http://www.chennailibrary.com



7. புதிய பூமி

     அழகியநம்பியின் கப்பல் பயணம் இன்பகரமாக இருந்தது. எடுத்த எடுப்பில் பிரமநாயகம் என்ற மனிதர் அவனைப் பொறுத்தவரையில் முழு ஏமாற்றமாக இருந்தார். இருந்தும் அவரை நம்பிக் கப்பலிலும் ஏறியாயிற்று. கடலைக் கடக்கவும் ஆரம்பித்தாயிற்று. கப்பலில் கவலையும், சிந்தனையுமாகக் கழிந்த அவன் நேரத்தையும் நினைவுகளையும் மாற்றி மகிழ்ச்சியில் மூழ்கச் செய்தனர் லில்லியும் மேரியும்.

     நிழலுக்காக மரத்தடியில் சோர்ந்து உட்கார்ந்தவனுக்கு அன்றலர்ந்த சண்பகப் பூக்கள் இரண்டும் மரத்திலிருந்து காலடியில் உதிர்ந்தது போல மேரியும், லில்லியும் அந்தக் கப்பற் பிரயாணத்தில் அவனுக்குப் பழக்கமாயினர்.

     கப்பல் கொழும்புத் துறைமுகத்தை அடைந்தபோது அழகியநம்பியிடம் அவர்கள் விடைபெற்றுக் கொண்டார்கள். அவனை விட்டுப் பிரிந்து செல்வதற்கே அவர்களுக்கு மனதில்லை. லில்லி ஏக்கம் நிறைந்த விழிகளால் அவனைப் பார்த்துக் கொண்டே பையைத் திறந்து முகவரி அச்சிடப்பெற்ற அட்டை ஒன்றை அவனிடம் நீட்டினாள். 'ஜே.ஸி.வோட் ஹவுஸ், வெள்ளவத்தை, அலெக்சாண்ட்ரியா வீதி' - என்று அவர்களுடைய தந்தையின் பெயரும், முகவரியும் அதில் இருந்தன.

     "மறந்துவிடாதீர்கள். கப்பல் பழக்கம் கப்பலோடு போயிற்று என்று நினைக்கக்கூடாது. நாம் அடிக்கடி சந்தித்துப் பழகவேண்டும். அளவளாவ வேண்டும்" - இந்தச் சொற்கள் லில்லியின் வாயிலிருந்து வெளிவந்த போது உணர்ச்சித்துடிப்பு - உள்ளத்தின் ஆழத்திலிருந்து சொற்கள் வெளிவரும் போது இருக்குமே; அந்தத் துடிப்பு இருந்தது. மேரி அன்போடு அவனருகே வந்து அவனுடைய இரண்டு கைகளையும் தன் பட்டுக் கரங்களால் பற்றிக் கொண்டாள். "மறந்து விட மாட்டீர்களே!" - அதற்குமேல் அவளுக்குச் சொற்களே வாயில் வரவில்லை. ரோஜா மொட்டுக்களைப் போன்ற அந்த யுவதியின் செவ்விதழ்கள் துடித்தன. நான்கு விழிகள் அவனுடைய இதய அந்தரங்கத்தையே துழாவுவது போல் அவன் முகத்தை ஊடுருவிப் பார்த்தன. "அதுசரி! உங்கள் விலாசத்தை எங்களுக்குத் தரவில்லையே; சொல்லுங்கள். எழுதிக்கொள்கிறேன்" - என்று பையைத் திறந்து டைரியையும் பேனாவையும் கையில் எடுத்துக்கொண்டாள் மேரி.

     "இப்போது நான் போய் இறங்கப் போகும் விலாசத்தை நானே இனிமேல்தான் தெரிந்து கொள்ளவேண்டும். நான் மறுமுறை உங்களைச் சந்திக்கும்போது என் விலாசத்தை உங்களுக்குச் சொல்கிறேன்" - என்றான் அழகியநம்பி.

