அம்பலவாண தேசிகர்

அருளிய

சித்தாந்த சிகாமணி

சாதித்த தெல்லாம் தவமேனும் சற்குருவைப்
பேத்தால் எல்லாம் பிழையாகும் - வேதத்(து)
அறம்புரிந்த தக்கனுக்கன்(று) ஆக்கினைவந்துற்ற
திறம்புரிந்த வாறாம் தெளி. 1

வஞ்சமே செய்வாய் மருவுங் குருவோடு
நெஞ்சமே நீகதியில் நிற்பதெந்நாள் - கொஞ்சி
உருகித் தமரோ(டு) உறைவாய்நன் முத்திக்(கு)
அருகமென்பது எவ்வா(று) அறை. 2

நாமெங்கே முத்தி நடையெங்கே நன்னெஞ்சே
தீமங்கை இன்பே திளைகுமால் - காமன்கை
அம்புற்ற புண்மெய்யில் ஆறியபோ(து) அன்றோதன்
செம்பொற்றாள் ஈவான் சிவன். 3

சலக்குழியின் மிக்க சகதியில்லை அங்கச்
சலக்குயை இன்பே திளைகுமால் - காமன்கை
அம்புற்ற புண்மெய்யில் ஆறியபோ(து) அன்றோதன்
செம்பொற்றாள் ஈவான் சிவன். 4

ஒளியானும் உற்ற இருள் மாதருமே ஒத்துத்
தெளியநடஞ் செய்வதனைத் தேரின் - ஒளிநடத்தைக்
கண்டபே காணார் கருதி இருள்நடத்தைக்
கண்டபேர் காணார் கதி. 5

தாணுவினோ(டு) ஒத்துச் சரியாய் நடம்புரியும்
வாணுதலார் கூத்து மறைப்பல்ல - ஆணவத்தை
ஒட்டியபேர்க் கெல்லாம் ஒளிப்பான அரன் அதனைத்
தெட்டியபேர்க் காமாந் தெரிவு. 6

கூட்டித் தனுவைக் குறித்துயிர்மேல் நின்றீசன்
ஈட்டுவிக்கச் செய்யும் இயல்பாமால் - நாட்டுமலம்
இல்லையென்ப தாகும் இசைந்த கருனைநலம்
அல்லவென்ப தாமாம் அரற்கு. 7

தோற்றம் இறப்பும் சொலுமீசன் தன்செயலென்
மாற்றுதற்கு வேறொருத்தர் மன்னுவதாம் - சாற்றும்
அரவு கடித்தவிடம் ஆங்கதனை மீட்க
வருமவர்போ லாமாம் மதி. 8

மலமே பிறப்பிறப்பை மன்னுவிக்கும் ஈசன்
நலமே அவையகற்றி நண்ணும் - மலமருக்கன்
சன்னிதியில் நில்லாத் தகுமிருல்போல் தக்க அரன்
சன்னிதியில் நில்லாது தான். 9

பேதித்து நெஞ்சம் பிரியாமால் நின்றீசன்
சாதித்து திடக்கருவி தந்ததால் - ஆதித்தன்
காட்டுவதே போலெவர்க்கும் காட்டுவதே அல்லால்பொய்
ஈட்டுவிக்கச் செய்யான் என் றெண். 10

வாதித்த தேது மலமாமால் ஆங்கதனைச்
சேதித்தல் ஈசன் திறமாகும் - ஆதித்தன்
போலெவர்க்கும் காட்டிப் பொருந்துவதே அல்லால்பொய்
மாலெவர்க்கும் வையான் மறந்து. 11

அன்னியத்தில் தன்னினைவை ஆக்குவார் தங்களுக்கும்
மன்னி அரன் பால்நினைவை வைப்பார்க்கும் - தின்னும்
தனுவினையை ஈயத் தகுவதல்லால் மோக
நினைவினைஉற் றீயான் நினைந்து. 12

காட்டும் கதிரவன் அக்கண் அதனுக் கில்லைமுன்
ஈட்டும் பொருள்மே இசையுமால் - கூட்டும்
அரனெவர்க்கும் இல்லைம்ற் றாற்சகமே நோக்கி
வருமதனால் நெஞ்சே மதி. 13

