http://www.chennailibrary.com





8. கடிதங்கள்

     அழகியநம்பி வியப்படைந்தான். அத்தனை ஆட்களை வைத்து வேலை வாங்கும் அவ்வளவு பெரிய கடைக்குப் பிரமநாயகம் சொந்தக்காரர் என்றறிந்தபோது அவனுக்கு வியப்பாகத்தான் இருந்தது. வாழை இலையிலிருந்து வானொலிப்பெட்டி வரை எல்லாப் பொருள்களும் கிடைக்கும்படியான ‘புரொவிஷன்' ஸ்டோராக அதை நடத்தி வந்தார் பிரமநாயகம். ‘பிரமநாயகம் புரொவிஷன் ஸ்டோர்ஸ்' - என்று அவருடைய பெயரைத் தாங்கி நின்ற அந்தக் கடை ஒரு நாளைக்கு இருபத்தையாயிரம் ரூபாய்களுக்குக் குறையாமல் வியாபாரம் செய்தது. இளைஞர்களும், வயதானவர்களுமாக நாற்பது பேருக்குக் குறையாமல் அந்தக் கடையில் வேலை பார்த்தனர்.

     பிரமநாயகத்தையும், அவர் பேச்சையும், பிரசித்தி பெற்ற அவருடைய கஞ்சத்தனத்தையும் பார்த்தவர்கள் அந்தப் பெரிய விற்பனை நிலையத்துக்கு அவர் தான் ஏகபோக உரிமையாளர் என்பதை நம்ப முடியாதுதான்.

     அந்தக் கடைக்குள்ளே அழகியநம்பி பின் தொடர அவர் நுழைந்ததும் அங்கிருந்த அத்தனை வேலையாட்களும் அவரவர்கள் இருப்பிடத்திலிருந்து எழுந்து அடக்க ஒடுக்கமாக வணக்கம் செலுத்திய காட்சி மறக்க முடியாதது.

     "ஐயா ஊரிலிருந்து வந்துவிட்டார்கள்" - என்று பயபக்தியோடு கூடிய ஒடுங்கிய குரல் அந்தப் பெரிய கட்டிடத்தில் மூலைக்கு மூலை எழுந்து பரவி அடங்கியதை அழகியநம்பி கவனித்தான். மரியாதை, பயம், அடக்க ஒடுக்கம், இவற்றை எல்லாம் பணத்தைச் சேர்த்து வைத்திருப்பவன் எவ்வளவு சுலபமாக அனுபவிக்க முடியும் என்று அவன் அங்கே கண்டான்.

     பிரமநாயகம் ஒற்றைக்கட்டை. தூத்துக்குடியில் வியாபாரம் முறிந்த அதே வருடம் அவருடைய மனைவியும் ஒரு மாதம் நோயோடு போராடி விட்டுப் போய்ச் சேர்ந்தாள். கடைகள் ஏலத்தில் போய் வியாபாரம் முறிந்த ஏக்கத்தில், மனைவி இறந்த துக்கத்திலும் விரக்தியடைந்திருந்த போது தான் நாலைந்து வருடங்களுக்கு முன் அக்கரைச் சீமையும் அதன் வியாபாரமும் அவரை ஆசைகாட்டி அழைத்தன. குழந்தை குட்டிகள், வீடு, வாசல், என்று ஏதாவது பந்த பாசங்கள் இருந்தால் விடாப்பிடியாக உள்ளூரில் ஒட்டிக் கொண்டு கிடக்க வேண்டியதுதான். ஆனால், அவர் அன்று தனி ஆள். 'இலாபமோ, நஷ்டமோ, நம்முடைய அதிர்ஷ்டத்தை இன்னொரு தேசத்தில் போய்ப் பரிசோதித்துப் பார்க்கலாம்' - என்று துணிவாக நாலைந்து வருடங்களுக்கு முன் கப்பலேறியவர் இன்று இலட்சாதிபதியாக விளங்குகிறார்.

     அவருக்குச் சொந்தமான கடைக்குள் நுழைந்தபோது பிரமநாயகத்துக்கு இந்தப் பழைய செய்திகளெல்லாம் நினைவுக்கு வந்தனவோ இல்லையோ; அழகியநம்பியின் நினைவுக்கு வந்தன. அவருடைய பழைய - புதிய நிலைகளை ஒப்பிட்டுப் பார்த்தான் அவன். ஒரே ஒரு சிறிய வேறுபாட்டைத் தவிர வேறு எதுவும் அவனுக்குத் தோன்றவில்லை.

