http://www.chennailibrary.com


அருணகிரி நாதர்

அருளிய

திருப்புகழ்

... தொடர்ச்சி ...

6. நூலாசிரியர் பெயரோடு நூற்பண்பும் பெயரும் உணர்த்தி அதனைத் துதிப்போர் பேறுங் கூறியது

ஓராறு மாமுகனாம் உச்சிதமெய்ஞ் ஞானகுகன்
பேரால் அருணகிரி பேருலகில் - சீராருந்
தோத்திரம தாகத் துதிக்குந் திருப்புகழை
ஏத்தினவர் ஈடேறு வார். 11

வள்ளிமண வாளன் மயிலேறும் வள்ளல்தனைத்
தெள் ளுதமி ழாற்புனைந்து சீர்பெறவே - உள்ளபடி
வைப்பாம் அருணகிரி வாழ்த்துந் திருப்புகழைக்
கற்பார் கரையேறு வார். 12

7. திருப்புகழ் இன்ன இன்னதற்கு இன்ன இன்னதாம் எனல்

அருணகிரி நாதர்பதி னாயிறா யிரமென்
றுரைசெய் திருப்புகழை யோதீர், - பரகதிக்கஃ
தேணி; அருட்கடலுக் கேற்றம்; மனத்தளர்ச்சிக்
காணி; பிறவிக் கரம். 13

8. திருப்புகழ் வழிபாட்டாற் கூற்றையும் வெல்லலாம் எனக் கெடி பெற உரைத்தது

திருப்புகழைக் கற்கத் திருப்புகழைக் கேட்கத்
திருப்புகழை நித்தஞ் செபிக்கத் - திருப்புகழை
அர்ச்சிக்க முத்தியெளி தாகுமே, கூற்றைவென்று
கெர்ச்சிக்க லாமே கெடீ. 14

9. திருப்புகழின் பிரபாவம்

மடங்கல் நடுங்கும் தனைச்சுடும் ஈதென்று; மாதிரத்தோர்
அடங்கி நடுங்குவர் சூலா யுதமென், றசுரர் கடல்
ஒடுங்கி நடுங்குவர் வேலா யுதமென், றுரகனுங்கீழ்க்
கிடங்கில் நடுங்கும், மயிலோன் திருப்புகழ் கேட்டளவே. 15

10. திருப்புகழடியார் பெருமை

திருப்புகழ் வல்ல சூரர்மகன் நாயகன், சங்கரற்குக்
குருப்புகழ் வல்ல குமரேசன், சண்முகன், குன்றெறிந்தோன்
மருப்புகழ் வல்ல அருண கிரிப்பெயர் வள்ளல் சொன்ன
திருப்புகழ் வல்லவர் சீர்பாதத் தூளிஎன் சென்னியதே. 16

திருப்புகழ்ச் சிறப்புப் பாயிரம் முற்றிற்று.

முருகன் துதி

ஏறுமயில் ஏறிவிளையாடு முகம் ஒன்றே
     ஈசனுடன் ஞானமொழி பேசு முகம் ஒன்றே
கூறும் அடியார்கள் வினை தீர்க்கு முகம் ஒன்றே
     குன்றுருவ வேல் வாங்கி நின்ற முகம் ஒன்றே
மாறுபடு சூரரை வதைத்த முகம் ஒன்றே
     வள்ளியை மணம் புணர வந்த முகம் ஒன்றே
ஆறுமுகம் ஆனபொருள் நீ அருள வேண்டும்
     ஆதி அருணாசலம் அமர்ந்த பெருமாளே.

விநாயகர் துதி

கைத்தல நிறைகனி அப்ப மொடவல் பொரி
     கப் பியகரிமுகன் - அடிபேணிக்
கற்றிடும் அடியவர் புத்தியில் உறைபவ!
     கற்பகம் எனவினை - கடிதேகும்;

மத்தமு மதியமும் வைத்திடும் அரன்மகன்
     மற்பொருதிரள் புய - மதயானை
மத்தள வயிறனை உத்தமிபுதல் வனை
     மட்டவிழ் மலர்கொடு - பணிவேனே;

முத்தமிழ் அடைவினை முற்படு கிரிதனில்
     முற்பட எழுதிய - முதல்வோனே
முப்புரம் எரி செய்த அச்சிவன் உறை ரதம்
     அச்சது பொடிசெய்த - அதிதீரா;

அத்துய ரதுகொடு சுப்பிரமணி படும்
     அப்புன மதனிடை - இபமாகி
அக்குற மகளுடன் அச்சிறு முருகனை
     அக்கண மணமருள் - பெருமாளே! 1




இணைய பக்க முகவரி: http://www.chennailibrary.com/muruga/thiruppugazh2.html

பதிப்புரிமை © 2006 சென்னைநூலகம்.காம்.
அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
இந்த வலைதள பக்கத்தில் உள்ள தகவல்களை பதிப்பிக்கவோ,
ஒலிபரப்பவோ, வெளியிடவோ அல்லது விநியோகிக்கவோ கூடாது.

 அச்சிட       விமர்சிக்க       விருப்ப தளமாக்க
       முகப்பு பக்கமாக்க



வருகைப் பதிவு (25-09-2006 முதல்)
ad
இலக்கிய தகவல்கள்
தரவிறக்கம்
பிற செய்திகள்
ஆன்மீகம்




தமிழ் யுனிகோடில் அமைந்த இணைய தளம். பதிப்புரிமை © 2006 சென்னைநூலகம்.காம். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.