ஆண்டாள்
அருளிய
திருப்பாவை
மார்கழித் திங்கள் மதிநிறைந்த நன்னாளால்; நீராடப் போதுவீர்! போதுமினோ, நேரிழையீர்! சீர்மல்கும் ஆய்ப்பாடிச் செல்வச் சிறுமீர்காள்! கூர்வேல் கொடுந்தொழிலன் நந்தகோபன் குமரன், ஏரார்ந்த கண்ணி யசோதை இளஞ்சிங்கம், கார்மேனிச் செங்கண் கதிர்மதியம் போல்முகத்தான் நாரா யணனே, நமக்கே பறைதருவான், பாரோர் புகழப் படிந்தேலோ ரெம்பாவாய். 1 வையத்து வாழ்வீர்காள்! நாமும் நம்பாவைக்குச் செய்யுங் கிரிசைகள் கேளீரோ! பாற்கடலுள் பையத் துயின்ற பரமன் அடிபாடி, நெய்யுண்ணோம்; பாலுண்ணோம்; நாட்காலை நீராடி மையிட் டெழுதோம்; மலரிட்டு நாம் முடியோம்; செய்யா தனசெய்யோம்; தீக்குறளைச் சென்றோதோம்; ஐயமும் பிச்சையும் ஆந்தனையும் கைகாட்டி உய்யுமா றெண்ணி உகந்தேலோ ரெம்பாவாய். 2 ஓங்கி உலகளந்த உத்தமன் பேர்பாடி நாங்கள் நம் பாவைக்குச் சாற்றிநீர் ஆடினால், தீங்கின்றி நாடெல்லாம் திங்கள்மும் மாரிபெய்து ஓங்கு பெருஞ்செந்நெ லூடு கயல் உகளப் பூங்குவளைப் போதில் பொறிவண்டு கண்படுப்ப, தேங்காதே புக்கிருந்து சீர்த்த முலைபற்றி வாங்கக் குடம் நிறைக்கும் வள்ளல் பெரும்பசுக்கள் நீங்காத செல்வம் நிறைந்தேலோ ரெம்பாவாய். 3 ஆழி மழைக்கண்ணா! ஒன்று நீ கைகரவேல் ஆழியுள் புக்கு முகந்துகொ டார்த்தேறி, ஊழி முதல்வன் உருவம்போல் மெய்கறுத்து பாழியந் தோளுடைப் பற்பநா பன்கையில் ஆழிபோல் மின்னி, வலம்புரிபோல் நின்றதிர்ந்து, தாழாதே சார்ங்கம் உதைத்த சரமழைபோல் வாழ உலகினில் பெய்திடாய், நாங்களும் மார்கழி நீராட மகிழ்ந்தேலோ ரெம்பாவாய். 4 மாயனை மன்னு வடமதுரை மைந்தனை, தூய பெருநீர் யமுனைத் துறைவனை, ஆயர் குலத்தினில் தோன்றும் அணிவிளக்கை, தாயைக் குடல்விளக்கம் செய்த தாமோதரனை, தூயோம்ஆய் வந்துநாம் தூமலர் தூவித்தொழுது வாயினால் பாடி மனத்தினால் சிந்திக்கப் போய பிழையும் புகுதருவான் நின்றனவும் தீயினில் தூசுஆகும் செப்பேலோ ரெம்பாவாய். 5 புள்ளும் சிலம்பினகாண்; புள்ளரையன் கோயிலில் வெள்ளை விளிசங்கின் பேரரவம் கேட்டிலையோ? பிள்ளாய்! எழுந்திராய், பேய்முலை நஞ்சுண்டு, கள்ளச் சகடம் கலக்கழியக் காலோச்சி, வெள்ளத்தரவில் துயிலமர்ந்த வித்தினை, உள்ளத்துக் கொண்டு முனிவர்களும் யோகிகளும் மெள்ள எழுந்து அரியென்ற பேரரவம் உள்ளம்புகுந்து குளிர்ந்தேலோ ரெம்பாவாய். 6 கீசுகீ சென்றெங்கும் ஆனைச்சாத் தன்கலந்து பேசின பேச்சரவம் கேட்டிலையோ? பேய்ப்பெண்ணே! காசும் பிறப்பும் கலகலப்பக் கைபேர்த்து வாச நறுங்குழல் ஆய்ச்சியர் மத்தினால் ஓசை படுத்தத் தயிரரவம் கேட்டிலையோ? நாயகப் பெண்பிள்ளாய்! நாராயணன் மூர்த்தி கேசவனைப் பாடவும்நீ கேட்டே கிடத்தியோ? தேசமுடையாய்! திறவேலோ ரெம்பாவாய். 7 கீழ்வானம் வெள்ளென்று, எருமை சிறுவீடு மேய்வான் பரந்தனகாண்; மிக்குள்ள பிள்ளைகளும் போவான் போகின்றாரைப் போகாமல் காத்துன்னைக் கூவுவான் வந்து நின்றோம், கோதுகலமுடைய பாவாய்! எழுந்திராய்; பாடிப் பறைகொண்டு மாவாய் பிளந்தானை, மல்லரை மாட்டிய தேவாதி தேவனைச் சென்றுநாம் சேவித்தால் ஆவாவென் றாராய்ந் தருளேலோ ரெம்பாவாய். 8 அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை. இந்த வலைதள பக்கத்தில் உள்ள தகவல்களை பதிப்பிக்கவோ, ஒலிபரப்பவோ, வெளியிடவோ அல்லது விநியோகிக்கவோ கூடாது. |
| இலக்கிய தகவல்கள் |
| தரவிறக்கம் |
பிற செய்திகள் |
ஆன்மீகம் |