     பிரமநாயகம் என்ற மனிதர் பேச்சில், எண்ணத்தில், செய்கையில், மனப்பான்மையில், எதிலும் நாலைந்து வருடங்களுக்கு முன்பு இருந்ததை விட இப்பொழுது மாறிவிடவில்லை. புதியது எதுவும் அவரிடம் சேர்ந்துவிடவில்லை. பழையது எதுவும் அவரிடமிருந்து போய்விடவில்லை. அவருக்காக அவருடைய இரும்புப் பெட்டியிலும் அவருடைய பெயரில் பாங்குகளிலும் சில இலட்சம் ரூபாய்கள் சேர்ந்து கிடந்தன. இந்த ஒரே ஒரு சிறிய மாறுதல் தான் பழைய தூத்துக்குடிப் பிரமநாயகத்திற்கும், புதிய கொழும்புப் பிரமநாயகத்துக்கும் நடுவில் இருந்தது. பணம் என்ற அந்த மூன்றெழுத்துப் பொருளுக்கு உலகம் செய்கிற மரியாதைதான், கைகட்டல், வாய் பொத்துதல், கும்பிடு, பயபக்தி - எல்லாம். அந்த மூன்றெழுத்துப் பொருள், குட்டிச் சுவருக்குப் பக்கத்திலே நிற்கும் வெட்டிக் கழுதையிடம் இருந்தால் கூட உலகம் இதையெல்லாம் செய்யும்.

     இப்படி இன்னும் பலப்பல ஆத்திரம் மிக்க சிந்தனைகள் அழகியநம்பியின் மனத்தில் அந்தக் கடைக்குள் நுழைந்து சுற்றிலும் பார்த்தபோது உண்டாயின.

     கடையின் பின்பகுதி விசாலமான வீடு போல அமைந்திருந்தது. பிரமநாயகம் அங்கேதான் குடியிருப்பு வைத்துக் கொண்டிருந்தார். சமையல்காரர், வேலையாள் - எல்லாம் நியமித்துக் கொண்டிருந்தார். குளிக்கக் குழாய், படுக்கை அறைகள், பூஜை செய்யவேண்டிய படங்களும் விக்கிரகங்களும் வைக்கப்பட்டிருந்த பூஜை அறை, ஒரே சமயத்தில் நாற்பது பேருக்கு உட்கார்ந்து சாப்பிடப் போதுமான கூடமும் சமையலறையும் எல்லாம் கடையின் பின்பகுதியிலேயே இருந்தன.

     கூலி ஆட்கள் சாமான்களை எல்லாம் அந்தப் பகுதிக்குள் கொண்டு வந்து வைத்தனர். அவர்களுக்குக் கூலி கொடுக்கக் கால் மணி நேரம் செலவழித்தார் பிரமநாயகம். சிங்களவர்களான அந்த முரட்டுக் கூலிகள் தங்கள் மொழியிலும், கொச்சைத் தமிழிலுமாகக் கூலி போதாதென்று கூச்சலிட்டனர். பிரமநாயகமும் பதிலுக்குக் கூச்சல் போட்டார். ஓரணா, இரண்டணா ஒட்டிக் கொடுப்பதற்குப் பதிலாக வீண் கூச்சலை வளர்த்தார். கூலிகளும் விடாக்கண்டர்களாக இருந்தனர். கடைசியில் கால்மணிநேரத் தகராறுக்குப் பின் அவர்கள் கேட்ட கூலியைக் கொடுத்தனுப்பினார்.



பிறந்த மண் : 1  2  3  4  5  6   7   8   9   10   11   12   13   14   15
16   17   18   19   20   21   22   23   24   25   26   27   28   29   30   31   32


இணைய பக்க முகவரி: http://www.chennailibrary.com/parthasarathy/piranthamann/piranthamann8.html

பதிப்புரிமை © 2006 சென்னைநூலகம்.காம்.
அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
இந்த வலைதள பக்கத்தில் உள்ள தகவல்களை பதிப்பிக்கவோ,
ஒலிபரப்பவோ, வெளியிடவோ அல்லது விநியோகிக்கவோ கூடாது.

 அச்சிட       விமர்சிக்க       விருப்ப தளமாக்க
       முகப்பு பக்கமாக்க




வருகைப் பதிவு (25-09-2006 முதல்)
ad
இலக்கிய தகவல்கள்
தரவிறக்கம்
பிற செய்திகள்
ஆன்மீகம்

தமிழ் யுனிகோடில் அமைந்த இணைய தளம். பதிப்புரிமை © 2006 சென்னைநூலகம்.காம். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.