கோலம் காண் படலம் - Kolam Kaan Padalam - பால காண்டம் - Bala Kandam - கம்பராமாயணம் - Kamba Ramayanam - கம்பர் நூல்கள் - Kambar Books - சென்னை நூலகம் - ChennaiLibrary.com



பால காண்டம்

22. கோலம் காண் படலம்

சீதையை அழைத்துவருமாறு வசிட்டன் கூறுதல்

தேவியர் மருங்கு சூழ, இந்திரன் இருக்கை சேர்ந்த
ஓவியம் உயிர் பெற்றென்ன உவந்த , அரசு இருந்தகாலை,
தா இல் வெண் கவிகைச் செங்கோல் சனகனை இனிது நோக்கி,
'மா இயல் நோக்கினாளைக் கொணர்க!' என, வசிட்டன் சொன்னான். 1

சனகன் ஏவிய மாதர் சென்று, சீதையின் தாதியர்க்குச் செய்தி அறிவித்தல்

உரை செய, தொழுத கையன், உவந்த உள்ளத்தன், 'பெண்ணுக்கு
அரைசியைத் தருதிர் ஈண்டு' என்று, ஆயிழையவரை ஏவ,
கரை செயற்கு அரிய காதல் கடாவிட, கடிது சென்றார்,
பிரைசம் ஒத்து இனிய சொல்லார், பேதை தாதியரில் சொன்னார். 2

தாதியர் சீதைக்கு அழகு செய்தல்

அமிழ் இமைத் துணைகள், கண்ணுக்கு அணி என அமைக்குமாபோல்,
உமிழ் சுடர்க் கலன்கள், நங்கை உருவினை மறைப்பது ஓரார்,
அமிழ்தினைச் சுவை செய்தென்ன, அழகினுக்கு அழகு செய்தார் -
இமிழ் திரைப் பரவை ஞாலம் ஏழைமை உடைத்து மாதோ! 3

கண்ணன் தன் நிறம், தன் உள்ளக் கருத்தினை நிறைத்து, மீதிட்டு,
உள்நின்றும் கொடிகள் ஓடி, உலகு எங்கும் பரந்ததன்ன
வண்ணம் செய் கூந்தல் பார வலயத்து, மழையில் தோன்றும்
விண் நின்ற மதியின், மென் பூஞ் சிகழிகைக் கோதை வேய்ந்தார். 4

விதியது வகையால் வான மீன் இனம் பிறையை வந்து
கதுவுறுகின்றதென்னக் கொழுந்து ஒளி கஞலத் தூக்கி,
மதியினைத் தந்த மேகம் மருங்கு நா வளைப்பதென்ன,
பொதி இருள் அளக பந்தி பூட்டிய பூட்டும் இட்டார். 5

'வெள்ளத்தின் சடிலத்தான் தன் வெஞ் சிலை இறுத்த வீரன்
தள்ளத் தன் ஆவி சோர, தனிப் பெரும் பெண்மைதன்னை
அள்ளிக் கொண்டு அகன்ற காளை அல்லன்கொல்? ஆம்கொல்?' என்பாள்
உள்ளத்தின் ஊசலாடும் குழை நிழல் உமிழ இட்டார். 6

கோன் அணி சங்கம் வந்து குடியிருந்தனைய கண்டத்து,
ஈனம் இல் கலங்கள் தம்மின் இயைவன அணிதல் செய்தார்;
மான் அணி நோக்கினார் தம் மங்கலக் கழுத்துக்கு எல்லாம்
தான் அணி ஆன போது, தனக்கு அணி யாது மாதோ? 7

கோண் இலா வான மீன்கள் இயைவன கோத்தது என்கோ?
வாள் நிலா வயங்கு செவ்வி வளர் பிறை வகிர்ந்தது என்கோ?
நாணில் ஆம் நகையில் நின்ற நளிர் நிலாத் தவழ்ந்தது என்கோ?
பூண் நிலாம் முலைமேல் ஆர முத்தை - யான் புகல்வது என்னோ? 8

