http://www.chennailibrary.com



9. சகலருக்கும் சமநீதி

     பாதிரியாரை மிகவும் மரியாதையாக வணங்கி வரவேற்றான் ரங்ககிருஷ்ணன். அதிகச் சிரமப்பட்டு அலைந்து திரிந்து வந்திருப்பது போல் களைப்போடும் கவலையோடும் தென்பட்ட அந்தப் பாதிரியாரைப் பரிவோடும் அனுதாபதோடும் விசாரித்தான் அவன்:

     "பெரியவரே! நாடு எங்கும் நன்கு வாழக் கேடு ஒன்றும் இல்லை என்பது தான் எமது கொள்கை. எல்லாச் சமயங்களும் எல்லா வாழ்க்கை நெறிகளும் செழிக்க வேண்டுமென்ற நல்லெண்ணத்தோடுதான் எங்கள் பாட்டனார் திருமலை நாயக்கர் காலம் முதல் இந்த நாயக்கர் மரபின் நல்லாட்சி இங்கு தொடர்ந்து நடந்து வருகிறது."

     "அந்த நல்லெண்ணத்தை நாங்களும் அறிவோம் அரசே! நோக்கம் நன்றாகவே இருந்தாலும் கவனக் குறைவால் சில செயல்கள் பழுதுபட்டுப் போகலாம்."

     "செயல் எங்காவது பழுதுபட்டுப் போயிருந்தால் அதை உடனே எங்கள் கவனத்துக்குக் கொண்டுவர வேண்டியது தங்களைப் போன்ற சான்றோர்களின் கடமை அல்லவா?"

     "தாங்கள் கூறும் கடமையைக் கருதியே இப்போது தங்களைக் காண வந்திருக்கிறேன் அரசே!"

     - புதிதாகத் தமிழ்க் கற்று அதைக் கற்ற சுவட்டோடு உடனே பேசும் கொச்சையும் திருத்தமும் மாறி மாறி விரவிய தமிழ் நடையில் பேசினார் பாதிரியார். வடிவில் முழுமையும் எழுத்தொலி உச்சரிப்பில் கொச்சையுமாக அது இருந்தது. ஆயினும் அவர் தேவையை உணர்ந்து தமிழ்க் கற்றிருக்கும் விரைவையும் விவேகத்தையும் மனத்துக்குள்ளேயே பாராட்டிக் கொண்டான் ரங்ககிருஷ்ணன். எந்தப் பிரதேசத்துக்குப் போகிறோமோ அந்தப் பிரதேசத்து மொழியைக் கற்காமல் அப்பகுதி மக்களின் நம்பிக்கையைப் பெறமுடியாது என்னும் மனோதத்துவம் அவருக்கும் அவரைப் போல் வந்தவர்களுக்கும், வருகிறவர்களுக்கும் புரிந்திருப்பதை அவன் உணர்ந்தான்.

     "அரசே! தங்கள் பாட்டனார் புகழ்பெற்ற திருமலை நாயக்கரின் காலத்திலிருந்து நாங்கள் அடைந்து வரும் நியாயங்களும் சலுகைகளும் தொடர்ந்து எங்களுக்குக் கிடைக்க வேண்டும் என்பது தான் இப்போதும் எங்கள் பிரார்த்தனையாயிருக்கிறது."

     "பிரார்த்தனைகளைத் தெய்வங்களும் அரசர்களும் ஒருபோதும் ஒருவருக்கும் புறக்கணிப்பதில்லை."

     "உண்மை! ஆனால் தெய்வங்களையும் அரசர்களையும் தவிரப் பெருவாரியாக இருக்கும் மக்கள் சில சமயங்களில் வெறுப்பையும், புறக்கணிப்பையும் காட்டிவிடுகிறார்களே!"

