நாட்டுப் படலம் - Naattup Padalam - பால காண்டம் - Bala Kandam - கம்பராமாயணம் - Kamba Ramayanam - கம்பர் நூல்கள் - Kambar Books - சென்னை நூலகம் - ChennaiLibrary.com



பால காண்டம்

2. நாட்டுப் படலம்

கோசல நாட்டு வளம்

வாங்க அரும் பாதம் நான்கும் வகுத்த வான்மீகி என்பான்,
தீம் கவி, செவிகள் ஆரத் தேவரும் பருகச் செய்தான்;
ஆங்கு, அவன் புகழ்ந்த நாட்டை, அன்பு எனும் நறவம் மாந்தி,
மூங்கையான் பேசலுற்றான் என்ன, யான் மொழியலுற்றேன். 1

வரம்பு எலாம் முத்தம்; தத்தும் மடை எலாம் பணிலம்; மா நீர்க்
குரம்பு எலாம் செம்பொன்; மேதிக் குழி எலாம் கழுநீர்க் கொள்ளை;
பரம்பு எலாம் பவளம்; சாலிப் பரப்பு எலாம் அன்னம்; பாங்கர்க்
கரும்பு எலாம் செந் தேன்; சந்தக் கா எலாம் களி வண்டு ஈட்டம். 2

மருத நில வளம்

ஆறு பாய் அரவம், மள்ளர் ஆலை பாய் அமலை, ஆலைச்
சாறு பாய் ஓதை, வேலைச் சங்கின் வாய்ப் பொங்கும் ஓசை,
ஏறு பாய் தமரம், நீரில் எருமை பாய் துழனி, இன்ன
மாறு மாறு ஆகி, தம்மில் மயங்கும்-மா மருத வேலி. 3

தண்டலை மயில்கள் ஆட, தாமரை விளக்கம் தாங்க,
கொண்டல்கள் முழவின் ஏங்க, குவளை கண் விழித்து நோக்க,
தெண் திரை எழினி காட்ட, தேம் பிழி மகர யாழின்
வண்டுகள் இனிது பாட, -மருதம் வீற்றிருக்கும் மாதோ. 4

தாமரைப் படுவ, வண்டும் தகை வரும் திருவும்; தண் தார்க்
காமுகர்ப் படுவ, மாதர் கண்களும் காமன் அம்பும்;
மா முகில் படுவ, வாரிப் பவளமும் வயங்கு முத்தும்;
நாமுதல் படுவ, மெய்யும் நாம நூல் பொருளும் மன்னோ. 5

நீரிடை உறங்கும் சங்கம்; நிழலிடை உறங்கும் மேதி;
தாரிடை உறங்கும் வண்டு; தாமரை உறங்கும் செய்யாள்;
தூரிடை உறங்கும் ஆமை; துறையிடை உறங்கும் இப்பி;
போரிடை உறங்கும் அன்னம்; பொழிலிடை உறங்கும் தோகை. 6

படை உழ எழுந்த பொன்னும், பணிலங்கள் உயிர்த்த முத்தும்,
இடறிய பரம்பில் காந்தும் இன மணித் தொகையும், நெல்லின்
மிடை பசுங் கதிரும், மீனும், மென் தழைக் கரும்பும், வண்டும்,
கடைசியர் முகமும், போதும், -கண்மலர்ந்து ஒளிரும் மாதோ. 7

தெள் விளிச் சீறியாழ்ப் பாணர் தேம் பிழி நறவம் மாந்தி,
வள் விசிக் கருவி பம்ப, வயின்வயின் வழங்கு பாடல்,
வெள்ளி வெண் மாடத்து உம்பர், வெயில் விரி பசும் பொன் பள்ளி,
எள்ள அருங் கருங் கண் தோகை இன் துயில் எழுப்பும் அன்றே. 8

ஆலைவாய்க் கரும்பின் தேனும், அரி தலைப் பாளைத் தேனும்,
சோலை வீழ் கனியின் தேனும், தொடை இழி இறாலின் தேனும்,
மாலைவாய் உகுத்த தேனும்,-வரம்பு இகந்து ஓடி, வங்க
வேலைவாய் மடுப்ப-உண்டு, மீன் எலாம் களிக்கும் மாதோ. 9

