அயோத்தியா காண்டம்

11. ஆறு செல் படலம்

மந்திரக் கிழவோர் முதலியோர் அரசவையை அடைதல்

வரன்முறை தெரிந்து உணர் மறையின் மா தவத்து
அரு மறை முனிவனும், ஆண்டையான் என,
விரைவின் வந்து ஈண்டினர்; விரகின் எய்தினர்;
பரதனை வணங்கினர்; பரியும் நெஞ்சினர். 1

மந்திரக் கிழவரும், நகர மாந்தரும்,
தந்திரத் தலைவரும், தரணி பாலரும்,
அந்தர முனிவரோடு அறிஞர் யாவரும்,
சுந்தரக் குரிசிலை மரபின் சுற்றினார். 2

சுமந்திரன் முனிவரைக் குறிப்பாக நோக்குதல்

சுற்றினர் இருந்துழி, சுமந்திரப் பெயர்ப்
பொன் தடந் தேர் வலான், புலமை உள்ளத்தான்,
கொற்றவர்க்கு உறு பொருள் குறித்த கொள்கையான்,
முற்று உணர் முனிவனை முகத்து நோக்கினான். 3

முனிவர் சுமந்திரனின் குறிப்பை உணர்தல்

நோக்கினால் சுமந்திரன் நுவலலுற்றதை,
வாக்கினால் அன்றியே உணர்ந்த மா தவன்,
'காக்குதி உலகம்; நின் கடன் அது ஆம்' எனக்
கோக் குமரனுக்கு அது தெரியக் கூறுவான்: 4

பரதனுக்கு வசிட்டன் அரசின் சிறப்பை உரைத்தல்

'வேதியர், அருந்தவர், விருத்தர், வேந்தர்கள்
ஆதியர் நின்வயின் அடைந்த காரியம்,
நீதியும் தருமமும் நிறுவ; நீ இது,
கோது அறு குணத்தினாய்! மனத்துக் கோடியால். 5

'தருமம் என்று ஒரு பொருள் தந்து நாட்டுதல்
அருமை என்பது பெரிது; அறிதி; ஐய! நீ
இருமையும் தருவதற்கு இயைவது; ஈண்டு, இது,
தெருள் மனத்தார் செயும் செயல் இது ஆகுமால்! 6

'வள் உறு வயிர வாள் அரசு இல் வையகம்,
நள் உறு கதிர் இலாப் பகலும், நாளொடும்
தெள்ளுறு மதி இலா இரவும், தேர்தரின்,
உள் உறை உயிர் இலா உடலும், ஒக்குமே. 7

'தேவர்தம் உலகினும், தீமை செய்து உழல்
மா வலி அவுணர்கள் வைகும் நாட்டினும்,
ஏவெவை உலகம் என்று இசைக்கும் அன்னவை
காவல் செய் தலைவரை இன்மை கண்டிலம். 8

'முறை தெரிந்து ஒரு வகை முடிய நோக்குறின்,
மறையவன் வகுத்தன, மண்ணில், வானிடை,
நிறை பெருந் தன்மையின் நிற்ப, செல்வன,
இறைவரை இல்லன யாவும் காண்கிலம். 9

'பூத்த, நாள்மலர் அயன் முதல புண்ணியர்
ஏத்து, வான் புகழினர், இன்று காறும் கூக்
காத்தனர்; பின், ஒரு களைகண் இன்மையால்,
நீத்த நீர் உடை கல நீரது ஆகுமால். 10

'உந்தையோ இறந்தனன்; உம்முன் நீத்தனன்;
வந்ததும், அன்னைதன் வரத்தில்; மைந்த! நீ
அந்தம் இல் பேர் அரசு அளித்தி; அன்னது
சிந்தனை எமக்கு' எனத் தெரிந்து கூறினான். 11

