1. புது வெள்ளம் அழகியநம்பி மாடியின் உட்பகுதியிலிருந்து மொட்டை மாடிக்குச் செல்லும் மரப்படிகளில் வேகமாக ஏறினான். தடதடவென்று எழுந்த மரப்படிகளின் ஓசை மாடியெங்கும் அதிர்ந்தது. அழகிய நம்பி மொட்டை மாடியின் திறந்த வெளியில் நின்று கொண்டு சுற்றிலும் பார்வையைச் செலுத்தினான். தண்ணீர், தண்ணீர்; ஒரே தண்ணீர் மயம்; நாலா பக்கங்களிலும் செந்நிறப் புதுநீர் பெருக்கெடுத்து ஓடிக் கொண்டிருந்தது. வயல்கள், வரப்புகள், சாலை, தோப்பு, துரவு, - ஒரு இடம் மீதமில்லை! எங்கும் வெள்ளம். நான்கு புறமும் மலைத் தொடர்களுக்கு நடுவே பள்ளத்தாக்கில் அமைந்த சிற்றூர் அது. தாமரை இதழ்களுக்கு நடுவே இருக்கும் பொகுட்டைப் போல் மலைச் சிகரங்கள் ஊரை அரவணைத்துக் கொண்டிருந்தன. சுற்றுப்புறத்து மலைத் தொடர்களிலும் பள்ளத்தாக்கிலும் ஒரு வாரமாக இடைவிடாத மழை. வானத்து மேகங்களுக்குத் திடீரென்று கொடைவெறி பிடித்துவிட்டதோ என்று சொல்லத்தக்க விதத்தில் மழை அளவற்றுப் பெய்திருந்தது. அதன் விளைவுதான் ஊரையே திக்குமுக்காடச் செய்த இந்தப் புது வெள்ளம். சாதாரண நாட்களிலேயே குளிருக்குக் கேட்க வேண்டாம். ஒரு வாரமாகச் சூரியன் முகத்தையே காண முடியாத நிலையில் கூண்டில் அடைப்பட்ட புறாக்களைப் போல மனிதர்கள் வீடுகளில் அடைப்பட்டுக் கிடந்தார்கள். அவ்வளவு குளிர். பக்கத்து நகரங்களிலிருந்து அந்தப் பள்ளத்தாக்கிற்கு வரும் போக்குவரத்து சாதனங்கள் நின்றுபோய்ப் பத்து நாட்களுக்கு மேலாயிற்று. சாலைகளெல்லாம் உடைப்பிற்கும் அரிப்பிற்கும் இலக்காகியிருந்ததால் போக்கு வரவு எப்படி நடக்க முடியும்? சகல விதத்திலும் அந்தச் சின்னஞ்சிறிய கிராமம் உலகத்தின் பிற பகுதிகளோடு தொடர்பு பெற முடியாத தீவைப் போலத் துண்டிக்கப்பட்டிருந்தது. ஊருக்கு வரவேண்டிய தபால்கள் வரவில்லை. ஊரிலிருந்து வெளியிடங்களுக்குப் போகவேண்டிய தபால்கள் போகவில்லை. மழை பெய்தவுடன் பருவகாலத்தில் வழக்கமாக நடைபெற வேண்டிய விவசாய வேலைகளும் தடைப்பட்டு நின்று போயிருந்தன. உள்ளங்காலைப் பதிப்பதற்குக்கூட இடமில்லாமல் எல்லா இடங்களிலும் இடுப்புத் தண்ணீர் நிரம்பியிருக்கும் போது என்ன தான் செய்ய முடியும்? நாற்றங்கால்களில் நடுகைக்காகப் பயிரிட்டு வளர்த்திருந்த நாற்று, தண்ணீர்ப் பெருக்கினுள் அழுகிக் கொண்டிருந்தது. அவ்வளவு தண்ணீரும் வற்றித் தரை கண்ணுக்குத் தெரிந்தாலும், பத்து நாள் வெயிலில் காய்ந்தாலன்றி உழவுக்கு ஏர் பூட்ட முடியாது. மண்ணில் புடைத்தெழுந்த கருநீலப் பசும்பந்துகளைப் போல ஊரைச் சுற்றிலும் தென்பட்ட மலைச் சிகரங்களையும் அவற்றில் பால் வழிவதுபோல் படர்ந்திருக்கும் மேகச் சிதறல்களையும் பார்த்த போது, அவன் இதயத்தில் ஏதோ ஒரு பெரும்பாரம் தோன்றி அழுத்துவது போல் தோன்றியது. விநாடிக்கு விநாடி அந்த உணர்வு பெரிதாக விசுவரூபமெடுத்தது. மனம் கனத்தது. உணர்வுகள் சுமையாயின. கீழே ஈரமும் பச்சைப் பாசியும் படிந்திருப்பதைக்கூடக் கவனிக்காமல் அப்படியே மொட்டை மாடியின் தளத்தில் உட்கார்ந்து கொண்டான். காலமும், கோடையும், தவறாமல் நீரைப் பொழிந்து ஊரின் கழுத்தில் பக்கத்துக்கு இரட்டை வடமாக மல்லிகை மாலையிட்டதுபோல இரண்டு பெரிய ஜீவ நதிகளை அளிக்கும் அந்த மலை; வருடத்துக்கு மூன்று போகத்துக்குக் குறையாமல் போட்டதைப் பொன்னாக்கிக் கொடுக்கும் அந்தப் பூமி, எப்பொழுதும் கோடைக்கானல், உதக மண்டலம் போலக் குளிர்ச்சியாயிருக்கும் அந்த ஊர், மழைக்காக இருண்டு சூல் கொண்டிருக்கும் வானம், - இவையாவும் அப்போது அந்த விநாடியில் அவனைப் பார்த்துத் தங்களுக்குள் மர்மமாக - மௌனமாகக் கேலி செய்வதுபோல் அவனுக்கு ஒரு பிரமை உண்டாயிற்று. அவனுடைய அப்பன், பாட்டன், முப்பாட்டன், - எல்லாரும் வாழ்ந்து குப்பை கொட்டிக் கடைசியில் எந்த மண்ணில் கலந்தார்களோ, - அந்த மண்ணிலிருந்து அவன் போகப் போகிறான். ஆம்! வெகு தூரத்திற்குப் போகிறான். கண்காணாத சீமைக்குப் போகிறான். மழை பெய்து ஊரை இப்படி வெள்ளக்காடு ஆக்கியிரா விட்டால் நான்கு நாட்களுக்கு முன்னேயே அவன் தூத்துக்குடிக்குப் போய்க் கப்பலேறியிருப்பான். மழையும், வெள்ளமும், ஊரைவிட்டு வெளியேற முடியாதபடி பிரயாணத்தைத் தடைசெய்து விட்டன. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை. இந்த வலைதள பக்கத்தில் உள்ள தகவல்களை பதிப்பிக்கவோ, ஒலிபரப்பவோ, வெளியிடவோ அல்லது விநியோகிக்கவோ கூடாது.
|
| இலக்கிய தகவல்கள் |
| தரவிறக்கம் |
பிற செய்திகள் |
ஆன்மீகம் |
|
|
|
|
தமிழ் யுனிகோடில் அமைந்த இணைய தளம். பதிப்புரிமை © 2006 சென்னைநூலகம்.காம். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
|