பண்கள் வாய் மிழற்றும் இன் சொல் கடைசியர் பரந்து நீண்ட
கண், கை, கால், முகம், வாய், ஒக்கும் களை அலால் களை இலாமை,
உண் கள் வார் கடைவாய் மள்ளர், களைகிலாது உலாவி நிற்பர்;-
பெண்கள்பால் வைத்த நேயம் பிழைப்பரோ சிறியோர் பெற்றால்? 10

புதுப் புனல் குடையும் மாதர் பூவொடு நாவி பூத்த
கதுப்பு உறு வெறியே நாறும், கருங் கடல் தரங்கம்; என்றால்,
மதுப்பொதி மழலைச் செவ்வாய், வாள் கடைக் கண்ணின் மைந்தர்
விதுப்பு உற நோக்கும், மின்னார் மிகுதியை விளம்பலாமே? 11

வெண் தளக் கலவைச் சேறும், குங்கும விரை மென் சாந்தும்,
குண்டலக் கோல மைந்தர் குடைந்த, நீர்க் கொள்ளை, சாற்றின்,
தண்டலைப் பரப்பும், சாலி வேலியும், தழீஇய வைப்பும்,
வண்டல் இட்டு ஓட, மண்ணும் மதுகரம் மொய்க்கும் மாதோ. 12

சேல் உண்ட ஒண் கணாரின் திரிகின்ற செங் கால் அன்னம்,
மால் உண்ட நளினப் பள்ளி, வளர்த்திய மழலைப் பிள்ளை,
கால் உண்ட சேற்று மேதி கன்று உள்ளிக் கனைப்பச் சோர்ந்த
பால் உண்டு, துயில, பச்சைத் தேரை தாலாட்டும்-பண்ணை. 13

குயில்இனம் வதுவை செய்ய, கொம்பிடைக் குனிக்கும் மஞ்ஞை
அயில் விழி மகளிர் ஆடும் அரங்கினுக்கு அழகுசெய்ய,
பயில் சிறை அரச அன்னம் பல் மலர்ப் பள்ளிநின்றும்
துயில் எழ, தும்பி காலைச் செவ்வழி முரல்வ-சோலை. 14

மக்கள் பொழுது போக்கும் வகை

பொருந்திய மகளிரோடு வதுவையில் பொருந்துவாரும்,
பருந்தொடு நிழல் சென்றன்ன இயல் இசைப் பயன் துய்ப்பாரும்,
மருந்தினும் இனிய கேள்வி செவி உற மாந்துவாரும்,
விருந்தினர் முகம் கண்டன்ன விழா அணி விரும்புவாரும்; 15

கறுப்புறு மனமும், கண்ணில் சிவப்புறு சூட்டும் காட்டி,
உறுப்புறு படையின் தாக்கி, உறு பகை இன்றிச் சீறி,
வெறுப்பு இல, களிப்பின் வெம் போர் மதுகைய, வீர ஆக்கை
மறுப்பட, ஆவி பேணா வாரணம் பொருத்துவாரும்; 16

எருமை நாகு ஈன்ற செங் கண் ஏற்றையோடு ஏற்றை, 'சீற்றத்து
உரும் இவை' என்னத் தாக்கி, ஊழுற நெருக்கி, ஒன்றாய்
விரி இருள் இரண்டு கூறாய் வெகுண்டன; அதனை நோக்கி,
அரி இனம் குஞ்சி ஆர்ப்ப, மஞ்சுற ஆர்க்கின்றாரும்; 17

முள் அரை முளரி வெள்ளை முளை இற, முத்தும் பொன்னும்
தள்ளுற, மணிகள் சிந்த, சலஞ்சலம் புலம்ப, சாலில்
துள்ளி மீன் துடிப்ப, ஆமை தலை புடை கரிப்ப, தூம்பின் -
உள் வரால் ஒளிப்ப, -மள்ளர் உழு பகடு உரப்புவாரும்; 18

