இந்திரசித்து வதைப் படலம் - Indirachithu Vathai Padalam - யுத்த காண்டம் - Yuththa Kandam - கம்பராமாயணம் - Kamba Ramayanam - கம்பர் நூல்கள் - Kambar Books - சென்னை நூலகம் - ChennaiLibrary.com



யுத்த காண்டம்

28. இந்திரசித்து வதைப் படலம்

இராவணன் இந்திரசித்திடம், நிகழ்ந்தது உரைக்கக் கூறல்

விண்ணிடைக் கரந்தான் என்பார், 'வஞ்சனை விளைக்கும்' என்பார்,
கண்ணிடைக் கலக்க நோக்கி, ஐயுறவு உழக்கும் காலை,
புண்ணிடை யாக்கைச் செந்நீர் இழிதர, புக்கு நின்ற
எண்ணிடை மகனை நோக்கி, இராவணன் இனைய சொன்னான்: 1

'தொடங்கிய வேள்வி முற்றுப் பெற்றிலாத் தொழில், நின் தோள்மேல்
அடங்கிய அம்பே என்னை அறிவித்தது; அழிவு இல் யாக்கை
நடுங்கினை போலச் சாலத் தளர்ந்தனை; கலுழன் நண்ணப்
படம் குறை அரவம் ஒத்தாய்; உற்றது பகர்தி' என்றான். 2

'சூழ் வினை மாயம் எல்லாம் உம்பியே துடைக்க, சுற்றி,
வேள்வியைச் சிதைய நூறி, வெகுளியால் எழுந்து வீங்கி,
ஆள்வினை ஆற்றல்தன்னால் அமர்த் தொழில் தொடங்கி, ஆர்க்கும்
தாழ்வு இலாப் படைகள் மூன்றும் தொடுத்தனென்; தடுத்துவிட்டான். 3

'நிலம் செய்து, விசும்பும் செய்து, நெடிய மால் படை, நின்றானை
வலம் செய்து போயிற்றுஎன்றால், மற்று இனி வலியது உண்டோ?
குலம் செய்த பாவத்தாலே கொடும் பகை தேடிக் கொண்டாய்;
சலம் செயின், உலகம் மூன்றும் இலக்குவன் முடிப்பன், தானே. 4

'முட்டிய செருவில், முன்னம் முதலவன் படையை என்மேல்
விட்டிலன், உலகை அஞ்சி; ஆதலால், வென்று மீண்டேன்;
கிட்டிய போதும் காத்தான்; இன்னமும் கிளர வல்லான்;
சுட்டிய வலியினாலே கோறலைத் துணிந்து நின்றான். 5

'ஆதலால், "அஞ்சினேன்" என்று அருளலை; ஆசைதான் அச்
சீதைபால் விடுதிஆயின், அனையவர் சீற்றம் தீர்வர்;
போதலும் புரிவர்; செய்த தீமையும் பொறுப்பர்; உன்மேல்
காதலால் உரைத்தேன்' என்றான் - உலகு எலாம் கலக்கி வென்றான். 6

இராவணன் இந்திரசித்தைக் கடிந்துரைத்தல்

இயம்பலும், இலங்கை வேந்தன், எயிற்று இள நிலவு தோன்ற,
புயங்களும் குலுங்க நக்கு, 'போர்க்கு இனி ஒழி, நீ; போத
மயங்கினை, மனமும்; அஞ்சி வருந்தினை; வருந்தல் ஐய!
சயம் கொடு தருவென், இன்றே, மனிதரைத் தனு ஒன்றாலே. 7

'முன்னையோர், இறந்தோர் எல்லாம், இப் பகை முடிப்பர் என்றும்,
பின்னையோர், நின்றோர் எல்லாம், வென்று அவர்ப் பெயர்வர் என்றும்,
உன்னை, "நீ அவரை வென்று தருதி" என்று உணர்ந்தும், அன்றால்;
என்னையே நோக்கி, யான் இந் நெடும் பகை தேடிக் கொண்டேன். 8

'பேதைமை உரைத்தாய்; பிள்ளாய்! உலகு எலாம் பெயர, பேராக்
காதை என் புகழினோடு நிலைபெற, அமரர் காண,
மீது எழும் மொக்குள் அன்ன யாக்கையை விடுவது அல்லால்,
சீதையை விடுவது உண்டோ , இருபது திரள் தோள் உண்டால்? 9

'வென்றிலென் என்ற போதும், வேதம் உள்ளளவும், யானும்
நின்றுளென் அன்றோ, மற்று அவ் இராமன் பேர் நிற்கும் ஆயின்?
பொன்றுதல் ஒரு காலத்துத் தவிருமோ? பொதுமைத்து அன்றோ?
இன்று உளார் நாளை மாள்வர்; புகழுக்கும் இறுதி உண்டோ ? 10

