6 தலைமையாசிரியர் பதற்றமடைந்ததுபோல் எதுவும் அப்போது அங்கு நடந்து விடவில்லை. காரணம் கவுண்டர் தமிழாசிரியர் சுதர்சனனை அதற்குமுன் பார்த்ததில்லை. அவர் அப்போதிருந்த ஆத்திர மனநிலையில், “இவர்தான் நீங்கள் தேடிக்கொண்டிருக்கும் புதுத் தமிழ் வாத்தியார் சுதர்சனன்” - என்று அவருக்குச் சுதர்சனனை அறிமுகப் படுத்துகிற துணிவும் அங்கிருந்த யாருக்கும் கிடையாது. இந்தச் சூழ்நிலை தலைமையாசிரியர் வாசுதேவனுக்கு வசதியாகப் போயிற்று. எதுவுமே நடக்காதது போல், “வாங்க போகலாம்” - என்று கவுண்டரை அவரது கார் வரை அழைத்துச் சென்று கதவை கூடத் தன் கையாலேயே திறந்துவிட்டு உள்ளே ஏறிக்கொள்ளச் செய்தபின் திரும்பத் திரும்ப நாலைந்து கூழைக் கும்பிடுகள் போட்டுவிட்டு வந்தார் தலைமையாசிரியர். கவுண்டரின் கார் புறப்பட்டுப் போன பின்புதான் தலைமையாசிரியக்கு நிம்மதியாக மூச்சுவிட வந்தது. அப்போது சுதர்சனனுக்கும் அங்கு நடந்து கொண்டிருந்தது எதுவும் தெரியாத காரணத்தால் ரைட்டர் மேஜை மேல் இருந்த சாக்பீஸ் பெட்டியிலிருந்து ஒரு முழு நீள சாக்பீஸை எடுத்துக் கொண்டு வந்த சுவடு தெரியாமல் திரும்பி வகுப்புக்குப் போய் விட்டான். அங்கு அப்போது எல்லாரும் ஏன் தன்னையே வெறித்து வெறித்துப் பார்க்கிறார்கள் என்பது மட்டும்தான் அவனுக்குப் புரியாமல் இருந்தது. ரைட்டர், வராந்தாவில் நின்ற தலைமையாசிரியர், காரில் வந்திருந்த புதிய மீசைக்காரர் எல்லாருமே சாக்பீஸ் எடுக்கப்போன தன்னைப் பார்த்து ஏன் அப்படி முறைத்தார்கள் என்பது புரியாமல் சுதர்சனன் நெடுநேரம் குழம்பினான். சுதர்சனன் நாத்திகனாயிருந்தவன். ஆனால் நேர்மையான, சுயமரியாதைக்காரனாக அவன் என்றும் இருந்திருக்கிறான். பொய் சொன்னதில்லை. குடித்ததில்லை. புகை பிடித்ததில்லை. யாரையும் ஏமாற்றியதில்லை. பேராசைப்பட்டதில்லை. தன்னளவு நேர்மையானவர்கள் மிகச் சிலரைத்தான் அவன் அந்த இயக்கத்தில் கண்டிருந்தான். அந்தச் சிலருடைய எண்ணிக்கை கூடப் பின்னால் வர வர மிகவும் குறைந்து போயிற்று. நாத்திகனாயிருந்து கபடமும், வஞ்சகமும் அற்றவனாக இருந்த அவனுக்கு ஆத்திகர்களாயிருந்தும் வஞ்சகம், கபடம், சூது, பொய், பேராசை இவற்றால் ஒவ்வொரு நேரத்தில் ஒவ்வொரு விதமாக முகம் காட்டும் பலரைப் பார்த்து வருத்தமாயிருந்தது. சமூகத்தில் படித்தவர்களும், மேல் மட்டத்தாரும் தங்கள் சுயரூபம் பிறருக்குத் தெரியவிடாமல் வேஷம் போட்டுக் கொண்டு நிற்கிற பல சந்தர்ப்பங்களை