கடல் வாணிகம்

முறை அறிந்து, அவாவை நீக்கி, முனிவுழி முனிந்து, வெஃகும்
இறை அறிந்து, உயிர்க்கு நல்கும், இசை கெழு வேந்தன் காக்கப்
பொறை தவிர்ந்து உயிர்க்கும் தெய்வப் பூதலம் தன்னில், பொன்னின்
நிறை பரம் சொரிந்து, வங்கம், நெடு முதுகு ஆற்றும், நெய்தல். 19

வளம் பல பெருக்கி, மள்ளர் விருந்தோடு மகிழ்ந்திருத்தல்

எறிதரும் அரியின் சும்மை எடுத்து வான் இட்ட போர்கள்
குறிகொளும் போத்தின் கொல்வார்; கொன்ற நெல் குவைகள் செய்வார்;
வறியவர்க்கு உதவி, மிக்க, விருந்து உண மனையின் உய்ப்பார்,
நெறிகளும் புதைய, பண்டி நிறைத்து, மண் நெளிய ஊர்வார். 20

கதிர் படு வயலின் உள்ள, கடி கமழ் புனலின் உள்ள,
முதிர் பயன் மரத்தின் உள்ள, முதிரைகள் புறவின் உள்ள,
பதிபடு கொடியின் உள்ள, படி வளர் குழியின் உள்ள,-
மதுவளம் மலரில் கொள்ளும் வண்டு என-மள்ளர், கொள்வார். 21

முந்து முக் கனியின், நானா முதிரையின், முழுத்த நெய்யின்,
செந் தயிர்க் கண்டம், கண்டம், இடை இடை செறிந்த சோற்றின்,
தம்தம் இல் இருந்து, தாமும், விருந்தோடும், தமரினோடும்,
அந்தணர் அமுத உண்டி அயிலுறும் அமலைத்து எங்கும். 22

செல்வச் செழிப்பு

பருவ மங்கையர் பங்கய வாள் முகத்து
உருவ உண் கணை, 'ஒண் பெடை ஆம்' எனக்
கருதி, அன்பொடு காமுற்று, வைகலும்,
மருத வேலியின் வைகின, வண்டுஅரோ. 23

வேளை வென்ற முகத்தியர் வெம் முலை,
ஆளை, நின்று முனிந்திடும், அங்கு ஒர் பால்;
பாளை தந்த மதுப் பருகி, பரு
வாளை நின்று மதர்க்கும் மருங்கு எலாம். 24

ஈர நீர் படிந்து, இந் நிலத்தே சில
கார்கள் என்ன, வரும், கரு மேதிகள்;
ஊரில் நின்ற கன்று உள்ளிட; மென் முலை
தாரை கொள்ள, தழைப்பன சாலியே. 25

முட்டு இல் அட்டில், முழங்குற வாக்கிய
நெட்டுலைக் கழுநீர் நெடு நீத்தம் தான்,
பட்ட மென் கமுகு ஓங்கு படப்பை போய்,
நட்ட செந் நெலின் நாறு வளர்க்குமே. 26

சூட்டுடைத் துணைத் தூ நிற வாரணம்
தாள்-துணைக் குடைய, தகை சால் மணி
மேட்டு இமைப்பன; 'மின்மினி ஆம்' எனக்
கூட்டின் உய்க்கும், குரீஇயின் குழாம் அரோ. 27

தோயும் வெண் தயிர் மத்து ஒலி துள்ளவும்,
ஆய வெள் வளை வாய்விட்டு அரற்றவும்,
தேயும் நுண் இடை சென்று வணங்கவும்,
ஆயர் மங்கையர் அங்கை வருந்துவார். 28

தினைச் சிலம்புவ, தீம் சொல் இளங் கிளி;
நனைச் சிலம்புவ, நாகு இள வண்டு; பூம்
புனைச் சிலம்புவ, புள் இனம்; வள்ளியோர்
மனைச் சிலம்புவ, மங்கல வள்ளையே. 29