'"விட்டனென், சீதைதன்னை" என்றலும், விண்ணோர் நண்ணி,
கட்டுவது அல்லால், என்னை யான் எனக் கருதுவாரோ?
"பட்டனென்" என்ற போதும், எளிமையின் படுகிலேன் யான்,
எட்டினோடு இரண்டும் ஆன திசைகளை எறிந்து கொண்டேன். 11

'சொல்லி என், பலவும்? நீ நின் இருக்கையைத் தொடர்ந்து, தோளில்
புல்லிய பகழி வாங்கி, போர்த் தொழில் சிரமம் போக்கி,
எல்லியும் கழித்தி' என்னா, எழுந்தனன்; எழுந்து, பேழ் வாய்
வல்லியம் முனிந்தாலன்னான், 'வருக, தேர் தருக!' என்றான். 12

இராவணனை தடுத்து, இந்திரசித்து தேர் ஏறிப் போர்க்குச் செல்லுதல்

எழுந்தவன் தன்னை நோக்கி, இணை அடி இறைஞ்சி, 'எந்தாய்!
ஒழிந்தருள், சீற்றம்; சொன்ன உறுதியைப் பொறுத்தி; யான் போய்க்
கழிந்தனென் என்ற பின்னர், நல்லவா காண்டி' என்னா
மொழிந்து, தன் தெய்வத் தேர்மேல் ஏறினன், முடியலுற்றான். 13

படைக்கல விஞ்சை மற்றும் படைத்தன பலவும், தன்பால்
அடைக்கலம் என்ன ஈசன் அளித்தன, தேர்மேல் ஆக்கி,
கொடைத் தொழில் வேட்டோ ர்க்கு எல்லாம் கொடுத்தனன், கொடியோன் தன்னைக்
கடைக்கணால் நோக்கி நோக்கி, இரு கண் நீர் கலுழப் போனான். 14

இந்திரசித்து தம்மைத் தொடர்ந்த இலங்கையின் நிருதரை விலக்கி, மன்னனைக் காக்குமாறு கூறிச் செல்லுதல்

இலங்கையின் நிருதர் எல்லாம் எழுந்தனர், விரைவின் எய்தி,
'விலங்கல் அம் தோளாய்! நின்னைப் பிரிகலம்; விளிதும்' என்று,
வலங்கொடு தொடர்ந்தார் தம்மை, 'மன்னனைக் காமின்; யாதும்
கலங்கலிர்; இன்றே சென்று, மனிதரைக் கடப்பென்' என்றான். 15

வணங்குவார், வாழ்த்துவார், தன் வடிவினை நோக்கித் தம் வாய்
உணங்குவார், உயிர்ப்பார், உள்ளம் உருகுவார், வெருவலுற்றக்
கணங் குழை மகளிர் ஈண்டி இரைத்தவர், கடைக்கண் என்னும்
அணங்குடை நெடு வேல் பாயும் அமர் கடந்து, அரிதின் போனான். 16

இந்திரசித்தின் தேர் ஓசையை இலக்குவன் கேட்டல்

ஏயினன் இன்னன் ஆக, இலக்குவன், எடுத்த வில்லான்,
சேய் இரு விசும்பை நோக்கி, 'வீடண! தீயோன் அப் பால்
போயினன் ஆதல் வேண்டும்; புரிந்திலன் ஒன்றும்' என்பான்,
ஆயிரம் புரவி பூண்ட தேரின் பேர் அரவம் கேட்டான். 17

குன்று இடை நெரிதர, வடவரையின் குவடு உருள்குவது என முடுகுதொறும்,
பொன் திணி கொடியினது இடி உருமின் அதிர் குரல் முரல்வது, புனை மணியின்
மின் திரள் சுடரது, கடல் பருகும் வடவனல் வெளி உற வருவது எனச்
சென்றது, திசை திசை உலகு இரிய, - திரி புவனமும் உறு தனி இரதம். 18

கடல் மறுகிட, உலகு உலைய, நெடுங் கரி இரிதர, எதிர் கவி குலமும்
குடர் மறுகிட, மலை குலைய, நிலம் குழியொடு கிழிபட, வழி படரும்
இடம் மறுகிய பொடி முடுகிடவும், இருள் உளது என எழும் இகல் அரவின்
படம் மறுகிட, எதிர் விரவியது - அவ் இருள் பகல் உற வரு பகை இரதம். 19

இந்திரசித்தும் இலக்குவனும் பொருதல்

ஆர்த்தது நிருதர்தம் அனிகம்; உடன், அமரரும் வெருவினர்; கவி குலமும்
வேர்த்தது, வெருவலொடு அலம்வரலால்; விடு கணை சிதறினன், அடு தொழிலோன்;
தீர்த்தனும், அவன் எதிர் முடுகி, நெடுந் திசை செவிடு எறிதர, விசை கெழு திண்
போர்த் தொழில் புரிதலும், உலகு கடும் புகையொடு சிகை அனல் பொதுளியதால். 20

