26. பேரனின் ஆத்திரம் விஜயரங்க சொக்கநாதனுக்கு அப்போது இரண்டுங்கெட்டான் வயது. கைக்குழந்தையாக இருந்தபோதே அவனுக்கு முடிசூட்டியாயிற்று என்று பேர் செய்திருந்தாலும் அவனுக்கு இன்னும் பக்குவம் வரவில்லை என்பதை அறிந்து அவன் சார்பில் தானே ஆட்சி நிர்வாகப் பொறுப்புகளைக் கவனித்து வந்தாள் ராணி மங்கம்மாள். பேரனின் நன்மைக்காக அவனைப் பற்றிய நல்லெண்ணத்தோடு அவள் செய்து வந்த இக்காரியம் அவனாலேயே தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டபோதுதான் அவளுக்கு ஆச்சரியமும் ஆத்திரமும் ஏற்பட்டது. ஊர் உலகமெல்லாம் தன்னை மெச்சிப் புகழும்படி தான் ஆட்சி நடத்திவந்த போது தன் சொந்தப் பேரனே தனக்குத் தலைவலியாக உருவாகித் தொல்லை கொடுக்கத் தொடங்கியது அவள் மனத்தைப் பெரிதும் பாதித்தது. அருமைத் தந்தையையும் ஆருயிர்த் தாயையும் அடுத்தடுத்து இழந்த குழந்தையைப் பாலூட்டிச் சீராட்டி வளர்த்து ஆளாக்கிய தனக்கா இந்தக்கதி என்று எண்ணியபோது அவள் மனம் நலிந்தது. மைசூர் மன்னனையும், இராமநாதபுரம் கிழவன் சேதுபதியையும் போன்ற புறப்பகைவர்களைப் பற்றிக் கவலைப் படுவதைவிட அதிகமாக இந்த உட்பகைமையையும், இதற்குக் காரணமான பேரன் விஜயரங்கனையும் பற்றிக் கவலைப்பட ஆரம்பித்தாள் அவள். பேரனின் மனதைக் கெடுத்துத் துர்ப்போதனை செய்யும் கலக்க்காரர்களும் கெடுமதியாளர்களும் உள்ளேயே இருக்கிறார்கள் என்று தெரிந்தது. ஆனால் அவர்கள் கையும் களவுமாகச் சிக்கவில்லை. பேரன் விஜயரங்கனுக்கு அப்போது பதினெட்டு வயது. அரண்மனையைச் சேர்ந்த சில துர்ப்போதனையாளர்கள் அவனைத் தோப்புத் துரவுகளுக்குத் தனியே அழைத்துச் சென்று மங்கம்மாளைப் பற்றித் தொடர்ந்து கோள் மூட்டினார்கள். இயல்பிலேயே விஜயரங்கன் இரண்டுங்கெட்டானாகவும் நைப்பாசைக்காரனாகவும் இருந்தான். பாட்டியின் கட்டுப்பாட்டிலிருந்து விடுபட்டு அரசனாக வேண்டும் என்கிற ஆசை உள்ளவனாக இருந்த அவனை மற்றவர்கள் மேலும் கலைத்தனர். "உன் தந்தை ரங்ககிருஷ்ண முத்துவீரப்ப நாயக்கரின் காலத்திலும் இப்படித்தான் நடந்தது. அவருடைய இளமைப் பருவத்தில் பேருக்கு அவருக்கு முடிசூட்டிவிட்டு இவளே ஆட்சியை நடத்தினாள். இவளுக்குப் பதவி வெறியைத் தவிர வேறெதுவும் இல்லை. இவள் உயிரோடிருக்கிறவரை உன்னை ஆட்சி பீடத்தில் ஏற்கவே விடமாட்டாள். நீ இப்படியே வெறும் இளவரசு பட்டத்தைச் சுமந்து கொண்டு திரிய வேண்டியது தான். கடைசிவரை உன்னிடம் ஆட்சியை ஒப்படைக்காமலே உன்னை ஏமாற்றி விடுவாள் இவள். போதாக்குறைக்குத் தளவாய் அச்சையா வேறு இப்போது உன் பாட்டியோடு நெருக்கமாக இருக்கிறார். உன்னை எப்படி ஏமாற்றுவது என்பதற்கு அவர் வேறு யோசனைகளைக் கூறுவார்! அச்சையாவும் பாட்டியும் இந்த ஜன்மத்தில் உன்னை ஆளவிடப் போவதில்லை" என்று அவர்கள் விஜயரங்கனிடம் இடைவிடாமல் உருவேற்றிக் கொண்டிருந்தார்கள். இளவரசன் விஜயரங்கன் அவர்களுக்குச் செவி சாய்த்தான். அவர்கள் கூறுவதெல்லாம் சரியாயிருக்கும் என்றே அவனுக்குத் தோன்றியது. பாட்டி தன்னைப் பிரியமாக அரவணைத்து ஆளாக்கி வளர்த்ததெல்லாம் அவனுக்கு மறந்துவிட்டது. ஆசை பாசத்தை மறைத்துவிட்டது. பாட்டி மங்கம்மாள் தான் தன்னுடைய முதல் எதிரி என்று எப்படியோ அவனுடைய மனத்தில் ஒரு தப்பான அபிப்ராயம் ஏற்பட்டுவிட்டது. அவனைச் சுற்றியிருந்தவர்களில் ஒருவர்கூட அந்தத் தப்பான அபிப்ராயத்தை மாற்ற முற்படவில்லை. மாறாக அதற்கு உரமேற்றி அதை மேலும் மேலும் அவன் உள்ளத்தில் வளர்க்கவே முயற்சி செய்தார்கள். இராயசம் அச்சையாவுக்கும் தன் பாட்டிக்கும் தகாத முறையில் உறவு இருப்பதாகத் தன்னிடம் கோள் மூட்டியவர்களின் கூற்றை அவன் நம்பினான். 'கெடுமதி கண்ணுக்குத் தோன்றாது' என்ற பழமொழி விஜயரங்கனின் விஷயத்தில் உண்மையாயிருந்தது. கலகக்காரர்களின் போதனையே அவன் மனத்தினுள்ளே உருவேறிற்று. தான் அரசாட்சியை அடையாமல் இருக்கப் பாட்டி சதி செய்கிறாள் என்றே நம்பினான் அவன். போதாக்குறைக்கு அவனைக் கெடுத்த வந்தவர்கள் அவன் மனத்தில் பதியும்படி ஒன்றைச் சுட்டிக் காட்டத் தவறவில்லை. அவர்கள் சுட்டிக் காட்டியது அப்போது பொருத்தமாக இருந்தது. உடனே நம்பி ஏற்கும்படியாகவும்கூட இருந்தது. இடக்கையால் தாம்பூலம் தரித்துவிட்ட பாவத்திற்காக மங்கம்மாள் ஏதேதோ தான தருமங்களைச் செய்யப்போக அதை அவர்கள் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டு விஜயரங்கனிடம் சொல்லித் தூற்றுவதற்கு இடம் கிடைத்தது. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை. இந்த வலைதள பக்கத்தில் உள்ள தகவல்களை பதிப்பிக்கவோ, ஒலிபரப்பவோ, வெளியிடவோ அல்லது விநியோகிக்கவோ கூடாது. |
| இலக்கிய தகவல்கள் |
| தரவிறக்கம் |
பிற செய்திகள் |
ஆன்மீகம் |