அவன் கண்கூடாகக் கண்டிருக்கிறான். தலைமையாசிரியர் வாசுதேவன், அருள்நெறி ஆனந்த மூர்த்தி, ஆதர்சபுரம் இளைய ஜமீன்தார் எல்லாருக்கும் ஒன்றிற்கு மேற்பட்ட பல முகங்கள் இருப்பதை அவன் கண்டிருந்தான். ஆனால் அவன் அப்படி இருக்க முடியவில்லை. நினைத்ததைப் பேசினான். பேசியதை ஒளிவு மறைவோடு பேச ஒரு போதும் முயன்றதில்லை. சொல்லுக்கும் செயலுக்கும் இடை வெளிவிட அவன் அனுமதித்ததில்லை. நேர்மையான நாத்தி கனையும் அயோக்கியனான ஆத்திகனையும் ஒப்பிட்டுப் பார்த்தால்கூட அயோக்கியனான ஓர் ஆத்திகனுக்கே மதிப்பு தருகிற வகையில்தான் இன்றைய சமூக அமைப்பு இருந்தது. தலைமையாசிரியர் தன்னை விடாப்பிடியாகத் துன்புறுத்துவதற்கு அருள் நெறி ஆனந்தமூர்த்தியின் தூண்டுதலும் காரணமாக இருக்குமோ என்று சுதர்சனன் சந்தேகப்பட்டான். தலைமையாசிரியரே தன்னைப் பற்றிப் பிறரிடம் தான் இல்லாத வேளைகளில் எப்படித் துஷ்பிராசாரங்கள் செய்து வருகிறார் என்பது பற்றி அவன் பலரிடம் கேள்விப் பட்டிருந்தான். ஆனால் அவற்றை முழுமையாக நம்பவில்லை.
“அவன் திருவையாற்றிலே படிக்கறச்சேயே கருப்புச் சட்டையை மாட்டிண்டு பிள்ளையார் சிலையை உடைச்சவன் காணும்” என்று ஊரில் அவனைப் பற்றிக் கொச்சையாக ஒரு பிரச்சாரமே செய்திருந்தார் அவர். அவனைப் பற்றி இந்த விதமாக முன்கூட்டியே எதிர்மறையாக ஓர் அபிப்பிராயத்தை உருவாக்கி அவன் பெயரைக் கெடுத்து விடுவதற்கு முயன்று கொண்டிருந்தார் தலைமையாசிரியர்.
அவர் தன்னிடம் கொடுத்திருந்த மெமோவுக்கு, மேலாக நிதானமாகவும் தொனியில் அழுத்தமாகவும் பதில் எழுதிக் கொண்டிருந்தான் சுதர்சனன். “பள்ளிக்கூடத்துக் காம்பவுண்டுக்கு வெளியே நீங்க என்னென்ன செய்றீங்கன்னு நான் பார்க்க மாட்டேன். நான் என்னென்ன செய்யிறேன்னு நீங்களும் பார்க்கக் கூடாது.” “இந்த விஷயத்திலே அப்படி நான் விட்டுவிட முடியாது மிஸ்டர் சுதர்சனன். கவுண்டர் வந்து கன்னா பின்னான்னு இரைஞ்சிட்டுப் போறாரு. நம்ம ஸ்கூல் மேனேஜ்மெண்டிலேயும் கவுண்டருக்கு நல்ல செல்வாக்கு உண்டு. அவர் குடும்ப விஷயத்திலே அநாவசியமாத் தலையிடறது உங்களுக்கும் நல்லதில்லே.” “ஒரு திருமணத்துக்குத் தலைமை வகிச்சா அது எப்படிக் குடும்ப விஷயமாயிடும்?” “கவுண்டர் சொத்துக்காரர், அவருக்கு ஒரே மகன். சொத்தை அபகரிக்க யாரோ சீர்திருத்தக் கல்யாணம்னு ஸ்டண்ட் பண்றாங்க.” “பன்னீர்செல்வம் பொய் சொல்ல மாட்டான். கவுண்டர் மகன் அந்த ஹரிஜன பொண்ணுகிட்ட ரொம்ப