ஏரெழுபது இராமாயணம் இயற்றிய கம்பர் எழுதிய ஒன்பது நூல்களுள் ஏரெழுபதும் ஒன்றாகும். கம்பர் சோழர்களின் திருவழுந்தூர் கிராமத்தில் உச்சவர் மரபில் ஆதித்தர் என்பவருக்குப் மகனாகப் பிறந்தார். இவரது மரபுச் சமயம் வைணவம். இவரை ஆதரித்தவர் சடையப்பவள்ளல். இவருடைய காலம் கி.பி.12 ஆம் நூற்றாண்டு என்றும் கி.பி.9 ஆம் நூற்றாண்டு என்றும் கூறுவர். இவரது வேறு நூல்கள் சடகோபர் அந்தாதி, சரசுவதி அந்தாதி, திருக்கை வழக்கம் முதலியவை. பாயிரம்
1. கணபதி வணக்கம்
கங்கைபெறும் காராளர் கருவியெழு பதுமுரைக்க அங்கைபெறும் வளைத்தழும்பு முலைத்தழும்பு மணியமலை மங்கைபெறும் திருவுருவாய் வந்துறைந்தார் தமைவலஞ்செய் கங்கைபெறுந் தடவிகடக் களிற்றானைக் கழல்பணிவாம். 1 2. மூவர் வணக்கம்
நிறைக்குரிய வந்தணர்கள் நெறிபரவ மனுவிளங்கத் தறைக்குரிய காராளர் தமதுவரம் பினிதோங்க மறைக்குரிய பூமனையும் வண்டுளபத் தாமனையும் பிறைக்குரிய நெடிஞ்சடிலப் பெம்மானை யும்பணிவாம். 2 3. நாமகள் வணக்கம்
திங்களின்மும் மாரிபெயச் செகத்திலுயிர் செழித்தோங்கக் கங்கைகுலா திபர்வயலிற் கருவீறத் தொழுகுலத்தோர் துங்கமக மனுநீதி துலங்கிடவை யம்படைத்த பங்கயன்ற னாவிலுறை பாமடந்தை பதந்தொழுவாம். 3 4. சோழ நாட்டுச் சிறப்பு
ஈழ மண்டல முதலென உலகத் தெண்ணு மண்டலத் தெறிபடை வேந்தர் தாழு மண்டலஞ் செம்பியன் மரபினோர் தாமெலாம்பிறந் தினியபல் வளத்தின் வாழு மண்டலங் கனகமு மணிகளும் வரம்பில் காவிரி குரம்பினிற் கொழிக்குஞ் சோழ மண்டல மிதற்கிணை யாமெனச்சொல்லு மண்டலஞ் சொல்வதற் கில்லையே. 4 5. சோழ மன்னன் சிறப்பு
முடியுடைய மன்னவரின் மூவுலகும் படைத்துடைய கொடியுடைய மன்னவரிற் குலவுமுதற் பெயருடையான் இடியுடைய வொலிகெழுநீ ரெழுபத்தொன் பதுநாட்டுக் குடியுடையான் சென்னிபிற ரென்னுடையார் கூறீரே. 5 6. சோழன்தன் பெருநாட்டுச் சிறப்பு
மந்தர மனைய திண்டோ ண் மணிமுடி வளவன் சேரன் சுந்தர பாண்டி யன்றன் சுடர்மணி மகுடஞ் சூட அந்தணர் குலமு மெல்லா வறங்களும் விளங்க வந்த இந்திர னோலக் கம்போ லிருந்தது பெரிய நாடே. 6 7. வேளாண் குடிச் சிறப்பு
ஆழித்தேவர் கடலானார் அல்லாத்தேவர் அம்பலத்தார் ஊழித்தேவர் தாங்கூடி உலகங் காக்க வல்லாரோ வாழித்தேவர் திருமக்கள் வையம் புரக்கும் பெருக்காளர் மேழித்தொவர் பெருமைக்கு வேறே தேவர் கூறேனே. 7 8. வேளாளர் சிறப்பு
தொழுங்குலத்திற் பிறந்தாலென் சுடர்முடிமன் னவராகி எழுங்குலத்திற் பிறந்தாலென் இவர்க்குப்பின் வணிகரெனுஞ் செழுங்குலத்திற் பிறந்தாலென் சிறப்புடைய ரானாலென் உழுங்குலத்திற் பிறந்தாரே உலகுய்யப் பிறந்தாரே. 8 9. அருட் சிறப்பு
அழுங்குழவிக் கன்புடைய தாயேபோ லனைத்துயிர்க்கும் எழுங்கருணைப் பெருக்காளர் எளியரோ யாம்புகழ உழுங்கெழுவிற் கருவீறி யுலகமுதற் கருவாகச் செழுங்கமலத் தயனிவரைச் செய்துலகஞ் செய்வானேல். 9 பாயிரம் முற்றிற்று.
அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை. இந்த வலைதள பக்கத்தில் உள்ள தகவல்களை பதிப்பிக்கவோ, ஒலிபரப்பவோ, வெளியிடவோ அல்லது விநியோகிக்கவோ கூடாது.
|
| இலக்கிய தகவல்கள் |
| தரவிறக்கம் |
பிற செய்திகள் |
ஆன்மீகம் |
|
|
|
|
தமிழ் யுனிகோடில் அமைந்த இணைய தளம். பதிப்புரிமை © 2006 சென்னைநூலகம்.காம். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
|