http://www.chennailibrary.com



சமகால இலக்கியம்


Google

பழந்தமிழ் இலக்கியம்







2. அன்புமுள்

     மூன்று நாள் கழிந்த பின்பு வெள்ளம் ஒருவாறு வடிந்திருந்தது. பஸ் போக்குவரவு ஒழுங்காக நடைபெறலாம் என்ற நிலைமை ஏற்பட்டிருந்தது. புறப்படுவதற்குத் தயாராக மூட்டை முடிச்சுகளைக் கட்டி வைத்துவிட்டு அண்டை அயலாரிடம் சொல்லிக் கொள்வதற்காகப் புறப்பட்டான் அழகிய நம்பி. வெள்ளம் வடிந்து சேறும் சகதியும், வழுக்கலுமாக இருந்த தெருவில் காலைவைப்பதற்கே அருவருப்பாக இருந்தது.

     'வீட்டிலிருந்து தெருவில் இறங்குவதற்கே இவ்வளவு அசிங்கமாக இருக்கிறதே! பரந்து கிடக்கும் வாழ்க்கையில் எந்தெந்த உயர் நிலைகளிலிருந்து எந்தெந்தத் தாழ்வான நிலைகளில் எல்லாம் இறங்கி நடக்க வேண்டியிருக்குமோ?'

     அவன் தெருவில் இறங்கிச் சேற்றில் கால்களைப் பதித்து வழுக்கி விடாமல் கவனமாக நடந்தான்.

     தெருத்திருப்பத்தில் பெருமாள் கோவிலுக்கு முன்னால் இருந்த திருக்குளத்தில் படிக்கட்டுகளே தெரியாமல் வெள்ளத் தண்ணீர் நிரம்பிக் கிடந்தது. அழகிய நம்பி பெருமாள்கோவில் கோபுரத்தின் உச்சியைப் பராக்குப் பார்த்துக் கொண்டே குளக் கரையோரமாக நடந்து கொண்டிருந்தான். திரைகடல் கடந்து அந்நிய நாட்டுக்குக் கப்பலேறிப் போகப்போகிறவன் யாரிடம் சொல்லிக் கொண்டு போவது? யாரிடம் சொல்லிக் கொள்ளாமல் போவது? வேண்டியவர்கள் எல்லோரிடமும் தான் சொல்லிக் கொள்ள வேண்டும்!

     பெருமாள் கோவில் குறட்டு மணியம் நாராயணப்பிள்ளை, மேலத்தெரு வாசகசாலைச் செயலாளர் கந்தப்பன், முன்சீப் புன்னைவனம் பிள்ளை, புலவர் ஆறுமுகம் - சொல்லி விடை பெற்றுக் கொள்ள வேண்டியவர்கள், ஒவ்வொருவராக அவன் நினைவுக்கு வந்தனர். நினைத்துக்கொண்டே குளக்கரையோரமாக நடந்து கொண்டிருந்தவன், திடீரென்று அங்கே கிளம்பிய அந்தக் கூப்பாட்டைக் கேட்டுத் திடுக்கிட்டான். திரும்பிப் பார்த்தான்.

     பத்து பன்னிரண்டு வயது மதிக்கத்தக்க சிறுமி ஒருத்தி, "ஐயோ, அப்பா" என்று அலறிப்புடைத்துக் கூச்சலிட்டுக் கொண்டே குளத்தின் பக்கம் கையைக் காட்டினாள். பயத்தினால் வெளிறிப் போயிருந்த சிறுமியின் முகத்தில் வாய் கோணியது. குளத்தின் உட்புறமாகக் கையைக் காட்டிக் கூச்சலிட்டாளே தவிரப் பயத்தினாலும் பதற்றத்தினாலும் நடந்தது என்ன என்று சொல்ல அவளுக்கு வாய் வரவில்லை.

     அந்த நேரத்தில் பனி நீங்காத வைகறைப் போதில் அந்தக் குளக்கரைப் பகுதியில் அழகியநம்பி ஒருவனைத் தவிர ஏறக்குறைய ஆள் நடமாட்டமே இல்லை என்று சொல்லலாம்.

     "என்ன தங்கச்சி? என்ன நடந்தது? ஏன் கூச்சல் போடுகிறாய்?" என்று கேட்டுக்கொண்டே ஓட்டமும் நடையுமாகச் சென்றான் அழகியநம்பி.

     சிறுமிக்கு வாய் கேவியது. சொற்கள் திக்கித் திணறி வெளி வந்தன. "அக்கா... குடம்... தண்ணீரில்..." என்று ஏதோ சொல்லிவிட்டுக் குளத்தின் பக்கமாகக் கையைச் சுட்டிக் காட்டினாள்.

     அழகியநம்பி ஒன்றும் புரியாமல் குளத்தின் பக்கம் திரும்பிப் பார்த்தான். அவனுக்குப் பகீரென்றது. முக்குளித்து மேலெழுந்து மறுபடியும் முக்குளிக்கும் பெண் தலை ஒன்று நீர்ப்பரப்பில் தெரிந்தது. அதற்குச் சிறிது தொலைவு தள்ளிப் 'பள பள' வென்று தேய்த்து விளக்கிய ஒரு பித்தளைக் குடம் குப்புற மிதந்து தண்ணீரில் அலைப்பட்டுச் சென்று கொண்டிருந்தது. சிறுமியின் கேவுதல் அழுகையாக மாறிவிட்டது. "ஐயோ அக்கா... அக்கா..." என்று அழத் தொடங்கி விட்டாள். அழகிய நம்பிக்கு விஷயம் விளங்கிவிட்டது. மின்னல் மின்னி மறையும் நேரம் அவனுக்கு ஒரு சிறு தயக்கம் ஏற்பட்டது.

     பிரயாணத்துக்காக எடுத்து அணிந்து கொண்டிருந்த புதிய வெள்ளைச் சலவைச் சட்டை, பையில் செலவுக்கான பணத்தோடு கிடந்த மணிபர்ஸ் - இரத்தக் குழம்பு போலிருந்த குளத்தின் செந்நிறப் புதுவெள்ளம் - இவற்றை எண்ணி ஒரே ஒரு நொடி தயங்கினான். ஆனால், ஒரு நொடி தான் அந்தத் தயக்கம்! அடுத்த நொடியில் சிறுமியின் பிடியிலிருந்து தன்னை விடுவித்துக் கொண்டு குளத்தின் நீர்ப்பரப்பில் பாய்ந்தான். ஆள் பாய்ந்த அதிர்ச்சியில் தண்ணீரில் அலைகள் எழும்பிக் குதித்துக் கரையைப் போய்ச் சாடின.



பிறந்த மண் : 1  2  3  4  5  6   7   8   9   10  


இணைய பக்க முகவரி: http://www.chennailibrary.com/parthasarathy/piranthamann/piranthamann2.html

பதிப்புரிமை © 2006 சென்னைநூலகம்.காம்.
அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
இந்த வலைதள பக்கத்தில் உள்ள தகவல்களை பதிப்பிக்கவோ,
ஒலிபரப்பவோ, வெளியிடவோ அல்லது விநியோகிக்கவோ கூடாது.

 அச்சிட       விமர்சிக்க       விருப்ப தளமாக்க
       முகப்பு பக்கமாக்க




பிற செய்திகள்




வருகைப் பதிவு (25-09-2006 முதல்)
ad
இலக்கிய தகவல்கள்

தரவிறக்கம்


தமிழ் யுனிகோடில் அமைந்த இணைய தளம். பதிப்புரிமை © 2006 சென்னைநூலகம்.காம். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.