இந்திரசித்தை உடனே கொல்லுமாறு வீடணன் இலக்குவனுக்கு உரைத்தல்

வீடணன் அமலனை, 'விறல் கெழு போர் விடலையை இனி இடை விடல் உளதேல்,
சூடலை, துறு மலர் வாகை' எனத் தொழுதனன்; அ(வ்) அளவில் அழகனும் அக்
கோடு அணை வரி சிலை உலகு உலைய, குல வரை பிதிர்பட, நிலவரையில்
சேடனும் வெருவுற, உரும் உறழ் திண் தெறு கணை முறை முறை சிதறினனால். 21

இருவரும் பொருதல்

ஆயிர அளவின அயில் முக வாய் அடு கணை அவன் விட, இவன் விட, அத்
தீயினும் எரிவன உயிர் பருக, சிதறின கவிகளொடு இன நிருதர்,
போயின போயின திசை நிறையப் புரள்பவர் முடிவு இலர்; பொரு திறலோர்
ஏயினர், ஒருவரை ஒருவர் குறித்து, எரி கணை, இரு மழை பொழிவனபோல். 22

அற்றன, அனல் விழி நிருதன் வழங்கு அடு கணை இடை இடை; அடல் அரியின்
கொற்றவன் விடு கணை முடுகி, அவன் உடல் பொதி குருதிகள் பருகின கொண்டு
உற்றன; ஒளி கிளர் கவசம் நுழைந்து உறுகில; தெறுகில அனுமன் உடல்;
புற்றிடை அரவு என நுழைய, நெடும் பொரு சரம் அவன் அவை உணர்கிலனால். 23

ஆயிடை, இளையவன், விடம் அனையான் அவன் இடு கவசமும் அழிவுபட,
தூயினன், அயில் முக விசிகம்; நெடுந் துளைபட, விழி கனல் சொரிய, முனிந்து,
ஏயின நிருதனது எரி கணைதான் இடன் இல படுவன இடை இடை வந்து
ஓய்வுறுவன; அது தெரிவுறலால், உரறினர் இமையவர், உவகையினால். 24

'வில்லினின் வலி தரல் அரிது' எனலால், வெயிலினும் அனல் உமிழ் அயில், 'விரைவில்
செல்' என, மிடல் கொடு கடவினன்; மற்று அது திசைமுகன் மகன் உதவியதால்;
எல்லினும் வெளி பட வருவது கண்டு, இளையவன் எழு வகை முனிவர்கள்தம்
சொல்லினும் வலியது ஓர் சுடு கணையால், நடு இரு துணிபட உரறினனால். 25

ஆணியின் நிலையவன் விசிகம் நுழைந்து, ஆயிரம் உடல் புக, அழிபடு செஞ்
சோணிதம் நிலம் உற, உலறிடவும், தொடு கணை விடுவன மிடல் கெழு திண்
பாணிகள் கடுகின முடுகிடலும், பகலவன் மருமகன், அடு கணையின்
தூணியை உரும் உறழ் பகழிகளால் துணிபட, முறை முறை சிதறினனால். 26

இந்திரசித்தின் தேர்ப்பாகனை இலக்குவன் வீழ்த்தல்

'தேர் உளது எனின், இவன் வலி தொலையான்' எனும் அது தெரிவுற, உணர் உறுவான்,
'போர் உறு புரவிகள் படுகிலவால்; புனை பிணி துணிகில, பொரு கணையால்;
சீரிது, பெரிது, இதன் நிலைமை' எனத் தெரிபவன் ஒரு சுடு தெறு கணையால்,
சாரதி மலை புரை தலையை நெடுந் தரையிடை இடுதலும், முறை திரிய, 27

உய்வினை ஒருவன் தூண்டாது உலத்தலின், தவத்தை, நண்ணி,
ஐவினை நலிய, நைவான் அறிவிற்கும் உவமை ஆகி,
மெய்வினை அமைந்த காமம் விற்கின்ற விரகின் தோலாப்
பொய் வினை மகளிர் கற்பும் போன்றது - அப் பொலம் பொன் திண் தேர். 28

தேரைத் தானே செலுத்தி, தன் மேல் தைத்த அம்புகளைப் பறித்து, இந்திரசித்து வீசுதல்

துள்ளு பாய் புரவித் தேரும் முறை முறை தானே தூண்டி,
அள்ளினன் பறிக்கும் தன் பேர் ஆகமே ஆவம் ஆக,
வள்ளல்மேல், அனுமன் தன்மேல், மற்றையோர் மல் திண் தோள்மேல்,
உள்ளுறப் பகழி தூவி, ஆர்த்தனன், எவரும் உட்க. 29

