதற்காக, இந்த வேஷத்துடன் வந்தேன். இப்போது பார்த்தாகிவிட்டது!" என்று மிகவும் வெறுப்புடன் சொன்னார். பேசிக் கொண்டே நாங்கள் தெருவோடு போய்க் கொண்டிருந்தோம். "அதெல்லாம் இருக்கட்டும் தம்பி! இப்போது எங்கே போகிற உத்தேசம்" என்று கேட்டேன். "அங்கேதான் போகிறேன். அவளை அடித்து விடுவேன், கொன்றுவிடுவேன் என்று நினைக்காதே! கச்சேரி பேஷாயிருந்தது என்று ஒரு வார்த்தை சொல்லி விட்டுப் போய்விடுவேன்; அவ்வளவுதான். நீயும் வேணுமானால் பின்னோடு வந்து பார்" என்றார் கோபாலசாமி முதலியார். இரண்டு பேருமாகவே போய்ச் சேர்ந்தோம். பவானி குதிரை வண்டியில் முன்னாலேயே வீட்டுக்கு வந்து விட்டாள். அவளைத் தனியாக முதலில் பார்த்துத் தயார் செய்ய வேண்டுமென்று எண்ணினேன். அதற்கு கோபாலசாமி முதலியார் இடங்கொடுக்கவில்லை. என்னைப் பின்னால் தள்ளிக் கொண்டு, அறைக்குள் அவர் முதலில் போனார்! நாங்கள் போகும் போது பவானி ஜலமோ, பாலோ ஒரு கிண்ணத்திலிருந்து சாப்பிட்டுக் கொண்டிருந்தாள். பச்சைக் கண்ணாடியும் பெரிய முண்டாசுமாக உள்ளே வந்தவரைப் பார்த்துவிட்டுப் பவானி ஒரு நிமிஷம் திகைத்து நின்றாள். முதலியார் கண்ணாடியையும் முண்டாசையும் எடுத்ததும் அவளுடைய முகத்தில் ஏற்பட்ட பயங்கர மாறுதலைப் பார்த்தேன். என் இருதயம் அப்படியே நின்று விட்டது. எத்தனை நேரம் இப்படி மூன்று பேரும் ஸ்தம்பித்துப் போயிருந்தோம் என்று தெரியாது. பவானி திடீரென்று சுருண்டு போய்க் கீழே விழுந்த போதுதான், எனக்குப் பிரக்ஞை வந்தது. எனக்கு முன்னாலேயே கோபாலசாமி ஓடி அவளைத் தூக்கித் தமது மடியில் வைத்துக் கொண்டார். சற்று நேரம் நான் அங்குமிங்கும் பார்த்து விழித்துக் கொண்டு நின்றேன். பிறகு டாக்டரை அழைத்து வருவதற்காக ஓடினேன். டாக்டருடன் நான் திரும்பி வந்தபோது சந்தேகத்துக்கே இடமிருக்கவில்லை. பவானியின் உயிர் போய் அரைமணி நேரத்துக்கு மேலாகி விட்டது. 6
கந்தப்பப் பிள்ளை மேற்கண்ட விதம் கூறி கதையை நிறுத்தினார். அப்பொழுதுதான் ஒவ்வொரு சம்பவமும் நடப்பது போல் அவ்வளவு தெளிவாகவும் உணர்ச்சியுடனும் அவர் சொல்லிக் கொண்டு வந்தபடியால், என் உள்ளம் முன்னைக் காட்டிலும் இளகிக் கனிந்து போயிருந்தது. சற்று நேரம் ஒன்றும் சொல்லத் தோன்றாமல் மௌனமாயிருந்தேன். எங்கள் சம்பாஷணை எப்படி ஆரம்பமாயிற்று என்பது ஞாபகம் வந்தது. "திடீரென்று தோன்றிய கோபாலசாமி முதலியாரை அவருடைய ஆவி என்பதாக நினைத்து பவானி பயந்து போய் விட்டாளாக்கும். அப்புறம் நீங்கள் என்ன செய்தீர்கள்" என்று கேட்டேன். "அப்புறம் செய்வதற்கு என்ன இருக்கிறது? டாக்டரிடம் 'எதிர்பாராத ஷாக்கினால் மரணம்' என்று சர்டிபிகேட் எழுதி வாங்கிக் கொண்டேன். கோபாலசாமி முதலியாரும் நானுமாகச் செய்ய வேண்டிய சடங்குகளையெல்லாம் செய்து முடித்தோம். பாவம்! அந்த