http://www.chennailibrary.com




சரசுவதி அந்தாதி

     இராமாயணம் இயற்றிய கம்பர் எழுதிய ஒன்பது நூல்களுள் சரசுவதி அந்தாதியும் ஒன்றாகும். கம்பர் சோழர்களின் திருவழுந்தூர் கிராமத்தில் உச்சவர் மரபில் ஆதித்தர் என்பவருக்குப் மகனாகப் பிறந்தார். இவரது மரபுச் சமயம் வைணவம். இவரை ஆதரித்தவர் சடையப்பவள்ளல். இவருடைய காலம் கி.பி.12 ஆம் நூற்றாண்டு என்றும் கி.பி.9 ஆம் நூற்றாண்டு என்றும் கூறுவர். இவரது வேறு நூல்கள் சடகோபர் அந்தாதி, ஏரெழுபது, திருக்கை வழக்கம் முதலியவை.

கடவுள் வாழ்த்து

ஆய கலைகள் அறுபத்து நான்கினையும்
ஏய வுணர்விக்கு மென்னம்மை - தூய
வுருப் பளிங்கு போல் வாளென் உள்ளத்தின் உள்ளே
யிருப்பளிங்கு வாரா திடர்.

படிக நிறமும் பவளச் செவ்வாயும்
கடிகமழ்பூந் தாமரை போற் கையுந் - துடியிடையும்
அல்லும் பகலும் அனவரத முந்துதித்தால்
கல்லுஞ்சொல் லாதோ கவி.

நூல்

கலித்துறை

சீர்தந்த வெள்ளிதழ்ப் பூங்கமலா சனத்தேவி செஞ்சொற்
றார்தந்த வென்மனத் தாமரையாட்டி சரோருக மேற்
பார்தந்த நாத னிசைதந்த வாரணப் பங்கயத்தாள்
வார்தந்த சோதி யம்போருகத் தாளை வணங்குதுமே. 1

வணங்குஞ் சிலைநுதலுங் கழைத்தோளும் வனமுலை மேற்
சுணங்கும் புதிய நிலவெழு மேனியுந் தோட்டுடனே
பிணங்குங் கருந்தடங் கண்களு நோக்கிப் பிரமனன்பால்
உணங்குந் திருமுன் றிலாய் மறைநான்கும் உரைப்பவளே. 2

உரைப்பா ருரைக்குங் கலைகளெல்லாம் எண்ணில் உன்னையன்றித்
தரைப்பா லொருவர் தரவல்ல ரோதண் டரளமுலை
வரைப்பா லமுதுதந் திங்கெனை வாழ்வித்த மாமயிலே
விரைப்பா சடைமலர் வெண்டா மரைப்பதி மெல்லியலே. 3

இயலானதுகொண்டு நின்றிரு நாமங்க ளேத்துதற்கு
முயலா மையாற்றடு மாறுகின்றே னிந்த மூவுலகும்
செயலால் அமைத்த கலைமகளே நின் திருவருளுக்கு
அயலா விடாம லடியேனையும் உவந்து ஆண்டருளே. 4

அருக்கோ தயத்தினும் சந்திரோ தயமொத் தழகெறிக்கும்
திருக்கோல நாயகி செந்தமிழ்ப் பாவை திசைமுகத்தான்
இருக்கோ துநாதனுந் தானுமெப் போதுமினி திருக்கு
மருக்கோல நாண்மல ராள் என்னை யாளு மடமயிலே. 5

மயிலே மடப்பிடியே கொடியே இளமான் பிணையே
குயிலே பசுங்கிளியே அன்னமே மனக்கூ ரிருட்கோர்
வெயிலே நிலவெழு மேனிமின் னேயினி வேறுதவம்
பயிலேன் மகிழ்ந்து பணிவேன் உனதுபொற் பாதங்களே. 6

பாதாம் புயத்திற் பணிவார் தமக்குப் பலகலையும்
வேதாந்த முத்தியுந் தந்தருள் பாரதிவெள் ளிதழ்ப்பூஞ்
சீதாம் புயத்தி லிருப்பா ளிருப்பவென் சிந்தையுள்ளே
ஏதாம் புவியிற் பெறலரி தாவதெனக் கினியே. 7

இனிநான் உணர்வ தெண்ணெண் கலையாளை இலகுதொண்டைக்
கனிநாணுஞ் செவ்விதழ் வெண்ணிறத் தாளைக் கமலவயன்
றனிநாயகியை அகிலாண்ட மும்பெற்ற தாயைமணப்
பனிநாண் மலர் உறை பூவையை யாரணப் பாவையையே. 8

பாவுந் தொடையும் பதங்களும் சீரும் பலவிதமா
மேவுங் கலைகள் விதிப்பா ளிடம்விதியின் முதிய
நாவும் பகர்ந்ததொல் வேதங்கள் நான்கு நறுங்கமலப்
பூவுந் திருப்பதம் பூவா லணிபவர் புந்தியுமே. 9

புந்தியிற் கூரிரு ணீக்கும்புதிய மதிய மென்கோ
வந்தியிற் றோன்றிய தீபமென்கோ நல்லரு மறையோர்
சந்தியிற் றோன்றுந் தபனனென் கோமணித்தா மமென்கோ
உந்தியிற் றோன்றும் பிரான்புயந் தோயு மொருத்தியையே. 10




இணைய பக்க முகவரி: http://www.chennailibrary.com/kambar/saraswathianthathi.html

பதிப்புரிமை © 2006 சென்னைநூலகம்.காம்.
அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
இந்த வலைதள பக்கத்தில் உள்ள தகவல்களை பதிப்பிக்கவோ,
ஒலிபரப்பவோ, வெளியிடவோ அல்லது விநியோகிக்கவோ கூடாது.

 அச்சிட       விமர்சிக்க       விருப்ப தளமாக்க
       முகப்பு பக்கமாக்க






வருகைப் பதிவு (25-09-2006 முதல்)
ad
இலக்கிய தகவல்கள்
தரவிறக்கம்
பிற செய்திகள்
ஆன்மீகம்

தமிழ் யுனிகோடில் அமைந்த இணைய தளம். பதிப்புரிமை © 2006 சென்னைநூலகம்.காம். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.