இந்திரசித்தின் வீரம் கண்டு, தேவரும் இலக்குவனும் வியத்தலும்

'வீரர் என்பார்கட்கு எல்லாம் முன் நிற்கும் வீரர் வீரன்;
பேரர் என்பார்கள் ஆகும் பெற்றியின் பெற்றித்து ஆமே?
சூரர் என்று உரைக்கற்பாலார், துஞ்சும் போது உணர்வின் சோராத்
தீரர்' என்று அமரர் பேசி, சிந்தினார், தெய்வப் பொற் பூ. 30

'எய்த வன் பகழி எல்லாம் பறித்து, இவன் என்மேல் எய்யும்;
கை தடுமாறாது; உள்ளம் உயிர் இனம் கலங்கா; யாக்கை
மொய்கணை கோடி கோடி மொய்க்கவும், இளைப்பு ஒன்று இல்லான்;'
ஐயனும் 'இவனோடு எஞ்சும் ஆண்தொழில் ஆற்றல்' என்றான். 31

இந்திரசித்து பகலில் அன்றி இரவில் இறவான் என வீடணன் இலக்குவனுக்கு மொழிதல்

'தேரினைக் கடாவி, வானில் செல்லினும் செல்லும்; செய்யும்
போரினைக் கடந்து, மாயம் புணர்க்கினும் புணர்க்கும்; போய் அக்
காரினைக் கடந்து, வஞ்சம் கருதினும் கருதும்; காண்டி,
வீர! மெய்; பகலின் அல்லால், விளிகிலன் இருளின், வெய்யோன்.' 32

'இப்பொழுதே வெல்வேன்' என இலக்குவன் உரைத்தபோது, சூரியனும் உதித்தது

என்று எடுத்து இலங்கை வேந்தற்கு இளையவன் இயம்ப, 'இன்னே
பொன்றுவது அல்லால், அப்பால் இனி ஒரு போக்கும் உண்டோ?
சென்றுழிச் செல்லும் அன்றே தெறு கணை; வலியின் தீர்ந்தான்;
வென்றி இப்போதே கோடும்; காண்' என விளம்பும் எல்லை. 33

செம் புனல் சோரிச் செக்கர் திசை உறச் செறிகையாலும்,
அம்பு என உற்ற கொற்றத்து ஆயிரம் கதிர்களாலும்,
வெம்பு பொன் தேரில் தோன்றும் விசையினும், அரக்கன் மெய்யோடு
உம்பரில் செல்கின்றான் ஒத்து, உதித்தனன், அருக்கன் உப்பால். 34

விடிந்தது பொழுதும்; வெய்யோன் விளங்கினன், உலகம் மீதாய்;
இடுஞ் சுடர் விளக்கம் என்ன அரக்கர் ஆம் இருளும் வீய,
'கொடுஞ் சின மாயச் செய்கை வலியொடும் குறைந்து குன்ற,
முடிந்தனன், அரக்கன்' என்னா, முழங்கினர், உம்பர் முற்றும். 35

'சிவன் ஈந்த தேரும் சிலையும் இருக்கும்வரை இவன் அழியான்' என வீடணன் குறிப்பித்தல்

'ஆர் அழியாத குலத்து அந்தணன் அருளின் ஈந்த
தேர் அழியாத போதும், சிலை கரத்து இருந்த போதும்,
போர் அழியான், இவ் வெய்யோன்; புகழ் அழியாத பொன் - தோள்
வீர! இது ஆணை' என்றான் - வீடணன், விளைவது ஓர்வான். 36

இலக்குவன் இந்திரசித்தின் தேரைச் சிதைக்க, அவன் விண்ணில் மறைந்து ஆரவாரித்தல்

'பச்சை வெம் புரவி வீயா; பல்லியச் சில்லி பாரில்
நிச்சயம் அற்று நீங்கா' என்பது நினைந்து, வில்லின்
விச்சையின் கணவன் ஆனான், வின்மையால், வயிரம் இட்ட
அச்சினோடு ஆழி வெவ்வேறு ஆக்கினான், ஆணி நீக்கி. 37

மணி நெடுந் தேரின் கட்டு விட்டு, அது மறிதலோடும்,
அணி நெடும் புரவி எல்லாம் ஆற்றல் ஆய அன்றே-
திணி நெடு மரம் ஒன்று, ஆழி வாள் மழுத் தாக்க, சிந்திப்
பணை நெடு முதலும் நீங்க, பாங்கு உறை பறவை போல, 38

அழிந்த தேர்த் தட்டின்நின்றும் ஆங்கு உள படைகள் அள்ளிப்
பொழிந்தனன்; இளைய வீரன் கணைகளால் துணித்துப் போக்க,
மொழிந்து இறாவகையில் விண்ணை முட்டினான், உலகம் மூன்றும்
கிழிந்தன என்ன ஆர்த்தான்; கண்டிலர், ஓசை கேட்டார். 39