மனுஷர் பட்ட துக்கத்துக்கு அளவே இல்லை." "பவானியின் மனம் களங்கமற்றது என்று அப்புறமாவது முதலியாருக்கு தெரிந்ததா? அவரிடம் அவள் வைத்திருந்த அன்பின் பெருமையை அறிந்து கொண்டாரா?" என்று கேட்டேன். "அது எப்படித் தெரியும்? அவருக்கு ஒரு பக்கம் வருத்தமிருந்தாலும் இன்னொரு பக்கத்தில் பவானி தன்னுடைய துரோகம் தெரிந்து போய் விட்டதே என்ற பயங்கரத்தினால் செத்துப் போய் விட்டாள் என்று எண்ணினார். ஆனால் கொஞ்ச நாள் கழித்து வெளியான விஷயம் அவருக்குப் பவானியின் மேல் இருந்த அவநம்பிக்கையை ஒருவாறு போக்கிற்று. பவானி தன்னுடைய சொத்தையெல்லாம் கோபாலசாமி முதலியாரின் குழந்தைகளுக்கு எழுதி வைத்திருந்தாள். உயில் வக்கீலிடமிருந்தது." வியப்புடன் "ஓஹோ! அப்படியா" என்றேன். இன்னமும் சொல்வதற்கு விஷயம் பாக்கியிருக்கிறது என்று கந்தப்பப் பிள்ளை முகபாவத்திலிருந்து தெரிந்தது. "எல்லாம் சரிதான். டாக்டரிடம் எதற்காகச் சர்டிபிகேட் எழுதி வாங்கினீர்கள்?" என்று கேட்டேன். "இந்த மாதிரித் திடீர் மரணங்களில் போலீஸ் தொந்திரவு ஏற்படுமல்லவா? அதற்காகத்தான். கோபாலசாமி முதலியாருக்கே நான் உண்மையைச் சொல்லவில்லை. டாக்டருக்கும், எனக்கும் மட்டுந்தான் தெரியும்!" என்றார். ஏதோ விஷயம் பாக்கி இருக்கிறதென்று நினைத்தேன். "உண்மைக் காரணந்தான் என்ன?" என்று கேட்டேன். "நடந்து இருபத்தைந்து வருஷம் ஆகிறது. இனிமேல் சொன்னால் என்ன? - பவானி மயங்கி விழுந்ததும் முதலியாருக்குப் பின்னால் நானும் ஓடினேனல்லவா? பக்கத்தில் இருந்த சிறு முக்காலிப் பலகையின் மேல் பவானி, பால் குடித்த கிண்ணத்துக்குப் பக்கத்தில் ஒரு கடிதம் கிடந்தது. அதன் மேல் என் பெயர் எழுதியிருக்கவே, சட்டென்று எடுத்து, முதலியாருக்குத் தெரியாமல் மடித்து வைத்துக் கொண்டேன். டாக்டரைக் கூப்பிடப் போனபோது தெரு லாந்தர் வெளிச்சத்தில் படித்தேன். அந்தக் கடிதம் இதுதான்" என்று கூறி, கந்தப்பப் பிள்ளை மடியிலிருந்து ஒரு கடிதத்தை எடுத்துக் கொடுத்தார். அது வெகுநாட்பட்ட பழுதடைந்த காகிதம். அதில் மங்கிப் போன முத்தான எழுத்தில் பின் வருமாறு எழுதியிருந்தது. 'அன்புள்ள கந்தப்ப அண்ணனுக்கு
தங்கச்சி பவானி எழுதிக் கொண்டது. என் பிராண நாயகரைப் பிரிந்து நான்
உயிர் வாழ விரும்பவில்லை. இன்றைக்கு நான் செய்யும் கச்சேரிதான் கடைசிக்
கச்சேரி. அவர் எனக்கு அன்புடன் வாங்கிக் கொடுத்த வைர மோதிரத்திலிருந்த
வைரங்களை எடுத்துப் பொடி பண்ணி வைத்திருக்கிறேன். கச்சேரியிலிருந்து
வந்ததும் சாப்பிட்டு விடுவேன். என் சொத்தில் பாதியைக் கோவிலுக்கும்,
பாதியை அவருடைய குழந்தைகளுக்கும் எழுதி வைத்திருக்கிறேன். உயில் வக்கீல்
... ஐயரிடம் இருக்கிறது. நான் செய்வது பிசகாயிருந்தால் என்னை மன்னிக்கவும்.
அவரைப் பிரிந்து என்னால் உயிர் வாழ முடியாது.
