19. நம்பிக்கைத் துரோகம் ராணி மங்கம்மாளால் சேதுபதியை எதுவும் செய்ய முடியவில்லை. அசைக்க முடியாத கருங்கல்லாக இருந்து விட்டார் அவர். ராணி மங்கம்மாளிடம் அடங்கிக் கப்பம் கட்டாததால் தான் தவறு செய்கிறோம் என்ற உணர்வே சேதுபதியிடம் இல்லை. இயல்பாகத் தான் இருக்க வேண்டிய நிலையே கப்பம் கட்டாமல் இருப்பது தான் என்பது போல் வாளா இருந்தார் அவர். அவரை நிர்ப்பந்தப்படுத்தவோ ராணி மங்கம்மாளின் ஆட்சிக்குத் தாம் கடமைப்பட்டிருப்பதாக உணர்த்தவோ முடியவில்லை. கட்டுப்பட்டிருக்கிறோம் என்பதே புரியாத ஒருவரை எப்படிக் கட்டுப்படுத்துவது என்று அறியாமல் திணறினாள் அவள். மங்கம்மாளின் கணவர் சொக்கநாத நாயக்கரின் இறுதிக் காலத்திலேயே ஏறக்குறைய அந்த மனநிலைக்கு வந்திருந்தார் அவர். ஆட்சி மங்கம்மாளிடமும், ரங்ககிருஷ்ணனிடமும் வந்த போது கிழவன் சேதுபதியிடமும் அந்த உணர்வு உறுதிப்பட்டிருந்தது. ரங்ககிருஷ்ணனும் மறைந்த பின்னர் எதற்கும் யாருக்கும் கட்டுப்படாத சுதந்திரத் திளைப்பில் இருந்தார் அவர். ராணி மங்கம்மாள் கூப்பிட்டு அனுப்பிக் கட்டளைக்குக் கீழ்ப்படிந்து வந்தவர்போல் அல்லாமல் அரச குடும்பத்து விருந்தினர் போல சில தினங்கள் வந்து மதுரையில் தங்கிவிட்டு அப்புறம் புறப்பட்டுச் சென்றார் கிழவன் சேதுபதி. அவரை யாராலும் அப்போது எதுவும் செய்ய முடியவில்லை. மங்கம்மாள் மதுரை மாநகரில் தங்கியிருந்த ஆண்டுகளில் புதிதாக எதையும் சாதிக்க முடியவில்லை. மறவர் சீமையைத் தனி நாடாக்கிக் கொண்டதைத் தவிர வேறுவகை அத்து மீறல்களைச் சேதுபதி செய்யவில்லை என்பதே திருப்தியாக இருந்தது. திருவாங்கூர் மன்னன் ரவிவர்மன்கூட ஆண்டுதோறும் மதுரையிலிருந்து படைகளை அனுப்பிக் கொள்ளையிடப் போவது போல மிரட்டினால்தான் திறைப்பணம் கட்டுவதென்று வைத்துக் கொண்டிருந்தான். அவன் தானாக முன்வந்து கட்டவில்லை என்பதே ராணி மங்கம்மாளுக்கு எரிச்சலூட்டியது. மதுரைப் படைகளைக்கூட அவன் மதிப்பதற்கும் கண்டு மிரளுவதற்கும் வேறு ஒரு காரணம் இருப்பதாகத் தோன்றியது. ரவிவர்மனது ஆட்சிக்கு அமைச்சர் முறையுடையவர்களாகிய எட்டு வீட்டுப் பிள்ளைமார்களின் ஓயாத விரோதத்தால் அவன் மதுரைப் படைகளை எதிர்க்கும் ஆற்றலின்றி இருந்தான். உள்நாட்டுக் கலகமும், அருகிலேயே உடனிருக்கும் தொல்லைகளுமே அவனை அவனது எதிரிகள் முன் வலுவிழக்கச் செய்திருந்தன. இந்தச் சூழ்நிலை மங்கம்மாளுக்குச் சாதகமாயிருந்தது. எட்டுவீட்டுப் பிள்ளைமார்கள் அமைச்சர்கள் என்ற