19 அன்றைய நாடகத்துக்கு முன்பு அவசர அவசரமாக வசனங்களையும் காட்சிகளின் வரிசை அமைப்பையும் ஒருமுறை புரட்டிப் பார்த்தான் முத்துக்குமரன். அவனே வசனங்களை எழுதி டைரெக்ட் செய்திருந்ததனாலும் சில முறை நாடகங்களைச் சபையில் அமர்ந்து பார்த்திருந்ததனாலும் எல்லாம் நன்றாக நினைவிருந்தது. தவிர அவனே ஒரு கவியாக இருந்ததனால் மனோ தர்மத்துக்கு ஏற்ப அப்போதே வசனத்தை இடத்துக்குப் பொருத்தமாக மேடையிலேயே இயற்றிச் சொல்லிவிட முடியும் என்ற நம்பிக்கையும் இருந்தது. உடன் நடிப்பவள் மாதவியாகையினால் ஒத்துழைப்பு பரிபூரணமாகக் கிடைக்கும் என்ற நம்பிக்கைக்கும் குறைவில்லை. அப்துல்லாவுக்கு மட்டும் பயம் இருந்தது. கோபால் நடிக்கவில்லை என்று தெரிந்து ஜனங்கள் எதுவும் கலாட்டா செய்து மேடை மேல் நாற்காலியைத் தூக்கி வீசுகிற நிலை ஏற்பட்டு விடக்கூடாதே என்று பயந்தார் அவர். ஆனால் கூடவே ஒரு நம்பிக்கையும் அவருக்கு இருந்தது. கோபாலை விட முத்துக்குமரன் அதிக அழகன் என்பதும் பார்க்கிறவர்கள் கவனத்தைத் தன் பக்கம் கவரும் வசீகரமான கம்பீர புருஷன் என்பதும் அவருக்குத் தைரியம் அளித்தன. முத்துக்குமரனைப் பொறுத்தமட்டில் எந்த அவநம்பிக்கையுமின்றி இருந்ததோடு ஓரளவு அலட்சியத்தோடும் இருந்தான். கோபால் குடித்துவிட்டு மரீலின் ஹோட்டல் பாத்ரூமில் வழுக்கி விழுந்து காலில் ஃபிராக்சர் ஆகிப் படுத்த படுக்கையாயிருப்பது கூட்டத்தில் அந்த விநாடி வரை யாருக்கும் தெரியாதமையினால் கூட்டம் அமைதியாயிருந்தது. கோபாலுக்கு இருக்கிற 'ஸ்டார் வால்யூ' முத்துக்குமரனுக்கு இல்லையே என்பதுதான் அப்துல்லாவின் கொஞ்ச நஞ்சக் கவலையாயிருந்தது. கோலாலும்பூரில் முதல் நாள் நாடகத்தில் கோபால் தோன்றி ஜனங்கள் அவனையும் அவன் நடிப்பையும் நன்கு கண்டு கொள்ளும்படி செய்திருந்ததனால், கோபாலுக்கும் முத்துக்குமரனுக்கும் உள்ள வித்தியாசத்தைப் புரிந்து கொள்வார்களோ என்று வேறு சந்தேகமாக இருந்தது அவருக்கு. இந்தச் சந்தேகம் எல்லாம் நாடகம் தொடங்குகிற வரை தான். ஆனால் நாடகம் தொடங்கியதும் கூட்டத்துக்கும் - அவருக்கும் இதெல்லாம் மறந்தே போயின. மன்மதனே ராஜா வேடந்தரித்து தர்பாரில் வந்து அமர்வது போல் முத்துக்குமரன் மேடைக்கு வந்து தர்பாரில் அமர்ந்தபோது முதல் நாள் அதே காட்சியில் கோபால் பிரவேசித்த போது இருந்ததை விட அதிகமான கைதட்டல் இருந்தது. மாதவியும் அன்று மிக அழகாயிருப்பது போல் பட்டது. பளபளவென்று மேனி மின்னும் அரபிக் குதிரை பாய்ந்து வருவது போல் அன்று வாளிப்பாயிருந்தாள் அவள். 'நெஞ்சின் எல்லையில் நீயாட நீள் கழையினில் நானாடுவேன்'... என்ற பாட்டுக்கேற்ப அவள் ஆடியபோது பிரமாதமாக இருந்தது. முத்துக்குமரன் உடன் நடிக்கிறான் என்பதால் மாதவியும், மாதவி உடன் நடிக்கிறாள் என்பதால் முத்துக்குமரனும் போட்டி போட்டுக்கொண்டு பிரமாதமாக நடித்தார்கள். கூட்டத்தில் ஒவ்வொரு காட்சி முடிவின் போதும் கைதட்டல் கட்டிடமே அதிரும்படி ஒலித்தது. அன்றைய நாடகம் பிரமாதமான வெற்றியாக அமைந்தது. சக நடிகர்களும் அப்துல்லாவும் முத்துக்குமரனை வாய் ஓயாமல் பாராட்டினார்கள். "இதிலே பாராட்ட என்ன இருக்கு? என் கடமையை நான் செய்தேன். பணம் செலவழித்து அழைத்திருக்கிறீர்கள். கை நஷ்டப்படுமோ என்று உங்களுக்குப் பயம் வருகிறது. உங்கள் பயத்தைப் போக்கவும், என் நண்பனைக் காப்பாற்றவும் நான் என்ன செய்ய வேண்டுமோ அதைச் செய்தேன்" என்று சுபாவமாக அப்துல்லாவுக்கு மறுமொழி கூறினான் அவன். மறுநாள் காலைத் தினசரிகளில் கோபால் குளியலறையில் வழுக்கி விழுந்து காலில் எலும்பு முறிந்து படுத்த படுக்கையாயிருக்கும் செய்தியும் முந்திய தினம் இரவு நடந்த நாடகத்தில் கோபால் நடிக்க வேண்டிய பாகத்தை அந்த நாடகத்தின் ஆசிரியராகிய முத்துக்குமரன் என்பவரே ஏற்று நடித்தார் என்ற செய்தியும் வெளியாகி விட்டன. மறுநாள் காலை முத்துக்குமரனும், மாதவியும் கோபாலைப் பார்ப்பதற்காக ஆஸ்பத்திரிக்குப் போனார்கள். "சமயத்திலே கைகொடுத்து என் மானத்தைக் காப்பாத்தினத்துக்கு நன்றி வாத்தியாரே" - என்ற கை கூப்பினான் கோபால். "நான் உன் மானத்தைக் காப்பாத்தணும்னுதானே நீ வந்த இடத்திலே வெளிநாட்டுச் சரக்காச்சேன்னு காணாததைக் கண்டதுபோல மட்டில்லாமக் குடிச்சு மானத்தைக் கப்பலேத்திக்கிட்டிருக்கே. நல்ல வேளை பேப்பர்காரன்லாம் 'குளியலறையிலே வழுக்கி விழுந்து'ன்னு மட்டும் தான் போட்டிருக்கான். எதினாலே வழுக்கி விழுந்தான்னு சேர்த்துப் போட்டிருந்தானோ எல்லாரும் சிரிடா சிரின்னு சிரிப்பாங்க" - என்று நண்பனைக் கடிந்துகொண்டான் முத்துக்குமரன். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை. இந்த வலைதள பக்கத்தில் உள்ள தகவல்களை பதிப்பிக்கவோ, ஒலிபரப்பவோ, வெளியிடவோ அல்லது விநியோகிக்கவோ கூடாது. |
| இலக்கிய தகவல்கள் |
| தரவிறக்கம் |
பிற செய்திகள் |
ஆன்மீகம் |