3. பிரமநாயகத்தின் கோபம் சொல்லிக்கொள்ள வேண்டியவர்களைப் பார்த்துச் சொல்லிக் கொண்டபின் பஸ் போக்குவரவு நிலவரங்களைப் பற்றி விசாரித்துத் தெரிந்து கொள்வதற்காக அழகியநம்பி பஸ் ஸ்டாண்டை நோக்கி நடந்தான். மணி எட்டரை - ஒன்பது இருக்கலாம். வெயில் சுள்ளென்று உறைத்தது. குளக்கரையிலிருந்து, ஈர ஆடைகளை மாற்றிக் கொள்வதற்காகத் திரும்பவும் வீட்டுக்கு ஒருமுறை போயிருந்தான் அழகிய நம்பி. வீட்டில் போய் ஆடைமாற்றிக் கொண்டு, சட்டைப் பையில் நனைந்து போயிருந்த மணிபர்ஸின் ரூபாய் நோட்டுகளை வெயிலில் காயவைத்து எடுக்கும் வேலையைத் தங்கை வள்ளியம்மையிடம் ஒப்படைத்துவிட்டு அதன் பின்பே மற்றவர்களிடம் விடைபெற்றுக் கொள்வதற்குக் கிளம்பியிருந்தான். இதனால் நேரம் அதிகமாகியிருந்தது. முக்கியமானவர்களிடமெல்லாம் சொல்லிக் கொண்டு அவன் தெருக்கோடியை அடைந்த போது மணி ஏழேமுக்கால். வாசற்படியின் இரண்டு பக்கமும் வீடே தெரியாமல் அடர்ந்து வளர்ந்திருந்த பூவரச மரங்களுக்கிடையே தாழ்வான ஓட்டடுக்கு வீடு ஒன்று தெருக் கோடியில் இருந்தது. பூவரச மரத்தடியில் பளபளவென்று எண்ணெய்ப்பசை மின்னும் எச்சில் இலைகள் சிதறிக் கிடந்தன. சில காக்கைகள், சில நாய்கள் அந்த இலைகளில் முற்றுகை நடத்தின. வாயிற்படிகளின் மேல் உள்ளே நுழைய வழியின்றிச் சில ஆட்கள் உட்கார்ந்து ஊர்வம்பு பேசிக் கொண்டிருந்தார்கள். உட்புறமிருந்து பெரிய ஆட்டு உரலில் சட்டினி அரைபடும் விகாரமான ஓசை வந்து கொண்டிருந்தது. அதுதான் காந்திமதி ஆச்சியின் இட்டிலிக்கடை. அழகியநம்பி உள்ளே செல்வதற்காகப் படியேறினபோது, "தம்பீ! கொழும்புக்கு எப்போது பயணம்?" "அக்கரைச் சீமைக்கா?" "நல்லபடியாகப் போய்விட்டுக் கையில் நாலு காசு மிச்சம் பிடித்துக் கொண்டு வரவேண்டும்" - என்று இப்படியாகப் படியில் உட்கார்ந்து கொண்டிருந்தவர்களிடமிருந்து அன்பும், அனுதாபமும், ஆசியும், விசாரணையுமாக எழுந்த பல கேள்விகளுக்குச் சிரித்துக் கொண்டே பதில்களைச் சொல்லிவிட்டு உள்ளே சென்றான் அவன். சிறுமி கோமு திக்கித் திணறி ஆட்டுக்கல்லில் சட்டினி அரைத்துக் கொண்டிருந்தாள். பெரிய பெண் பகவதி அடுப்பிற்கருகில் இட்டிலித் தட்டுகளில் மாவை ஊற்றி வைத்துக் கொண்டிருந்தாள். எழுந்து நடமாட முடியாத காந்திமதி ஆட்சி நார்க்கட்டிலில் உட்கார்ந்தபடி, 'இதை இப்படிச் செய்! அதை அப்படிச் செய்!' என்று விபரம் சொல்லிக் கொண்டிருந்தாள். அழகியநம்பி உள்ளே நுழைந்ததை முதலில் பார்த்தவள் தட்டில் மா ஊற்றிக் கொண்டிருந்த அந்தப் பெண்தான். குழியில் மா ஊற்றுவதற்காக எழுந்த வளைக்கரம் அவனைக் கண்டதும் தயங்கியது. முகத்தில் ஆவலும் மலர்ச்சியும் போட்டி போட்டுக் கொண்டு பரவின. "ஆச்சி! இதோ அவர் வந்திருக்கிறார்." அந்தப் பெண் இனிய குரலில் ஆச்சிக்கு அவன் வரவை அறிவித்தாள். சின்னப் பெண்ணுக்குச் சட்டினி அரைக்கும் விதத்தில் ஏதோ யோசனை கூறிக் கண்டித்துக் கொண்டிருந்த ஆச்சி திரும்பிப் பார்த்தாள். "என்ன ஆச்சி? சௌக்கியமாக இருக்கிறீர்களா?" என்று கேட்டுக் கொண்டே சிரித்த முகத்தோடு கட்டிலுக்குப் பக்கத்தில் வந்து நின்றான் அழகியநம்பி. "அடேடே! வா அப்பா. இப்படி உட்கார். எல்லாம் கோமுவும் பகவதியும் வந்து சொன்னார்கள். தண்ணீரில் செத்து மிதந்திருக்க வேண்டியது. என்னவோ தெய்வக் கிருபையால் நீ அந்த நேரத்தில் அந்தப் பக்கமாக வந்திருக்கிறாய்" - ஆச்சியின் குரல் தழுதழுத்தது. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை. இந்த வலைதள பக்கத்தில் உள்ள தகவல்களை பதிப்பிக்கவோ, ஒலிபரப்பவோ, வெளியிடவோ அல்லது விநியோகிக்கவோ கூடாது. |
| இலக்கிய தகவல்கள் |
| தரவிறக்கம் |
பிற செய்திகள் |
ஆன்மீகம் |