மொய் கொள் சீறடியைச் சேர்ந்த முளரிக்கும் செம்மை ஈந்த
தையலாள் அமிழ்த மேனி தயங்கு ஒளி தழுவிக்கொள்ள,
வெய்ய பூண் முலையில் சேர்ந்த வெண் முத்தம் சிவந்த; - என்றால்,
செய்யவர்ச் சேர்ந்துளாரும் செய்யராய்த் திகழ்வர் அன்றே? 9

கொமை உற வீங்குகின்ற குலிகச் செப்பு அனைய கொங்கைச்
சுமை உற நுடங்குகின்ற நுசுப்பினாள் பூண் செய் தோளுக்கு,
இமை உற இமைக்கும் செங் கேழ் இன மணி முத்தினோடும்
அமை உற அமைவது உண்டு ஆம் ஆகின், ஒப்பு ஆகும் அன்றே. 10

'தலை அவிழ் கோதை ஓதிச் சானகி தளிர்க்கை என்னும்
முளரிகள், இராமன் செங் கைமுறைமையின் தீண்ட நோற்ற;
அளியன; கங்குல் போதும் குவியல ஆகும்' என்று, ஆங்கு,
இள வெயில் சுற்றியன்ன எரி மணிக் கடகம் இட்டார். 11

சில் இயல் ஓதி கொங்கைத் திரள் மணிக் கனகச் செப்பில்,
வல்லியும் அனங்கன் வில்லும் மான்மதச் சாந்தின் தீட்டி,
பல் இயல் நெறியின் பார்க்கும் பரம் பொருள் என்ன, யார்க்கும்,
'இல்லை', 'உண்டு', என்ன நின்ற இடையினுக்கு இடுக்கன் செய்தார். 12

நிறம் செய் கோசிக நுண் தூசு நீவி நீவாத அல்குல்-
புறம் செய் மேகலையின் தாழத் தாரகைச் சும்மை பூட்டி,
திறம் செய் காசு ஈன்ற சோதி பேதை சேயொளியின் சேந்து
கறங்குபு திரிய, தாமும் கண் வழுக்குற்று நின்றார். 13

ஐய ஆம் அனிச்சப் போதின் அதிகமும் நொய்ய, ஆடல்
பை அரவு அல்குலாள்தன் பஞ்சு இன்றிப் பழுத்த பாதம்;
செய்ய பூங் கமலம் மன்னச் சேர்த்திய சிலம்பு, 'சால
நொய்யவே; நொய்ய' என்றோ, பலபட நுவல்வது? அம்மா! 14

நஞ்சினோடு அமுதம் கூட்டி நாட்டங்கள் ஆன என்ன,
செஞ்செவே நீண்டு, மீண்டு, சேயரி சிதறி, தீய
வஞ்சமும் களவும் இன்றி, மழை என மதர்த்த கண்கள்,
அஞ்சன நிறமோ? அண்ணல் வண்ணமோ? அறிதல் தேற்றாம். 15

மொய் வளர் குவளை பூத்த முளரியின் முளைத்த, முந்நாள்
மெய் வளர் மதியின் நாப்பண் மீன் உண்டேல், அனையது ஏய்ப்ப,
வையக மடந்தைமார்க்கும், நாகர் கோதையர்க்கும், வானத்
தெய்வ மங்கையர்க்கும், எல்லாம், திலகத்தைத் திலகம் செய்தார். 16

சின்னப் பூ, செருகும் மென் பூ, சேகரப் போது, கோது இல்
கன்னப் பூ,கஞல, மீது, கற்பகக் கொழுந்து மான
மின்ன, பூஞ் சுரும்பும் வண்டும் மிஞிறும் தும்பிகளும் பம்ப,
புன்னைப் பூந் தாது மானும் பொற் பொடி அப்பிவிட்டார் 17

