http://www.chennailibrary.com


நந்திக் கலம்பகம்

     இந் நூல் மூன்றாம் நந்திவர்மன் மீது பாடப்பெற்றதாகும். இது ஏனைய கலம்பங்களைப் போல் அல்லாது ஒரு வரலாற்று நூலாக விளங்குகிறது. இந் நூலை பாடியவர் யாரென்று தெரியவில்லை. இந் நூலினைப் பாடிய காலம் ஆயிரம் ஆண்டுக்கு முற்பட்டதாகும். ஆகவே இதுவே கலம்பகங்களுக்கெல்லாம் முதன்மையானது எனக் கொள்ளலாம்.

தற்சிறப்புப் பாயிரம்
கடவுள் வாழ்த்து

பிள்ளையார்
அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்

மும்மைப் புவனம் முழுதீன்ற முதல்வியோடும் விடைப்பாகன்
அம்மை தருக முத்தம் என அழைப்ப ஆங்கே சிறிதகன்று
தம்மின் முத்தம் கொளநோக்கிச் சற்றே நகைக்கும் வேழமுகன்
செம்மை முளரி மலர்த்தாள் எம் சென்னி மிசையிற் புனைவாமே.

சிவபெருமான்
தரவு கொச்சகக் கலிப்பா

பொருப்பரையன் மடப்பாவை புணர்முலையின் முகடுதைத்த
நெருப்புருவம் வெளியாக நீறணிந்த வரை மார்ப!
பருப்புரசை மதயானைப் பல்லவர்கோன் நந்திக்குத்
திருப்பெருக அருளுகநின் செழுமலர்ச்சே வடிதொழவே.

திருமால்
வஞ்சித்துறை

கரியின் முனம்வரும்
அரியின் மலர்பதம்
உருகி நினைபவர்
பெருமை பெறுவரே.

கலைமகள் முதலிய கடவுளர்கள்
நேரிசை வெண்பா

திருவாணி யைக்குருவைத் தென்முனியைப் போற்றத்
தருவாணி ஆண்மை இறை சாரும்-உருவாணி
ஐங்கரனைச் சங்கரனை ஆறுமுகத் தோன் உமையைப்
பங்கில்வைப் பார்க்கில்லை பவம்.

நூல்
மயங்கிசைக் கொச்சகக் கலிப்பா
தரவு
மண்டலமாய் அம்பரமாய் மாருதமாய் வார்புனலாய்
ஒண்சுடராய் ஒளிஎன்னும் ஓருஉருவம் மூன்றுருவ
மைவடிவோ வளைவடிவோ மரகதத்தின் திகழ்வடிவோ
செவ்வடிவோ பொன்வடிவோ சிவனே நின் திருமேனி;

அருவரையின் அகங்குழைய அனல் அம்பு தெரிந்தவுணர்
பொருமதில்கள் அவைமூன்றும் பொன்றுவித்த புனிதற்கும்
குருமணிசேர் அணிமுறுவற் குலக்கங்கை நதிபாயத்
திருமுடியைக் கொடுத்தாற்கும் செம்பாகம் திறம்பிற்றே;

இலகொளிய மூவிலைவேல் இறைவாநின் னியற்கயிலைக்
குலகிரியும் அருமறையும் குளிர்விசும்பும் வறிதாக
அலைகதிர்வேற் படைநந்தி அவனிநா ராயணன் இவ்
வுலகுடையான் திருமுடியும் உள்ளமுமே உவந்தனையே.

அராகம்
செழுமலர் துதைதரு தெரிகணை மதனனது
எழில் உடல் பொடிபட எரிதரு நுதலினை;
அருவரை அடிஎழ முடுகிய அவுணனது
ஒருபது முடிஇற ஒருவிரல் நிறுவினை.

தாழிசை
வீசிகையிற் கொன்றையும் வெள்ளெருக்கும் விராய்த்தொடுத்த
வாசிகையின் ஊடேவெண் மதிக்கொழுந்தைச் சொருகினையே

பாய்புலியி னுரியசைத்த பலபுள்ளிப் படிவமெலாம்
ஆயிரவாய் கருங்கச்சை அழல் உமிழ அசைத்தனையே;

சோர்மதத்த வார்குருதி சோனைநீ ரெனத்துளிப்ப
ஏர்மதத்த கரிஉரிவை ஏகாச மிட்டனையே.

திசைநடுங்கத் தோன்றிற்று நீ உண்ட திறல்நஞ்சம்.
உயிர்நடுங்கத் தோன்றிற்று நீ உதைத்த வெங்கூற்றம்.




இணைய பக்க முகவரி: http://www.chennailibrary.com/mis/nandhikalambagam.html

பதிப்புரிமை © 2006 சென்னைநூலகம்.காம்.
அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
இந்த வலைதள பக்கத்தில் உள்ள தகவல்களை பதிப்பிக்கவோ,
ஒலிபரப்பவோ, வெளியிடவோ அல்லது விநியோகிக்கவோ கூடாது.

 அச்சிட       விமர்சிக்க       விருப்ப தளமாக்க
       முகப்பு பக்கமாக்க



வருகைப் பதிவு (25-09-2006 முதல்)
ad
இலக்கிய தகவல்கள்
தரவிறக்கம்
பிற செய்திகள்
ஆன்மீகம்




தமிழ் யுனிகோடில் அமைந்த இணைய தளம். பதிப்புரிமை © 2006 சென்னைநூலகம்.காம். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.