7. வஞ்சப் புகழ்ச்சி வலை ... தொடர்ச்சி ... "இராமநாதபுரம் போய்ச் சேதுபதியைச் சந்தித்துவிட்டால் இரண்டில் ஒன்று தெரிந்துவிடும் அரசே!" "போர்க்களத்தில் சந்திக்க வேண்டிய எதிரியை அரண்மனையிலா போய்ச் சந்திப்பது?" "அரசியலில் நிரந்தரமான எதிரியுமில்லை. நிரந்தரமான நண்பனுமில்லை. சந்தர்ப்பங்கள் தான் நட்பையும், பகையையையும் உருவாக்குகின்றன என்று அமரராகிவிட்ட தங்கள் தந்தையார் அடிக்கடி சொல்வது உண்டு அரசே!" தனக்கு மறுமொழி கூறுகிறவனுடைய வார்த்தைகளை அணுஅணுவாகக் கவனித்து அதில் எந்தச் சிறு தொனியிலும் கூட சேதுபதியைக் குறைத்துப் பேசவோ விட்டுக் கொடுக்கவோ செய்யாத உறுதி இருப்பதைப் புரிந்து கொண்டான் ரங்ககிருஷ்ணன். இப்படிப்பட்ட படை வீரர்களை வைத்துக் கொண்டு என்ன செய்வதென்ற மலைப்பு அவனுக்கு ஏற்பட்டது. அமைதியாகவும் இயல்பாகவும் இருக்கிற மக்களை எதிர்த்துத் தாக்குவதும் பொருத்தமாகப் படவில்லை. மறவர் சீமையைச் சேராத விஜயநகர வாரிசுகளாகிய இரண்டொரு சுயஜாதிப் படைத்தலைவர்களையும் நடுநடுவே அழைத்துத் தன் சந்தேகத்தைத் தெரிவித்து யோசனை கேட்டபோது அவர்கள் அனைவரும் ரங்ககிருஷ்ணனின் சந்தேகத்தை உறுதிப் படுத்தினார்கள். சேதுபதி வேண்டுமென்றே நாடகமாடுகிறார். அவருடைய நாடகத்தையும், பாசாங்கையும் கலைத்து அவரை உண்மையான கோபத்தோடு வெளிவரச் செய்ய எந்தத் தீவிரமான செயலில் இறங்குவது என்றுதான் புரியாமலிருந்தது. முன்னுக்குப் போனாலும் இடித்தது. பின்னால் நகர்ந்தாலும் உரசியது. உண்மைப் போரைத் தொடங்குவதற்கு முன்பே தன் எதிரியைச் சொந்த மனப் போராட்டங்களிலேயே சிக்கித் தவித்துத் திணறும்படிச் செய்துவிட்ட கிழவன் சேதுபதியின் அரசியல் முதிர்ச்சியும், பக்குவமும், பிரமிக்கும்படி இருந்தன. ரங்ககிருஷ்ணனின் படைவீரர்களும் அவனும் இராமநாதபுரத்தை அடைவதற்குள் திரிசிரபுரத்திலிருந்து ஒரு தூதுவனைத் தாய் மங்கம்மாள் அனுப்பியிருந்தாள். வந்து சந்தித்த அந்த தூதுவன் ஓர் ஓலையை அளித்திருந்தான். ரகுநாத சேதுபதி கிழச்சிங்கம் மிகவும் சிக்கலான எதிரி. ஆத்திரமோ, பரபரப்போ அடையாமல் நிதானமாக நடந்து வெற்றி கொள்ள முயல்க! என்பது போல் தாயும், இராயசம் அச்சையாவும் அந்த ஓலையில் ரங்ககிருஷ்ணனை எச்சரித்திருந்தார்கள். 'தங்கள் அறிவுரையை மதித்து அதன்படியே நடப்பேன் கவலை வேண்டாம்' என்று தாய்க்கு மறுமொழி அனுப்பிவிட்டு, மேலே பயணத்தைத் தொடர்ந்தான் ரங்ககிருஷ்ணன். ரங்ககிருஷ்ணனும் படைவீரர்களும் மறுநாள் முற்பகல் வேளையில் இராமநாதபுர எல்லையை அடைந்தபோது, புறக்கோட்டையாகிய வெளிப்பட்டணத்திலேயே தடுத்து நிறுத்தப்பட்டார்கள். மிகவும் சாதுரியமான முறையில் அந்தத் தடை செய்யப்பட்டிருந்தது. இராமநாதபுரம் அரண்மனைச் சேர்ந்த வீரர்கள், வெயில் நேரத்துக்கு இதமான குளிர்ந்த பானகமும், வெள்ளரிப் பிஞ்சுமாக எதிர் கொண்டு ரங்ககிருஷ்ணனின் படைவீரர்களை உபசரித்தார்கள். கோடை வெயிலில் அலைந்து வந்த களைப்பாலும், தாகத்தாலும் ரங்ககிருஷ்ணனின் படைவீரர்களாலும் அதை ஏற்காமல் இருக்க முடியவில்லை. ரங்ககிருஷ்ணனோ, படைத் தலைவர்களோ 'அந்த உபசரணையை ஏற்கக்கூடாது' என்று தங்கள் படைவீரர்களைத் தடுக்கவும் இயலாமற் போயிற்று. ரங்ககிருஷ்ணன் யோசித்துக் கொண்டிருந்தபோதே, இராமநாதபுரம் அரண்மனைச் சேர்ந்த மந்திரி பிரதானிகள் அவனை எதிர்கொண்டு வந்து, "சேதுபதி சபையில் கொலுவீற்றிருக்கிறார்! சபை நடந்து கொண்டிருக்கிறது. புலவர்களும், கலைஞர்களும் தங்கள் கவித்திறனையும், கலைத்திறனையும் காட்டிக் கொண்டிருக்கிறார்கள். பாதியில் எழுந்து வந்தால் புலவர்களையும், கவிஞர்களையும் அவமதித்ததுபோல் ஆகிவிடுமே என்று தயங்கி எங்களைக் கூப்பிட்டு உரிய ராஜ மரியாதையோடு தங்களை எதிர்கொண்டு அழைத்து வருமாறு அனுப்பினார்" என்றார்கள். அவர்கள் குரலில் பயபக்தி கனிந்திருந்தது. அவர்கள் அழைப்பை ஏற்று உள்ளே போவதா, வேண்டாமா என்று ஓரிரு கணங்கள் தயங்கினான் ரங்ககிருஷ்ணன். ஒரு பெரிய விருந்தினரைச் சகல அந்தஸ்துகளுடன் வரவேற்பது போல்தான் அவனை வரவேற்றுக் கொண்டிருந்தார்கள் அவர்கள். ஆனால் ஒரு வித்தியாசத்தை ரங்ககிருஷ்ணன் அத்தனை பரபரப்பிலும் கூர்ந்து கவனிக்கத் தவறவில்லை. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை. இந்த வலைதள பக்கத்தில் உள்ள தகவல்களை பதிப்பிக்கவோ, ஒலிபரப்பவோ, வெளியிடவோ அல்லது விநியோகிக்கவோ கூடாது. |
| இலக்கிய தகவல்கள் |
| தரவிறக்கம் |
பிற செய்திகள் |
ஆன்மீகம் |