சுத்தம் அசுத்தமெனச் சொல்லியவோ ராங்கவைக்கும்
அத்தன் பிரேரகமே ஆகுமால் - பித்தருக்கங்(கு)
அன்னியத்தை நோக்கி அறிவிப்பான் மற்றவர்க்குத்
தன்னையே நோக்குவிப்பான் தான். 14

பேதித்தார் தங்களுக்கும் பின்னமறத் தம்மடியில்
சாதித்தார் ஆர்க்கும் சரியேனும் - வதித்த
தீய மலமறுப்பான் சேர்ந்தார் தமக்கடியை
ஐயமறச் சேர்ப்ப்பான் அரன். 15

எல்லார் நினைவுக்கும் ஏற்றபடி யேகருணை
நல்லான் பிரேரிக்கும் நன்மைகேள் - பொல்லா
வினையிருத்து வார்க்கும் விரும்பியதோர் முத்தி
தனையிருத்து வார்க்குஞ் சரி. 16

எல்லார் நினைவுகும் ஏற்றபடி யேகருணை
வல்லான் தனுவினையை வைத்தநெறி - பொல்லா
மலமறுப்ப தாமால் வருநரக சொர்க்க
நிலையிருத்து வானேல் நினைந்து. 17

ஆவியின்மேல் இச்சை அடைவதல்லால் ஆங்கதன்மேல்
கோபமே இல்லை குறிக்குங்கால் - மேவியதோர்
ச்ன்னியத்தில் இச்சை அகற்றி அறி வானந்தத்
தன்னியல்பே ஆக்குதற்குத் தான். 18

மலமெ அறியாமை மற்றுயிரைத் தீண்டும்
நிலையே அதற்கிலவாய் நிற்கும் - மலையா
அறிவே உயிர்க்காமால் ஆங்கதன்மேல் ஏறும்
பிறிவதற்காய் உற்றதெண்டப் பேறு. 19

நின்மலமாய் ஆவி நிகழ்மலத்தைப் பற்றுதற்கு
முன்மலமொன்(று) உண்டாய் மொழிவதாம் - பன்முதலும்
உள்ளபோ(து) ஆவி ஒருப்பட்டுப் பின்மலத்தைத்
தள்ளுங்கால் நின்மலமாம் தான். 20

தண்டி மலமுயிரைத் தாவுமேல் ஆவிக்குத்
தெண்டிப்பே இல்லையெனச் செப்புவதாம் - அண்டி
உயிருக்கு புத்தி உரைப்பதல்லால் தீய
செயிருக்(கு) உரைப்பதில்லைத் தேர். 21

வசிப்புண்டார் தம்மை வசிக்குமலம் தேவால்
தெசிப்புண்டால் ஆங்கவனைத் தீண்டா - நசிப்பில்லாக்
கண்ணை மறைக்குங் கடிய இருட்கதிரை
நண்ணியகட் கின்றாம் நவை. 22

மலமே தெனவேண்டா மற்றுயிர்மேல் நின்ற
புலமேல் எழுந்தநெடும் பொய்யாம் - இலமேல்
இருந்(து) அவத்தைச் செய்யாதே ஏதேனும் ஈசன்
தரும் தவத்தை நெஞ்சே தரி. 23

அறியாமை என்றும் அகண்டிதமால் ஆவி
பிறியாமல் நிற்குமந்தப் பேறால் - குறியாம்
தனுவோ(டு) இசையினும்பின் தக்கவினை தானாம்
நினைவோ(டு) இசையின்மால் நேர். 24

ஆசைப் படுவாரை ஆசைப் படுத்துவித்தல்
பேசும் உலகியல்பின் பெற்றியால் - மாசுமலம்
உற்றாரைப் பற்றி உறுவதல்லால் ஒவ்வாமல்
அற்றார்மேற் செல்லா(து) அறி. 25

பித்தமுற்றார் தங்களுக்குப் பித்தகல நன்மருந்தை
மத்தகத்தில் தேய்த்து மறிப்பதல்லால் - புத்திசொல்லி
மாற்றியபேர் உண்டோ மலந்தவர்கள் ஆவியின்மேல்
தோற்றுவதே இல்லைத் துணி. 26