நாளாப் பழகிட்டிருக்கான்னும் அதை முறைப்படுத்தத்தான் இந்தத் திருமணம்னும் அவன் சொன்னது பொய்யாயிருக்காது.” “அப்படியே அந்தப் பொண்ணுகிட்டக் கவுண்டர் மகன் பழகிண்டிருந்தாலும் அதை எப்படிக் காதும் காதும் வைத்தாப்போலக் கமுக்கமா ஸெட்டில் பண்ணணும்னு கவுண்டருக்குத் தெரியும்.” “ஒரு பெண்ணை ஏமாத்திக் கெடுத்துப் போட்டு பணக் கொழுப்பிலே ஸெட்டில் பண்ணிடலாம்னு நெனைக்கிறது. இந்தக் காலத்துலே பலிக்காது சார்!” “எல்லாரோட நியாயத்துக்கும் நீங்கதான் மொத்தமாக் குத்தகை எடுத்திருக்கேளா என்ன?” “நீங்க இப்பிடிக் கேட்டீங்கன்னா எல்லாரோட தவறு களுக்கும் வக்காலத்து வாங்க நீங்க குத்தகை எடுத்திருக்கீங்களோன்னு நான் பதிலுக்குக் கேட்க வேண்டியதுதான்.” தலைமையாசிரியர் கோபத்தோடு அவனை உற்றுப் பார்த்தார், அவன் அசையவில்லை. ஓர் ஐந்து நிமிஷம் இருவருக்கு இடையே விரும்பத் தகாததொரு மெளனம் நீடித்தது. “இது ஆஸ்திகாள் நிறைஞ்ச ஊர்! உங்களை மாதிரி சு.ம. ஆட்களை எல்லாம் கட்டி மேய்க்கிறது என்னாலே முடியாத காரியம்...” “நீங்கள் கட்டி மேய்ப்பதற்கு நான் ஒன்றும் ஆடு மாடு இல்லை சார்...” “கவுண்டர் விஷயத்திலே ஜாக்கிரதையா நடந்துக்குங்கோ. இல்லாட்டா ரொம்பக் கேவலமாப் போயிடும். நீங்க இந்த ஸ்கூல்லே வேலை பார்க்கிறதனாலே உங்களை நான் எச்சரிக்கக் கடமைப்பட்டிருக்கேன்.” “ரொம்ப நன்றி சார்...” என்று எழுந்து வெளியேறி னான் சுதர்சனன். உண்மையில் பார்க்கப் போனால் தனக்கு அறிமுகமில்லாத ஒரு நபர் சம்பந்தப்பட்ட அந்தத் திருமணத்திற்குத் தலைமை வகிப்பதில் சுதர்சனனுக்கு அப்படி ஒன்றும் பிரமாத ஈடுபாடு இல்லை. ஆனால் தலைமையாசிரியர் அதைப் பெரிதுபடுத்தியதன் காரணமாகவே அவனுக்கு அதில் இப்போது அக்கறையும், ஈடுபாடும் உண்டாகியிருந்தன. அவர் பன்னீர்செல்வத்தை ஏதோ நாலாந்தரமான சமூக விரோதி என்பது போல் பேசிய ஏளனப் பேச்சே அவன் மேல் சுதர்சனன் அக்கறை காட்டக் காரணமாயிருந்தது. தான் எப்போது எப்படி நடந்து கொள்ள வேண்டு மென்று பிறர் அதிகாரம் செய்யத் தொடங்கினால் அப்போது தான் அப்படி நடந்து கொள்ளக் கூடாது என்ற உணர்வு ஒவ்வொரு சுயமரியாதை உள்ள மனிதனுக்கும் உண்டாகிறது. தான் மட்டும் சட்டங்களுக்குள் அடைக்கப்படுவதை யாரும் விரும்புவதில்லை. சுதர்சனன் எந்த மூலையிலிருந்து வாழ்வைத் தொடங் கினானோ அதை நினைவூட்டுவதன் மூலமே அவனை மறுபடி அங்கே தள்ளி விட்டுவிட முயன்று கொண்டிருந்தார் தலைமையாசிரியர் வாசுதேவன். பிச்சாண்டியா