http://www.chennailibrary.com


அருணகிரி நாதர்

அருளிய

கந்தர் அலங்காரம்

காப்பு
அடலருணைத் திருக் கோபுரத் தேயந்த வாயிலுக்கு
வட வருகிற் சென்று கண்டுகொண்டேன்வருவார் தலையில்
தடபடெனப்படு குட்டுடன் சர்க்கரை மொக்கியகைக்
கடதட கும்பக் களிற்றுக் கிளைய களிற்றினையே.

நூல்
பேற்றைத் தவஞ் சற்றுமில்லாத வென்னைப்ர பஞ்ச மென்னுஞ்
சேற்றைக் கழிய வழிவிட்ட வா! செஞ்சடாடவிமேல்
ஆற்றைப் பணியை யிதழியைத் தும்பையை யம்புலியின்
கீற்றைப் புனைந்த பெருமான் குமாரன் க்ருபாகரனே. 1

அழித்துப் பிறக்கவொட்டாவயில் வேலன் கவியையன்பால்
எழுத்துப் பிழையறக் கற்கின்றீ லீரெரி மூண்டதென்ன
விழித்துப் புகையெழப் பொங்குவெங் கூற்றன் விடுங்கயிற்றாற்
கழுத்திற் சுருக்கிட் டிழுக்குமன் றோகவி கற்கின்றதே. 2

தேரணி யிட்டுப் புரமெரித் தான்மகன் செங்கையில்வேற்
கூரணி யிட்டணு வாகிக் கிரௌஞ்சங் குலைந்தரக்கர்
நேரணி யிட்டு வளைந்த கடக நெளிந்தது சூர்ப்
பேரணி கெட்டது தேவேந்த்ர லோகம் பிழைத்ததுவே. 3

ஓரவொட் டாரொன்றை யுன்னவொட் டார்மல ரிட்டுனதாள்
சேரவொட் டாரைவர் செய்வதென் யான்சென்று தேவருய்யச்
சோரநிட் டூரனைச் சூரனைக் காருடல் சோரிகக்கக்
கூரகட் டாரியிட் டோ ரிமைப் போதினிற் கொன்றவனே. 4

திருந்தப் புவனங்க ளீன்றபொற் பாவை திருமுலைப்பால்
அருந்திச் சரவணப் பூந்தொட்டி லேறி யறுவர்கொங்கை
விரும்பிக் கடலழக் குன்றழச் சூரழ விம்மியழுங்
குருந்தைக் குறிஞ்சிக் கிழவனென் றோதுங் குவலயமே. 5

பெரும்பைம் புனத்தினுட் சிற்றேனல் காக்கின்ற பேதை கொங்கை
விரும்புங் குமரனை மெய்யின்பி னான்மெல்ல மெல்லவுள்ள
அரும்புந் தனிப்பர மாநந்தந் தித்தித் தறிந்தவன்றே
கரும்புந் துவர்த்துச்செந் தேனும் புளித்தறக் கைத்ததுவே. 6

சளத்திற் பிணிபட்டசட்டுக் ரியைக்குட் டவிக்கு மென்றன்
உளத்திற் ப்ரமத்தைத் தவிர்ப்பா யவுண ருரத்துதிரக்
குளத்திற் குதித்துக் குளித்துக் களித்துக் குடித்துவெற்றிக்
களத்திற் செருக்கிக் கழுதாட வேல்தொட்ட காவலனே. 7

ஒளியில் விளைந்த வுயர்ஞான பூதரத் துச்சியின்மேல்
அளியில் விளைந்ததொரா நந்தத் தேனை யநாதியிலே
வெளியில் விளைந்த வெறும்பாழைப் பெற்ற வெறுந்தனியைத்
தெளிய விளம்பிய வா! முகமாறுடைத் தேசிகனே. 8

தேனென்று பாகென் றுவமிக் கொணாமொழித் தெய்வ வள்ளி
கோனன் றெனக்குப தேசித்த தொன்றுண்டு கூறவற்றோ
வானன்று காலன்று தீயன்று நீரன்று மண்ணுமன்று
தானன்று நானன் றசரீரி யன்று சரீரியன்றே. 9

சொல்லுகைக் கில்லையென் றெல்லா மிழந்துசும்மாவிருக்கும்
எல்லையுட் செல்ல எனைவிட்டவா இகல் வேலனல்ல
கொல்லியைச் சேர்க்கின்ற சொல்லியைக் கல்வரைக் கொவ்வைச் செவ்வாய்
வல்லியைப் புல்கின்ற மால்வரைத் தோளண்ணல் வல்லபமே. 10

குசைநெகி ழாவெற்றி வேலோ னவுணர் குடர்குழம்பக்
கசையிடு வாசி விசைகொண்ட வாகனப் பீலியின்கொத்
தசைபடு கால்பட் டசைந்தது மேரு அடியிடவெண்
டிசைவரை தூள்பட்ட அத்தூளின் வாரி திடர்பட்டதே. 11

படைபட்ட வேலவன் பால்வந்த வாகைப் பதாகையென்னுந்
தடைபட்ட சேவல் சிறகடிக் கொள்ளச் சலதிகிழிந்
துடைபட்ட தண்டகடாக முதிர்ந்த துடுபடலம்
இடைபட்ட குன்றமு மாமேரு வெற்பு மிடிபட்டவே. 12




இணைய பக்க முகவரி: http://www.chennailibrary.com/muruga/kandaralangaram.html

பதிப்புரிமை © 2006 சென்னைநூலகம்.காம்.
அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
இந்த வலைதள பக்கத்தில் உள்ள தகவல்களை பதிப்பிக்கவோ,
ஒலிபரப்பவோ, வெளியிடவோ அல்லது விநியோகிக்கவோ கூடாது.

 அச்சிட       விமர்சிக்க       விருப்ப தளமாக்க
       முகப்பு பக்கமாக்க



வருகைப் பதிவு (25-09-2006 முதல்)
ad
இலக்கிய தகவல்கள்
தரவிறக்கம்
பிற செய்திகள்
ஆன்மீகம்




தமிழ் யுனிகோடில் அமைந்த இணைய தளம். பதிப்புரிமை © 2006 சென்னைநூலகம்.காம். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.