பம்பை வாவிப் படலம் - Pambai Vaavip Padalam - கிட்கிந்தா காண்டம் - Kitkintha Kandam - கம்பராமாயணம் - Kamba Ramayanam - கம்பர் நூல்கள் - Kambar Books - சென்னை நூலகம் - ChennaiLibrary.com



கிட்கிந்தா காண்டம்

கடவுள் வாழ்த்து

மூன்று உரு எனக் குணம் மும்மை ஆம் முதல்,
தோன்று உரு எவையும், அம் முதலைச் சொல்லுதற்கு
ஏன்று உரு அமைந்தவும், இடையில் நின்றவும்,
சான்று உரு உணர்வினுக்கு உணர்வும், ஆயினான்.

1. பம்பை வாவிப் படலம்

பம்பைப் பொய்கையின் தோற்றம்

தேன் படி மலரது; செங் கண், வெங் கைம்மா-
தான் படிகின்றது; தெளிவு சான்றது;
மீன் படி மேகமும் படிந்து, வீங்கு நீர்,
வான் படிந்து, உலகிடைக் கிடந்த மாண்பது; 1

ஈர்ந்த நுண் பளிங்கு எனத் தெளிந்த ஈர்ம் புனல்
பேர்ந்து, ஒளிர் நவ மணி படர்ந்த பித்திகை
சேர்ந்துழிச் சேர்ந்துழி நிறத்தைச் சேர்தலால்,
ஓர்ந்து உணர்வு இல்லவர் உள்ளம் ஒப்பது; 2

குவால் மணித் தடம்தொறும் பவளக் கொம்பு இவர்
கவான் அரசுஅன்னமும், பெடையும் காண்டலின்,
தவா நெடு வானகம் தயங்கு மீனொடும்,
உவா மதி, உலப்பு இல உதித்தது ஒப்பது; 3

ஓத நீர் உலகமும், உயிர்கள் யாவையும்,
வேதபாரகரையும், விதிக்க வேட்ட நாள்,
சீதம் வீங்கு உவரியைச் செகுக்குமாறு ஒரு
காதி காதலன் தரு கடலின் அன்னது; 4

'எல் படர் நாகர்தம் இருக்கை ஈது' எனக்-
கிற்பது ஓர் காட்சியதுஎனினும், கீழ் உற,
கற்பகம் அனைய அக் கவிஞர் நாட்டிய
சொற் பொருள் ஆம் எனத் தோன்றல் சான்றது; 5

களம் நவில் அன்னமே முதல, கண் அகன்
தள மலர்ப் புள் ஒலி தழங்க, இன்னது ஓர்
கிளவி என்று அறிவு அருங் கிளர்ச்சித்து; ஆதலின்,
வள நகர்க் கூலமே போலும் மாண்பது. 6

அரி மலர்ப் பங்கயத்து அன்னம், எங்கணும்,
'புரிகுழல் புக்க இடம் புகல்கிலாத யாம்,
திருமுகம் நோக்கலம்; இறந்து தீர்தும்' என்று,
எரியினில் புகுவன எனத் தோன்றும் ஈட்டது; 7

காசு அடை விளக்கிய காட்சித்து ஆயினும்,
மாசு அடை பேதைமை இடை மயக்கலால்,
'ஆசு அடை நல் உணர்வு அனையது ஆம்' என,
பாசடை வயிந்தொறும் பரந்த பண்பது; 8

'களிப் படா மனத்தவன் காணின், "கற்பு எனும்
கிளிப் படா மொழியவள் விழியின் கேள்" என
துளிப் படா நயனங்கள் துளிப்பச் சோரும்' என்று,
ஒளிப் படாது, ஆயிடை ஒளிக்கும் மீனது; 9

கழை படு முத்தமும், கலுழிக் கார் மத
மழை படு தரளமும், மணியும், வாரி, நேர்
இழை படர்ந்தனைய நீர் அருவி எய்தலால்,
குழை படு முகத்தியர் கோலம் ஒப்பது; 10

பொங்கு வெங் கட கரி, பொதுவின் ஆடலின், -
கங்குலின், எதிர் பொரு கலவிப் பூசலில்
அங்கம் நொந்து அலசிய, விலையின் ஆய் வளை
மங்கையர் வடிவு என, - வருந்தும் மெய்யது; 11