தோழியர் சீதைக்கு அயினி சுற்றி காப்பு இடுதல்

நெய் வளர் விளக்கம் ஆட்டி, நீரொடு பூவும் தூவி
தெய்வமும் பராவி, வேத பாரகர்க்கு ஈந்து, செம் பொன்
ஐயவி நுதலில் சேர்த்தி, ஆய் நிற அயினி சுற்றி
கை வளர் மயில் அனாளை வலம் செய்து, காப்பும் இட்டார். 18

மங்கையர் சீதையின் அழகைக் கண்டு மயங்கி நிற்றல்

கஞ்சத்துக் களிக்கும் இன் தேன் கவர்ந்து உணும் வண்டு போல,
அம் சொற்கள் கிள்ளைக்கு எல்லாம் அருளினாள் அழகை மாந்தி,
தம் சொற்கள் குழறி, தம் தம் தகை தடுமாறி நின்றார் -
மஞ்சர்க்கும், மாதரார்க்கும், மனம் என்பது ஒன்றே அன்றோ? 19

இழை குலாம் முலையினாளை, இடை உவா மதியின் நோக்கி,
மழை குலாவு ஓதி நல்லார், களி மயக்குற்று நின்றார் -
உழை குலாம் நயனத்தார் மாட்டு, ஒன்று ஒன்றே விரும்பற்கு ஒத்த
அழகு எலாம் ஒருங்கே கண்டால், யாவரே ஆற்றவல்லார்? 20

சங்கம் கை உடைமையாலும், தாமரைக் கோயிலாலும்,
எங்கு எங்கும் பரந்து வெவ்வேறு உள்ளத்தின் எழுதிற்றென்ன,
அங்கு அங்கே தோன்றலாலும், அருந்ததி அனைய கற்பின்
நங்கையும் நம்பி ஒத்தாள்; நாம் இனிப் புகல்வது என்னோ? 21

சீதை மண்டபம் அடைதல்

பரந்த மேகலையும், கோத்த பாத சாலகமும், நாகச்
சிரம் செய் நூபுரமும், வண்டும், சிலம்பொடு சிலம்பு ஆர்ப்ப,
புரந்தரன் கோற்கீழ் வானத்து அரம்பையர் புடைசூழ்ந்தென்ன,
வரம்பு அறு சும்மைத் தீம் சொல் மடந்தையர் தொடர்ந்து சூழ்ந்தார். 22

சிந்தொடு, குறளும், கூனும், சிலதியர் குழாமும், தெற்றி
வந்து, அடி வணங்கிச் சுற்ற, மணி அணி விதான நீழல்,
இந்துவின் கொழுந்து விண்மீன் இனத்தொடும் வருவது என்ன,
நந்தல் இல் விளக்கம் அன்ன நங்கையும் நடக்கலுற்றாள். 23

வல்லியை உயிர்த்த நிலமங்கை, 'இவள் பாதம்
மெல்லிய, உறைக்கும்' என அஞ்சி, வெளி எங்கும்,
பல்லவ மலர்த் தொகை பரப்பினள் என, தன்
நல் அணி மணிச் சுடர் தவழ்ந்திட, நடந்தாள். 24

தொழும் தகைய மென் நடை தொலைந்து, களி அன்னம்,
எழுந்து, இடைவிழுந்து, அயர்வது என்ன, அயல் எங்கும்
கொழுந்துடைய சாமரை குலாவ, ஓர் கலாபம்
வழங்கு நிழல் மின்ன வரும் மஞ்ஞை என, வந்தாள். 25

மண் முதல் அனைத்து உலகின் மங்கையருள் எல்லாம்,
கண் மணி எனத் தகைய கன்னி எழில் காண,
அண்ணல் மரபின் சுடர், அருத்தியொடு தான் அவ்
விண் இழிவது ஒப்பது ஓர் விதான நிழல் வந்தாள். 26

கற்றை விரி பொற் சுடர் பயிற்றுறு கலாபம்,
சுற்றும் மணி புக்க இழை மிக்கு, இடை துவன்றி,
வில் தழை, வாள் நிமிர, மெய் அணிகள் மின்ன,
சிற்றிடை நுடங்க, ஒளிர் சீறடி பெயர்த்தாள். 27