பிள்ளை வயது மூத்த தலைமைத் தமிழாசிரியராக இருந்தும் தம்மிடம் காட்டுகிற பணிவையும் விநயத்தையும் முந்தாநாள் வேலைக்கு வந்த புதிய இளம் வயதுத் தமிழாசிரியனான சுதர்சனன் காட்ட வில்லையே என்பது தான் தலைமையாசிரியரின் எரிச்சலுக்கு எல்லாம் காரணமாக இருந்தது. இப்படி ஒரு வெறுப்புக் கால் கொண்டதன் விளைவுகளையும் அங்கங்கே அவர் காண்பித்துக் கொண்டிருந் தார். திருக்குறள் மன்ற ஆண்டு விழா முடிந்த சூட்டோடு ஒருநாள் மாலை அருள்நெறி ஆனந்தமூர்த்தி தலைமையாசிரியர் வாசுதேவனைத் தம்முடைய பங்களாவிற்குக் கூப்பிட்டனுப்பியிருந்தார். வாசுதேவனுக்கும் பெரிய மனிதர்கள், பணக்காரர்கள், பிரமுகர்களைப் போய்ச் சந்திப்பதிலும் அவர்களை முகஸ்துதி செய்வதிலும் ஆசை அதிகம், ஆனந்தமூர்த்தி கூப்பிட்டனுப்பிய தினத்தன்றும் வாசுதேவன் அவருடைய பங்களாவுக்குப் போயிருந்தார். “என்ன ஐயங்கார் சுவாமிகளே! அந்தப் புதுப் பையன் -தமிழ்ப் பண்டிட்தானே அவன்; இப்பிடி எல்லாம் தாறுமாறா மேடையிலே பேசறானே? ஏற்கெனவே இது அக்ரிகல்சுரல் சென்டர். நிலத்திலே எஸ்டேட்டுகளிலே வேலை செய்யற ஆட்களுக்கும் மிராசுதார்களுக்கும், எஸ்டேட்டு ஓனர்களுக்கும் ஏகப்பட்ட தகராறு இருக்கு. இவன் வேற வந்து புதுசு புதுசா எதை எதையோ கிளப்பிடுவான் போல இருக்கே? இப்படி ஆளுக்கெல்லாம் ஸ்கூல்லே அப்பாயிண்ட் மெண்ட் கொடுத்தால் ஊரே கெட்டுப் போகுமே?” “நானாகவா அப்பாயிண்ட் பண்ணிட முடியும்? நான் வெறும் எக்ஸ்-அபீஷியோ மட்டும் தானே? எல்லாரும் சேர்ந்து சரீன்னு சொன்னா நானும் சரீன்னுட்டுப் போறேன்...” “பூனையை மடியிலே கட்டிகிட்டுச் சகுனம் பார்த்தாப்பிலே இப்பிடி ஆளை எல்லாம் உள்ளே விட்டுட்டா ஊர் உருப்பட்டாப்லதான்.” “வந்திருக்கிறவன் சரியான சுயமரியாதைக் கட்சிக்காரன். திருவையாற்றிலே படிக்கறப்போ கருப்புச் சட்டை போட்டுண்டுதான் கிளாசுக்கே வருவானாம். பிள்ளையார் சிலை உடைப்பு, இந்தி அழிப்பு எல்லாத்திலியும் கலந்துண்டிருக்கான். அவன் வர்ரதும் போறதும் பேசறதும் கொள்றதும் ஒண்ணும் எனக்குக் கட்டோட பிடிக்கலே... அடக்க ஒடுக்கமே கிடையாது, விறைச்சது விறைச்சாப்லே வந்து நின்னு பேசறான். விநயமே கிடையாது. பணிவும் இல்லே, ஹெட் ஆஃப் தி இன்ஸ்டிடியூஷனுக்கு மரியாதை, கிடையாது...” “இவ்வளவு சொல்றீரே. அந்த ஆளை ஏன் இன்னும் வச்சுக்கிட்டிருக்கீரு? டிஸ்மிஸ் பண்ணி அனுப்பறதுதானே?” “அப்படி எல்லாம் உடனே பண்ணிட முடியுமா? அதுக் குன்னு