திருக்கடவூர் உய்யவந்த தேவ நாயனார் இயற்றிய திருக்களிற்றுப்படியார்
அம்மைஅப்பர் அப்பரிசே வந்துஅளிப்பர் - அம்மைஅப்பர் எல்லா உலகுக்கும் அப்புறத்தார் இப்புறத்தும் அல்லார்போல் நிற்பர் அவர். 1 தம்மில் தலைப்பட்டார் பாலே தலைப்பட்டுத் தம்மில் தலைப்படுதல் தாம் உணரின் - தம்மில் நிலைப்படுவர் ஓர் இருவர் நீக்கிநிலை யாக்கித் தலைப்படுவர் தாம் அத் தலை. 2 என்அறிவு சென்றளவில் யான் இன்று அறிந்தபடி என்அறிவில் ஆர்அறிக என்றுஒருவன் - சொன்னபடி சொல்லக்கேள் என்று ஒருவன் சொன்னான் எனக்கு அதனைச் சொல்லக்கேள் நான் உனக்குச் சொல். 3 அகளமய மாய்நின்ற அம்பலத்துஎம் கூத்தன் சகளமாய் போல் உலகில் தங்கி - நிகளமாம் ஆணவ மூல மலம் அகல ஆண்டனன் காண் மாணவக என்னுடனாய் வந்து. 4 "ஆகமங்கள் எங்கே அறுசமயம் தான் எங்கே யோகங்கள் எங்கே உணர்வுகள்எங்கே - பாகத்து அருள்வடிவும் தானுமாய் ஆண்டிலனேல் அந்தப் பெருவடிவை யார் அறிவார் பேசு". 5 சாத்திரத்தை ஓதினர்க்குச் சற்குருவின் தன்வசன மாத்திரத்தே வாய்த்தவளம் வந்துறுமே - ஆர்த்தகடல் தண்ணீர் குடித்தவர்க்குத் தாகம் தணிந்திடுமோ தெண்ணீர்மை யாய் இதனைச் செப்பு. 6 இன்று பசுவின் மலம் அன்றே இவ்வுலகில் நின்ற மலம் அனைத்தும் நீக்குவது இங்கு - என்றால் உருவுடையான் அன்றே உரு அழியப் பாயும் உரு அருள வல்லான் உரை. 7 கண்டத்தைக் கொண்டு கருமம் முடித்தவரே அண்டத்தின் அப்புறத்த(து) என்னாதே - அண்டத்தின் அப்புறமும் இப்புறமும் ஆரறிவும் சென்றறியும் எப்புறமும் கண்டவர்கள் இன்று. 8 அன்றுமுதல் ஆரேனும் ஆளாய் உடனாகிச் சென்றவர்க்கும் இன்னதெனச் சென்றதுஇலை - இன்று இதனை எவ்வாறு இருந்தது என்(று) எவ்வண்ணம் சொல்லுகேன் அவ்வா(று) இருந்த(து) அது. 9 ஒன்றும் குறியே குறியாத லால் அதனுக்(கு) ஒன்றும் குறியொன்(று) இலாமையினால் - ஒன்றோ(டு) உவமிக்கல் ஆவதுவும் தாளில்லை ஒவ்வாத் தவம்மிக்கா ரேஇதற்குச் சான்று. 10 ஆற்றால் அலைகடற்கே பாய்ந்தநீர் அந்நீர்மை மாற்றிஅவ் வாற்றால் மறித்தால்போல் - தோற்றிப் புலன்கள் எனப் போதம் புறம்பொழியும் நம்தம் மலங்கள் அற மாற்றுவிக்கும் வந்து. 11 பாலைநெய்தல் பாடியதும் பாம்பு ஒழியப் பாடியதும் காலனை அன்(று) ஏவிக் கராம்கொண்ட - பாலன் மரணம் தவிர்த்ததுவும் மற்றவர்க்கு நம்தம் கரணம்போல் அல்லாமை காண். 12 தூங்கினரைத் தூய சயனத்தே விட்டதற்பின் தாங்களே சட்டஉறங்குவர்கள் - ஆங்கு அதுபோல் ஐயன் அருட்கடைக்கண் ஆண்ட தற்பின் அப்பொருளாய்ப் பைய விளையுமெனப் பார். 13 உள்ள முதல் அனைத்தும் ஒன்ற உருகவரில் உள்ளம் உருகவந்து உன்னுடனாம் - தெள்ளி உணரும் அவர் தாங்கள் உளராக என்றும் புணரவர நில்லாப் பொருள். 14 நல்லசிவ தன்மத்தால் நல்லசிவ யோகத்தால் நல்லசிவ ஞானத்தால் நான் அழிய - வல்லதனால் ஆரேனும் அன்புசெயின் அங்கே தலைப்படுங்காண் ஆரேனும் காணா அரன். 15 அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை. இந்த வலைதள பக்கத்தில் உள்ள தகவல்களை பதிப்பிக்கவோ, ஒலிபரப்பவோ, வெளியிடவோ அல்லது விநியோகிக்கவோ கூடாது. |
| இலக்கிய தகவல்கள் |
| தரவிறக்கம் |
பிற செய்திகள் |
ஆன்மீகம் |