http://www.chennailibrary.com



2. அன்புமுள்

... தொடர்ச்சி ...

     தண்ணீருக்குள் அவள் உடலை உடனே பற்றிக் கரைக்குக் கொண்டு வந்துவிட அவனால் முடியவில்லை. மூன்று நான்கு தடவைகள் முக்குளித்து, மூழ்கி, வெறுங்கையோடு எழுந்திருந்தான். ஐந்தாவது தடவையாக அவன் முக்குளித்தபோது அவளுடைய நீண்ட அளகபாரத்தின் ஒரு பகுதி அவனுடைய கையில் சிக்கியது. அப்படியே பிடித்து இழுத்துக் கொண்டு கரையை நோக்கி நீந்தினான்.

     கரையில் நின்று கொண்டிருந்த அந்தச் சிறுமி இப்போது அழுவதையும், கூச்சலிடுவதையும் நிறுத்திவிட்டு, அவன் அவள் அக்காவின் உடலையும் இழுத்துக் கொண்டு தண்ணீரில் நீந்தி வருவதை வியப்புடன் பார்த்தாள்.

     கொடிபோல் துவண்ட அந்தப் பூவுடலைக் கரையில் கிடத்திவிட்டு நிமிர்ந்தான். அழகியநம்பி. நிறையத் தண்ணீரைக் குடித்து மூர்ச்சையாகியிருந்தாள் அவள். "அக்கா! அக்கா!" - என்று அருகில் வந்து குனிந்து தோளைப் பிடித்து உலுக்கினாள் அந்தச் சிறுமி. நீந்தத் தெரியாமல் தண்ணீரில் அகப்பட்டுக் கொண்டு அவள் விழுங்கியிருந்த தண்ணீரை முழுவதும் வெளியேற்றினாலொழிய அவளுக்குப் பிரக்ஞை வராதென்று அழகிய நம்பி உணர்ந்தான். தண்ணீரை வெளியேற்ற வேண்டுமானால் அதற்கு ஒரே ஒரு வழிதான் அவனுக்குத் தென்பட்டது. ஆனால் அதைச் செய்வதற்கு அவன் கூசினான்; தயங்கினான். அந்தப் பெண்ணின் உடலை இரண்டு கைகளாலும் தீண்டி மேலே தூக்கிக் கரகரவென்று தட்டா மாலை சுற்றுவது போலச் சுற்ற வேண்டும். அப்படிச் சுற்றினால் தான் குடித்திருக்கிற தண்ணீர் முழுதும் குமட்டி வாந்தியெடுத்து வெளியேறும்.

     குளக்கரையோரம், பெருமாள் கோவில் வாசல், தெருத் திருப்பம் - சுற்றிலும் பார்வையைச் செலுத்தினான் அழகியநம்பி. அவன் கண் பார்வை சுழன்ற திசைகளில் - இடங்களில் எங்கும் யாரும் தென்படவில்லை.

     சிறுமி முன்போலவே அக்காவின் உடலை அசைத்துப் புரட்டிக் கூச்சலிட்டு எழுப்புவதற்கு முயன்று கொண்டிருந்தாள். ஈரம் சொட்டச் சொட்ட நின்ற அழகியநம்பி ஒருகணம் கீழே கிடத்தப்பட்டிருந்த அந்தப் பெண்ணின் உடலைப் பார்த்தான். பட்டுச் சேலை உடுத்திய தங்கச்சிலை ஒன்று தண்ணீரில் நனைந்து கிடப்பது போல் தோன்றியது. பதினேழு, பதினெட்டு வயதுக்கு மேலிருக்காது. வெண்சங்கு போலிருந்த அழகிய கழுத்தின் வெறுமை இன்னும் திருமணம் ஆகவில்லை என்று சொல்லியது.

     அவன் நிலை தர்மசங்கடமாயிருந்தது. என்ன செய்வதென்றே தெரியவில்லை. அந்தச் சிறுமியை அவளுடைய வீட்டுக்கு அனுப்பி யாராவது பெரியவர்கள் இருந்தால் கூட்டிக் கொண்டு வரச் சொல்லலாமே என்று தோன்றியது. கீழே குனிந்து அந்தப் பெண்ணின் மூக்கருகே கையை வைத்துப் பார்த்தான். சூடான மூச்சுக் காற்றின் மெல்லிய வெப்பம் கையில் உறைத்தது. 'பயமில்லை' என்று ஒடுங்கிய குரலில் தனக்குள் சொல்லிக்கொண்டு "தங்கச்சி! ஓடு... ஓடிப்போய் வீட்டில் யாராவது பெரியவர்கள் இருந்தால் உடனே அவசரமாகக் கூட்டிக் கொண்டு வா" என்று அந்தச் சிறுமியைத் துரத்தினான். ஆனால், அவள் போகவில்லை; தயங்கி நின்றாள். "சொன்னால் போகமாட்டாயா?" என்று அதட்டினான் அழகியநம்பி.

     "இல்லை மாமா... வந்து... வந்து..." என்று இழுத்துப் பேசினாள் சிறுமி.

     "போகாவிட்டால் உன் அக்கா உனக்குக் கிடைக்க மாட்டாள்."

     "வீட்டில் வயதான அம்மாதான் இருக்கிறாள். அவளாலே எழுந்திருந்து வரமுடியாது. முடக்குவாதம்."

     "அப்பா, அண்ணா, வேறு யாரும் இல்லையா உங்களுக்கு?"

     "எல்லாம் அம்மாதான்!" சிறுமி உதட்டைப் பிதுக்கினாள். பரிதாபகரமானதோர் ஏக்கம் அப்போது அந்தச் சிறுமியின் முகத்தில் படர்ந்தது.

     "உங்கள் அம்மா யார்?"

     "தெருக்கோடியிலே ஒரு இட்டிலிக்கடை இருக்கிறதே, அதுதான்!" அந்தச் சிறுமி இட்டிலிக்கடை அடையாளத்தைச் சொன்னவுடன் அழகியநம்பிக்கு அவர்கள் இன்னாரென்பது புரிந்துவிட்டது.

     "அடேடே! இட்டிலிக்கடைக் காந்திமதி ஆச்சி பெண்களா நீங்கள்?"



பிறந்த மண் : 1  2  3  4  5  6   7   8   9   10   11   12   13   14   15
16   17   18   19   20   21   22   23   24   25   26   27   28   29   30   31   32


இணைய பக்க முகவரி: http://www.chennailibrary.com/parthasarathy/piranthamann/piranthamann2a.html

பதிப்புரிமை © 2006 சென்னைநூலகம்.காம்.
அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
இந்த வலைதள பக்கத்தில் உள்ள தகவல்களை பதிப்பிக்கவோ,
ஒலிபரப்பவோ, வெளியிடவோ அல்லது விநியோகிக்கவோ கூடாது.

 அச்சிட       விமர்சிக்க       விருப்ப தளமாக்க
       முகப்பு பக்கமாக்க



வருகைப் பதிவு (25-09-2006 முதல்)
ad
இலக்கிய தகவல்கள்
தரவிறக்கம்
பிற செய்திகள்
ஆன்மீகம்




தமிழ் யுனிகோடில் அமைந்த இணைய தளம். பதிப்புரிமை © 2006 சென்னைநூலகம்.காம். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.