பிடித்தார் தமைப்பிடிக்கும் பேராச் சடமும்
விடுத்தார் தமைவிடுக்கும் வேறாய் - அடுத்தமலம்
தொட்டபேர் தம்மைத் தொடுவதல்லால் தொல்லுயிரைக்
கட்டிப் பிடிப்பதில்லைக் காண். 27

சத்திநி பாதம் சதுர்விதமால் தீயமலம்
முத்தியிலும் நிற்கும் முறையென்னின் - சுத்தமரன்
பாலே எழும் அவன்தன் பண்பால் அறியாமை
மாலே அறுக்குமென மன். 28

மாசற்றார் நெஞ்சின் மருவும் அரனின்றும்
பாசத்தார்க் கின்றாம் பதியென்னில் - ஈசன்
சரியாதி நான்கில் தகுமலமே கேடாய்
வருமால் இலையாய் மதி. 29

தீக்கைக்(கு) ஒதுங்கிச் சிதைந்தமலம் தன்வசமே
ஆக்குதலைச் செய்ய அறியாவாம் - நோக்கி
மலமே உளதென்று மன்னுவதே அல்லால்
பெலமேதும் இல்லையெனப் பேசு. 30

இருவினையும் ஒத்தால் இசைந்த அரற் கன்பு
மருவுதலால் உண்டோம் மலமால் - உருவினுக்கங்(கு)
ஒத்த பிரார்த்தமரற் கூட்டுதலால் தீயவினை
தொத்துதலே இல்லையெனச் சொல். 31

சேதித்த சேடம் செயற்படுதல் அங்கத்தை
வாதித்த நோய்மாறி வந்ததுவாம் - ஆதித்தன்
முன்னிருல்போல் தீயமலம் முற்றும் சரியாதி
தன்னிலையில் நிற்பார்க்குத் தான். 32

ஒத்த மலத்தோ(டு) உறுவாரைத் தீயநெறிப்
பெத்தரென்ப தாகப் பெறுவதாம் - சித்த
மலத்தை வெறுத்து வரும் அரனை நோக்கும்
நலத்தாரை முத்தரென நாடு. 33

மலமுற்றா ரேனும் மன்னுமரன் பாத
நிலையுற்றால் அம்மலமும் நீங்கும் - புலமுற்றும்
பேதித்த மும்மலத்தின் பெற்றியறப் பெற்றியறச்
சாதித்தார்க்(கு) இல்லைமலம் தான். 34

சரியைக்(கு) அனுக்கிரக சத்திகா லாக
வரிசைத் தவத்தோடும் வைத்துத் - தெரிசிக்க
ஈசனே யாகும் எனுமுறைமை எவ்வுயிர்க்கும்
நேசமே யாகும் நிறைந்து. 35

மலம்நாலத் தொன்றாக் மாறும்பின் ஈசன்
குலம்நாலத் தொன்றேற்கக் கூறும் - பெலமாம்
இருவினையும் ஒப்பாம் இசைந்ததனுப் போகம்
தரும் அரற்கே யாகத் தரும். 36

நின்ற மலமதனை நீண்ட அரன் பாலன்பால்
கொன்றிடுவ(து) என்றும் குணமாகும் ஆல் - துன்றும்
சரியாதி நான்கில் தகுமரனே தானாய்
வரலால் இலையாம் மலம். 37

சரியாதி நான்கும் தகுமலத்தை வென்று
வரவரவே சித்தமெனும் மாண்பாம் - புரையறவே
ஒன்றாகி நிர்பார் உறுசிவமே ஒத்தவர்பால்
சென்றார்க்குத் தீர்க்குமலத் தீ. 38

தீக்கைகு காலாகச் சிந்துமால் தீயமலம்
போக்குக்(கு) ஒதுங்கிப் பொருந்தியதால் - ஊக்குமரன்
சேட்டையே மேலாகச் செல்லுங்கால் ஆங்கதுவும்
ஒட்டமே யாமா றுணர். 39