ரூல்ஸ் எல்லாம் இருக்கே?” “நான் வேணும்னா ஜமீன்தாரிட்ட சொல்றேன். நம்பிக்கையில்லாதவன், புரட்சிக்காரன்லாம் நம்மூருக்கு வேண்டாம். ஊர் கெட்டுப் போகும்., படிக்கிற பசங்க உருப்படாமப் போயிடுவாங்க. ஜமீன்தாருக்கும் இதெல்லாம் பிடிக்காது. ஏற்கெனவே அவன் அன்னிக்கித் திருக்குறள் மன்றத்திலே பேசினப்பவே ஜமீன்தாருக்குப் பிடிக்கலே...” “நானும் அவனுக்கு ஒரு மெமோ கொடுத்திருக்கேன். இன்னும் என்னவாவது செய்ய முடியுமான்னும் யோசிச்சுப் பார்த்துண்டிருக்கேன்...” “என்ன சுவாமிகளே! எத்தனையோ தெய்வ பக்தியுள்ள நல்ல மனுஷாள்ளாம் இருக்கறப்ப போயும் போயும் ஒரு சூனாமானாதானா உமக்குக் கிடைச்சான்?” “நான் என்ன பண்றது? ‘அப்பாயிண்ட்மெண்ட்’ கமிட்டி யாருக்கு ஆர்டர் கொடுக்கிறதோ அவனை உள்ளே வேலைக்குச் சேர்த்துக்கறது என் கடமை. அவ்வளவு தான்...” “பிச்சாண்டியா பிள்ளை மாதிரி நல்ல விதமா யாராவது கிடைச்சால் போட்டிருக்கலாமே?” “அதெல்லாம் இந்தக் காலத்திலே அப்படி ஆள் கிடைக்கிறதே கஷ்டம். ஹெட்மாஸ்டருக்குத் தலைவலியா வந்து சேர்ர தமிழ்ப் பண்டிட்ஸ்தான் இப்போ அதிகம்...” இதற்கப்புறம் வேறு ஊர் விவகாரங்களைப் பேசிக் கொண்டிருந்து விட்டுத் தலைமையாசிரியர் வாசுதேவன் ஆனந்தமூர்த்தியிடம் விடைபெற்றுக் கொண்டு புறப்பட்டார். திரும்பி வருகிற வழியில் சுதர்சனன் குடியிருக்க வாடகை வீடு விட்டிருந்த கன்னையாப் பத்தர் எதிர்ப்படவே அவரிடமும் சுதர்சனனைப் பற்றித் தன் மனத்துக்குத் திருப்தி ஏற்படுகிற வரை கோள் சொன்னார் வாசுதேவன். “என்னமோ ஜாக்கிரதையாய் பார்த்துக்கணும்! ஆள் ஒரு மாதிரி. ரொம்பத் திமிர் பிடிச்சவன், ஸ்கூல்லேயே இந்த ஆளை வச்சு வேலை வாங்கறதுக்கு நான் படாத பாடு பட வேண்டியிருக்கு. கடவுள் நம்பிக்கை இல்லே. நல்லது கெட்டது மேலே நம்பிக்கை இல்லே. பெரியவங்க மேலே மரியாதை கிடையாது.” “இதெல்லாம் முன் கூட்டியே தெரிஞ்சிருந்தா நான் என் விட்டிலே இந்த ஆளை வாடகைக்கு வச்சிருக்க மாட்டேன் சாமி!” “ஏதோ தெரியாத்தனமா வச்சிட்டீங்க. உடனே என்ன பண்ண முடியும்? முள்ளுமேலே விழுந்த வேஷ்டியை மெல்ல மெல்லத்தானே எடுக்கணும்?” தலைமையாசிரியர் சுதர்சனனை எதிர்த்து ஒரு ‘காம்பெய்ன்’ தொடங்கி நடத்திக் கொண்டிருந்தார். இரகசியமாக அது சகலமுனைகளிலும் நடந்து கொண்டிருந்தது. ஆனால் சுதர்சனனின் தரப்பில் இப்படி எதுவும் நடக்க வில்லை. தலைமையாசிரியரை எதிர்த்து அவருடைய சாதி, குலம், கோத்திரத்தைச் சொல்லித் திட்டிய