வர பலத்தால் இந்திரசித்து கல் மழை பொழிய, திசைகள் எங்கும் இலக்குவன் வாளி ஏவுதல்

மல்லின் மா மாரி அன்ன தோளினான், மழையின் வாய்ந்த
கல்லின் மா மாரி, பெற்ற வரத்தினால், சொரியும்காலை,
செல்லும் வான் திசைகள் ஓரார், சிரத்தினோடு உடல்கள் சிந்தப்
புல்லினார் நிலத்தை, நின்ற வானர வீரர், போகார். 40

காண்கிலன், கல்லின் மாரி அல்லது, காளை வீரன்,
சேண் கலந்து ஒளித்து நின்ற செய்கையால், திசைகள் எங்கும்
மாண் கலந்து அளந்த மாயன் வடிவு என, முழுதும் வௌவ,
ஏண் கலந்து அமைந்த வாளி ஏவினான், இடைவிடாமல். 41

இந்திரசித்தின் வில் பிடித்த கையை இலக்குவன் துணித்து வீழ்த்துதல்

மறைந்தன திசைகள் எங்கும்; மாறு போய் மலையும் ஆற்றல்
குறைந்தனன்; இருண்ட மேகக் குழாத்திடைக் குருதிக் கொண்மூ
உறைந்துளது என்ன நின்றான் உருவினை, உலகம் எல்லாம்
நிறைந்தவன் கண்டான்; காணா, இனையது ஓர் நினைவது ஆனான்: 42

'சிலை அறாது எனினும், மற்று அத் திண்ணியோன் திரண்ட தோளாம்
மலை அறாது ஒழியாது' என்னா, வரி சிலை ஒன்று வாங்கி,
கலை அறாத் திங்கள் அன்ன வாளியால், கையைக் கொய்தான்,-
விலை அறா மணிப் பூணோடும், வில்லொடும், நிலத்து வீழ. 43

பாக வான் பிறைபோல் வெவ் வாய்ச் சுடு கணை படுதலோடும்,
வேக வான் கொடுங் கால் எற்ற முற்றும் போய் விளியும் நாளில்,-
மாக வான் தடக் கை மண்மேல் விழுந்தது மணிப் பூண் மின்ன-
மேகம் ஆகாயத்து இட்ட வில்லொடும் வீழ்ந்தது என்ன. 44

படித்தலம் சுமந்த நாகம் பாக வான் பிறையைப் பற்றிக்
கடித்தது போல, கோல விரல்களால் இறுகக் கட்டிப்
பிடித்த வெஞ் சிலையினோடும், பேர் எழில் வீரன் பொன் - தோள்
துடித்தது, - மரமும், கல்லும் துகள் பட, குரங்கும் துஞ்ச. 45

அந்தரம் அதனில் நின்ற வானவர், 'அருக்கன் வீழா,
சந்திரன் வீழா, மேரு மால் வரை தகர்ந்து வீழா,
இந்திரசித்தின் பொன் - தோள் இற்று இடைவிழுந்தது என்றால்,
எந்திரம் அனைய வாழ்க்கை இனிச் சிலர் உகந்து என்?' என்றார். 46

கை அற்றமை கண்டு அரக்கர் கலங்க, வானரர் அரக்கர்களை மாய்த்தல்

மொய் அற மூர்த்தி அன்ன மொய்ம்பினான் அம்பினால், அப்
பொய் அறச் சிறிது என்று எண்ணும் பெருமையான் புதல்வன், பூத்த
மை அறக் கரிது என்று எண்ணும் மனத்தினான், வயிரம் அன்ன,
கை அற, தலை அற்றார்போல் கலங்கினார், நிருதர் கண்டார். 47

அன்னது நிகழும் வேலை, ஆர்த்து எழுந்து, அரியின் வெள்ளம்
மின் எயிற்று அரக்கர் சேனை யாவரும் மீளா வண்ணம்,
கொல் நகக் கரத்தால், பல்லால்; மரங்களால், மானக் குன்றால்,
பொன் நெடு நாட்டை எல்லாம் புதுக் குடி ஏற்றிற்று அன்றே. 48

இந்திரசித்து வீரம் பேசி, உக்கிரமாகப் பொருதல்

காலம் கொண்டு எழுந்த மேகக் கருமையான், 'செம்மை காட்டும்
ஆலம் கொண்டு இருண்ட கண்டத்து அமரர்கோன் அருளின் பெற்ற
சூலம் கொண்டு எறிவல்' என்று தோன்றினான், 'பகையின் தோற்ற
மூலம் கொண்டு உணரா நின்னை முடித்து அன்றி முடியேன்' என்றான். 49

காற்று என, உரும் ஏறு என்ன, கனல் என, கடை நாள் உற்ற
கூற்றம் ஓர் சூலம் கொண்டு குறுகியது என்ன, கொல்வான்
தோற்றினான்; அதனைக் காணா, 'இனி, தலை துணிக்கும் காலம்
ஏற்றது' என்று, அயோத்தி வேந்தற்கு இளையவன் இதனைச் செய்தான். 50