விண் தொடர் நெடு வரைத் தேனும், வேழத்தின்
வண்டு உளர் நறு மத மழையும் மண்டலால்,
உண்டவர் பெருங் களி உறலின், ஓதியர்
தொண்டை அம் கனி இதழ்த் தோன்றல் சான்றது; 12

ஆரியம் முதலிய பதினெண் பாடையில்
பூரியர் ஒரு வழிப் புகுந்தது ஆம் என,
ஓர்கில கிளவிகள் ஒன்றொடு ஒப்பு இல,
சோர்வு இல, விளம்பு புள் துவன்றுகின்றது; 13

தான் உயிர் உறத் தனி தழுவும் பேடையை,
ஊன் உயிர் பிரிந்தென, பிரிந்த ஓதிமம்,
வான் அரமகளிர்தம் வயங்கு நூபுரத்
தேன் உகு மழலையைச் செவியின் ஓர்ப்பது; 14

ஈறு இடல் அரிய மால் வரை நின்று ஈர்த்து இழி
ஆறு இடு விரை அகில் ஆரம் ஆதிய
ஊறிட, ஒள் நகர் உரைத்த ஒண் தளச்
சேறு இடு பரணியின் திகழும் தேசது. 15

பொய்கை நிகழ்ச்சிகள்

நவ்வி நோக்கியர் இதழ் நிகர் குமுதத்து நறுந்தேன்
வவ்வு மாந்தரின் களி மயக்கு உறுவன, மகரம்;
எவ்வம் ஓங்கிய இறப்பொடு பிறப்பு இவை என்ன,
கவ்வு மீனொடு முழுகுவ, எழுவன, கரண்டம். 16

கவள யானை அன்னாற்கு, 'அந்தக் கடி நறுங் கமலத்-
தவளை ஈகிலம்; ஆவது செய்தும்' என்று அருளால்,
திவள அன்னங்கள் திரு நடை காட்டுவ; செங் கண்
குவளை காட்டுவ; துவர் இதழ் காட்டுவ குமுதம். 17

பெய் கலன்களின் இலங்கு ஒளி மருங்கொடு பிறழ,
வைகலும் புனல் குடைபவர் வான் அரமகளிர்;
செய்கை அன்னங்கள் ஏந்திய சேடியர் என்னப்
பொய்கை அன்னங்கள் ஏந்திய பூங் கொம்பர் பொலிவ. 18

ஏலும் நீள் நிழல், இடை இடை எறித்தலின், படிகம்
போலும் வார் புனல் புகுந்துளவாம் எனப் பொங்கி,
ஆலும் மீன் கணம் அஞ்சின அலம்வர, வஞ்சிக்
கூல மா மரத்து, இருஞ் சிறை புலர்த்துவ - குரண்டம் 19

அங்கு ஒர் பாகத்தில், அஞ்சனமணி நிழல் அடைய,
பங்கு பெற்று ஒளிர் பதுமராகத்து ஒளி பாய,
கங்குலும் பகலும் மெனப் பொலிவன கமலம்;
மங்கைமார் தட முலை எனப் பொலிவன, வாளம். 20

வலி நடத்திய வாள் என வாளைகள் பாய,
ஒலி நடத்திய திரை தொறும் உகள்வன, நீர் நாய்
கலிநடக் கழைக் கண்ணுளர் என நடம் கவின,
பொலிவு உடைத்து என, தேரைகள் புகழ்வன போலும். 21

காட்சிகளைக் கண்ட இராமன் சீதையின் நினைவால் புலம்புதல்

அன்னது ஆகிய அகன் புனல் பொய்கையை அணுகி,
கன்னி அன்னமும் கமலமும் முதலிய கண்டான்;
தன்னின் நீங்கிய தளிரியற்கு உருகினன் தளர்வான்,
உன்னும் நல் உணர்வு ஒடுங்கிட, புலம்பிடலுற்றான்: 22

'வரி ஆர் மணிக் கால் வாளமே! மட அன்னங்காள்! எனை, நீங்கத்
தரியாள் நடந்தாள்; இல்லளேல் தளர்ந்த போதும் தகவேயோ?
எரியாநின்ற ஆர் உயிருக்கு இரங்கினால், ஈது இசை அன்றோ?
பிரியாது இருந்தேற்கு ஒரு மாற்றம் பேசின், பூசல் பெரிது ஆமோ? 23