சிலரிடம் கூடச் சுதர்சனன் அந்தப் பேச்சை ஊக்கப்படுத்திப் பதில் சொல்லவில்லை. “உலகத்திலே பிறந்திருக்கிற எல்லாருக்கும், ஏதாச்சும் ஒரு சாதி குலம் கோத்திரம் இருக்கும். அது அவங்க தப்பு இல்லே, அவங்க முன்னோர்கள் தப்பு. மனுஷன் நல்லவனா கெட்டவனா, யோக்கியவனா - அயோக்கியனான்னு பாருங்க. ஒழுக்கமுள்ளவனா இல்லையான்னு பாருங்க. சாதியைச் சொல்லி யாரையும் திட்டாதீங்க. நானே ஒரு காலத்திலே அப்படியெல்லாம் திட்டியிருக்கேன். இப்போ அது தப்புன்னு தெரியுது. நீங்களும் அந்தத் தப்பைச் செய்துடாதீங்க” என்று சுதர்சனன் தன்னிடம் தலைமையாசிரியரைப் பற்றிப் பேசியவர்களிடம் கண்டித்து அனுப்பியிருந்தான். ஒரு நாத்திகன் ஆத்திகனை விட நேரானவனாகவும் இருக்க முடியும் என்பதை நிரூபித்துக் கொண்டிருந்தான் சுதர்சனன். ஆனால் தலைமையாசிரியரோ அதற்கு நேர்மாறாக இயங்கி அவனைப் பற்றியே துஷ்பிரசாரம் செய்து கொண்டிருந்தார். முதலில் இது சுதர்சனனுக்குத் தெரியாது என்றாலும் நாளடைவில் கணித ஆசிரியர் புலிக்குட்டி சீநிவாசராவ் மூலம் சில விஷயங்கள் அவனுக்குத் தெரியத் தொடங்கின. ஒருநாள் ஸ்டாஃப் ரூமில் புலிக்குட்டி சீநிவாசராவுக்கும் சுதர்சனனுக்கும் சேர்ந்தாற் போல் ஓய்வு நேரம் வந்தபோது அவர்கள் இருவரும் ஒன்றாக அமர்ந்திருக்க நேர்ந்தது. அப்போது புலிக்குட்டி மெதுவாக ஆரம்பித்தார். “நீங்க கொஞ்சம் ஜாக்கிரதையா இருக்கணும் பண்டிட் சார்! ஹெச்.எம். உமக்குக் குழி பறிக்க ஆரம்பிச்சாச்சு...” “நான் ஒண்ணும் தப்பா நடந்துக்கலையே, ஸ்கூலுக்கு லேட்டா வர்ரது கிடையாது. பாடங்களில் எதையும் குறை வைக்கலே....” “என்னமோ நீர் வந்த நாளிலே இருந்து உம்மைக் கண்டால் அவருக்கு ஆகலே.” “நமக்குக் காரணம் புரியாமலும் தெரியாமலும் நம்ம மேலே ஒருத்தருக்கு ஏற்படற வெறுப்புக்கு நாம் என்ன செய்ய முடியும் சார்?” “ஆனாலும் உம்மை ஹெச். எம். ஒண்ணும் பண்ணிட முடியாது. உமக்கு உம்ம ‘கம்யூனிட்டி பேக்கிங்’ இருக்கிற வரை யாரும் எதுவும் அசைக்க முடியாது....” “அப்படி ஒண்ணு இருக்குங்கறதே எனக்குத் தெரியாது சார்! நான் ஒழுங்கா நடந்துக்கலேன்னாத்தான் அதெல்லாம் எனக்குத் தேவை. நான் ஒழுங்கா இருக்கறப்போ ‘கம்யூனிட்டி பேக்கிங்’ - என்கிற லேபிள் எனக்கு எதுக்கு?” “நீங்கள் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் சமயா சமயங்களிலே அது எங்களுக்குக் கிடைக்கத்தான் செய்யும்.” “இன்றைய சமூக