இலக்குவன் பிறை முக அம்பு எய்து, இந்திரசித்தின் தலையை அறுத்தல்

'மறைகளே தேறத் தக்க, வேதியர் வணங்கற்பால,
இறையவன் இராமன் என்னும் நல் அற மூர்த்திஎன்னின்,
பிறை எயிற்று இவனைக் கோறி' என்று, ஒரு பிறை வாய் வாளி
நிறை உற வாங்கி விட்டான் - உலகு எலாம் நிறுத்தி நின்றான். 51

நேமியும், குலிச வேலும், நெற்றியின் நெருப்புக் கண்ணான்
நாம வேல்தானும், மற்றை நான்முகன் படையும், நாண,
தீ முகம் கதுவ ஓடிச் சென்று, அவன் சிரத்தைத் தள்ளி,
பூ மழை வானோர் சிந்த, பொலிந்தது - அப் பகழிப் புத்தேள். 52

இந்திரசித்து இறந்து மண்மேல் விழ, அரக்கர் சேனை இரிந்து ஓடுதல்

அற்றவன் தலைமீது ஓங்கி, அண்டம் உற்று அணுகாமுன்னம்,
பற்றிய குலத்தோடும், உடல் நிறை பகழியோடும்,
எற்றிய காலக் காற்றால், மின்னொடும் இடியினோடும்
சுற்றிய புயல் வீழ்ந்தென்ன, வீழ்ந்தது, சோரன் யாக்கை. 53

விண் தலத்து இலங்கு திங்கள் இரண்டொடும், மின்னு வீசும்
குண்டலத் துணைகளோடும், கொந்தளக் குஞ்சிச் செங் கேழ்ச்
சண்ட வெங் கதிரின் கற்றைத் தழையொடும், இரவிதான் அம்
மண்டலம் வீழ்ந்தது என்ன, வீழ்ந்தது, தலையும் மண்மேல். 54

உயிர் இறப் புக்க காலை, உள் நின்ற உணர்வினோடும்,
செயிர் அறு பொறியும் அந்தக்கரணமும் சிந்துமாபோல்,
அயில் எயிற்று அரக்கர் உள்ளார், ஆற்றலர் ஆகி, ஆன்ற
எயிலுடை இலங்கை நோக்கி, இரிந்தனர், படையும் விட்டார். 55

தேவர்களின் மகிழ்ச்சி ஆரவாரம்

வில்லாளர் ஆனார்க்கு எல்லாம் மேலவன் விளிதலோடும்,
'செல்லாது, அவ் இலங்கை வேந்தற்கு அரசு' எனக் களித்த தேவர்
எல்லாரும், தூசு நீக்கி ஏறிட ஆர்த்த போது,
கொல்லாத விரதத்தார் தம் கடவுளர் கூட்டம் ஒத்தார். 56

வானவர் அருளால் வானரர் உயிர் பெற்று எழுதல்

வரம் தரு முதல்வன், மற்றை மான் மறிக் கரத்து வள்ளல்,
புரந்தரன், முதல்வர் ஆய நான்மறைப் புலவர், பாரில்
நிரந்தரம் தோன்றி நின்றார்; அருளினால் நிறைந்த நெஞ்சர்
கரந்திலர்; அவரை யாக்கை கண்டன, குரங்கும், கண்ணால். 57

'அறம் தலைநின்றார்க்கு இல்லை அழிவு' எனும் அறிஞர் வார்த்தை
சிறந்தது - சரங்கள் பாயச் சிந்திய சிரத்த ஆகி,
பறந்தலை அதனில் மற்று அப் பாதக அரக்கன் கொல்ல,
இறந்தன கவிகள் எல்லாம் எழுந்தன, இமையோர் ஏத்த. 58

இந்திரசித்தின் தலையை ஏந்தி, அங்கதன் முன் செல்ல, அனுமனின் தோள்மேல் இலக்குவன் செல்லுதல்

ஆக்கையின்நின்று வீழ்ந்த அரக்கன் செந் தலையை அம் கை
தூக்கினன், உள்ளம் கூர்ந்த வாலி சேய் தூசி செல்ல,
மேக்கு உயர்ந்து அமரர் வெள்ளம் அள்ளியே தொடர்ந்து வீசும்
பூக் கிளர் பந்தர் நீழல், அனுமன் மேல் இளவல் போனான். 59

இந்திரனின் உவகை மொழி

வீங்கிய தோளன், தேய்ந்து மெலிகின்ற விழியன், மீதுற்று
ஓங்கிய முடியன், திங்கள் ஒளி பெறு முகத்தன், உள்ளால்
வாங்கிய துயரன், மீப் போய் வளர்கின்ற புகழன், வந்துற்று
ஓங்கிய உவகையாளன், இந்திரன், உரைப்பதானான்: 60