'வண்ண நறுந் தாமரை மலரும், வாசக் குவளை நாள்மலரும்,
புண்ணின் எரியும் ஒரு நெஞ்சம் பொதியும் மருந்தின், தரும் பொய்காய்!
கண்ணும் முகமும் காட்டுவாய்; வடிவும் ஒருகால் காட்டாயோ?
ஒண்ணும் என்னின், அஃது உதவாது, உலோவினாரும் உயர்ந்தாரோ? 24

விரிந்த குவளை, சேதாம்பல், விரை மென் கமலம், கொடி வள்ளை,
தரங்கம், கெண்டை, வரால், ஆமை, என்று இத்தகையதமை நோக்கி,
'மருந்தின் அனையாள் அவயவங்கள் அவை நிற் கண்டேன்; வல் அரக்கன்,
அருந்தி அகல்வான் சிந்தினவோ? ஆவி! உரைத்தி ஆம் அன்றே!' 25

'ஓடாநின்ற களி மயிலே! சாயற்கு ஒதுங்கி, உள் அழிந்து,
கூடாதாரின் திரிகின்ற நீயும், ஆகம் குளிர்ந்தாயோ?
தேடாநின்ற என் உயிரைத் தெரியக் கண்டாய்; சிந்தை உவந்து
ஆடா நின்றாய்; ஆயிரம் கண் உடையாய்க்கு ஒளிக்குமாறு உண்டோ ? 26

'அடையீர் எனினும் ஒரு மாற்றம் அறிந்தது உரையீர்; - அன்னத்தின்
பெடையீர்! - ஒன்றும் பேசீரோ? பிழையாதேற்குப் பிழைத்தீரோ?
நடை நீர் அழியச் செய்தாரே நடு இலாதார்; நனி அவரோடு
உடையீர் பகைதான்; உமை நோக்கி உவக்கின்றேனை முனிவீரோ? 27

'பொன் பால் பொருவும் விரை அல்லி புல்லிப் பொலிந்த பொலந் தாது
தன்பால் தழுவும் குழல் வண்டு, தமிழ்ப் பாட்டு இசைக்கும் தாமரையே!
என்பால் இல்லை; அப் பாலோ இருப்பார் அல்லர்; விருப்புடைய
உன்பால் இல்லை என்றக்கால், ஒளிப்பாரோடும் உறவு உண்டோ ? 28

'ஒரு வாசகத்தை வாய் திறந்து இங்கு உதவாய், பொய்கைக் குவிந்து ஒடுங்கும்
திரு வாய் அனைய சேதாம்பற்கு அயலே கிடந்த செங் கிடையே!
வெருவாது எதிர் நின்று அமுது உயிர்க்கும் வீழிச் செவ்விக் கொழுங் கனி வாய்
தருவாய்; அவ் வாய் இன் அமுதும், தண்ணென் மொழியும் தாராயோ? 29

'அலக்கண் உற்றேற்கு உற்று உதவற்கு, அடைவு உண்டு அன்றோ?-கொடி வள்ளாய்!
மலர்க் கொம்பு அனைய மடச் சீதை காதே; மற்று ஒன்று அல்லையால்;
பொலக் குண்டலமும், கொடுங் குழையும், புனை தாழ் முத்தின் பொன் - தோடும்,
விலக்கி வந்தாய்; காட்டாயோ? இன்னும் பூசல் விரும்புதியோ? 30

'பஞ்சு பூத்த விரல், பதுமம் பவளம் பூத்த அடியாள், என்
நெஞ்சு பூத்த தாமரையின் நிலையம் பூத்தாள், நிறம் பூத்த
மஞ்சு பூத்த மழை அனைய குழலாள், கண்போல் மணிக் குவளாய்!
நஞ்சு பூத்ததாம் அன்ன நகையால் என்னை நலிவாயோ?' 31

என்று அயா உயிர்க்கின்றவன், ஏடு அவிழ்
கொன்றை ஆவிப் புறத்து இவை கூறி, 'யான்
பொன்ற, யாதும் புகல்கிலை போலுமால்,
வன் தயாவிலி!' என்ன வருந்தினான்; 32

வார் அளித் தழை மாப் பிடி வாயிடை,
கார் அளிக் கலுழிக் கருங் கைம் மலை
நீர் அளிப்பது நோக்கினன், நின்றனன் -
பேர் அளிக்குப் பிறந்த இல் ஆயினான். 33

இராமன் நீராடிக் கடன் முடித்து, சோலையில் தங்குதல்

ஆண்டு, அவ் வள்ளலை, அன்பு எனும் ஆர் அணி
பூண்ட தம்பி, 'பொழுது கழிந்ததால்;
ஈண்டு இரும் புனல் தோய்ந்து, உன் இசை என
நீண்டவன் கழல் தாழ், நெடியோய்!' என்றான். 34