பொன்னின் ஒளி, பூவின் வெறி, சாந்து பொதி சீதம்,
மின்னின் எழில், அன்னவள்தன் மேனி ஒளி மான,
அன்னமும், அரம்பையரும், ஆர் அமிழ்தும், நாண,
மன் அவை இருந்த மணி மண்டபம் அடைந்தாள். 28

அனைவரும் சீதையின் அழகை ஒருங்கே பார்த்தல்

சமைத்தவரை இன்மை மறைதானும் எனலாம், அச்
சமைத் திரள், முலைத் தெரிவை தூய் வடிவு கண்டார்,
அமைத் திரள் கொள் தோளியரும், ஆடவரும் எல்லாம்,
இமைத்திலர், உயிர்த்திலர்கள், சித்திரம் எனத் தாம். 29

சீதையைக் கண்ட இராமனது நிலை

அன்னவளை, 'அல்லள்' என, 'ஆம்' என, அயிர்ப்பான்,
கன்னி அமிழ்தத்தை எதிர் கண்ட கடல் வண்ணன்,
உன் உயிர் நிலைப்பது ஓர் அருத்தியொடு உழைத்து, ஆண்டு,
இன் அமிழ்து எழ, களி கொள் இந்திரனை ஒத்தான். 30

'நறத்து உறை முதிர்ச்சி உறு நல் அமுது பில்குற்று,
அறத்தின் விளைவு ஒத்து, முகடு உந்தி, அருகு உய்க்கும்,
நிறத் துவர் இதழ்க் குயில் நினைப்பினிடை அல்லால்,
புறத்தும் உளதோ?' என மனத்தொடு புகன்றான். 31

வசிட்ட முனிவனின் மகிழ்ச்சி

'எங்கள் செய் தவத்தினில், இராமன் என வந்தோன்,
சங்கினொடு சக்கரமுடைத் தனி முதற் பேர்
அம் கண் அரசு; ஆதலின், அவ் அல்லி மலர் புல்லும்
மங்கை இவள் ஆம்' என, வசிட்டன் மகிழ்வுற்றான். 32

துன்று புரி கோதை எழில் கண்டு, உலகு சூழ்வந்து
ஒன்று புரி கோலொடு தனித் திகிரி உய்ப்பான்,
'என்றும், உலகு ஏழும், அரசு எய்தி உளனேனும்,
இன்று திரு எய்தியது; இது என்ன வயம்!' என்றான். 33

சீதையைத் தெய்வம் என நல்லோர் கைகூப்புதல்

நைவளம் நவிற்று மொழி நண்ண வரலோடும்,
வையம் நுகர் கொற்றவனும், மா தவரும், அல்லார்
கைகள் தலைபுக்கன; கருத்துளதும் எல்லாம்
தெய்வம் என உற்ற; உடல் சிந்தை வசம் அன்றோ? 34

வணங்கற்கு உரியாரை முறைப்படி வணங்கி, சீதை தந்தையின் அருகில் இருத்தல்

மா தவரை முற்கொள வணங்கி, நெடு மன்னன்
பாத மலரைத் தொழுது, கண்கள் பனி சோரும்
தாதை அருகு இட்ட தவிசில், தனி இருந்தாள் -
போதினை வெறுத்து, அரசர் பொன் மனை புகுந்தாள். 35

விசுவாமித்திரனின் வியப்பு

அச்சு என நினைத்த முதல் அந்தணன் நினைந்தான்;
'பச்சை மலை ஒத்த படிவத்து, அடல் இராமன்,
நச்சுடை வடிக் கண் மலர் நங்கை இவள் என்றால்,
இச் சிலை கிடக்க; மலை ஏழையும் இறானோ?' 36

சீதை இராமனைக் கடைக்கண்ணால் கண்டு களித்தல்

எய்ய வில் வளைத்ததும் இறுத்ததும் உரைத்தும்,
மெய் விளைவு இடத்து, முதல் ஐயம் விடலுற்றாள்,
ஐயனை, அகத்து வடிவே அல, புறத்தும்,
கை வளை திருத்துபு, கடைக் கணின் உணர்ந்தாள். 37