'"எல்லி வான் மதியின் உற்ற கறை என, என் மேல் வந்து
புல்லிய வடுவும் போகாது" என்று அகம் புலம்புகின்றேன்,
வில்லியர் ஒருவர் நல்க, துடைத்துறும் வெறுமை தீர்ந்தேன்;
செல்வமும் பெறுதற்கு உண்டோ குறை? இனி, சிறுமை யாதோ? 61

தென் தலை ஆழி தொட்டோ ன் சேய் அருள் சிறுவன் செம்மல்,
வென்று அலைத்து என்னை ஆர்த்துப் போர்த் தொழில் கடந்த வெய்யோன்,
தன் தலை எடுப்பக் கண்டு, தானவர் தலைகள் சாய,
என் தலை எடுக்கலானேன்; இனிக் குடை எடுப்பென்' என்றான். 62

இலக்குவன் மீண்டு வருதல் கண்டு, இராமன் உவகைக் கண்ணீர் சொரிதல்

வரதன், போய் மறுகாநின்ற மனத்தினன், 'மாயத்தோனைச்
சரதம் போர் வென்று மீளும், தருமமே தாங்க' என்பான்,
விரதம் பூண்டு, உயிரினோடும் தன்னுடை மீட்சி நோக்கும்
பரதன் போன்று இருந்தான், தம்பி வருகின்ற பரிசு பார்த்தான். 63

வன் புலம் கடந்து மீளும் தம்பிமேல் வைத்த மாலைத்
தன் புல நயனம் என்னும் தாமரை சொரியும் தாரை,
அன்புகொல்? அழு கணீர்கொல்? ஆனந்த வாரியேகொல்?
என்புகள் உருகிச் சோரும் கருணைகொல்? யார், அது ஓர்வார்? 64

இராமன் திருவடிகளில் இந்திரசித்தின் தலையை வைக்க, அவன் களிப்புக் கொள்ளுதல்

விழுந்து அழி கண்ணின் நீரும், உவகையும், களிப்பும், வீங்க,
எழுந்து எதிர் வந்த வீரன் இணை அடி முன்னர் இட்டான் -
கொழுந்து எழும் செக்கர்க் கற்றை வெயில் விட, எயிற்றின் கூட்டம்
அழுந்துற, மடித்த பேழ் வாய்த் தலை அடியுறை ஒன்று ஆக. 65

தலையினை நோக்கும்; தம்பி கொற்றவை தழீஇய பொன் தோள்
மலையினை நோக்கும்; நின்ற மாருதி வலியை நோக்கும்;
சிலையினை நோக்கும்; தேவர் செய்கையை நோக்கும்; செய்த
கொலையினை நோக்கும்; ஒன்றும் உரைத்திலன், களிப்புக் கொண்டான். 66

இராமன் திருவடிகளில் இலக்குவன் வணங்குதலும், இராமன் தம்பியைத் தழுவிப் போற்றுதலும்

காள மேகத்தைச் செக்கர் கலந்தென, கரிய குன்றில்
நாள் வெயில் பரந்தது என்ன, நம்பிதன் தம்பி மார்பில்
தோளின்மேல் உதிரச் செங் கேழ்ச் சுவடு தன் உருவில் தோன்ற,
தாளின்மேல் வணங்கினானைத் தழுவினன், தனித்து ஒன்று இல்லான். 67

தூக்கிய தூணி வாங்கி, தோளொடு மார்பைச் சுற்றி
வீக்கிய கவச பாசம் ஒழித்து, அது விரைவின் நீக்கி,
தாக்கிய பகழிக் கூர் வாய் தடிந்த புண் தழும்பும் இன்றிப்
போக்கினன் - தழுவிப் பல்கால், பொன் தடந் தோளின் ஒற்றி. 68

வீடணனை இராமன் புகழ்ந்து பேசி, இனிது இருத்தல்

'ஆடவர் திலக! நின்னால் அன்று; இகல் அனுமன் என்னும்
சேடனால் அன்று; வேறு ஓர் தெய்வத்தின் சிறப்பும் அன்று;
வீடணன் தந்த வென்றி, ஈது' என விளம்பி மெய்ம்மை,
ஏடு அவிழ் அலங்கல் மார்பன் இருந்தனன், இனிதின், இப்பால். 69

மிகைப் பாடல்கள்

என்று அவன் இகழ்ந்தது எல்லாம் இந்திரசித்து கேளான்,
நன்று நம் ஆணை என்னா, நகைசெய்யா, அவனைப் பார்த்து,
'கொன்று நான் இருவர்தம்மைக் குரக்கு இனத்தோடும் மாய்த்து,
வென்று நான் வருவன,-எந்தாய்!-கேள்' என, விளம்பலுற்றான். 10-1