வசிட்டன் சொல் கேட்ட பரதனின் அவல நிலை

'தஞ்சம் இவ் உலகம், நீ தாங்குவாய்' எனச்
செஞ்செவே முனிவரன் செப்பக் கேட்டலும்,
'நஞ்சினை நுகர்' என, நடுங்குவாரினும்
அஞ்சினன் அயர்ந்தனன் - அருவிக் கண்ணினான். 12

நடுங்கினன்; நாத் தடுமாறி, நாட்டமும்
இடுங்கினன்; மகளிரின் இரங்கும் நெஞ்சினன்;
ஒடுங்கிய உயிரினன்; உணர்வு கைதர,
தொடங்கினன், அரசவைக்கு உள்ளம் சொல்லுவான்: 13

அரசவைக்கு பரதன் தன் கருத்தை எடுத்தியம்புதல்

'மூன்று உலகினுக்கும் ஓர் முதல்வன் ஆய், முதல்
தோன்றினன் இருக்க, யான் மகுடம் சூடுதல்,
சான்றவர் உரைசெயத் தருமம் ஆதலால்,
ஈன்றவள் செய்கையில் இழுக்கு உண்டாகுமோ? 14

'அடைவு அருங் கொடுமை என் அன்னை செய்கையை,
நடைவரும் தன்மை நீர், "நன்று இது" என்றிரேல்,
இடை வரும் காலம் ஈண்டு இரண்டும் நீத்து, இது
கடை வரும் தீ நெறிக் கலியின் ஆட்சியோ! 15

'வேத்தவை இருந்த நீர், விமலன் உந்தியில்
பூத்தவன் முதலினர் புவியுள் தோன்றினார்,
மூத்தவர் இருக்கவே, முறைமையால் நிலம்
காத்தவர் உளர் எனின், காட்டிக் காண்டிரால். 16

'நல் நெறி என்னினும், நான் இந் நானில
மன் உயிர்ப் பொறை சுமந்து இருந்து வாழ்கிலேன்;
அன்னவன் தனைக் கொணர்ந்து, அலங்கல் மா முடி
தொல் நெறி முறைமையின் சூட்டிக் காண்டிரால். 17

'அன்று எனின், அவனொடும் அரிய கானிடை
நின்று, இனிது இருந்தவம், நெறியின் ஆற்றுவென்;
ஒன்று இனி உரைக்கின், என் உயிரை நீக்குவென்'
என்றனன்; என்றபோது; இருந்த பேர் அவை. 18

பரதனை அரசவையோர் புகழ்தல்

'ஆன்ற பேர் அரசனும் இருப்ப, ஐயனும்
ஏன்றனன், மணி முடி ஏந்த; ஏந்தல் நீ,
வான் தொடர் திருவினை மறுத்தி; மன் இளந்
தோன்றல்கள் யார் உளர் நின்னின் தோன்றினார்? 19

'ஆழியை உருட்டியும், அறங்கள் போற்றியும்,
வேள்வியை இயற்றியும், வளர்க்க வேண்டுமோ?
ஏழினோடு ஏழ் எனும் உலகம் எஞ்சினும்,
வாழிய நின் புகழ்!' என்று வாழ்த்தினார். 20

சத்துருக்கனனிடம் இராமனை அழைத்து வருதல் பற்றி முரசு அறிவிக்க பரதன் கூறுதல்

குரிசிலும், தம்பியைக் கூவி, 'கொண்டலின்
முரசு அறைந்து, "இந் நகர் முறைமை வேந்தனைத்
தருதும் ஈண்டு" என்பது சாற்றி, தானையை,
"விரைவினில் எழுக!" என, விளம்புவாய்' என்றான். 21

சத்துருக்கனன் உரை கேட்ட மக்களின் மகிழ்ச்சி

நல்லவன் உரைசெய, நம்பி கூறலும்,
அல்லலின் அழுங்கிய அன்பின் மா நகர்
ஒல்லென இரைத்ததால் - உயிர் இல் யாக்கை அச்
சொல் எனும் அமிழ்தினால் துளிர்த்தது என்னவே. 22