கருங் கடை நெடுங் கண் ஒளி யாறு நிறை கண்ணப்
பெருங் கடலின் மண்ட, உயிர் பெற்று இனிது உயிர்க்கும்,
அருங் கலன் அணங்கு - அரசி, ஆர் அமிழ்து அனைத்தும்,
ஒருங்குடன் அருந்தினரை ஒத்து, உடல் தடித்தாள். 38

கணங் குழை, 'கருத்தின் உறை கள்வன் எனல் ஆனான்,
வணங்கு வில் இறுத்தவன்' எனத் துயர் மறந்தாள்;
அணங்குறும் அவிச்சை கெட, விச்சையின் அகம்பாடு
உணர்ந்து அறிவு முற்று பயன் உற்றவரை ஒத்தாள். 39

தயரதன் கோசிகனிடம் மண நாள் குறித்து வினாவுதல்

கொல் உயர் களிற்று அரசர் கோமகன் இருந்தான்,
கல்வி கரை உற்ற முனி கௌசிகனை, 'மேலோய்!
வல்லி பொரு சிற்றிடை மடந்தை மண நாள் ஆம்,
எல்லையில் நலத்த, பகல் என்று? உரைசெய்க!' என்றான். 40

நாளை திருமண நாள் என கோசிக முனிவன் கூறல்

'வாளை உகள, கயல்கள் வாவி படி மேதி
மூளை முதுகைக் கதுவ, மூரிய வரால் மீன்
பாளை விரியக் குதி கொள் பண்ணை வள நாடா!
நாளை' என, 'உற்ற பகல்' நல் தவன் உரைத்தான். 41

தயரதன் முதலிய யாவரும் தத்தம் இருப்பிடம் செல்ல, சூரியனும் மறைதல்

சொற்ற பொழுதத்து, அரசர் கைதொழுது எழ, தன்
ஒற்றை வயிரச் சுரி கொள் சங்கின் ஒலி பொங்க,
பொன் - தட முடிப் புது வெயில் பொழிதர, போய்,
நல் தவர் அனுச்சை கொடு, நல் மனை புகுந்தான். 42

அன்னம் அரிதின் பிரிய, அண்ணலும் அகன்று, ஓர்
பொன்னின் நெடு மாட வரை புக்கனன்; மணிப் பூண்
மன்னவர் பிரிந்தனர்கள்; மா தவர்கள் போனார்;
மின்னு சுடர் ஆதவனும், மேருவில் மறைந்தான். 43




புரவலர் / உறுப்பினர்களுக்கான நூல்கள் பிடிஃஎப் (PDF) வடிவில்
எண்
நூல்
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
15
16
17
18
19
20
21
22
23
24
25
26
27
28
29
30
31
32
33
34
35
36
37
38
39
40
41
42
43
44
45
46
47
48
49
50
51
52
53
54
55
56
57
58
59
60
61
62
63
64
65
66
67
68
69
70
71
72
73
74
75
76
77
78
79
80
81
82
83
84
85
86
87
88
89
90
91
92
93
94
95
96
97
98
99
100
101
102
103
104
105
106
107
108
109
110
111
112
113
114
115
116
117
118
119
120
121
122
123
124
125
126
127
128
129
130
131
132
133
134
135
136
137
138
139
140
141
142
143
144
145
146
147
148
149
150
151
152
153
154
155
156
157
158
159
160
161
162
163
164
165
166
167
168
169
170
171
172
173
174
175
176
177
178
179
180
181
182
183
184
185
186
187
188
189
190
191
192
193
194
195
196
197
198
199
200
201
202
203
204
205
206
207
208
209
210
211
212
213
214
215
216
217
218
219
220
221
222
223
224
225
226
227
228
229
230
231
232
233
234
235
236
237
238
239
240
240
241
242
243
244
245
246
247