http://www.chennailibrary.com


சிவப்பிரகாச சுவாமிகள்

இயற்றிய

நன்னெறி

     நன்மைகளைத் தரும் ஒழுக்க நெறிகளை கூறும் நூல். ஆகவே நன்மை+நெறி=நன்னெறி என வழங்கப்படுகிறது. கடவுள் வாழ்த்தோடு சேர்ந்து 41 பாடல்கள் உள்ளன. கடவுள் வாழ்த்து மட்டும் 2 அடி, ஏனையவை நான்கு அடிகளைக் கொண்ட நேரிசை வெண்பாக்களால் ஆனது. முதல் இரண்டடியில் ஆசிரியர் சொல்ல வந்த கருத்தும், அடுத்த இரண்டடிகளில் அதனை விளக்க வந்த உவமையும் கூறப்பட்டுள்ளன.

     இந்நூலை இயற்றியவர் துறைமங்கலம் சிவப்பிரகாச சுவாமிகள். காஞ்சிபுரத்தைச் சேர்ந்த குமாரசாமி தேசிகருக்கு மூத்த மகனாகப் பிறந்தவர். தாமிரவர்ணிக் கரையிலுள்ள சிந்து பூந்துறையில் வாழ்ந்த வெள்ளியம்பலத் தம்பிரானிடம் இலக்கணம் கற்றார். இவர் நால்வர் நான்மணிமாலை, சோண சைல மாலை, கூவப் புராணம், பழமலை அந்தாதி, பிட்சாடன் நவமணிமாலை, பெரியநாயகியம்மை விருத்தம், பெரிய நாயகியம்மைக் கட்டளைக் கலித்துறை, பிரபுலிங்க லீலைக்கு விருத்தியுரை, வேதாந்த சூடாமணி, நெஞ்சு விடு தூது, சிவஞான பாலைய தேசிகர் தாலாட்டு, தர்க்க பரிபாஷை சதமணிமாலை, சிவப்பிரகாச விகாசம், திருவெங்கை அலங்காரம், திருவெங்கைக் கலம்பகம், திருவெங்கையுலா, திருவெங்கைக் கோவை, திருச்செந்தூர் நீரோட்டகயமக அந்தாதி, ஏசுமத நிராகரணம் முதலான பல நூல்களை இயற்றியுள்ளார். இவருடைய காலம் பதினேழாம் நூற்றாண்டு. இவர் தம்முடைய முப்பத்திரண்டாம் வயதில் சிவபதம் அடைந்தார்.

கடவுள் வாழ்த்து

மின்னெறி சடாமுடி விநாயகன் அடிதொழ
நன்னெறி வெண்பா நாற்பதும் வருமே!

நூல்

என்றும் முகமன் இயம்பாதவர் கண்ணும்
சென்று பொருள் கொடுப்பர் தீது அற்றோர் - துன்றுசுவை
பூவின் பொலி குழலாய்! பூங்கை புகழவோ
நாவிற்கு உதவும் நயந்து. 1

மாசற்ற நெஞ்சுடையார் வன்சொல் இனிது ஏனையவர்
பேசுஉற்ற இன்சொல் பிறிது என்க - ஈசற்கு
நல்லோன் எறி சிலையோ நன்னுதால் ஒண்கரும்பு
வில்லோன் மலரோ விருப்பு. 2

தங்கட்கு உதவிலர் கைத்தாம் ஒன்று கொள்ளின் அவர்
தங்கட்கு உரியவரால் தாம் கொள்க - தங்க நெடும்
குன்றினால் செய்தனைய கொங்கையாய் ஆவின்பால்
கன்றினால் கெள்ப கறந்து. 3

பிறர்க்கு உதவி செய்யார் பெரும் செல்வம் வேறு
பிறர்க்கு உதவி ஆக்குபவர் பேறாம் - பிறர்க்கு உதவி
செய்யாக் கருங்கடல் நீர் சென்று புயல்முகந்து
பெய்யாக் கொடுக்கும் பிறர்க்கு. 4

நீக்கம் அறும் இருவர் நீங்கிப் புணர்ந்தாலும்
நோக்கின் அவர் பெருமை நொய்தாகும் - பூக்குழலாய்
நெல்லின் உமிசிறிது நீங்கிப் பழமை போல்
புல்லினும் திண்மை நிலை போம். 5

காதல் மனையாளும் காதலனும் மாறின்றித்
தீதில் ஒருகாமம் செய்பவே - ஓது கலை
எண்இரண்டும் ஒன்றுமதி என் முகத்தாய் நோக்கல்தான்
கண்இரண்டும் ஒன்றையே காண். 6

கடலே அனையம் யாம் கல்வியால் என்னும்
அடலேறு அனைய செருக்கு ஆழ்த்தி - விடலே
முனிக்கு அரசு கையால் முகந்து முழங்கும்
பனிக்கடலும் உண்ணப் படும். 7

உள்ளம் கவர்ந்து எழுந்து ஓங்கு சினம் காத்துக்
கொள்ளும் குணமே குணம் என்க - வெள்ளம்
தடுத்தல் அரிதோ, தடம் கரைதான் பேர்த்து
விடுத்தல் அரிதோ விளம்பு? 8

மெலியோர் வலிய விரவலரை அஞ்சார்
வலியோர் தமைத் தாம் மருவில் - பலியேல்
கடவுள் அவிர் சடைமேல் கட்செவி அஞ்சாதே
படர் சிறையப் புள் அரசைப் பார்த்து. 9

தங்குறை தீர்வுள்ளார் தளர்ந்து பிறர்க்குறூஉம்
வெங்குறை தீர்க்கிற்பார் விழுமியோர் - திங்கள்
கறையிருளை நீக்கக் கருதாது உலகில்
நிறை இருளை நீக்கும் மேல் நின்று. 10



இணைய பக்க முகவரி: http://www.chennailibrary.com/moral/nanneri.html

பதிப்புரிமை © 2006 சென்னைநூலகம்.காம்.
அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
இந்த வலைதள பக்கத்தில் உள்ள தகவல்களை பதிப்பிக்கவோ,
ஒலிபரப்பவோ, வெளியிடவோ அல்லது விநியோகிக்கவோ கூடாது.

 அச்சிட       விமர்சிக்க       விருப்ப தளமாக்க
       முகப்பு பக்கமாக்க



வருகைப் பதிவு (25-09-2006 முதல்)
ad
இலக்கிய தகவல்கள்
தரவிறக்கம்
பிற செய்திகள்
ஆன்மீகம்




தமிழ் யுனிகோடில் அமைந்த இணைய தளம். பதிப்புரிமை © 2006 சென்னைநூலகம்.காம். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.