4. கப்பல் புறப்படுகிறது அந்த நாட்களில் வியாபாரத்துக்காக அல்லது பணம் தேடுவதற்காக அக்கரைச்சீமை என்று செல்லமாக அழைக்கப்பட்ட இலங்கைக்குப் போவது எளிய செயலாக இருந்தது. பாஸ்போர்ட், விசா முதலிய தொல்லைகளெல்லாம் இல்லாத காலம் அது. தூத்துக்குடியிலிருந்து மதுரைக்கு இரயிலேறுவது போலவே கொழும்புக்குக் கப்பலேறுவதும் சாதாரணமாக இருந்து வந்தது. ஆனாலும், 'கடலைக் கடந்து போதல்' என்ற எண்ணம் உணர்ச்சியளவில் ஒரு திகைப்பை உண்டாக்குவது வழக்கம். பிரமநாயகமும், அழகியநம்பியும் தூத்துக்குடிக்கு வந்து சேரும் போது மாலை நான்கு மணிக்கு மேல் ஆகியிருந்தது. பஸ்ஸில் பிரயாணம் செய்த சிலமணி நேரத்தில் அவர் பேசிய பேச்சுக்களும், பழகிய விதமும், அந்த மனிதரைப் பற்றி ஓரளவு நன்றாகத் தெரிந்து கொள்ளும் வாய்ப்பை அவனுக்கு அளித்திருந்தன. நீர்க்காவியேறிய நான்கு முழம் வேட்டியும் எப்போதோ தைத்த அரைக்கைச் சட்டையும், கையில் ஒரு ஒட்டுப்போட்ட குடையுமாக... அவர் விசுக்கு விசுக்கென்று நடப்பது அவனுக்கு வேடிக்கையாக இருந்தது. துட்டைச் செலவழிப்பதில் சிக்கனமும், கட்டுப்பாடும் உள்ள இந்த மனிதரா சில லட்சங்களுக்குச் சொந்தக்காரர் என்று பிரமநாயகத்தைப் பற்றித் தெரியாதவர்கள் நிச்சயமாகச் சந்தேகப்படத்தான் செய்வார்கள். ஆள் குட்டையாக இருந்தாலும் மனிதர் முடுக்கிவிட்ட யந்திரம்போல வேகமாக நடந்தார். அவருடன் தொடர்ந்து நடக்க அவன் தன் இயல்பான நடையை வேகப்படுத்திக் கொள்ள வேண்டியிருந்தது. நடை ஒன்றில் மட்டுமல்ல; எல்லா வகையிலும் பிரமநாயகத்துக்குப் பக்கத்தில் தன்னைப் போன்ற ஒருவன் நடந்து செல்வது பொருத்தமற்றதாகத் தோன்றியது அழகியநம்பிக்கு. தூத்துக்குடி பஸ் நிலையத்தில் இறங்கி, பெட்டி படுக்கை மூட்டை முடிச்சுக்களை இரண்டு கூலிக்காரர்களிடம் பேசி ஏற்றிக்கொண்டு துறைமுகத்தை நோக்கிச் சென்றுகொண்டிருந்தனர் அவர்கள் இருவரும். அழகியநம்பிக்கு உடல் தளர்ந்திருந்தது. நடையில் உற்சாகமில்லை. காலையில் பதினோரு மணிக்குப் புறப்படுவதற்கு முன் ஊரில் சாப்பிட்ட சாப்பாடுதான். பஸ் தூத்துக்குடி வந்து சேருகிற வரை பச்சைத் தண்ணீர் கூட வாயில் ஊற்றிக் கொள்ளவில்லை. பிரமநாயகம் படு அழுத்தமான பேர்வழியாக இருந்தார். சிக்கனத்தைக் கடைப்பிடிப்பதில் இரண்டு வகை உண்டு. அநாவசியத்துக்காகச் செலவழிக்காமல் இருப்பது ஒருவகை! அநாவசியத்துக்காக