அமைப்பில் ஜாதிகளினால், வருகிற நன்மை தீமைகளை லாப - நஷ்டங்களை விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் ஒவ்வொரு மனிதனும் அவற்றை அடைந்து தான் தீர வேண்டும் போலிருக்கிறது. ஆனால் எனக்குத் தெரிந்தவரை இனி வருகிற சமூக அமைப்பில் ஏழை - பணக்காரன், உழைக்கிறவன் - உழைக்காதவன் என்று இந்த விதமாகத்தான் ஜாதிகள் கணக்கிடப்படும். இனி ஜாதிகளுக்குப் பதில் வர்க்கங்கள் இருக்கும்...” “பார்த்தீங்களா? பார்த்தீங்களா? ஹெச்.எம். உம்மைப் பார்த்துப் பயப்படறத்துக்கே நீர் அடிக்கடி இப்படி எல்லாம் பேசறது தான் காரணம். ஒரு தீவிர கம்யூனிஸ்ட் மாதிரிப் பேசறீரு.” “நியாயம் பேசினால் உடனே அதுக்கு ஏதாவது பேர் சூட்டிப்பிடறீங்க. எதையும் பேசாமல் ஊமையாகவா இருக்க முடியும்?” “சமயா சமயங்களிலே அப்படி இருந்தால்தான் இந்தக் காலத்திலே பிழைக்கலாம் போலிருக்கு...” “என்னாலே அப்படிப் பிழைக்க முடியாது சார்! அப்படித்தான் பிழைக்கணும்னு நிர்ப்பந்தம் வந்தால் நான் வேலையை விட்டுவிடுவேன்.” தலைமையாசிரியரின் தொடர்ந்த உபத்திரவங்களைக் கண்டு இதை மீண்டும் நினைவு கூர்ந்தான் சுதர்சனன். அதனால் அவன் முரண்டுகளும் அதிகமாயின. சிரமங்களும் அதிகமாயின. கவுண்டர் மகனுக்குக் கலப்புத் திருமண ஏற்பாடு செய்திருந்த தினத்தன்று மகனை வீட்டில் ஓர் அறையில் அடைத்துப் பூட்டிவிட்டார் கவுண்டர். திருமண நேரம் நெருங்கவே பன்னீர்செல்வமும், சுதர்சனமும் மணமகனைத் தேடிக் கவுண்டர் வீட்டுக்குச் சென்றார்கள். கவுண்டர் வக்கில், போலீஸ் இன்ஸ்பெக்டர் எல்லாரையும் கலந்து பேசி ஏற்கெனவே திட்டமிட்டு வைத்திருந்தபடி தம் விட்டுக் காம்பவுண்டுக்குள் நுழைந்த பன்னிர்செல்வத்தையும், சுதர்சனனையும் ‘டிரஸ் பாஸ்’ என்ற குற்றத்தைச் சாட்டிக் கைது செய்யும்படி பண்ணி விட்டார். சுதர்சனனோ பன்னீர்செல்வமோ இதை எதிர்பார்க்கவில்லை. பணமும் செல்வாக்கும் எதை எதை எல்லாம் சாதிக்க முடியும், எப்படி எப்படி எல்லாம் தங்கள் எதிரிகளை அலைக்கழிக்க முடியும் என்பது அன்று சுதர்சனனுக்குப் புரிந்தது. மாலைக்குள் இயக்கப் பெரிய மனிதர்கள் சிலர் வந்து ஜாமீனில் சுதர்சனனையும் பன்னீர்செல்வத்தையும் விடுவித்து விட்டார்கள் என்றாலும் நடத்தவிருந்த கலப்புத் திருமணத்தை நடத்துவதற்கு முடியாமல் அது நின்று போய் விட்டது. பொய்ம் முகங்கள் : நூல் முகம்
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
15
16
17
18
19
20
21
22
23
