புலவர் மன்னமுத்துக் கவுண்டர்
இயற்றிய
மருத வரை உலா
முன்னுரை 'மருதவரை உலா' என்னும் இந்நூலை ஆக்கித் தந்தவர் அமரர் புலவர் மன்னமுத்துக் கவுண்டர். அவர்கள் கற்பனை நயமும், கவிதை அழகும் செறிந்த படைப்பாக இதனை உருவாக்கித் தந்த அவர் தம் காலத்தில் தம் சொந்த நூலை அச்சிட்டுப் பார்க்க முடியவில்லை. அவர் மறைந்து இருபத்து நான்கு ஆண்டுகளுக்குப் பின் அவரது மகன் புலவர் சாமிநாதன், மகள் புலவர் அம்மாக்கண்ணு ஆகியோரது முயற்சியின் பலனாக இந்நூல் நம் கைகளில் தவழ்கின்றது. அவர்களுக்குத் தமிழ் உலகம் நன்றி பாராட்டக் கடமைப் பட்டுள்ளது. நூலாசிரியர்: செந்தமிழால் வளமலியும் மருதவரை உலா' வினைத் தந்த புலவர் மன்னமுத்துக் கவுண்டர் கொங்கு நாட்டின் ஒரு பகுதிக்கு ஆட்சியுரிமை பெற்றிருந்த பரம்பரையில் தோன்றியவர். கொங்கு மண்டல சதகம் பாராட்டிப் பேசும் தலைவர்களில் ஒருவர், கோவைக்கருகிலுள்ள கவசை என்னும் கோயில்பாளையத்தைத் தலை நகராகக் கொண்டு அரசு புரிந்த மசக்காளி மன்றாடியார், பால வேளாளர் எனப் படும் குலத்தைச் சார்ந்த இவரது பரம்பரை பிற்காலத்தில் அரசுரிமை இழந்தது. எனினும் பெரிய தனப் பட்டம் பெற்று மதிப்பு மிக்கதாக இந்தப் பரம்பரை வாழ்ந்து வந்தது. இந்தக் குடும்பத்தில் மசக் கவுண்ட மன்றாடியாருக்குப் பின் பட்டத்துக்கு வரவேண்டியவர் நூலாசிரியர் மன்னமுத்துக் கவுண்டர். எதிர்பாராத காரணங்களால் இவருக்குப் பட்டம் சூட்டும் விழா தடைப் பட்டுப் போயிற்று. தமிழ் இலக்கியத்தில் ஈடுபாடு கொண்ட திரு மன்னமுத்துக் கவுண்டர் அவர்கள் கோவை மாவட்டம் சோமையனூரில் சுப்பண்ணக் கவுண்டர் தஞ்சம்மாள் தம்பதிகளுக்கு 7-6-1901-ல் மகவாகப் பிறந்தார். தொடக்க நிலைக் கல்வியை தடாகம் என்னும் சிற்றூரில் முடித்தார். சில ஆண்டுகள் உழவுத் தொழிலிலும் துணி விற்பனைத் தொழிலிலும் ஈடுபட்டார். 1923-ல் வடவள்ளி அரங்கசாமிக் கவுண்டர் மகளும் மருதமலை முருகன் கோவில் முன்னாள் அறங்காவலர் வி.ஆர்.இராமலிங்கம் அவர்களின் தமக்கையாருமாகிய மருதம்மாளை வாழ்க்கைத் துணைவியாக ஏற்றுக் கொண்டார். 1933-ல் வித்துவான் தேர்வில் மாநிலத்திலேயே முதல் மாணாக்கராகத் தேர்ச்சி பெற்றார். அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் நாவலர் சோமசுந்தர பாரதியாரிடம் தமிழாசிரியப் பயிற்சி பெற்றார். 1934-ல் பொள்ளாச்சி நகரமன்ற உயர் நிலைப் பள்ளியில் தமிழாசிரியராகப் பணி ஏற்றார். அதே பள்ளியில் நீண்ட பல ஆண்டுகள் தமிழ்ப் பணியாற்றி ஓய்வு பெற்றார். 1961-ம் ஆண்டு ஜூலைத் திங்கள் தம் அறுபதாம் வயதில் காலமானார். 'மருதவரையுலா' அன்றி வேறு தனிக் கவிதைகள் பல எழுதி இருந்தார் என்று அறிகிறோம். தமிழ்ப் புலமை தக்க மதிப்பு ஏற்படாதிருந்த சூழலில் அக்கவிதைகள் அச்சிலும் வராமல், பேணிப் பாதுகாக்கவும் படாமல் போனது வருத்தத்துக்குரியது. உலா தொல்காப்பியப் பேரிலக்கணத்துள் 'ஊரொடு தோற்றமும் உரித்தென மொழிப' என்னும் சூத்திரம் உலாவைப் பற்றி உரைக்கின்றது. அரசன், தெய்வம், அல்லது சிறப்புமிகு தலைமகன் மணம் புரிந்தோ. வெற்றி பெற்றோ தேர் மீதோ ஊர்தி மீதோ உலா வரும்போது ஏழு பருவ மகளிரும் தலைமகனைக் கண்டு காதல் கொண்டு மயங்குவதாகச் சித்தரிப்பது உலாவின் போக்கு. தலைமகன் சிறப்புக்களை முற்படக் குறித்து பேதை, பெதும்பை, மங்கை, மடந்தை, அரிவை, தெரிவை, பேரிளம்பெண் முதலிய ஏழு பருவப் பெண்களின் நிலையை வருணித்து முடிப்பது உலா என்னும் சிற்றிலக்கியத்தின் நடை முறை. சீவக சிந்தாமணி, கம்பராமாயணம், பெருங்கதை முதலிய பெருங்காவியங்களில் தலைமகன் உலாக் காட்சிகள் திகழ்கின்றன. இக்காட்சிகளே உலா என்னும் இலக்கிய வகையின் மலர்ச்சிக்கு அடித்தளம் அமைத்தன. எனினும் காலத்தால் முற்பட்ட ஆதியுலா என்னும் திருக்கயிலாய உலா, ஞான உலா, சேரமான் பெருமாள் நாயனாரால் இயற்றப் பட்டதாக அறிகிறோம். நம்பியாண்டார் நம்பிகளின் 'ஆளுடைய பிள்ளையார் திருவுலா மாலை' அடுத்து குறிக்கத் தக்கதாகும். ஒட்டக் கூத்தரின் விக்கிரம சோழனுலா. குலோத்துங்க சோழனுலா, இராசராச சோழனுலா என்னும் மூன்றும் வரலாற்றுச் சிறப்பு மிக்கவை. காளமேகப் புலவரின் திரு ஆனைக்கா உலாவும் இரட்டைப் புலவர்களின் ஏகாம்பர நாதருலாவும் உலா இலக்கிய வகையில் தனிப் பெருமைக்குரியவை. அந்த வரிசையில் இருபதாம் நூற்றாண்டில் தோன்றிய இந்த மருதவரை யுலா' நயத்தாலும் கற்பனை வளத்தாலும் மேன்மை கொண்டு விளங்குகின்றது. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை. இந்த வலைதள பக்கத்தில் உள்ள தகவல்களை பதிப்பிக்கவோ, ஒலிபரப்பவோ, வெளியிடவோ அல்லது விநியோகிக்கவோ கூடாது. |
| இலக்கிய தகவல்கள் |
| தரவிறக்கம் |
பிற செய்திகள் |
ஆன்மீகம் |