பெருகிக் கிடக்கும் நால் நில வளம்

குற்ற பாகு கொழிப்பன -கோள் நெறி
கற்றிலாத கருங் கண் நுளைச்சியர்
முற்றில் ஆர முகந்து, தம் முன்றிலில்,
சிற்றில் கோலிச் சிதறிய முத்தமே. 30

துருவை மென் பிணை ஈன்ற துளக்கு இலா
வரி மருப்பு இணை வன் தலை ஏற்றை வான்
உரும் இடித்தெனத் தாக்குறும் ஒல் ஒலி
வெருவி, மால் வரைச் சூல் மழை மின்னுமே. 31

கன்றுடைப் பிடி நீக்கிக் களிற்றினம்
வன் தொடர்ப் படுக்கும், வன வாரி சூழ்
குன்றுடைக் குல மள்ளர் குழூஉக் குரல்,
இன் துணைக் களி அன்னம் இரிக்குமே. 32

வள்ளி கொள்பவர் கொள்வன, மா மணி;
துள்ளி கொள்வன, தூங்கிய மாங்கனி;
புள்ளி கொள்வன, பொன் விரி புன்னைகள்;
பள்ளி கொள்வன, பங்கயத்து அன்னமே. 33

கொன்றை வேய்ங்குழல் கோவலர் முன்றிலில்
கன்று உறக்கும்-குரவை, கடைசியர்,
புன் தலைப் புனம் காப்புடைப் பொங்கரில்
சென்று இசைக்கும் - நுளைச்சியர் செவ்வழி. 34

சேம்பு கால் பொரச் செங்கழுநீர்க் குளத்
தூம்பு கால, சுரி வளை மேய்வன-
காம்பு கால் பொர, கண் அகல் மால் வரை,
பாம்பு நான்றெனப் பாய் பசுந் தேறலே. 35

ஈகையும் விருந்தும்

பெருந் தடங் கண் பிறைநுதலார்க்கு எலாம்,
பொருந்து செல்வமும் கல்வியும் பூத்தலால்,
வருந்தி வந்தவர்க்கு ஈதலும், வைகலும்,
விருந்தும், அன்றி, விளைவன யாவையே? 36

ஊட்டிடத்தும் குடிகளிடத்தும் உள்ள பொருள்கள்

பிறை முகத் தலை, பெட்பின், இரும்பு போழ்,
குறை நறைக் கறிக் குப்பை, பருப்பொடு,
நிறை வெண் முத்தின் நிறத்து அரிசிக் குவை,
உறைவ-கொட்பின ஊட்டிடம் தோறெலாம். 37

கலம் சுரக்கும், நிதியம்; கணக்கு இலா,
நிலம் சுரக்கும், நிறை வளம்; நல் மணி
பிலம் சுரக்கும்; பெறுதற்கு அரிய தம்
குலம் சுரக்கும், ஒழுக்கம்-குடிக்கு எலாம். 38

நல்லவற்றின் நலனும், தீயன செய்யாமையும்

கூற்றம் இல்லை, ஓர் குற்றம் இலாமையால்;
சீற்றம் இல்லை, தம் சிந்தையின் செம்மையால்;
ஆற்ற நல் அறம் அல்லது இலாமையால்,
ஏற்றம் அல்லது, இழிதகவு இல்லையே. 39

நெறி கடந்து பரந்தன, நீத்தமே;
குறி அழிந்தன, குங்குமத் தோள்களே;
சிறிய, மங்கையர் தேயும் மருங்குலே;
வெறியவும், அவர் மென் மலர்க் கூந்தலே. 40

பல் வகைப் புகைகள்

அகில் இடும் புகை, அட்டில் இடும் புகை,
நகல் இன் ஆலை நறும் புகை, நான் மறை
புகலும் வேள்வியில் பூம்புகையோடு அளாய்,
முகிலின் விம்மி, முயங்கின எங்கணும். 41