அவித்த ஐம் புலத்தவர் ஆதியாய் உள
புவித்தலை உயிர் எலாம், 'இராமன் பொன் முடி
கவிக்கும்' என்று உரைக்கவே, களித்ததால்-அது
செவிப் புலம் நுகர்வது ஓர் தெய்வத் தேன்கொலாம்? 23

படு முரசு அறைந்தனர், 'பரதன் தம்முனைக்
கொடி நகர்த் தரும்; அவற் கொணரச் சேனையும்
முடுகுக' என்ற சொல் மூரி மா நகர்,
உடுபதி வேலையின் உதயம் போன்றதே! 24

எழுந்தது பெரும் படை - எழு வேலையின்,
மொழிந்த பேர் ஊழியின் முழங்கி, முந்து எழ,
அழிந்தது கேகயன் மடந்தை ஆசை; போய்க்
கழிந்தது துயர், நெடுங் காதல் தூண்டவே. 25

சேனையின் எழுச்சி

பண்ணின புரவி, தேர், பகடு, பண்டியும்,
மண்ணினை மறைத்தன; மலிந்த மாக் கொடி
விண்ணினை மறைத்தன; விரிந்த மாத் துகள்,
கண்ணினை மறைத்தன, கமலத் தோனையே. 26

ஈசன் இவ் உலகினை அழிக்கும் நாள் எழும்
ஓசையின் நிமிர்ந்துளது, ஒல்லென் பேர் ஒலி;
காசையின் கரியவற் காண மூண்டு எழும்
ஆசையின் நிமிர்ந்தது அவ் அனிக ராசியே. 27

படியொடு திரு நகர் துறந்து, பல் மரம்
செடியொடு தொடர் வனம் நோக்கி, சீதை ஆம்
கொடியொடு நடந்த அக் கொண்டல் ஆம் எனப்
பிடியொடு நடந்தன-பெருங் கை வேழமே. 28

சேற்று இள மரை மலர் சிறந்தவாம் எனக்
கால் தளம் பொலிதரு கன்னிமாரொடும்-
ஏற்று இளம் பிடிக்குலம்-இகலி, இன் நடை
தோற்று, இள மகளிரைச் சுமப்ப போன்றவே. 29

வேதனை வெயிற்கதிர் தணிக்க, மென் மழைச்
சீதநீர் தொடு நெடுங் கொடியும் சென்றன;
கோதை வெஞ்சிலையவன் கோலம் காண்கிலா
மாதரின் நுடங்குவ, வரம்பு இல் கோடியே. 30

வெண் மதி மீச்செல மேகம் ஊர்ந்தென,
அண்ணல் வெங்கதிரவன், அளவு இல் மூர்த்தி ஆய்,
மண்ணிடை இழிந்து ஒரு வழிக் கொண்டாலென,
எண்ண அரு மன்னவர் களிற்றின் ஏகினார். 31

தேர்மிசைச் சென்றது ஓர் பரவை; செம்முகக்
கார்மிசைச் சென்றது ஓர் உவரி; கார்க்கடல்,
ஏர்முகப் பரிமிசை ஏகிற்று; எங்கணும்
பார்மிசைப் படர்ந்தது, பதாதிப் பௌவமே. 32

தாரையும் சங்கமும், தாளம் கொம்பொடு
பார்மிசைப் பம்பையும், துடியும், மற்றவும்,
பேரியும், இயம்பல சென்ற - பேதைமைப்
பூரியர் குழாத்திடை அறிஞர் போலவே. 33

தா அரு நாண் முதல் அணி அலால், தகை
மே வரு கலங்களை வெறுத்த மேனியர்,
தேவரும் மருள்கொளத் தெரியும் காட்சியர்,
பூ உதிர் கொம்பு என, மகளிர் போயினார். 34

அதிர் கடல் வையகம் அனைத்தும் காத்தவன்
விதி வரும் தனிக்குடை மீது இலாப் படை,
பொதி பல கவிகக மீன் பூத்தது ஆகிலும்
கதிர் மதி நீங்கிய கங்குல் போன்றதே. 35