முறையில் தங்களுக்குள் ஒற்றுமையின்றி இருந்தனர். ரவிவர்மனை எதிர்க்கும்போது மட்டும் ஒருவிதச் செயற்கையான ஒற்றுமை நிலவியது அவர்களிடையே. அரசனும் வலுவிழந்து போயிருந்தான். அவனை ஆட்டிப் படைத்த அமைச்சர்களும் ஒற்றுமை குலைந்து திரிந்தனர். இதனால் 'பாண்டிப்படை' என அவர்களால் அழைக்கப்பட்ட மதுரைப்படை எப்போது படை எடுத்து வந்தாலும் அதற்குக் கொண்டாட்டமாயிருந்தது. திருவாங்கூர் மக்களைக் கொள்ளையடிக்கவும் சூறையாடவும் முடிந்தது. பாண்டிப்படை வீரர்கள் ராணி மங்கம்மாளுக்குக் கிடைக்க வேண்டிய திறைப்பணத்தையும் வாங்கினர். தங்களுக்கு வேண்டியதையும் அபகரித்து மகிழ்ந்தனர். நீண்ட காலமாக இப்படியே நடந்து வந்தது. திருவாங்கூருக்குப் படை எடுப்பு என்றாலே வீரர்கள் மகிழ்ச்சியால் துள்ளினர். இப்படி ஆட்சிச் சூழ்நிலையினாலும் எல்லைப்புறச் சிக்கல்களாலும் ராணி மங்கம்மாள் மதுரைநகரிலும், திரிசிரபுரத்திலுமாக மாறி மாறி இருந்து வந்தாள். சில ஆண்டுகளுக்குப்பின் இதே போலத் திருவாங்கூருக்கு அனுப்பிய மதுரைப் படைகள் முற்றிலும் எதிர்பார்த்திராத ஒரு சிக்கலில் மாட்டிக் கொள்ள நேர்ந்து விட்டது. பாண்டிப் படை வீரர்கள் திருவாங்கூருக்குப் போகிறார்கள் என்றால் எந்த விதமான தொல்லையுமில்லாமல் வெற்றியோடும் திறைப் பணத்தோடும் திரும்புகிறார்கள் என்றிருந்த நிலைமை திடீரென்று மாறியது. மதுரைப் படைகள் கல்குளம் என்னும் தலைநகர எல்லையை அடைகிற வரை எந்தத் திருவாங்கூர் படை வீரனும் எதிர்க்க வரவில்லை. ஒவ்வொரு முறையும் பேருக்காவது சிறிது எதிர்ப்பு இருக்கும். அந்த எதிர்ப்பும் திருவாங்கூர் அரசின் எல்லையைப் படைகள் அடைந்தவுடனேயே இருக்கும். இந்தத் தடவை ராஜதானியின் பிரதான வாயில் வரை எதுவும் கேள்வி முறையில்லாமல் போகவே சந்தேகமாயிருந்தது. கல்குளம் கோட்டை வாயில் கதவுகள் கூட அகலத்திறந்து வைக்கப்பட்டிருந்தன. மதுரைப் படைத்தலைவனும் வீரர்களும் தயங்கினர். "தயக்கம் எதற்கு? வருக! வருக! மகிழ்ச்சியோடு வரவேற்கிறோம். மலர்ச்சியோடு வரவேற்கிறோம்." அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை. இந்த வலைதள பக்கத்தில் உள்ள தகவல்களை பதிப்பிக்கவோ, ஒலிபரப்பவோ, வெளியிடவோ அல்லது விநியோகிக்கவோ கூடாது.
|
| இலக்கிய தகவல்கள் |
| தரவிறக்கம் |
பிற செய்திகள் |
ஆன்மீகம் |
|
|
|
|
தமிழ் யுனிகோடில் அமைந்த இணைய தளம். பதிப்புரிமை © 2006 சென்னைநூலகம்.காம். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
|