சுத்தமென நான்கினையும் சொல்லியது நற்கருணை
அத்தம்மேல் பத்தி அடைதலால் - பெத்தம்
மலத்தோ(டு) இசைந்துநின்று வாழ்வார்க்காம் தீக்கைக்
குலத்தோரைச் சுத்தமெனக் கொள். 40

மலத்தார் தமக்கு ஆகும் மன்னுபிரா ரத்தம்
இலத்தான் நரகசொர்க்க மேய்வாம் - நலத்தாகும்
ஈசன்பால் நோக்கி இசைவார் சாகோக
நேசமே ஆவார் நிறைந்து. 41

மலமொன்(று) அகற்றப்பின் மற்றதெல்லாம் ஈசன்
நிலையொன்ற தாகமிக நிற்கும் - மலைவின்றி
ஈட்டியவா(று) ஆகும் இறையெவர்க்கும் தீயமலம்
வாட்டுயவா(று) ஆகும் மதி. 42

பெத்தமுத்தி என்னப் பிறங்கும் உருத்தன்மை
ஒத்த படிகத்(து) ஒழுங்காகும் - சுத்தம்
வரிற்போ(து) ஒளியாகும் வாராத போதிங்(கு)
இருட்போதம் ஆகுமென எண். 43

ஆவி இவைஇரண்டும் அல்லவாம் தீயமலம்
மேவிப் போய்ப் பித்தாய் விளங்குதலால் - தாவுமான்
ஒத்துப் சுதந்திரமாய் ஒன்றுதலால் உண்மையுற்ற
சித்தமவன் ஆகுமெனத் தேர். 44

தத்துவமே விட்டார்க்குத் தத்துவமென தம்மறிவை
அத்தனுக்கே ஈந்தார்க்(கு) அகம் ஏனாம் - சுத்தன்
அரனே எனுமால் அகன்ற உடற் போகம்
வருமே அவன்தாள் மதி. 45

பெத்தருக்கெ ஆகும் பிராரத்தம் தீயமலப்
பித்தே தனுவினையாம் பெற்றியால் - சுத்தம்
சிவனே எனுமால் சிறந்தவுடற் போகம்
அவனே எனும்வழுக்க தாம். 46

பித்தமுற்றார் துய்த்தலந்தப் பித்தமால் பேராத
சுத்தமுற்றார் துய்த்தலுமச் சுத்தமன்றோ - ஒத்த
தொழிலனைத்தும் ஆங்கவையே சொல்லியதோர் ஈசன்
எழிலனைத்தும் தானாம் என்(று) எண். 47

பச்சிலையைத் தின்னும் பசும்புழுவைச் செங்குளவி
நச்சியிட அப்புழுப்போய் நண்ணியதால் - இச்சித்துத்
தோற்றுமிலை உண்ணத் துணியாது தொல்பிறவி
மாற்றியபேர்க் கிவ்வாறாய் மன். 48

வினையற்றால் அங்கம் விடுவாம் மனுவாம்
தனுவுற்றால் அவ்வினையச் சார்வாம் - நினைவுற்று
அரனாய்த் திரிவாக்கங்(கு) ஆங்கரனே போக
தரமால் கருணையுருத் தான். 49

ஊக்கிய காமம் உயர்சிவமாம் உற்றதனுத்
தாக்கும் செயலே தரும்வாக்காம் - நீக்குமல
வேதனையே மாற்றி விடுமால் மிகுங்கருணை
நாதனவன் தானே நமக்கு. 50

ஊக்கிய காமம் உறும் இலமாம் உற்றதனுத்
தாக்கிஞ் செயலே தகுமதற்கால் - ஆக்குமரன்
பேதமென நோக்கிப் பிறியுமால் தீயமலப்
போதமென நெஞ்சே புகல். 51

இருளில் எழும் ஒளிமற்(று) ஆங்கே யிருளும்
வருமொளிமேற் செல்லுதற்கு வாரா - அருளும்
மலமேல் எழுமலமும் மாற்றியருள் மேலே
செலநினைவ(து) இல்லையெனத் தேர். 52