இந்தக் கடிதத்தை இரண்டு மூன்று தடவை படித்துவிட்டு,
"இதை ஏன் கோபாலசாமி முதலியாரிடம் நீர் சொல்லவில்லை?" என்று கேட்டேன். இப்படிக்கு
பவானி' "சொன்னால் என்ன லாபம்? ஏற்கனவே ரொம்பத் துக்கப்பட்டார். இது தெரிந்தால் அவரும் உயிரை விட்டாலும் விட்டிருப்பார். அல்லது அவருடைய மனைவி மக்கள் மேல் பாசமில்லாமல் போயிருக்கலாம். ஒரு குடும்பத்தை அநியாயமாகக் கெடுப்பானேன் என்று தான் சொல்லவில்லை. சற்றுப் பொறுத்து "நான் போய் வருகிறேன், ஸ்வாமி!" என்று கந்தப்பப் பிள்ளை எழுந்திருந்தார். கடிதத்தை அவரிடம் திருப்பிக் கொடுத்தேன். வாசற் கதவைத் திறந்து கொண்டு அவர் வெளியே சென்றார். ஜில்லென்று காற்று அடித்தது. இருண்ட வானத்திலிருந்து சிறு தூற்றல் போட்டுக் கொண்டிருந்தது. |
எட்டுத் தொகை குறுந்தொகை பதிற்றுப் பத்து பரிபாடல் கலித்தொகை அகநானூறு ஐங்குறு நூறு (உரையுடன்) பத்துப்பாட்டு திருமுருகு ஆற்றுப்படை பொருநர் ஆற்றுப்படை சிறுபாண் ஆற்றுப்படை பெரும்பாண் ஆற்றுப்படை முல்லைப்பாட்டு மதுரைக் காஞ்சி நெடுநல்வாடை குறிஞ்சிப் பாட்டு பட்டினப்பாலை மலைபடுகடாம் பதினெண் கீழ்க்கணக்கு இன்னா நாற்பது (உரையுடன்) - PDF Download இனியவை நாற்பது (உரையுடன்) - PDF Download கார் நாற்பது (உரையுடன்) - PDF Download களவழி நாற்பது (உரையுடன்) - PDF Download ஐந்திணை ஐம்பது (உரையுடன்) - PDF Download ஐந்திணை எழுபது (உரையுடன்) - PDF Download திணைமொழி ஐம்பது (உரையுடன்) - PDF Download கைந்நிலை (உரையுடன்) - PDF Download திருக்குறள் (உரையுடன்) நாலடியார் (உரையுடன்) நான்மணிக்கடிகை (உரையுடன்) - PDF Download ஆசாரக்கோவை (உரையுடன்) - PDF Download திணைமாலை நூற்றைம்பது (உரையுடன்) பழமொழி நானூறு (உரையுடன்) சிறுபஞ்சமூலம் (உரையுடன்) - PDF Download முதுமொழிக்காஞ்சி (உரையுடன்) - PDF Download ஏலாதி (உரையுடன்) - PDF Download திரிகடுகம் (உரையுடன்) - PDF Download ஐம்பெருங்காப்பியங்கள் சிலப்பதிகாரம் மணிமேகலை வளையாபதி குண்டலகேசி சீவக சிந்தாமணி ஐஞ்சிறு காப்பியங்கள் உதயண குமார காவியம் நாககுமார காவியம் - PDF Download யசோதர காவியம் - PDF Download வைஷ்ணவ நூல்கள் நாலாயிர திவ்விய பிரபந்தம் திருப்பதி ஏழுமலை வெண்பா - PDF Download மனோதிருப்தி - PDF Download நான் தொழும் தெய்வம் - PDF Download திருமலை தெரிசனப்பத்து - PDF Download தென் திருப்பேரை மகரநெடுங் குழைக்காதர் பாமாலை - PDF Download திருப்பாவை - PDF Download திருப்பள்ளியெழுச்சி (விஷ்ணு) - PDF Download திருமால் வெண்பா - PDF Download சைவ சித்தாந்தம் நால்வர் நான்மணி மாலை திருவிசைப்பா திருமந்திரம் திருவாசகம் திருஞானசம்பந்தர் தேவாரம் - முதல் திருமுறை திருஞானசம்பந்தர் தேவாரம் - இரண்டாம் திருமுறை சொக்கநாத வெண்பா - PDF Download சொக்கநாத கலித்துறை - PDF Download போற்றிப் பஃறொடை - PDF Download திருநெல்லையந்தாதி - PDF Download கல்லாடம் - PDF Download திருவெம்பாவை - PDF Download திருப்பள்ளியெழுச்சி (சிவன்) - PDF Download திருக்கைலாய ஞான உலா - PDF Download பிக்ஷாடன நவமணி மாலை - PDF Download இட்டலிங்க நெடுங்கழிநெடில் - PDF Download இட்டலிங்க குறுங்கழிநெடில் - PDF Download மதுரைச் சொக்கநாதருலா - PDF Download இட்டலிங்க நிரஞ்சன மாலை - PDF Download இட்டலிங்க கைத்தல மாலை - PDF Download இட்டலிங்க அபிடேக மாலை - PDF Download சிவநாம மகிமை - PDF Download திருவானைக்கா அகிலாண்ட நாயகி மாலை - PDF Download சிதம்பர வெண்பா - PDF Download மதுரை மாலை - PDF Download அருணாசல அட்சரமாலை - PDF Download மெய்கண்ட சாத்திரங்கள் திருக்களிற்றுப்படியார் - PDF Download திருவுந்தியார் - PDF Download உண்மை விளக்கம் - PDF Download திருவருட்பயன் - PDF Download வினா வெண்பா - PDF Download இருபா இருபது - PDF Download கொடிக்கவி - PDF Download சிவப்பிரகாசம் - PDF Download பண்டார சாத்திரங்கள் தசகாரியம் (ஸ்ரீ அம்பலவாண தேசிகர்) - PDF Download தசகாரியம் (ஸ்ரீ தட்சிணாமூர்த்தி தேசிகர்) - PDF Download தசகாரியம் (ஸ்ரீ சுவாமிநாத தேசிகர்) - PDF Download சன்மார்க்க சித்தியார் - PDF Download சிவாச்சிரமத் தெளிவு - PDF Download சித்தாந்த சிகாமணி - PDF Download உபாயநிட்டை வெண்பா - PDF Download உபதேச வெண்பா - PDF Download அதிசய மாலை - PDF Download நமச்சிவாய மாலை - PDF Download நிட்டை விளக்கம் - PDF Download சித்தர் நூல்கள் குதம்பைச்சித்தர் பாடல் - PDF Download நெஞ்சொடு புலம்பல் - PDF Download ஞானம் - 100 - PDF Download நெஞ்சறி விளக்கம் - PDF Download பூரண மாலை - PDF Download முதல்வன் முறையீடு - PDF Download மெய்ஞ்ஞானப் புலம்பல் - PDF Download பாம்பாட்டி சித்தர் பாடல் - PDF Download கம்பர் கம்பராமாயணம் ஏரெழுபது சடகோபர் அந்தாதி சரஸ்வதி அந்தாதி - PDF Download சிலையெழுபது திருக்கை வழக்கம் ஔவையார் ஆத்திசூடி - PDF Download கொன்றை வேந்தன் - PDF Download மூதுரை - PDF Download நல்வழி - PDF Download குறள் மூலம் - PDF Download விநாயகர் அகவல் - PDF Download ஸ்ரீ குமரகுருபரர் நீதிநெறி விளக்கம் - PDF Download கந்தர் கலிவெண்பா - PDF Download சகலகலாவல்லிமாலை - PDF Download திருஞானசம்பந்தர் திருக்குற்றாலப்பதிகம் திருக்குறும்பலாப்பதிகம் திரிகூடராசப்பர் திருக்குற்றாலக் குறவஞ்சி திருக்குற்றால மாலை - PDF Download திருக்குற்றால ஊடல் - PDF Download ரமண மகரிஷி அருணாசல அக்ஷரமணமாலை முருக பக்தி நூல்கள் கந்தர் அந்தாதி - PDF Download கந்தர் அலங்காரம் - PDF Download கந்தர் அனுபூதி - PDF Download சண்முக கவசம் - PDF Download திருப்புகழ் பகை கடிதல் - PDF Download மயில் விருத்தம் - PDF Download வேல் விருத்தம் - PDF Download திருவகுப்பு - PDF Download சேவல் விருத்தம் - PDF Download நல்லை வெண்பா - PDF Download நீதி நூல்கள் நன்னெறி - PDF Download உலக நீதி - PDF Download வெற்றி வேற்கை - PDF Download அறநெறிச்சாரம் - PDF Download இரங்கேச வெண்பா - PDF Download சோமேசர் முதுமொழி வெண்பா - PDF Download விவேக சிந்தாமணி - PDF Download ஆத்திசூடி வெண்பா - PDF Download நீதி வெண்பா - PDF Download நன்மதி வெண்பா - PDF Download அருங்கலச்செப்பு - PDF Download முதுமொழிமேல் வைப்பு - PDF Download இலக்கண நூல்கள் யாப்பருங்கலக் காரிகை நேமிநாதம் - PDF Download நவநீதப் பாட்டியல் - PDF Download நிகண்டு நூல்கள் சூடாமணி நிகண்டு - PDF Download சிலேடை நூல்கள் சிங்கைச் சிலேடை வெண்பா - PDF Download