21. இஸ்லாமியருக்கு உதவி தஞ்சைப் படைகளையும், ஷாஜியையும் ஒடுக்குவதற்கு நரசப்பய்யா புறப்பட்டுச் சென்ற தினத்தன்று நல்ல நிமித்தம் என்று நினைக்கத் தக்க வேறொரு நிகழ்ச்சியும் திரிசிரபுரம் அரண்மனையில் நடைபெற்றது. தஞ்சைக்குப் புறப்பட்டுச் சென்ற ராணி மங்கம்மாளிடம் அரண்மனைச் சேவகன் ஒருவன் பவ்யமாக வந்து ஏதோ சொல்லும் குறிப்போடு வணங்கி நின்றான். தயங்கி நின்ற ராணி என்ன என்று வினவும் குறிப்போடு அவனை ஏறிட்டுப் பார்த்தாள். அவன் குறிப்பறிந்து சொல்லலானான். "கிழிந்த ஆடையும் அழுக்கடைந்த தோற்றமுமாகப் பக்கிரி போல் தோற்றமளிக்கும் இஸ்லாமியர் ஒருவர் தங்களைக் காண வேண்டுமென்று வந்திருக்கிறார்." "என்னக் காரியமாகக் காண வேண்டுமாம்?" "காரியம் என்னவென்று அவர் சொல்லவில்லை. தாங்கள் விரும்பினால் சந்திக்கலாம். இல்லாவிட்டால் அவரைத் திருப்பி அனுப்பி விடுகிறோம்." "திருப்பி அனுப்ப வேண்டாம் உடனே வரச் சொல் பார்க்கலாம்! பாவம் அவருக்கு என்ன சிரமமோ?" மிகவும் ஏழையாகவும் எளியவராகவும் தென்பட்ட அந்தப் பக்கிரியை அப்போதிருந்த போர் அவசரத்தில் ராணி மங்கம்மாள் சந்திக்க மாட்டாள் என்றுதான் அரண்மனைக் காவலர்கள் நினைத்தார்கள். ஆனால் அதற்கு நேர்மாறாக அவள் உடனே அவரைச் சந்திக்க இணங்கியது ஆச்சரியத்தை அளித்தது. அந்தப் பக்கிரியை அழைத்து வந்து காவலர்கள் ராணியின் முன்னே நிறுத்தினார்கள். "உங்களுக்கு நான் என்ன செய்ய வேண்டும்?" "மகாராணீ! நீங்கள் எனக்கு என்ன செய்ய வேண்டும் என்பதைப் பின்பு சொல்லுகிறேன். உங்களுக்குக் கிடைக்க இருக்கும் கீர்த்தியையும் வெற்றியையும் இப்போது சொல்கிறேன். கேட்டுக் கொள்ளுங்கள். இந்தப் போரில் நீங்கள் மகத்தான வெற்றி பெறப் போகிறீர்கள்." "உங்கள் ஆருடத்திற்கு நன்றி! இப்போது உங்களுக்கு நான் என்ன செய்யவேண்டும்? உங்கள் கஷ்டம் என்னவானாலும் தயங்காமல் என்னிடம் சொல்லலாம்." "என் காரியத்துக்கு அவ்வளவு அவசரமில்லை மகாராணீ! உங்களுக்கு இந்தப் போரில் வெற்றி கிடைத்த பின்னர் வந்து மகிழ்ச்சியோடு என் கோரிக்கையைச் சொல்வேன்." "போரில் நான் வெற்றி பெற வேண்டுமென்று வாழ்த்துகிறீர்கள்! வாழ்த்துகிறவர்களை வெறுங்கையோடு அனுப்புவது இந்த அரண்மனை வழக்கமில்லை." "மன்னிக்க வேண்டும் மகாராணீ! எனக்கு வேண்டியதை எப்போது வந்து பெற்றுச் செல்ல வேணுமோ அப்போது கட்டாயம் தேடி வருவேன்." என்று கூறி வணங்கிவிட்டுப் பதிலையே எதிர்பாராமல் விருட்டென்று திரும்பிச் சென்றுவிட்டார் அந்தப் பக்கிரி. ராணிக்கு இது பெரிய ஆச்சரியமாயிருந்தது. தேடி வந்து மின்னலைப்போல் எதிர் நின்று வாழ்த்திவிட்டு உடனே விரைந்து சென்றுவிட்ட அந்த மனிதர் ராணிக்கு ஒரு புதுமையாகத் தோன்றினார். வியப்புடன் உள்ளே சென்றாள் ராணி. இந்த இஸ்லாமியர் வந்தது, சொல்லியது, திரும்பியது எல்லாமே புதுமையாக இருந்தன. திட்டமிட்டபடி தளபதி நரசப்பய்யா மிகவும் இரகசியமாகப் படைகளுடன் தஞ்சையை நோக்கி முன்னேறினார். கொள்ளிடத்தில் நீர்ப்பெருக்குக் குறைவாக இருந்த சமயத்தில் ஆழம் குறைவாக இருந்த இடம் பார்த்துப் படைகளுடன் ஆற்றைக் கடந்து அக்கரை சென்றிருந்தார் அவர். தளபதி நரசப்பய்யாவின் படைகள் தஞ்சை செல்வதை அறியாத தஞ்சைப் படைவீரர்கள் திரிசிரபுரத்தின் கரையோரக் கிராமங்களில் கொள்ளையடிப்பதில் தொடர்ந்து ஈடுபட்டிருந்தார்கள். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை. இந்த வலைதள பக்கத்தில் உள்ள தகவல்களை பதிப்பிக்கவோ, ஒலிபரப்பவோ, வெளியிடவோ அல்லது விநியோகிக்கவோ கூடாது.
|
| இலக்கிய தகவல்கள் |
| தரவிறக்கம் |
பிற செய்திகள் |
ஆன்மீகம் |
|
|
|
|
தமிழ் யுனிகோடில் அமைந்த இணைய தளம். பதிப்புரிமை © 2006 சென்னைநூலகம்.காம். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
|