மலமக மாயா தனுவகலும் கன்ம
நிலையகலப் புரணமாய் நிற்கும் - மலைவறவே
போக்குதலைச் செய்வான்தன் பொன்னடிமேல் நின்றவர்மேல்
ஆக்குதலைச் செய்யான் அரன். 53

மலமுற்றார் துய்ப்பர் மலமே மனுவாம்
நிலையுற்றார் உண்பர்மனு நீதி - அலைவற்ற
ஞானத்தார் துய்ப்பர் நயந்த அருள் நற்றனுவாம்
ஆனத்தால் ஒட்டியதோர் ஆறு. 54

பெத்தருக்கே ஆகும் பிராரத்தம் பேராத
முத்தருக்கே இன்றாய் மொழியும்நூல் - சித்தம்
அறியாமை மாற்றி அடங்குமால் முத்தி
பிறியாத நான்குமருட் பேறு. 55

முத்தருக்கே ஆகும் மொழியுமருள் மந்திரமே
சித்தமரன் பாலே செலும் அதுவே - ஒத்த
தனுவுமது வாகத் தகுமேமெய்ப் போக
மனுவே அதுவாமவ் வாறு. 56

மந்திரத்தை உற்று வருந்தனுவை நீத்தோர்கள்
புந்தியர னாகப் புகுமாமால் - வந்ததனு
ஆங்கவனே ஆமால் அதற்கிசைந்த போகமெலாம்
நீங்கா மலமறுக்கும் நேர். 57

இருவினை ஒப்பில் இசைந்தவுயிர் மாறி
வருமால் தனுவினையவ் வாறாம் - இருவனையும்
சித்தமுற்ற வாறே திரும்புமால் ஒர்படித்தாய்ப்
பெத்தமென்ப தல்லவெனப் பேசு. 58

ஒத்த பதத்தை உறுவிக்கும் தாபரமால்
சித்தமலஞ் சங்கமமே தீர்க்குமால் - அத்தனென்றும்
ஆவியே நோக்கி அணையுமால் அற்றாரை
மேவியே நிற்பன் விரைந்து. 59

ஈசனாய் எல்லா உயிர்க்குயிராய் நிற்பானும்
ஈசனாய் பூசைக்(கு) இசைவானும் - ஈசனாய்ச்
சாலோக மாதிப் பயனளித்து நிற்பானும்
ஆலோக லிங்கமென மன். 60

மனவாக்குக் காயம் மருவா அரனே
மனவாக்குக் காயம் மருவி - நினைவார்க்கு
மூவுருவே யாகி முதன்மைசிவ லிங்கமாய்
ஏவுருவங் காண்கைக்(கு) இசைந்து. 61

மந்திரமே உற்று வருங்கருணை நன்மவுனத்
தந்திரமே உற்றிருக்கும் தன்மையால் - சிந்தித்து
வந்தார் தமக்கே வரங்கொடுத்து நிற்குமே
நந்தாக் கரிணை நலம். 62

தெரிசித்(து) அருச்சனையைச் செய்விப்பார் தங்களுக்கும்
பரிசித்(து) அருச்சனையைப் பண்ணி - உரிசித்தி
யோகமே நோக்கி உழல்வார்க்கும் நன்முத்திப்
பாகமேயார்க் கும்லிங்கம் பார். 63

தானே சிவலிங்கம் தானாகும் சற்குருவும்
தானேநற் சற்கமமுந் தானாகும் - ஆனமையால்
தங்கும் உயிரில் தரித்த மலமாற்ற
எங்குஞ் சிவமேயென்(று) எண். 64

குருவே சிவலிங்கக் கொல்கையெல்லாஞ் சொல்லி
வருமால் இறையவன்பால் மாலாய் - வருமுயிர்கள்
திய்ய மலமறுத்துச் செய்தியவன் பாலாகப்
பைய நடக்குமெனப் பார். 65

அங்க மலத்தை அகற்றிஅறி வோடறிவாய்த்
தங்கியதே சங்கமத்தின் தன்மையாம் - லிங்கம்
தனையே வழிபட்டுச் சாருமால் ஆர்க்கும்
நினைவே அதுவாமாம் நேர். 66