அரைசும், அவ் வழி நின்று அரிது எய்தி, அத்
திரை செய் தீர்த்தம், முன் செய் தவம் உண்மையால்,
வரை செய் மா மத வாரணம் நாணுற,
விரை செய் பூம் புனல் ஆடலை மேயினான். 35

நீத்த நீரில் நெடியவன் மூழ்கலும்,
தீத்த காமத் தெறு கதிர்த் தீயினால்,
காய்த்து இரும்பை, கருமகக் கம்மியன்,
தோய்த்த தண் புனல் ஒத்தது, அத் தோயமே. 36

ஆடினான், அன்னம் ஆய் அரு மறைகள் பாடினான்,
நீடு நீர்; முன்னை நூல் நெறி முறையின், நேமி தாள்
சூடினான்; முனிவர்தம் தொகுதி சேர் சோலைவாய்,
மாடுதான் வைகினான்; எரி கதிரும் வைகினான். 37

நிலவின் தோற்றமும், இரவில் யாவும் துயிலுதலும்

அந்தியாள் வந்து தான் அணுகவே, அவ் வயின்
சந்த வார் கொங்கையாள் தனிமைதான் நாயகன்
சிந்தியா, நொந்து தேய் பொழுது, தெறு சீத நீர்
இந்து வான் உந்துவான், எரி கதிரினான் என. 38

பூ ஒடுங்கின; விரவு புள் ஒடுங்கின, பொழில்கள்;
மா ஒடுங்கின; மரனும் இலை ஒடுங்கின; கிளிகள்
நா ஒடுங்கின; மயில்கள் நடம் ஒடுங்கின; குயில்கள்
கூ ஒடுங்கின; பிளிறு குரல் ஒடுங்கின, களிறு. 39

கண் உறங்காமல் இராமன் இரவைக் கழித்தல்

மண் துயின்றன; நிலைய மலை துயின்றன; மறு இல்
பண் துயின்றன; விரவு பணி துயின்றன; பகரும்
விண் துயின்றன; கழுதும் விழி துயின்றன; பழுது இல்
கண் துயின்றில, நெடிய கடல் துயின்றன களிறு. 40

இராமன் மேலும் சீதையைத் தேடி நடத்தல்

பொங்கி முற்றிய உணர்வு புணர்தலும், புகையினொடு
பங்கம் உற்றனைய வினை பரிவுறும்படி, முடிவு இல்
கங்குல் இற்றது; கமலம் முகம் எடுத்தது; - கடலின்
வெங் கதிர்க் கடவுள் எழ, விமலன் வெந் துயரின் எழ. 41

காலையே கடிது நெடிது ஏகினார் - கடல் கவினு
சோலை ஏய் மலை தழுவு கான நீள் நெறி தொலைய,
ஆலை ஏய் துழனி அகநாடர், ஆர்கலி அமுது
போலவே உரைசெய் புன மானை நாடுதல் புரிஞர். 42




புரவலர் / உறுப்பினர்களுக்கான நூல்கள் பிடிஃஎப் (PDF) வடிவில்
எண்
நூல்
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
15
16
17
18
19
20
21
22
23
24
25
26
27
28
29
30
31
32
33
34
35
36
37
38
39
40
41
42
43
44
45
46
47
48
49
50
51
52
53
54
55
56
57
58
59
60
61
62
63
64
65
66
67
68
69
70
71
72
73
74
75
76
77
78
79
80
81
82
83
84
85
86
87
88
89
90
91
92
93
94
95
96
97
98
99
100
101
102
103
104
105
106
107
108
109
110
111
112
113
114
115
116
117
118
119
120
121
122
123
124
125
126
127
128
129
130
131
132
133
134
135
136
137
138
139
140
141
142
143
144
145
146
147
148
149
150
151
152
153
154
155
156
157
158
159
160
161
162
163
164
165
166
167
168
169
170
171
172
173
174
175
176
177
178
179
180
181
182
183
184
185
186
187
188
189
190
191
192
193
194
195
196
197
198
199
200
201
202
203
204
205
206
207
208
209
210
211
212
213
214
215
216
217
218
219
220
221
222
223
224
225
226
227
228
229
230
231
232
233
234
235
236
237
238
239
240
240
241
242
243
244
245
246
247