செல்லிய செலவினால், 'சிறிய திக்கு' எனச்
சொல்லிய சேனையைச் சுமந்ததே எனில்,
ஒல்லொலி வேலை நீர் உடுத்த பாரை, 'ஓர்
மெல்லியல்' என்றவர் மெலியரே கொலாம்? 36

தங்கு செஞ் சாந்து அகில் கலவை சார்கில,
குங்குமம் கொட்டில, கோவை முத்து இல,-
பொங்கு இளங் கொங்கைகள் - புதுமை வேறு இல
தெங்கு இளநீர் எனத் தெரிந்த காட்சிய. 37

இன் துணையவர் முலை எழுது சாந்தினும்
மன்றல் அம் தாரினும் மறைந்திலாமையால்
துன்று இளங் கொடி முதல் தூறு நீங்கிய
குன்று எனப் பொலிந்தன - குவவுத் தோள்களே. 38

நறை அறு கோதையர் நாள் செய் கோலத்தின்
துறை அற, அஞ்சனம் துறந்த நாட்டங்கள்
குறை அற நிகர்த்தன - கொற்றம் முற்றுவான்,
கறை அறக் கழுவிய கால வேலையே. 39

விரி மணி மேகலை விரவி ஆர்க்கில
தெரிவையர் அல்குல், தார் ஒலி இல் தேர் என
பரிபுரம் ஆர்க்கில பவளச் சீறடி,
அரி இனம் ஆர்க்கிலாக் கமலம் என்னவே. 40

மல்கிய கேகயன் மடந்தை வாசகம்
நல்கியது அரிவையர் நடுவிற்கே கொலாம்!-
புல்கிய மணிவடம் பூண்கிலாமையால்,
ஒல்கிய ஒரு வகைப் பொறை உயிர்த்தவே. 41

'கோமகன் பிரிதலின், கோலம் நீத்துள
தாமரைச் செல்வியும், தவத்தை மேவினாள்;
காமனும், அருந்துயர்க் கடலில் மூழ்கினான்
ஆம்' என, நிகழ்ந்தது - அவ் அளவு இல் சேனையை. 42

மண்ணையும், வானையும், வயங்கு திக்கையும்
உண்ணிய நிமிர் கடல் ஒக்கும் என்பது என்?
கண்ணினும் மனத்தினும், கமலத்து அண்ணல்தன்
எண்ணினும், நெடிது - அவண் எழுந்த சேனையே! 43

அலை நெடும் புனல் அறக் குடித்தலால், அகம்
நிலை பெற நிலை நெறி நிறுத்தலால், நெடு
மலையினை மண் உற அழுத்தலால், தமிழ்த்
தலைவனை நிகர்த்தது - அத் தயங்கு தானையே. 44

அறிஞரும், சிறியரும் ஆதி அந்தமா
செறி பெருந் தானையும் திருவும் நீங்கலால்
குறியவன் புனல் எலாம் வயிற்றில் கொண்டநாள்
மறிகடல் ஒத்தது - அவ் அயோத்தி மாநகர். 45

பெருந்திரை நதிகளும், வயலும், பெட்புறு
மரங்களும், மலைகளும், மண்ணும், கண்ணுறத்
திருத்தல் இல் அயோத்தி ஆம் தெய்வ மா நகர்
அருந்தெரு ஒத்தது - அப் படை செல் ஆறு அரோ! 46

'தார்கள் தாம், கோதைதாம், தாமம்தாம், தகை
ஏர்கள் தாம், கலவை தாம், கமழ்ந்தின்று என்பரால்-
கார்கள் தாம் என மிகக் கடுத்த கைம்மலை
வார் கடாம் அல்லது, அம் மன்னன் சேனையே. 47

ஆள் உலாம் கடலினும் அகன்ற அக்கடல்,
தோள் உலாம் குண்டலம் முதல தொல் அணி
கேள் உலாம் மின் ஒளி கிளர்ந்தது இல்லையால்-
வாள் உலாம் நுதலியர் மருங்குல் அல்லதே. 48