மட்டும் அன்றி அவசியத்துக்காகவும் செலவழிக்காமல் இறுக்கிப் பிடிப்பது இன்னொரு வகை. பிரமநாயகம் என்ற பணக்கார மனிதர் இந்த இரண்டாவது வகையைச் சேர்ந்தவராக இருப்பார் போல் தோன்றியது. பணத்தை ஏராளமாகச் சேர்க்க வேண்டுமென்ற ஆவலும், சேர்க்கும் ஆற்றலும் உள்ளவர்களுக்கு அதைச் செலவழிக்கும் ஆற்றல் மட்டும் குறைந்திருப்பதற்குக் காரணம் என்ன? என்று சிந்தித்துக் கொண்டே நடந்தான் அழகியநம்பி. ஊரிலிருந்து புறப்படும் போது பிரமநாயகத்துக்கும் சேர்த்துப் பணம் கொடுத்து அவன் தான் டிக்கெட் வாங்கியிருந்தான். முறைப்படி அவர்தான் அவனை வேலைக்கு அழைத்துக் கொண்டு போகிறவர். டிக்கெட் அவனுக்கும் சேர்த்து அவர் வாங்கியிருக்க வேண்டும். அவர் அப்படிச் செய்யாதது அவனுக்கு வியப்பை அளித்தது. 'தம்பீ! நீயே டிக்கெட் வாங்கி விட்டாயா? அடேடே! என்னைக் கேட்டிருக்கலாமே?' என்று மரியாதைக்காகவாவது உபசாரமாக இரண்டு வார்த்தைகள் சொல்லுவார் என்று எதிர்பார்த்தான். அந்தப் பேச்சையே எடுக்கவில்லை அவர். பசி வயிற்றைக் கிள்ளியது. உடனே ஏதாவது ஓட்டலில் நுழைந்து சிற்றுண்டி சாப்பிட வேண்டும் போலிருந்தது. பிரமநாயகம் என்ன சொல்லுவாரோ என்ற தயக்கத்தினால் பேசாமல் நடந்து கொண்டிருந்தான். துறைமுகத்துக்குப் போவதற்குள் அவராகவே ஏதாவதொரு ஓட்டலுக்குச் சிற்றுண்டி சாப்பிட அழைத்துச் செல்லுவார் என்ற எண்ணம் அவனுக்கு இருந்தது. ஆனால், அது வீணாயிற்று. துறைமுக வாசலில் சுங்கச்சாவடியை அடைகிறவரை பிரமநாயகம் சிற்றுண்டிப் பிரச்சினையைக் கிளப்பவே இல்லை. கூலிக்காரர்கள் சாமான்களைக் கீழே வைத்ததும், "தம்பீ! அழகு; என்னிடம் சில்லறையாக இல்லை. இவர்களுக்கு ஆளுக்கு எட்டணா கூலி கொடுத்து அனுப்பு..." என்றார் பிரமநாயகம். அவன் ஒரு கணம் திகைத்தான். பதில் பேசாமல் சட்டைப் பைக்குள் கைவிட்டு இரண்டு அரை ரூபாய் நாணயங்களை எடுத்துக் கூலிக்காரர்களுக்குக் கொடுத்து அவர்களை அனுப்பினான். பஸ் கட்டணம், சுமைகூலி எல்லாம் கொடுத்த பின் தன்னிடம் மீதமிருக்கும் ஆஸ்தியை எண்ணிப் பார்க்க வேண்டுமென்று தோன்றியது அவனுக்கு. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை. இந்த வலைதள பக்கத்தில் உள்ள தகவல்களை பதிப்பிக்கவோ, ஒலிபரப்பவோ, வெளியிடவோ அல்லது விநியோகிக்கவோ கூடாது. |
| இலக்கிய தகவல்கள் |
| தரவிறக்கம் |
பிற செய்திகள் |
ஆன்மீகம் |