மகளிரின் அங்கம் போன்ற இயற்கை எழில்

இயல் புடைபெயர்வன, மயில்; மணி இழையின்
வெயில் புடைபெயர்வன; மிளிர் முலை; குழலின்
புயல் புடைபெயர்வன, பொழில்; அவர் விழியின்
கயல் புடைபெயர்வன, கடி கமழ் கழனி. 42

இடை இற, மகளிர்கள், எறி புனல் மறுகக்
குடைபவர், துவர் இதழ் மலர்வன, குமுதம்;
மடை பெயர் அனம் என மட நடை, அளகக்
கடைசியர் முகம் என மலர்வன, கமலம். 43

ஒப்பிலா மகளிர் விழி

விதியினை நகுவன, அயில் விழி; பிடியின்
கதியினை நகுவன, அவர் நடை; கமலப்
பொதியினை நகுவன, புணர் முலை, கலை வாழ்
மதியினை நகுவன, வனிதையர் வதனம். 44

பகலினொடு இகலுவ, படர் மணி; மடவார்
நகிலினொடு இகலுவ, நளி வளர் இளநீர்;
துகிலினொடு இகலுவ, சுதை புரை நுரை; கார்
முகிலினொடு இகலுவ, கடி மண முரசம். 45

பெருகித் திகழும் பல் வளம்

காரொடு நிகர்வன, கடி பொழில்; கழனிப்
போரொடு நிகர்வன, புணர்மலை; அணை சூழ்
நீரொடு நிகர்வன, நிறை கடல்; நிதி சால்
ஊரொடு நிகர்வன, இமையவர் உலகம். 46

நெல் மலை அல்லன-நிரை வரு தரளம்;
சொல் மலை அல்லன-தொடு கடல் அமிர்தம்;
நல் மலை அல்லன-நதி தரு நிதியம்;
பொன் மலை அல்லன-மணி படு புளினம். 47

இளையவர் பந்து பயில் இடமும், ஆடவர் கலை தெரி கழகமும்

பந்தினை இளையவர் பயில் இடம்,-மயில் ஊர்
கந்தனை அனையவர் கலை தெரி கழகம்,-
சந்தன வனம் அல, சண்பக வனம் ஆம்;
நந்தன வனம் அல, நறை விரி புறவம்; 48

மடவாரின் பேச்சழகும், காட்சிப் பொருள்களும்

கோகிலம் நவில்வன, இளையவர் குதலைப்
பாகு இயல் கிளவிகள்; அவர் பயில் நடமே
கேகயம் நவில்வன; கிளர் இள வளையின்
நாகுகள் உமிழ்வன, நகை புரை தரளம். 49

பழையர்தம் மனையன, பழ நறை; நுகரும்
உழவர்தம் மனையன, உழு தொழில்; புரியும்
மழவர்தம் மனையன, மணஒலி; இசையின்
கிழவர்தம் மனையன, கிளை பயில் வளை யாழ். 50

கோதைகள் சொரிவன, குளிர் இள நறவம்;
பாதைகள் சொரிவன, பரு மணி கனகம்;
ஊதைகள் சொரிவன, உறை உறும் அமுதம்;
காதைகள் சொரிவன, செவி நுகர் கனிகள்; 51

இடம் கொள் சாயல் கண்டு, இளைஞர் சிந்தைபோல்,
தடங் கொள் சோலைவாய், மலர் பெய் தாழ் குழல்
வடம் கொள் பூண் முலை மடந்தைமாரொடும்
தொடர்ந்து போவன-தோகை மஞ்ஞையே. 52

நாட்டில் வறுமை முதலியன இல்லாமை

வண்மை இல்லை, ஓர் வறுமை இன்மையால்;
திண்மை இல்லை, ஓர் செறுநர் இன்மையால்;
உண்மை இல்லை, பொய் உரை இலாமையால்;
வெண்மை இல்லை, பல் கேள்வி மேவலால். 53

எள்ளும், ஏனலும், இறுங்கும், சாமையும்,
கொள்ளும் கொள்ளையில் கொணரும் பண்டியும்,
அள்ளல் ஓங்கு அளத்து அமுதின் பண்டியும்,
தள்ளும் நீர்மையின், தலைமயங்குமே. 54

