http://www.chennailibrary.com



9. காலிமுகக் கடற்கரை

     அழகியநம்பி அந்தக் கடையில் என்ன வேலைகளைச் செய்ய வேண்டுமென்பதை அன்று மாலையே பிரமநாயகம் விளக்கிக் கூறிவிட்டார். தன் வேலையையும், அதை யாருக்குக் கீழிருந்து தான் செய்ய வேண்டுமென்பதையும் அறிந்தபோது முதலில் அவன் சிறிது கூச்சமும், தயக்கமும் அடைந்தான்.

     "காலையிலே உன்னை அழைத்துக் கொண்டு போய் அறிமுகப்படுத்தினேனே, அந்தப் பெண்ணோடு துணையாக இருந்து அலுவல்களைக் கவனித்துக் கொள்ளத்தான் உன்னை இங்கே அழைத்து வந்தேன். அவள் பெயர் பூர்ணா. சிங்கள இனத்தைச் சேர்ந்தவள் அவள். ஒரு மாதிரிப் பண்புடையவள். இந்தக் கடையில் சலுகைகளும், மற்றவர்களை அதிகாரம் செய்யும் உரிமையும் - என்னைக் காட்டிலும் அவளுக்குத்தான் அதிகம். தம்பீ அந்தப் பெண்ணுக்கு இவ்வளவு ஆதரவும், உரிமையும் இருப்பதற்குக் காரணம் உண்டு. முதல் முதலாக நான் இங்கே வந்தபோது ஒரு உறுதியும் எழுதி வாங்கிக் கொள்ளாமல் எனக்கு ஆயிரக்கணக்கில் கடன் கொடுத்துக் கடையும் வைத்துக் கொடுத்தது இந்தப் பூர்ணாவின் தகப்பனார் தான். நான் கடையில் இலாபம் கண்டு வியாபாரத்தில் முன்னுக்கு வந்ததும் அவருடைய கடனை அடைத்துவிட்டேன். ஆனால், அதே சமயம் எனக்குக் கடன் கொடுத்து உதவிய அந்தப் புண்ணியவாளர் நொடித்துப் போனார். வியாபார சம்பந்தமாக நான் செய்த சில இரகசிய வேலைகள் எல்லாம் அவருக்கு நன்றாகத் தெரியும். வியாபாரத்தில் முன்னுக்கு வரவேண்டுமானால் எவ்வளவோ சூழ்ச்சிகளைச் செய்து தானாக வேண்டியிருக்கிறது. ஆனால் பண்புள்ள அந்த மனிதர் என் சூழ்ச்சிகளைக் காட்டிக் கொடுப்பதாகப் பயமுறுத்தியோ, வேறு தந்திரத்தை மேற்கொண்டோ, என்னைக் கெடுக்க முன்வரவில்லை. தம்முடைய பெண் கல்லூரியில் படித்துப் பட்டம் பெற்று வீட்டில் சும்மா இருக்கிறாள் என்றும் அவளை நான் என் கடையில் கௌரவமான ஒரு வேலைக்கு அமர்த்திக் கொள்ள வேண்டுமென்றும் என்னிடம் வந்து வேண்டிக்கொண்டார். அந்த மனிதரிடம் நான் பட்டிருந்த நன்றிக் கடனைத் தணித்துக் கொள்வதற்காக அவர் பெண்ணை இந்தக் கடை சம்பந்தமான எல்லா அலுவல்களையும் மேற்பார்க்கவும், வியாபார சம்பந்தமான தபால் போக்குவரவு, பாங்குக் கணக்கு முதலியவற்றைக் கவனித்துக் கொள்ளவும் நியமித்தேன். மறு வருஷமே அந்தப் பெண்ணின் தகப்பனார் எதிர்பாராதவிதமாகத் திடீரென்று காலமாகிவிட்டார். அவருக்கு அவள் ஒரே பெண்தான்.