24
25
26
27
28
29
30
31
32
|
புரவலர் / உறுப்பினர்களுக்கான நூல்கள் பிடிஃஎப் (PDF) வடிவில் | |
எண் |
நூல் |
1 | |
2 | |
3 | |
4 | |
5 | |
6 | |
7 | |
8 | |
9 | |
10 | |
11 | |
12 | |
13 | |
14 | |
15 | |
16 | |
17 | |
18 | |
19 | |
20 | |
21 | |
22 | |
23 | |
24 | |
25 | |
26 | |
27 | |
28 | |
29 | |
30 | |
31 | |
32 | |
33 | |
34 | |
35 | |
36 | |
37 | |
38 | |
39 | |
40 | |
41 | |
42 | |
43 | |
44 | |
45 | |
46 | |
47 | |
48 | |
49 | |
50 | |
51 | |
52 | |
53 | |
54 | |
55 | |
56 | |
57 | |
58 | |
59 | |
60 | |
61 | |
62 | |
63 | |
64 | |
65 | |
66 | |
67 | |
68 | |
69 | |
70 | |
71 | |
72 | |
73 | |
74 | |
75 | |
76 | |
77 | |
78 | |
79 | |
80 | |
81 | |
82 | |
83 | |
84 | |
85 | |
86 | |
87 | |
88 | |
89 | |
90 | |
91 | |
92 | |
93 | |
94 | |
95 | |
96 | |
97 | |
98 | |
99 | |
100 | |
101 | |
102 | |
103 | |
104 | |
105 | |
106 | |
107 | |
108 | |
109 | |
110 | |
111 | |
112 | |
113 | |
114 | |
115 | |
116 | |
117 | |
118 | |
119 | |
120 | |
121 | |
122 | |
123 | |
124 | |
125 | |
126 | |
127 | |
128 | |
129 | |
130 | |
131 | |
132 | |
133 | |
134 | |
135 | |
136 | |
137 | |
138 | |
139 | |
140 | |
141 | |
142 | |
143 | |
144 | |
145 | |
146 | |
147 | |
148 | |
149 | |
150 | |
151 | |
152 | |
153 | |
154 | |
155 | |
156 | |
157 | |
158 | |
159 | |
160 | |
161 | |
162 | |
163 | |
164 | |
165 | |
166 | |
167 | |
168 | |
169 | |
170 | |
171 | |
172 | |
173 | |
174 | |
175 | |
176 | |
177 | |
178 | |
179 | |
180 | |
181 | |
182 | |
183 | |
184 | |
185 | |
186 | |
187 | |
188 | |
189 | |
190 | |
191 | |
192 | |
193 | |
194 | |
195 | |
196 | |
197 | |
198 | |
199 | |
200 | |
201 | |
202 | |
203 | |
204 | |
205 | |
206 | |
207 | |
208 | |
209 | |
210 | |
211 | |
212 | |
213 | |
214 | |
215 | |
216 | |
217 | |
218 | |
219 | |
220 | |
221 | |
222 | |
223 | |
224 | |
225 | |
226 | |
227 | |
228 | |
229 | |
230 | |
231 | |
232 | |
233 | |
234 | |
235 | |
236 | |
237 | |
238 | |
239 | |
240 | |
240 | |
241 | |
242 | |
243 | |
244 | |
245 | |
246 | |
247 |