சங்கமமும் மிக்க தகுங்குருவும் லிங்கத்தின்
சங்கமமே உற்ற சதுரினால் - லிங்கத்தை
வந்திப்பா ரானார் வருமுலகர் எல்லாம்பின்
சிந்திப்பா ரானார் தெரிந்து. 67

நோக்கால் பரிசத்தால் நூலினால் பாவனையால்
வாக்கால்மெய் யோகத்தால் மாற்றுவான் - தாக்குமலம்
ஐந்தினையும் சற்குருவே ஆமால் அறிவென்கை
சந்தயமே இன்றாகும் தான். 68

எல்லா அறிவும் இசைந்தவுயி ரோடிசைந்து
சொல்லாத போதெவர்க்குந் தோற்றாதாம் - நல்லசிவ
லிங்கமே நூலுரைத்து நில்லாதாம் நீள்கருணைச்
சங்கமத்துக் காகத் தகும். 69

புத்திசொல்லிப் பொய்யதனைப் போக்கியதும் பூரணமாம்
அத்தன்மேல் நேசமுற ஆக்கியதும் - சித்தம்
ஒருமித்தார் தம்மோ(டு) உறைவதுவும் முத்திக்
கருமத்தால் உற்ற கடன். 70

ஆவியே ஈசற் கருளுருவே ஆகுமெனக்
கூவுமறை ஆகமத்துங் கொண்டதால் - மேவும்
சிவனே இவனென்று சித்திப்பார் தாமே
அவனாவார் நெஞ்சே அறி. 71

உபதேசத் தாலும் உறுநூலி னாலும்
பவதேசம் மாற்றுவிக்கும் பண்பால் - சிவனேசர்
போலே இருந்து பொருந்தியதோர் தீமலத்தின்
மாலே அறுப்பன் மகிழ்ந்து. 72

ஆவி திரிந்தபடி ஆகமாம் ஆங்கதுபோல்
மேவும் வினைதிரிந்து வெற்றியாம் - பாவம்
உறுவார்க்கும் மந்திரத்தை ஒன்றினர்க்கும் ஞானம்
பெறுவார்க்கும் இவ்வாறாம் பேறு. 73

ஆதலினால் சங்கமத்தை ஆன்மாக்கள் போலேநீ
பேதமென எண்ணிப் பிரியாதே - தீதகல
நோக்குமே எவ்வுயிர்க்கும் நுண்ணியநற் போதமதாய்
ஆக்குமே நெஞ்சே அறி. 74

மலமகற்ற ஈந்ததனு மன்னியதை ஆங்கே
நிலையகற்றி நின்மலமாய் நின்று - மலைவறுக்கும்
ஈசனோ டொன்றாய் இசையும் இருவினையும்
மாசறுக்கும் மற்றவர்நே ருற்று. 75

இருந்த இடத்தங்(கு) இருவினையும் ஆங்கே
வருந்தியதோர் அன்பாய் மருவித் - தருந்தவர்க்குத்
திய்ய மலமறுக்கும் செய்தியால் நற்கருணைக்(கு)
ஐயமிலை என்றே அறி. 76

மூவுருவே எவ்வுயிர்க்கும் முத்தி அளிக்குமால்
மூவுருவில் ஒன்றறவே முத்தியில்லை - மூவுருவும்
ஈசனே தானாய் எழலால் இழிவுயர்வு
பேசுதற்கே இல்லையெனப் பேசு. 77

ஆசையற்றார்க்கு உண்டோ அகத்துன்பம் நல்லறமாம்
நேசமற்றார்க்கு உண்டோ நிகழ்சொர்க்கம் - பேசுமலம்
அற்றார்க்கும் உண்டோ அணுகுமுடல் தீயகுலம்
உற்றார்க்கும் உண்டோ குரு. 78

அறமுறைவார்க்(கு) இல்லைப்பொய் ஆயிழைமேல் மோகம்
மறமுறைவார்க்(கு) இல்லை அற மாண்பு - துறவுறையும்
முத்தர்க்கே இல்லை மொழியுமுடல் நற்சிவமாம்
ஐத்தர்க்கே ஆவியில்லைத் தேர். 79