     "தகப்பனார் இருக்கிறவரை கடையின் முதலாளியாகிய எனக்கு அடங்கி ஒடுங்கி நடந்து கொண்டிருந்த அவள் அதன் பிறகு தனிக் கௌரவமும், மமதையும் கொண்டாடத் தொடங்கி விட்டாள். சாதாரணப் பதவியை 'ஸ்டோர் செகரெட்டரி' என்று தானாகவே மாற்றிக்கொண்டு தனி அந்தஸ்தும், அதிகாரமும் கொண்டாடத் தொடங்கி விட்டாள். நான் சொல்லவும் முடியாமல் மறைக்கவும் முடியாமல் சிக்கிக்கொண்டு தவிக்கிறேன். வியாபார இரகசியங்களும், சூழ்ச்சிகளும் தெரிந்த ஒருத்தியை வெளியே அனுப்பிவிட்டால் இன்னொரு நாட்டிலிருந்து இங்கே வந்து வியாபாரத்தில் முன்னுக்கு வந்திருக்கிற எனக்கு எவ்வளவோ தொல்லைகள் ஏற்படும். அவள் என்ன செய்தாலும் சரி என்று பேசாமல் பொறுமையோடு நாட்களைக் கடத்திக் கொண்டு வருகிறேன். 'நரி, இடம் போனாலென்ன? வலம் போனாலென்ன? மேலே விழுந்து கடிக்காமல் போனால் சரி' என்று அவள் போக்கில் விட்டுவிட்டேன். ஆனால், இனியும் தொடர்ந்து அவளை அப்படி விட்டுவிட்டுப் பேசாமல் இருந்து கொண்டிருப்பதில் பயனில்லை. வரவர அவள் போக்கைக் கட்டுப்படுத்தவே முடிவதில்லை. அது மட்டுமில்லை; என் போக்கைக்கூடக் கட்டுப்படுத்துகிற அளவுக்கு அவள் வளர்ந்து விட்டாள். இந்தச் சில மாதங்களாகவே என் மனத்தில் அவளைப் பற்றிய குழப்பம் தான் தம்பீ! ஊருக்கு வந்ததும் உன்னைச் சந்தித்ததும், இங்கே என்னோடு அழைத்துக் கொண்டு வந்ததும் என்ன நோக்கத்திற்காக என்பது உனக்கு இப்போது ஒருவாறு புரிந்திருக்கும். திடீரென்று அவளை வெளியே போகச் சொல்லிவிட்டு உன்னை அந்த ஸ்தானத்தில் உட்கார்த்திவிடுவேன். ஆனால் அப்படிச் செய்வது சாமர்த்தியமான காரியமில்லை. உனக்கு, என்னுடைய வியாபாரத்துக்கு, எனக்கு, எல்லாவற்றுக்குமே விபரீதமான விளைவுகளைக் கண்மூடித் திறப்பதற்குள் அடுக்கடுக்காக உண்டாக்கி விடுவாள் அவள். அவ்வளவிற்கு அவள் சாமர்த்தியக்காரி.



பிறந்த மண் : 1  2  3  4  5  6   7   8   9   10   11   12   13   14   15
16   17   18   19   20   21   22   23   24   25   26   27   28   29   30   31   32


இணைய பக்க முகவரி: http://www.chennailibrary.com/parthasarathy/piranthamann/piranthamann9.html

பதிப்புரிமை © 2006 சென்னைநூலகம்.காம்.
அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
இந்த வலைதள பக்கத்தில் உள்ள தகவல்களை பதிப்பிக்கவோ,
ஒலிபரப்பவோ, வெளியிடவோ அல்லது விநியோகிக்கவோ கூடாது.

 அச்சிட       விமர்சிக்க       விருப்ப தளமாக்க
       முகப்பு பக்கமாக்க



வருகைப் பதிவு (25-09-2006 முதல்)
ad
இலக்கிய தகவல்கள்
தரவிறக்கம்
பிற செய்திகள்
ஆன்மீகம்




தமிழ் யுனிகோடில் அமைந்த இணைய தளம். பதிப்புரிமை © 2006 சென்னைநூலகம்.காம். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.