மத்தளம் முதலிய வயங்கு பல் இயம்
ஒத்தன சேறலின், உரை இலாமையின்,
சித்திரச் சுவர் நெடுஞ் சேனை தீட்டிய
பத்தியை நிகர்த்தது - அப் படையின் ஈட்டமே. 49

ஏடு அறு கோதையர் விழியின் எய்த கோல்
ஊடு உற உரம் தொளைத்து, உயிர் உணாவகை,
ஆடவர்க்கு அரும் பெருங் கவசம் ஆயது -
காடு உறை வாழ்க்கையைக் கண்ணன் நண்ணவே. 50

கனங் குழைக் கேகயன் மகளின் கண்ணிய
சினம் கிடந்து எரிதலின், தீர்ந்தவே கொலாம்-
அனங்கன் ஐங் கொடுங் கணை அடரும் ஆடவர்
மனம் கிடந்து உண்கில, மகளிர் கொங்கையே? 51

மரவுரி அணிந்து பரதன் சத்துருக்கனனுடன் தேரில் செல்லுதல்

இன்னணம் நெடும் படை ஏக, ஏந்தலும்,
தன்னுடைத் திரு அரைச் சீரை சாத்தினான்;
பின் இளையவனொடும், பிறந்த துன்பொடும்,
நல் நெடுந் தேர்மிசை நடத்தல் மேயினான். 52

பரதனுடன் தாயரும் வருதல்

தாயரும், அருந் தவத்தவரும், தந்தையின்
ஆய மந்திரியரும், அளவு இல் சுற்றமும்,
தூய அந்தணர்களும், தொடர்ந்து சூழ்வரப்
போயினன் - திரு நகர்ப் புரிசை வாயிலே. 53

சத்துருக்கனன் கூனிய துன்புறுத்தப் பற்ற, பரதன் விலக்கல்

மந்தரைக் கூற்றமும், வழிச் செல்வாரொடும்
உந்தியே போதல் கண்டு, இளவல் ஓடி, ஆர்த்து
அந்தரத்து எற்றுவான் அழன்று பற்றலும்,
சுந்தரத் தோளவன் விலக்கிச் சொல்லுவான்: 54

'முன்னையர் முறை கெட முடித்த பாவியைச்
சின்னபின்னம் செய்து, என் சினத்தைத் தீர்வெனேல்,
"என்னை இன்று என் ஐயன் துறக்கும்" என்று அலால்,
"அன்னை" என்று, உணர்ந்திலென், ஐய! நான்' என்றான். 55

'ஆதலால், முனியும் என்று ஐயன், அந்தம் இல்
வேதனைக் கூனியை வெகுண்டும் என்னினும்,
கோது இலா அரு மறை குலவும் நூல் வலாய்!
போதும் நாம்' என்று கொண்டு, அரிதின் போயினான். 56

இராமன் தங்கிய சோலையில் பரதன் தங்குதல்

மொய் பெருஞ் சேனையும் மூரி ஞாலமும்
கைகலந்து அயல் ஒரு கடலின் சுற்றிட,
ஐயனும் தேவியும் இளைய ஆளியும்
வைகிய சோலையில் தானும் வைகினான். 57

இராமன் தங்கிய புல்லணை அருகில் பரதன் மண்ணில் இருத்தல்

அல் அணை நெடுங் கணீர் அருவி ஆடினன்,
கல் அணை கிழங்கொடு கனியும் உண்டிலன்,
வில் அணைத்து உயர்ந்து தோள் வீரன் வைகிய
புல் அணை மருங்கில், தான் பொடியின் வைகினான். 58

'ஆண்டு நின்று, ஆண்தகை அடியின் ஏகினான்
ஈண்டிய நெறி' என, தானும் ஏகினான் -
தூண்டிடு தேர்களும் துரக ராசியும்
காண் தகு கரிகளும் தொடர, காலினே. 59