http://www.chennailibrary.com


அண்ணாமலை ரெட்டியார்
இயற்றிய
காவடிச் சிந்து

               சிந்து என்பது இசைத் தமிழ் பாகுபாடுகளில் ஒன்றாகும். அது ஐந்து உறுப்புகளால் ஆன யாப்பு விசேடம். அவை பல்லவி, அநுபல்லவி, மூன்று கண்ணிகள் அடங்கிய சரணம் ஆகும். காவடிச் சிந்து பல்லவியும் அநுபல்லவியும் இன்றிச் சரணங்களுக்குரிய கண்ணிகளை மாத்திரம் பெற்று வரும். முருகனிடம் பிரார்த்தனை செய்து காவடி எடுத்துச் செல்வோர் வழியில் துதி செய்து பாடும் பாடல்களே காவடிச் சிந்து எனப்படுகின்றன. இந்த நூலை இயற்றியவர் அண்ணாமலை ரெட்டியார். இவர் திருநெல்வேலி சங்கர நயினார் கோவிலை அடுத்த சென்னிகுளம் என்னும் ஊரில் 1865 ஆம் ஆண்டு பிறந்தார். திருநெல்வேலி இராமசாமிக் கவிராயரிடம் கல்வி கற்று, பின்னர் ஊற்றுமலை ஜமீந்தார் சுந்தரதாஸ் பாண்டியனின் சமஸ்தான வித்துவானாக விளங்கினார். இவர் நோய் காரணமாக 1891ல், தம் 26ஆம் வயதில் காலமானார்.

1. விநாயகர் துதி

திருவுற் றிலகுகங்க வரையில் புகழ்மிகுந்து
          திகழத் தினம்உறைந்த வாசனை, - மிகு
          மகிமைச் சுகிர்ததொண்டர் நேசனை, - பல
     தீயபாதக காரராகிய சூரர்யாவரும் மாளவேசெய்து
          சிகரக் கிரிபிளந்த வேலனை, - உமை
          தகரக் குழல்கொள்வஞ்சி பாலனை,
மருவுற் றிணர்விரிந்து மதுபக் குலம்முழங்க
          மதுமொய்த் திழிகடம்ப ஆரனை,- விக -
          சிதசித்ர சிகிஉந்து வீரனை, - எழில்
     மாகநாககு மாரியாகிய மாதினோடுகி ராதநாயகி
          மருவப் புளகரும்பு தோளனை, - எனை
          அருமைப் பணிகொளும்த யாளனை,
தெரிதற் கரியமந்தி ரமதைத் தனதுதந்தை
          செவியில் புகமொழிந்த வாயனை,- இள
          ரவியில் கதிர்சிறந்த காயனை,- அகல்
     தேவநாடுகெ டாதுநீடிய சேனைகாவல னாகவேவரு
          திறலுற்ற சிவகந்த நாதனை,- விரி
          மறையத் தொளிருகின்ற பாதனை,
மருளற் றிடநினைந்து மனதிற் களிசிறந்து
          மதுரக் கனிவுவந்து கூடவே,- பல
          விதமுற் றிலகுசிந்து பாடவே,- விரி
     வாரிநீரினை வாரிமேல்வரு மாரிநேர்தரு மாமதாசல
          வதனப் பரன்இரண்டு தாளையே - நயம்
          உதவப் பணிவம்இந்த வேளையே.

2. முருகன் துதி

சீர்வளர் பசுந்தோகை மயிலான்,- வள்ளி
     செவ்விதழ் அலாதினிய தெள்ளமுதும் அயிலான்,
போர்வளர் தடங்கைஉறும் அயிலான் - விமல
     பொன்னடியை இன்னலற உன்னுதல்செய் வாமே.

குஞ்சர வணங்கு ஆவல் வீடா - தபடி
     கொஞ்சிமரு வும்சரச ரஞ்சிதவி சேடா!
பைஞ்சர வணம்காவல் வீடா - வளரும்
     பாலன்என மாலையொடு காலைநினை வாமே.

வல்அவுணர் வழியாதும் விட்டு, - வெருள
     வன்சமர்செய் கந்தனிடம் வழியடிமைப் பட்டு
நல்லஉணர் வழியாது மட்டு - மிஞ்சு
     ஞானபர மானந்த மோனம் அடை வாமே.

ஒருதந்த மாதங்க முகத்தான், - மகிழ
     உத்தம கனிட்டன்என உற்றிடு மகத்தான்,
வருதந்த மாதங்க முகத்தான் - எவரும்
     வாழ்த்துகுக நாயகனை ஏத்துதல்செய் வாமே.

3. கழுகுமலை நகர்

தெள்ளுதமி ழுக்குதவு சீலன், - துதி
     செப்பணாம லைக்கும் அனு கூலன் - வளர்
செழிய புகழ்விளைத்த கழுகு மலைவளத்தை
     தேனே! சொல்லு வேனே.

வெள்ளிமலை யொத்தபல மேடை, - முடி
     மீதினிலே கட்டுகொடி யாடை, - அந்த
வெய்யவன் நடத்திவரு துய்யஇர தப்பரியும்
     விலகும் படி இலகும்.

வீதிதொறும் ஆதிமறை வேதம், - சிவ
     வேதியர்கள் ஓதுசாம கீதம் - அதை
மின்னுமலர்க் காவதனில் துன்னுமடப் பூவையுடன்
     விள்ளும், கிள்ளைப் புள்ளும்,




இணைய பக்க முகவரி: http://www.chennailibrary.com/mis/kavadichindhu.html

பதிப்புரிமை © 2006 சென்னைநூலகம்.காம்.
அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
இந்த வலைதள பக்கத்தில் உள்ள தகவல்களை பதிப்பிக்கவோ,
ஒலிபரப்பவோ, வெளியிடவோ அல்லது விநியோகிக்கவோ கூடாது.

 அச்சிட       விமர்சிக்க       விருப்ப தளமாக்க
       முகப்பு பக்கமாக்க



வருகைப் பதிவு (25-09-2006 முதல்)
ad
இலக்கிய தகவல்கள்
தரவிறக்கம்
பிற செய்திகள்
ஆன்மீகம்




தமிழ் யுனிகோடில் அமைந்த இணைய தளம். பதிப்புரிமை © 2006 சென்னைநூலகம்.காம். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.