அருணைச் சிலேடை அந்தாதி வெண்பா மாலை - PDF Download கலைசைச் சிலேடை வெண்பா - PDF Download வண்ணைச் சிலேடை வெண்பா - PDF Download நெல்லைச் சிலேடை வெண்பா - PDF Download வெள்ளிவெற்புச் சிலேடை வெண்பா - PDF Download உலா நூல்கள் மருத வரை உலா - PDF Download மூவருலா - PDF Download தேவை உலா - PDF Download குலசை உலா - PDF Download கடம்பர்கோயில் உலா - PDF Download திரு ஆனைக்கா உலா - PDF Download வாட்போக்கி என்னும் இரத்தினகிரி உலா - PDF Download ஏகாம்பரநாதர் உலா - PDF Download குறம் நூல்கள் மதுரை மீனாட்சியம்மை குறம் - PDF Download அந்தாதி நூல்கள் பழமலை அந்தாதி - PDF Download திருவருணை அந்தாதி - PDF Download காழியந்தாதி - PDF Download திருச்செந்தில் நிரோட்டக யமக அந்தாதி - PDF Download திருப்புல்லாணி யமக வந்தாதி - PDF Download திருமயிலை யமக அந்தாதி - PDF Download திருத்தில்லை நிரோட்டக யமக வந்தாதி - PDF Download துறைசை மாசிலாமணி ஈசர் அந்தாதி - PDF Download திருநெல்வேலி காந்திமதியம்மை கலித்துறை அந்தாதி - PDF Download அருணகிரி அந்தாதி - PDF Download கும்மி நூல்கள் திருவண்ணாமலை வல்லாளமகாராஜன் சரித்திரக்கும்மி - PDF Download திருவண்ணாமலை தீர்த்தக்கும்மி - PDF Download இரட்டைமணிமாலை நூல்கள் மதுரை மீனாட்சியம்மை இரட்டைமணிமாலை - PDF Download தில்லைச் சிவகாமியம்மை இரட்டைமணிமாலை - PDF Download பழனி இரட்டைமணி மாலை - PDF Download கொடியிடையம்மை இரட்டைமணிமாலை - PDF Download குலசை உலா - PDF Download திருவிடைமருதூர் உலா - PDF Download பிள்ளைத்தமிழ் நூல்கள் மதுரை மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழ் முத்துக்குமாரசுவாமி பிள்ளைத்தமிழ் அறம்வளர்த்தநாயகி பிள்ளைத்தமிழ் - PDF Download நான்மணிமாலை நூல்கள் திருவாரூர் நான்மணிமாலை - PDF Download விநாயகர் நான்மணிமாலை - PDF Download தூது நூல்கள் அழகர் கிள்ளைவிடு தூது - PDF Download நெஞ்சு விடு தூது - PDF Download மதுரைச் சொக்கநாதர் தமிழ் விடு தூது - PDF Download மான் விடு தூது - PDF Download திருப்பேரூர்ப் பட்டீசர் கண்ணாடி விடுதூது - PDF Download திருப்பேரூர்க் கிள்ளைவிடு தூது - PDF Download மேகவிடு தூது - PDF Download கோவை நூல்கள் சிதம்பர செய்யுட்கோவை - PDF Download சிதம்பர மும்மணிக்கோவை - PDF Download பண்டார மும்மணிக் கோவை - PDF Download சீகாழிக் கோவை - PDF Download பாண்டிக் கோவை - PDF Download கலம்பகம் நூல்கள் நந்திக் கலம்பகம் மதுரைக் கலம்பகம் காசிக் கலம்பகம் - PDF Download புள்ளிருக்குவேளூர்க் கலம்பகம் - PDF Download சதகம் நூல்கள் அறப்பளீசுர சதகம் - PDF Download கொங்கு மண்டல சதகம் - PDF Download பாண்டிமண்டலச் சதகம் - PDF Download சோழ மண்டல சதகம் - PDF Download குமரேச சதகம் - PDF Download தண்டலையார் சதகம் - PDF Download திருக்குறுங்குடி நம்பிபேரில் நம்பிச் சதகம் - PDF Download கதிரேச சதகம் - PDF Download கோகுல சதகம் - PDF Download வட வேங்கட நாராயண சதகம் - PDF Download அருணாசல சதகம் - PDF Download குருநாத சதகம் - PDF Download பிற நூல்கள் கோதை நாய்ச்சியார் தாலாட்டு முத்தொள்ளாயிரம் காவடிச் சிந்து நளவெண்பா ஆன்மீகம் தினசரி தியானம் |