     அவர்கள் இருவரும் விடைபெற்றுக் கொண்டு சென்றனர். அழகியநம்பி சிறிது நேரம் அவர்கள் சென்ற திசையையே பார்த்துக் கொண்டு நின்றான்.

     "நன்றாயிருக்கிறதே தம்பீ! யாரோ கப்பலில் வந்தவர்களோடு இவ்வளவு நேரம் பேசிக்கொண்டிருந்தால் உருப்பட்டாற்போலத்தான்" - குரலின் கடுமை தாங்கமுடியாமல் பின்னால் திரும்பிப் பார்த்தான். பிரமநாயகம் உலகத்திலுள்ள ஆத்திரம், கோபம், அத்தனையையும் தம் முகத்தில் தேக்கிக் கொண்டு நின்றார்.

     "ஒன்றுமில்லை! என்றாவது ஓய்வு இருக்கிறபோது ஒருநாள் அவர்களுடைய வீட்டுக்கு வரவேண்டும் என்றார்கள். 'சரி' என்று சொல்லி அனுப்பினேன்."

     "சரி! சரி! உனக்கும் வேறு வேலையில்லை. சாமான்களை எடுத்துக் கொண்டு கப்பலிலிருந்து இறங்குவோம்; வா! சுங்கச் சோதனையை முடித்துக் கொண்டு போவதற்குள் நேரமாகி விடும்" - என்று அதட்டினார் பிரமநாயகம்.

     "இதோ... சாமான்களை எடுத்துக் கொள்கிறேன். சுங்கச் சோதனைக்குப் போவோம்" - என்று சாமான்களை எடுத்துக் கொண்டு அவரைப் பின்பற்றிக் கப்பலிலிருந்து கீழே இறங்கினான் அழகியநம்பி. புதிய வாழ்க்கை, புதிய அனுபவம், நம்பிக்கை நிறைந்த புதிய எதிர்காலம் எல்லாம் ஒன்றுபட்ட புதிய பூமியில் தான் இறங்கிவிட்டது போன்ற உணர்ச்சி அழகியநம்பிக்கு ஏற்பட்டது. சுமைகள் அவனுடைய இரண்டு கைகளிலும் தோள்களிலும் மாத்திரம் இருக்கவில்லை. நெஞ்சிலும் இருந்தன. தோள்சுமை, கைச்சுமை இவைகளோடும், இவைகளைவிடக் கனமான நெஞ்சச் சுமைகளோடும் அந்தப் புதிய மண்ணில் - கடல் கடந்த இலங்கை மண்ணில் காலை வைத்தான் அவன்.

     "அப்பா தம்பீ; அழகு! காந்திமதி அம்மனையும் நெல்லையப்பரையும் மனத்திலே தியானித்துக் கொண்டு வலதுபாதத்தை முன்னால் கீழே வைத்து இறங்கு..." என்று முன்னால் போய்த் தொலைவில் நின்று கொண்டு கத்தினார் பிரமநாயகம்.



பிறந்த மண் : 1  2  3  4  5  6   7   8   9   10   11   12   13   14   15
16   17   18   19   20   21   22   23   24   25   26   27   28   29   30   31   32


இணைய பக்க முகவரி: http://www.chennailibrary.com/parthasarathy/piranthamann/piranthamann7.html

பதிப்புரிமை © 2006 சென்னைநூலகம்.காம்.
அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
இந்த வலைதள பக்கத்தில் உள்ள தகவல்களை பதிப்பிக்கவோ,
ஒலிபரப்பவோ, வெளியிடவோ அல்லது விநியோகிக்கவோ கூடாது.

 அச்சிட       விமர்சிக்க       விருப்ப தளமாக்க
       முகப்பு பக்கமாக்க



வருகைப் பதிவு (25-09-2006 முதல்)
ad
இலக்கிய தகவல்கள்
தரவிறக்கம்
பிற செய்திகள்
ஆன்மீகம்




தமிழ் யுனிகோடில் அமைந்த இணைய தளம். பதிப்புரிமை © 2006 சென்னைநூலகம்.காம். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.