ஊனுண்பார்க் கில்லை உயிரிரக்கம் ஒண்புசை
தானில்லார்க் கில்லைத் தகுங்கதிநேர் - கோனடியை
வந்திப்பார்க் கில்லை வருநிரயம் ஆங்கவனைச்
சிந்திப்பார்க் கில்லைமலத் தீ. 80

சாதியுற்றார்க் கில்லைத் தகுஞ்சமயம் சங்கமமம்
நீதியுற்றார்க் கில்லை நிக்ழ்சாதி - பேதமற்ற
அங்கத்தார் தங்களுக்கங் காவியில்லை ஆவியுறும்
சங்கத்தார்க் கில்லைஉடல் தான். 81

மனம்கவர்ந்தார்க் கில்லை வருந்துறவு மாயாச்
சினம் கவர்ந்தார்க் கில்லைத் தெளிவே - அனங்கனம்பின்
புண்ணுற்றார்க் கில்லைப் புனிதம் பொருந்துமரன்
கண்ணுற்றார்க் கில்லைமதன் காண். 82

பொய்யுற்றார்க் கில்லை புகழுடம்பு போகத்தின்
கையுற்றார்க் கில்லை கருதுமறம் - மெய்யுற்றுக்
காமித்தார்க் கில்லை உயிர் காட்டாமல் மேலன்பைச்
சேமித்தார்க் கில்லைச் சிவன். 83

ஆசையுற்றார்க் கில்லை அருட்செல்வம் ஆங்கரன்பால்
நேசமுற்றார்க் கில்லை நெடியமறம் - மாசற்ற
நெஞ்சினார்க் கில்லை நிகழ்குறைவு தீதைவிட
அஞ்சினார்க் கில்லை அரன். 84
திருவினை உற்றார்க்குத் தீதில்லைச் செங்கண்
ஒருவனைற் றார்க்குயர் வில்லைக் - குருவவனை
ஐயுற்றார்க் கில்லை அருளுடைமை ஆங்கவன்தன்
மெய்யுற்றார்க் கில்லை வினை. 85

கற்றவர்க்கே இல்லைக் கரிசறுத்தல் கற்றநெறி
உற்றவர்க்கே இல்லை உறுங்கரிசு - மற்றுடலைச்
சேதித்தார்க் கில்லைத் திரிமலமெய்த் தேவோடு
சாதித்தார்க் கில்லையுயிர் தான். 86

சீவனுற்றார்க் கில்லை சிவமச் சிவமச் சிவமென்னும்
தேவனுற்றார்க் கில்லையந்தச் சீவனென்கை - ஆவதனால்
அங்காங்கி யாக அடையும் உயர்பிழிவாம்
மங்காதே வைக்கும் வரம். 87

வாளுற்றார்க் கில்லை வருங்கருணை மன்னுதவக்
கோளுற்றார்க் கில்லை கொடுங்கோபம் - வேளுற்ற
நெஞ்சினார்க் கில்லை நிகழ்மரபு தீதைவிட
அஞ்சினார்க் கில்லை அறம். 88

மரத்தில் உருவமைக்க மாறும் மரத்தைக்
கருத்தில் அமைக்கவுருக் காணாத் - திருத்துமரன்
காணுங்கால் ஆவியினைக் காணாமெய் யாவியினைக்
காணுங்கால் காணா தரன். 89

சித்திரமும் நற்சுவருஞ் சேருங்கால் ஒன்றாம்நற்
சித்திரமே காட்டாதிச் சேர்சுவரைப் - புத்திதனைத் தேற்றும் அரனே செலுமுயிரைக் காட்டாமல்
தோற்றியவா றென்னத் துணி. 90

இரும்பினைப்பொ ன்னாக்கும் இயைந்த குளிகை
திரும்பியிரும் பாக்குதலைச் செய்யா - விரும்புமலம்
போக்குவதே அல்லாற்பின் போனதனை ஆருயிர்மேல்
ஆக்குதலைச் செய்யான் அரன். 91

சித்தாந்த சிகாமணி முற்றிற்று