http://www.chennailibrary.com





2

     "மழையினாலே பெங்களூர் ப்ளேன் அரைமணி லேட்னு சொல்றாங்க... ஐயா வர அரைமணி தாமதமாகும்."

     எல்லோருடைய முகமும் அந்தத் தாமரை அங்கீகரிப்பது போல் மலர்ந்தன.

     அடுத்து முன்பு வந்தவனைப் போலவே - கைலி, பனியன், மேலே சமையல் அழுக்குப் படிந்த துண்டுடன் - கையிலிருந்த பெரிய டிரேயில் பத்துப் பன்னிரண்டு 'கப்'களில் ஆவி பறக்கும் காப்பியுடன் சமையற்காரன் ஹாலில் நுழைந்தான். எல்லோருக்கும் காபி கிடைத்தது.

     காபி முடிந்ததும் ஒரு பெண் துணிந்து எழுந்து வந்து முத்துக்குமரனின் சோபாவில் அருகே உட்கார்ந்தாள். அவள் வந்து உட்கார்ந்ததும் சந்தன அத்தர் வாசனை கமகமத்தது. "நீங்களும் 'ட்ரூப்'லே சேர அப்ளிகேஷன் போட்டிருக்கீங்களா சார்...?" என்று அவள் கேட்ட கேள்வியைக் காதில் போட்டுக் கொள்ளாமல் அவளுடைய குரலினிமையை மட்டும் காதில் ஏற்றுக் கொண்டு அயர்ந்து விட்ட முத்துக்குமரன்,

     "என்ன சொன்னீங்க...?" என்று மறுபடியும் அவளைக் கேட்டான்.

     அவள் சிரித்துக் கொண்டே மறுபடியும் தன் கேள்வியைக் கேட்டாள்.

     "கோபாலை நல்லாத் தெரியும்! என்னோட அந்த நாளிலே பாய்ஸ் கம்பெனியிலே ஸ்திரீ பார்ட் போட்டவன். சும்மா பார்த்துட்டுப் போகலாம்னு வந்தேன்."

     ஹாலில் இருந்த மற்ற எல்லோருடைய கவனமும் தங்கள் இருவர்மேல் மட்டுமே குவிந்திருப்பதை அவன் கவனித்தான். பெண்கள் அனைவரும் தன்னோடு வந்து பேசிக்கொண்டிருப்பவளைப் பொறாமையோடு பார்க்கிறார்கள் என்று அவனுக்குத் தோன்றியது.

     பக்கத்தில் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தவள், "உங்கள் பெயரை எனக்குச் சொல்லலாமா?" என்று கேட்டாள்.

     "முத்துக்குமரன்..."

     "பேர் ரொம்ப பிடிச்சிருக்கு..."

     "யாருக்கு...?"

     அவள் முகம் சிவந்தது. உதடுகளில் புன்னகை தோன்றவும், மறையவும் முயன்று ஒரே சமயத்தில் இரண்டையும் செய்தது.

     "இல்லே... நாடகத்துக்குப் பேர் பொருத்தமா இருக்கும்னேன்."

     "அப்படியா? ரொம்ப சந்தோஷம். உங்க பேரை நான் தெரிஞ்சுக்கலாமா...?"

     "மாதவி..."

     "உங்க பேர் கூட ரொம்ப நல்லாத்தான் இருக்கு."

     மறுபடியும் அவள் உதடுகளில் புன்னகை தோன்றவும் மறையவும் முயன்றது.

     முன்புறம் போர்டிகோவில் கார் சீறிப் பாய்ந்து வந்து நிற்கும் ஓசை கேட்டது. காரின் கதவு ஒன்று திறந்து மூடப்பட்டது.

     அவள் அவனிடம் சொல்லிக் கைகூப்பிவிட்டுத் தன் பழைய இடத்துக்குப் போனாள். ஹாலில் அசாதாரண அமைதி நிலவியது. 'கோபால் வந்துவிட்டான் போலிருக்கிறது' என்று முத்துக்குமரனால் ஊகிக்க முடிந்தது.

*****


சமுதாய வீதி : 1  2  3  4  5  6  7  8  9  10  11   12
13   14   15   16   17   18   19   20


இணைய பக்க முகவரி: http://www.chennailibrary.com/parthasarathy/samuthayaveethi/sv2.html

பதிப்புரிமை © 2006 சென்னைநூலகம்.காம்.
அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
இந்த வலைதள பக்கத்தில் உள்ள தகவல்களை பதிப்பிக்கவோ,
ஒலிபரப்பவோ, வெளியிடவோ அல்லது விநியோகிக்கவோ கூடாது.

 அச்சிட       விமர்சிக்க       விருப்ப தளமாக்க
       முகப்பு பக்கமாக்க




வருகைப் பதிவு (25-09-2006 முதல்)
ad
இலக்கிய தகவல்கள்
தரவிறக்கம்
பிற செய்திகள்
ஆன்மீகம்

தமிழ் யுனிகோடில் அமைந்த இணைய தளம். பதிப்புரிமை © 2006 சென்னைநூலகம்.காம். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.