'வாசக் குழலாள் மயில் சீதையை நீ
ஆசைப்படுகின்றது நன்று அல காண்;
நாசத்தை உறும், உயிர் போய்; நானே
நேசப்படுகின்றனன்' என்றனனே. 10-2

'சிறியோர் செயல் துன்மதி செய்தனை நீ;
வெறி ஆர் குழல் சீதையை விட்டு அகல,
செறி ஆர் மணி மாளிகை சேர் தரு, நின்
அறியாமையினால் அழிவானதுவே. 10-3

'வண்டு ஆர் குழலார் மலர்மாதினை நீ
கண்டே மனம் வைப்பது கற்பிலகாண்;
விண்டே எதிர் வாலிதன் மார்பு உருவக்
கண்டோ ன் அவனே, கணை ஒன்றதனால். 10-4

'ஆரே, பிறர் தாரம் உறுப்பு அதனில்
நேரே நினைகின்றவர்? நீ நினைவாய்;
பாரே இழிவு ஆனது; தான் நிலையின்
பேரே ஒழிவு ஆனது' என்று சொன்னான். 10-5

'வட்ட மா மதி முகத்து எம் மங்கையை மூக்கு அரிந்த
கட்ட மானிடவர் தங்கள் கை வலி காட்டினாலும்,
இட்ட நாள் எல்லைதன்னை யாவரே விலக்க வல்லார்?
பட்டு, நான் விழுந்தால் அன்றி, பாவையை விடுவது உண்டோ ? 11-1

'பழுது இலா வடிவினாளை, பால் அன்ன மொழியினாளை
தழுவினால் அன்றி, ஆசை தவிருமோ? தவம் இலாதாய்!
முழுதும் வானவரை வென்றேன்; மூவர் என் முன் நில்லார்கள்;
அழிவுதான் எனக்கும் உண்டோ ? ஆண் அலாய்; பேடி!' என்றான். 11-2

சிறு தொழிற்கு உரியர் ஆகி, தீவினைக்கு உறவாய் நின்ற
எறி படை அரக்கர் என்னும் எண் இலா வெள்ளச் சேனை
மறி திரைக் கடலின் போத, வான் முரசு இயம்ப, வல்லே,
தெறு சினத்து அரக்கன், வானோர் திகைத்து உளம் குலைய, சென்றான். 16-1

அச்சு எனலாக முன்பின் தோன்றலும், அறாத மெய்யன்
தச்சன பகழி மாரி எண்ணல் ஆம் தகவும் தத்தி,
பச்செனும் மரத்தவாறு பெருக்கவும், பதையாநின்றான்,
நிச்சயம் போரில் ஆற்றல் ஓய்வு இலன்; நெஞ்சம் அஞ்சான். 30-1

'வான் தலை எடுக்க, வேலை மண் தலை எடுக்க, வானோர்
கோன் தலை எடுக்க, வேதக் குலம் தலை எடுக்க, குன்றாத்
தேன் தலையெடுக்கும் தாராய்! தேவரை வென்றான் தீய
ஊன் தலை எடுத்தாய், நீ' என்று உரைத்தனர், உவகை மிக்கார். 62-1

'கம்ப மதத்துக் களி யானைக் காவல் சனகன் பெற்றெடுத்த
கொம்பும் என்பால் இனி வந்து குறுகினாள் என்று அகம் குளிர்ந்தேன்;
வம்பு செறிந்த மலர்க் கோயில் மறையோன் படைத்த மா நிலத்தில்,
"தம்பி உடையான் பகை அஞ்சான்" என்னும் மாற்றம் தந்தனையால். 67-1




புரவலர் / உறுப்பினர்களுக்கான நூல்கள் பிடிஃஎப் (PDF) வடிவில்
எண்
நூல்
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
15
16
17
18
19
20
21
22
23
24
25
26
27
28
29
30
31
32
33
34
35
36
37
38
39
40
41
42
43
44
45
46
47
48
49
50
51
52
53
54
55
56
57
58
59
60
61
62
63
64
65
66
67
68
69
70
71
72
73
74
75
76
77
78
79
80
81
82
83
84
85
86
87
88
89
90
91
92
93
94
95
96
97
98
99
100
101
102
103
104
105
106
107
108
109
110
111
112
113
114
115
116
117
118
119
120
121
122
123
124
125
126
127
128
129
130
131
132
133
134
135
136
137
138
139
140
141
142
143
144
145
146
147
148
149
150
151
152
153
154
155
156
157
158
159
160
161
162
163
164
165
166
167
168
169
170
171
172
173
174
175
176
177
178
179
180
181
182
183
184
185
186
187
188
189
190
191
192
193
194
195
196
197
198
199
200
201
202
203
204
205
206
207
208
209
210
211
212
213
214
215
216
217
218
219
220
221
222
223
224
225
226
227
228
229
230
231
232
233
234
235
236
237
238
239
240
240
241
242
243
244
245
246
247