     "நல்லது! அப்படி ஏதாவது என் ஆட்சிக்கு உட்பட்ட எல்லையில் நடந்திருந்தால் சொல்லுங்கள்! உடனே கவனித்து நியாயம் வழங்குகிறேன். என் பாட்டனார் காலத்தில் கிடைத்த அதே நியாயங்களையும் சலுகைகளையும் நீங்கள் இப்போதும் அடைய முடியும். அதற்கு எந்தத் தடையுமில்லை."

     "அரசும், ஆட்சியும், தாங்களும் தடுக்காமல் இருக்கலாம். ஆனால் பெருவாரியான மக்கள் சில சமயங்களில் நியாயங்களுக்கும் சலுகைகளுக்கும் குறுக்கே நிற்கிறார்களே..."

     "கவலை வேண்டாம் பாதிரியாரே! கோடிக்கணக்கான மக்களே குறுக்கே நின்றாலும் நியாயத்தை நிலைநாட்டுவதில் உறுதியாயிருப்பேன்."

     "அப்படியானால் இரட்டை மகிழ்ச்சி அரசே! இனிமேல் நான் முறையிட வேண்டியவற்றைக் கவலையோ தயக்கமோ இல்லாமல் தங்களிடம் முறையிடலாம். அரசே! பாரபட்சம் இல்லாமல் தாங்கள் நியாயம் வழங்குவீர்கள் என்ற நம்பிக்கை எனக்கு வந்துவிட்டது. தங்கள் தந்தையார் சொக்கநாத நாயக்கர் காலத்தில் நிகழ்ந்த படையெடுப்புகள் - அந்நிய ஆக்கிரமிப்புகளுக்குப் பயந்து இந்நகரிலிருந்த கிறிஸ்தவர்கள் சிலர் தங்கள் வீடு வாசல் நிலங்கரைகளை அப்படி அப்படியே விட்டு விட்டு வேறு இடங்களுக்குக் குடி பெயர நேர்ந்தது. மறுபடி திரிசிரபுரத்தில் அமைதி ஏற்பட்டு அவர்கள் எல்லாரும் திரும்பி வந்து பார்த்த போது அவர்களுடைய நிலங்களில் சில பகுதிகளில் இந்துக்கள் கோயில்களைக் கட்டித் திருவுருவங்களைப் பிரதிஷ்டை செய்து வழிபடத் தொடங்கியிருப்பது தெரிந்தது. எவ்வளவோ முயன்றும் கிறிஸ்தவர்கள் தங்கள் நிலங்கரைகளைத் திரும்ப அடைய முடியவில்லை. திரிசிரபுரத்துக்குத் திரும்ப வந்த கிறிஸ்தவ மக்கள் நியாயம் கிடைக்காமல் அநாதைகளாக நடுத்தெருவில் நிற்க நேர்ந்திருக்கிறது..."



ராணி மங்கம்மாள் : முன்னுரை  1  2  3  4  5  6  7  8  9  10  11  12
13  14  15  16  17  18  19  20  21  22  23  24  25  26  27  28  29  30  முடிவுரை


இணைய பக்க முகவரி: http://www.chennailibrary.com/parthasarathy/ranimangammal/rm9.html

பதிப்புரிமை © 2006 சென்னைநூலகம்.காம்.
அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
இந்த வலைதள பக்கத்தில் உள்ள தகவல்களை பதிப்பிக்கவோ,
ஒலிபரப்பவோ, வெளியிடவோ அல்லது விநியோகிக்கவோ கூடாது.

 அச்சிட       விமர்சிக்க       விருப்ப தளமாக்க
       முகப்பு பக்கமாக்க



வருகைப் பதிவு (25-09-2006 முதல்)
ad
இலக்கிய தகவல்கள்
தரவிறக்கம்
பிற செய்திகள்
ஆன்மீகம்




தமிழ் யுனிகோடில் அமைந்த இணைய தளம். பதிப்புரிமை © 2006 சென்னைநூலகம்.காம். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.