http://www.chennailibrary.com




அருணகிரி நாதர்

அருளிய

கந்தர் அந்தாதி

     ஆறுமுகப் பெருமானுக்கு உகந்த ஆறு நூல்களுள் ஒன்று இந்த கந்தர் அந்தாதி. இதிலுள்ள காப்புச் செய்யுள்களால் இது திருவண்ணாமலையிற் பாடப்பட்டிருத்தல் வேண்டுமெனத் தோன்றுகிறது. நூலிலுள்ள நூறு செய்யுள்களின் முதலெழுத்துக்கள் சி, சீ, செ, சே, தி, தீ, தெ, தே என்னும் எட்டெழுத்துக்களுள் அடங்குதல் கவனிக்கத்தக்கது. இந்நூலைப் பாடியவர் அருணகிரி நாதர்.

     பெரும்புலமை வாய்ந்த பாரதம் பாடிய வில்லிபுத்தூரார், தமது கல்விச் செருக்கால், தம்மோடு வாது செய்து தோற்றவர்களின் காதைக் குறடு கொண்டு குடைந்து தோண்டும் வழக்கத்தை கொண்டிருந்தார். அவருக்கும் அருணகிரிநாதருக்கும் ஒருமுறை தருக்கம் உண்டாயிற்றென்றும், அப்போது ஆசுகவியாக அருணகிரிநாதர் பாடிய நூல் தான் கந்தர் அந்தாதி என்றும் அந்நூலுக்கு உரையை வில்லிபுத்தூரார் உடனுக்குடன் கூறி வந்தார் என்றும் கூறுவர். அவ்வாறு கூறி வரும் போது 'திதத்த' எனத் தொடங்கும் 54வது செய்யுளுக்கு வில்லிபுத்தூரார் உரை கூற இயலாது திகைத்து தோல்வியுற்றார் என்றும் அதற்கு அருணகிரிநாதரே உரை அருளினார் என்றும் கூறுவர். பின்பு ஏனைய பாடல்களுக்கு வில்லிபுத்தாரே உரை கூறினார் என்றும் கூறுவர். வில்லிபுத்தார் உரை கூற முடியாமல் தோல்வியுற்றாலும் அருணகிரிநாதர் அவருடைய காதை அறுத்து இழிவுபடுத்தாமல், இனி கருணைக்கு விரோதமான இவ்வழக்கத்தை விட்டுவிட வேண்டும் என புத்தி சொல்லி அவர் கையிலிருந்த குறடை எறியச் செய்தார் என்றும் கூறுவர். இக்கருணையைக் கருதியும் 'கருணைக் கருணகிரி' என்னும் வழக்கு எழுந்தது.

காப்பு
வாரணத் தானை யயனைவிண் ணோரை மலர்க்கரத்து
வாரணத் தானை மகத்துவென் றோன்மைந் தனைத்துவச
வாரணத் தானைத் துணைநயந் தானை வயலருணை
வாரணத் தானைத் திறைகொண்ட யானையை வாழ்த்துவனே.

உண்ணா முலையுமை மைந்தா சரணம் பரருயிர்சேர்
உண்ணா முலையுமை மைந்தா சரண மருணைவெற்பாள்
உண்ணா முலையுமை மைந்தா சரணந் தனமுமொப்பில்
உண்ணா முலையுமை மைந்தா சரணஞ் சரணுனக்கே.

நூல்
திருவாவி னன்குடி பங்காள ரெண்முது சீருரைச
திருவாவி னன்குடி வானார் பரங்குன்று சீரலைவாய்
திருவாவி னன்குடி யேரகங் குன்றுதொ றாடல்சென்ற
திருவாவி னன்குடி கொண்டதண் கார்வரை செப்புமினே. 1

செப்புங் கவசங் கரபா லகதெய்வ வாவியம்பு
செப்புங் கவசங் கரிமரு காவெனச் சின்னமுன்னே
செப்புங் கவசம் பெறுவார் கணுந்தெய்வ யானைதனச்
செப்புங் கவசம் புனைபுயன் பாதமென் சென்னியதே. 2

சென்னிய மோகந் தவிராமு தோகண் டிகிரிவெண்ணெய்ச்
சென்னிய மோகம் படவூ தெனத்தொனி செய்தபஞ்ச
சென்னிய மோகந் தரம்புனத் தேன்புணர் தேவைத்தெய்வச்
சென்னிய மோகம் பணிபணி யேரகத் தேமொழிக்கே. 3

தேமொழி யத்தம் பெறவோந் தனக்கன்று சேணுலகத்
தேமொழி யத்தம் சினங்காட் டவுணரைச் சேமகரத்
தேமொழி யத்தம் புயமவர் சூடிகை சிந்தவென்ற
தேமொழி யத்தம் பதினா லுலகுமந் தித்ததொன்றே. 4

தித்தவித் தார மனித்தரைத் தேவர் வணங்கமுன்போ
தித்தவித் தாரகை மைந்தர்செந் தூர்க்கந்தர் சிந்துரவா
தித்தவித் தார முடையா ரருள்வெள்ளந் தேக்கியன்பு
தித்தவித் தாரந் தனிவீ டுறத்துக்கச் செவ்வனவே. 5

செவ்வந்தி நீலப் புயமுரு காபத்தர் சித்தமெய்யிற்
செவ்வந்தி நீலத்தை யுற்றருள் வாய் திங்கட் சேய்புனைந்த
செவ்வந்தி நீலத் தொருபாகர் போன்ற தினிச்சிந்தியார்
செவ்வந்தி நீலத்தி னீடுமுற் றாத திமிரமுமே. 6

திமிரத் திமிரக் கதரங்க கோபசெவ் வேலகைவேல்
திமிரத் திமிரக் ககுலாந் தகவரைத் தேன்பெருகுந்
திமிரத் திமிரக் தனையாவி யாளுமென் சேவகனே
திமிரத் திமிரக் கனலாய சந்தன சீதளமே. 7




இணைய பக்க முகவரி: http://www.chennailibrary.com/muruga/kandaranthathi.html

பதிப்புரிமை © 2006 சென்னைநூலகம்.காம்.
அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
இந்த வலைதள பக்கத்தில் உள்ள தகவல்களை பதிப்பிக்கவோ,
ஒலிபரப்பவோ, வெளியிடவோ அல்லது விநியோகிக்கவோ கூடாது.

 அச்சிட       விமர்சிக்க       விருப்ப தளமாக்க
       முகப்பு பக்கமாக்க






வருகைப் பதிவு (25-09-2006 முதல்)
ad
இலக்கிய தகவல்கள்
தரவிறக்கம்
பிற செய்திகள்
ஆன்மீகம்

தமிழ் யுனிகோடில் அமைந்த இணைய தளம். பதிப்புரிமை © 2006 சென்னைநூலகம்.காம். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.