http://www.chennailibrary.com


திருக்கடவூர் உய்யவந்த தேவ நாயனார்

இயற்றிய

திருக்களிற்றுப்படியார்

அம்மைஅப்ப ரேஉலகுக்(கு) அம்மைஅப்பர் என்றுஅறிக
அம்மைஅப்பர் அப்பரிசே வந்துஅளிப்பர் - அம்மைஅப்பர்
எல்லா உலகுக்கும் அப்புறத்தார் இப்புறத்தும்
அல்லார்போல் நிற்பர் அவர். 1

தம்மில் தலைப்பட்டார் பாலே தலைப்பட்டுத்
தம்மில் தலைப்படுதல் தாம் உணரின் - தம்மில்
நிலைப்படுவர் ஓர் இருவர் நீக்கிநிலை யாக்கித்
தலைப்படுவர் தாம் அத் தலை. 2

என்அறிவு சென்றளவில் யான் இன்று அறிந்தபடி
என்அறிவில் ஆர்அறிக என்றுஒருவன் - சொன்னபடி
சொல்லக்கேள் என்று ஒருவன் சொன்னான் எனக்கு அதனைச்
சொல்லக்கேள் நான் உனக்குச் சொல். 3

அகளமய மாய்நின்ற அம்பலத்துஎம் கூத்தன்
சகளமாய் போல் உலகில் தங்கி - நிகளமாம்
ஆணவ மூல மலம் அகல ஆண்டனன் காண்
மாணவக என்னுடனாய் வந்து. 4

"ஆகமங்கள் எங்கே அறுசமயம் தான் எங்கே
யோகங்கள் எங்கே உணர்வுகள்எங்கே - பாகத்து
அருள்வடிவும் தானுமாய் ஆண்டிலனேல் அந்தப்
பெருவடிவை யார் அறிவார் பேசு". 5

சாத்திரத்தை ஓதினர்க்குச் சற்குருவின் தன்வசன
மாத்திரத்தே வாய்த்தவளம் வந்துறுமே - ஆர்த்தகடல்
தண்ணீர் குடித்தவர்க்குத் தாகம் தணிந்திடுமோ
தெண்ணீர்மை யாய் இதனைச் செப்பு. 6

இன்று பசுவின் மலம் அன்றே இவ்வுலகில்
நின்ற மலம் அனைத்தும் நீக்குவது இங்கு - என்றால்
உருவுடையான் அன்றே உரு அழியப் பாயும்
உரு அருள வல்லான் உரை. 7

கண்டத்தைக் கொண்டு கருமம் முடித்தவரே
அண்டத்தின் அப்புறத்த(து) என்னாதே - அண்டத்தின்
அப்புறமும் இப்புறமும் ஆரறிவும் சென்றறியும்
எப்புறமும் கண்டவர்கள் இன்று. 8

அன்றுமுதல் ஆரேனும் ஆளாய் உடனாகிச்
சென்றவர்க்கும் இன்னதெனச் சென்றதுஇலை - இன்று இதனை
எவ்வாறு இருந்தது என்(று) எவ்வண்ணம் சொல்லுகேன்
அவ்வா(று) இருந்த(து) அது. 9

ஒன்றும் குறியே குறியாத லால் அதனுக்(கு)
ஒன்றும் குறியொன்(று) இலாமையினால் - ஒன்றோ(டு)
உவமிக்கல் ஆவதுவும் தாளில்லை ஒவ்வாத்
தவம்மிக்கா ரேஇதற்குச் சான்று. 10

ஆற்றால் அலைகடற்கே பாய்ந்தநீர் அந்நீர்மை
மாற்றிஅவ் வாற்றால் மறித்தால்போல் - தோற்றிப்
புலன்கள் எனப் போதம் புறம்பொழியும் நம்தம்
மலங்கள் அற மாற்றுவிக்கும் வந்து. 11

பாலைநெய்தல் பாடியதும் பாம்பு ஒழியப் பாடியதும்
காலனை அன்(று) ஏவிக் கராம்கொண்ட - பாலன்
மரணம் தவிர்த்ததுவும் மற்றவர்க்கு நம்தம்
கரணம்போல் அல்லாமை காண். 12

தூங்கினரைத் தூய சயனத்தே விட்டதற்பின்
தாங்களே சட்டஉறங்குவர்கள் - ஆங்கு அதுபோல்
ஐயன் அருட்கடைக்கண் ஆண்ட தற்பின் அப்பொருளாய்ப்
பைய விளையுமெனப் பார். 13

உள்ள முதல் அனைத்தும் ஒன்ற உருகவரில்
உள்ளம் உருகவந்து உன்னுடனாம் - தெள்ளி
உணரும் அவர் தாங்கள் உளராக என்றும்
புணரவர நில்லாப் பொருள். 14

நல்லசிவ தன்மத்தால் நல்லசிவ யோகத்தால்
நல்லசிவ ஞானத்தால் நான் அழிய - வல்லதனால்
ஆரேனும் அன்புசெயின் அங்கே தலைப்படுங்காண்
ஆரேனும் காணா அரன். 15




இணைய பக்க முகவரி: http://www.chennailibrary.com/meikandasathirangal/thirukalitruppadiyar.html

பதிப்புரிமை © 2006 சென்னைநூலகம்.காம்.
அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
இந்த வலைதள பக்கத்தில் உள்ள தகவல்களை பதிப்பிக்கவோ,
ஒலிபரப்பவோ, வெளியிடவோ அல்லது விநியோகிக்கவோ கூடாது.

 அச்சிட       விமர்சிக்க       விருப்ப தளமாக்க
       முகப்பு பக்கமாக்க



வருகைப் பதிவு (25-09-2006 முதல்)
ad
இலக்கிய தகவல்கள்
தரவிறக்கம்
பிற செய்திகள்
ஆன்மீகம்




தமிழ் யுனிகோடில் அமைந்த இணைய தளம். பதிப்புரிமை © 2006 சென்னைநூலகம்.காம். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.