உயரும் சார்வு இலா உயிர்கள் செய் வினைப்
பெயரும் பல் கதிப் பிறக்குமாறுபோல்,
அயிரும், தேனும், இன் பாகும், ஆயர் ஊர்த்
தயிரும், வேரியும், தலைமயங்குமே. 55

விழாவும் வேள்வியும்

கூறு பாடலும், குழலின் பாடலும்,
வேறு வேறு நின்று இசைக்கும் வீதிவாய்,
'ஆறும் ஆறும் வந்து எதிர்ந்த ஆம்' என,
சாறும் வேள்வியும் தலைமயங்குமே. 56

மூக்கில் தாக்குறும் மூரி நந்தும், நேர்
தாக்கின் தாக்குறும் பறையும், தண்ணுமை
வீக்கின் தாக்குறும் விளியும், -மள்ளர்தம்
வாக்கின் தாக்குறும் ஒலியில் மாயுமே. 57

குழந்தைக்கு பால் ஊட்டும் தாய்

தாலி ஐம்படை தழுவு மார்பிடை
மாலை வாய் அமுது ஒழுகு மக்களைப்
பாலின் ஊட்டுவார் செங் கை, பங்கயம்
வால் நிலா உறக் குவிவ மானுமே. 58

மக்களின் ஒழுக்கத்தால் அறம் நிலைபெறுதல்

பொற்பின் நின்றன, பொலிவு; பொய் இலா
நிற்பின், நின்றன, நீதி; மாதரார்
அற்பின் நின்றன, அறங்கள்; அன்னவர்
கற்பின் நின்றன, கால மாரியே. 59

சோலை மா நிலம் துருவி, யாவரே
வேலை கண்டு தாம் மீள வல்லவர்?-
சாலும் வார் புனல் சரயுவும், பல
காலின் ஓடியும் கண்டது இல்லையே! 60

வீடு சேர, நீர் வேலை, கால் மடுத்து
ஊடு பேரினும், உலைவு இலா நலம்
கூடு கோசலம் என்னும் கோது இலா
நாடு கூறினாம்; நகரம் கூறுவாம். 61

மிகைப் பாடல்கள்

காளையர் சேறுதன்னைக் கலந்து, உடன் மிதித்து, நட்ட
தாள்களும் கழுநீர் நாறும்; தடக் கையும் அதுவே நாறும்;
ஆளையும் சீறிப் பீறி, அணி மலர்க் கமுகில் பாய்ந்த
வாளையும், பாளை நாறும்; வயல்களும் அதுவே நாறும். 14-1




புரவலர் / உறுப்பினர்களுக்கான நூல்கள் பிடிஃஎப் (PDF) வடிவில்
எண்
நூல்
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
15
16
17
18
19
20
21
22
23
24
25
26
27
28
29
30
31
32
33
34
35
36
37
38
39
40
41
42
43
44
45
46
47
48
49
50
51
52
53
54
55
56
57
58
59
60
61
62
63
64
65
66
67
68
69
70
71
72
73
74
75
76
77
78
79
80
81
82
83
84
85
86
87
88
89
90
91
92
93
94
95
96
97
98
99
100
101
102
103
104
105
106
107
108
109
110
111
112
113
114
115
116
117
118
119
120
121
122
123
124
125
126
127
128
129
130
131
132
133
134
135
136
137
138
139
140
141
142
143
144
145
146
147
148
149
150
151
152
153
154
155
156
157
158
159
160
161
162
163
164
165
166
167
168
169
170
171
172
173
174
175
176
177
178
179
180
181
182
183
184
185
186
187
188
189
190
191
192
193
194
195
196
197
198
199
200
201
202
203
204
205
206
207
208
209
210
211
212
213
214
215
216
217
218
219
220
221
222
223
224
225
226
227
228
229
230
231
232
233
234
235
236
237
238
239
240
240
241
242
243
244
245
246
247